நள்ளிரவிலும் உளூச்செய்து
மிக்க பேணுதலுடன் தொழுது வந்தவள் அத்தம்மா
தன் சிறு கொண்டையையும் அப்படியே பேணினாள்,
வளர்ந்து தன் மய்யத்தின் மானம் மறைக்கும் என.
முட்டி வரை நீண்ட கூந்தலுக்குக் கொடுத்த கவனத்தில்
கொஞ்சம் தன் சுவாசகாசத்துக்கும் கொடுக்காததால்..
தலையணையாய் சுருட்டவும்,
மார்பை மறைக்கவுமாய்,
கூந்தல் மட்டும் வளர்த்துப் போய்ச் சேர்ந்தாள் மாமி ..
"சுவர்க்கவாசி அவள்" என்று சின்னம்மா பேசினாள்.
ஆஃபீசுக்கு அலைந்ததில் கொஞ்சமும்
ஹஜ்ஜுச் செய்ததில் கொஞ்சமுமாய்
இருந்ததும் கொட்டிப் போய் எப்படியோ இருக்கிறாள் அம்மா ..
எதற்கும் இருக்கட்டும் என்று
கஃபன் ஒன்று தயாராக இருக்கும்
அவள் அலமாரி திறந்தால் வரும் வாசம் தான்
சொர்க்கத்திலும் அடிக்குமோ என்று கேட்டபடியிருக்கிறாள் மகள்.
தோள்வரையிலுமாக மட்டும் உள்ள, நேர்செய்த என் கூந்தலைப் பயந்து
எப்போதும் இருந்துவிடத் திட்டம் தீட்டி..
இப்படி இருக்கிறேன் நான் .
..ஷஹி..
(அத்தம்மா - பாட்டி , மையத் - சடலம் , உளூ - அங்க சுத்தி , கஃபன் - சடலத்துக்கு அணிவிக்கப்படும் ஆடை )