Search This Blog

Thursday, November 17, 2011

இட்டுத்தொலையாத முத்தம்

இதுவா அதுவா ஈரமிக்கது எந்த சொல்?

இப்படியா அப்படியா எப்படிச் சிறப்பாகச் சொல்வது இதை?

கதகதப்பாய் உணரப்படும் இது என்ன ?

அதிகம் உணர்வது நீயா நானா?

பெய்வதென்ன மழை தானா?

அதிகம் நனைந்தது இருவரில் யார்?

வெகுவாய் சுடுவது உன்னதா- என் கண்ணீரா?

பிரிவென்று வந்தால் எப்படி எதிர்கொள்வது?

அப்படியெல்லாம் வருமா என்ன?

என்றெல்லாம் யோசிப்பதற்கு அவகாசமில்லாது இருந்திருக்கலாம்

ஒரு முத்தமாவது இட்டுத் தொலைத்திருக்கலாம் தானே?

இப்போது இப்படியல்லாமல்..

உறக்கத்தில் கேவி நடுங்கும் உதடுகளை

கனவில் மினுங்கும் அதன் நினைவுகளையாவது

தடவி ஆற்றியிருக்கலாம்!

..ஷஹி..

Sunday, October 30, 2011

ஒரு மன்னிப்புக் கோரலை எளிதாக்க

உலர்ந்திருக்கும் இந்த விடியலை

நான் யாசிக்கப் போகும் மன்னிப்பின் ஈரத்தால்

நனைத்துக் கொள்ள எண்ணமிட்டிருக்கிறாய்..

எப்படியெல்லாமோ,

எதற்காகவோ, என்னவென்றெல்லாமோ

புரிந்து கொள்ளப்படக்கூடிய

ஒரு மன்னிப்புக்கோரலை விட

எனக்கு

மிகக் கடினமானது வேறொன்றுமில்லை..

காதலைத் தெரிவிப்பது கூட.

ஒரு முத்தத்தில் குளிராமல்

ஒரு பார்வையில் உருகாமல்

ஒரு தலையசைப்பில் கசியாமல்

நிலம் வெறிக்கும் விழிகள் பார்த்து

மன்னிப்புக் கோருவது எப்படி என்று

இன்று வரையில் எனக்குத் தெரிவதேயில்லை.

அவசரமாக மறைக்கப்படும்

ஒரு துளி கண்ணீரையாவது

நிகழ்த்திக் காட்டி

அதை எளிதாக்கலாம் எனக்கு நீ..

..ஷஹி..

Thursday, October 20, 2011

என் கண்ணீர் பிடிக்கும் கோப்பை

நீ சஞ்சரிக்கும் வெளிகளின் தூரம் அறியாமல்

என் ஒரு கரம் இறங்கிக் காற்றில் அசைகின்றது,

எதிர் கொள்ள ஏதுமற்று.

நிசப்தத்தின் அலறலில் மருண்டு,

திரும்பும் என் முதுகை இலக்காக்கி..

பறக்க விடுகிறாய் உன் ஈரமற்ற முத்தங்களை.

பசையற்று விழும் அவற்றைப் பொறுக்கி சேகரிக்கின்றேன்

கண்ணீர் பிடிக்கவென வைத்திருக்கும் ஓர் கோப்பையில்...

இரண்டும் கலந்து எனக்கான பானம் செய்கிறேன்

புளித்து நொதிக்கும் அதன் சுவையில்

கிறங்கி மயங்குகின்றன கண்கள்..

சில்லிட்டு விறைக்கும் தேகத்தின் வழியாக

பூமிக்குள் வேர் இறங்குகின்றது.

..ஷஹி..

Tuesday, October 18, 2011

கூட்டாண்மை அரசியல் நவீன சுரண்டல் - மணற்கேணி 2010 க்காக எழுதிய கட்டுரை

(குறிப்புகள் எடுத்துக் கொடுத்து தட்டச்சவும் வாசித்து உதவிய அப்பாவுக்கு நன்றி..)

முன்னுரை;

நாம் வாழும் இவ்வுலகு தோன்றி சுமார் 600 கோடி ஆண்டுகள் .ஆகின்றன.மனித இனம் தோன்றி சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளாகின்றன. மனிதன் ஆரம்பத்தில் மிருகங்களைப் போன்றே இயற்கையில் கிடைத்த உணவை அப்படியே உண்டு வாழ்ந்தான்.பின்னர் ஓரிடத்தில் நிலையாகத் தங்கி விவசாயம், கால்நடைவளர்ப்பு,கைத்தொழில் என்று படிப்படியாக வளர்ந்தான். அவனுடன் சேர்ந்து உற்பத்தி சக்திகளும், உறவுகளும் வளர்ந்தன.

தனிச்சொத்து, குடும்பம், அரசு என்ற அமைப்புகளும் வளர்ந்து மொழி, பண்பாடு கலாச்சாரம் என பெரிய மாற்றங்களும் , சமூக தேசிய உணர்வுகளும் வளர்ந்தன. போக்குவரத்து வசதிகளும் பண்டங்களின் பயன்பாடுகளும் அவை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்லப்படுவதும் வளர்ந்ததும் ..விற்பனைக்கென்றே பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. தனக்கென உற்பத்தி செய்தவன், இன்னொருவரிடம் வேலைக்குச் சென்றான். இந்தத் தொழிலாளியின் கூலி கொடுபடாத உபரி உழைப்பு முதலாளியின் மூலதனமாகியது. இந்த மூலதனக் குவியல் புது கண்டுபிடிப்புகளுக்கும் புதிய உற்பத்தி கருவிகளுக்கும் தோற்றுவாயாய் அமைந்து, அறிவியல் வளர்ச்சி மனிதனின் அதீத வளர்ச்சியை நோக்கித் தள்ளியது.


இந்திய அரசியல்

நம் நாடு சுதந்திரம் அடைந்த பின், மைய அரசு பொதுத் துறையில் தொழிற்சாலைகளைக் கட்டமைத்தது. இறக்குமதிப் பொருட்களுக்கு, மாற்றுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டன. இவை அரசியல் சாசனத்தில் மட்டும் இறையாண்மை மிக்க, சமதர்ம, சமய சார்பற்ற மக்களாட்சி குடியரசை அமைத்திட இந்தியர்களாகிய நாம் உறுதி பூண்டிருப்பதாக சொல்கிறது.

ஆனால் உண்மையில் நம்நாடு சோஷலிஸத்தை நோக்கி ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை. இது முழுக்க முழுக்க முதலாளித்துவ நாடகமும் இல்லை. ஏனெனில் இது நிலச் சுவாந்தார்களிடம் சமரசம் செய்து கொண்டு நிலச்சீர் திருத்த நடவடிக்கைகளைக் கூட செய்யவில்லை. ஏன்.... இந்த அரசியல் சாசனமே போலியாகத் தயாரிக்கப்பட்டது. எவ்வாறெனில் அரசியல் நிர்ணய அவையில் இருந்த 385 பேர்களில் 93 சுதேசி சமஸ்தான மன்னர்களின் பிரதிநிதிகள் , மீதமுள்ள நபர்கள் பண்ணையார்கள், சொத்து வைத்திருந்தவர்கள், பட்டம் படித்தவர்கள் ஆகியோரால் (அதாவது மொத்த மக்கள் தொகையில் பத்து சதவிகிதம்) தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஆனால் இந்திய அரசு தனியார் வசம் பெரும் தொழில்கள் வளர ஆக்கமும் ஊக்கமும் அளித்தது.

இதன் விளைவாக உற்பத்தி சக்திகள் ஒரு சிலரிடமே குவியவும், ...கிராமப்புரங்களில் வறுமையும் , நிலவியது. அரசு ,தொழிற்சாலை அதிபர்களிடமோ நிலச் சுவாந்தார்களிடமோ பெரும் வரி விதிப்பை மேற்கொள்ளவில்லை அதனால் சாதாரண ஏழை எளியவர்களுக்கு எந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.எனவே, 1950-80 களில் 3.5 ஆக இருந்த வளர்ச்சி ,1980 களிலிருந்து அதிலும் குறிப்பாக 6% முதல் 9% வரை ஆனது. 1991 முதல் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் வந்த பின் நாட்டின் வளர்ச்சி அதிகரிப்பதாக அரசு சொல்லிக் கொண்டாலும் , உண்மையில் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு தான் அதிகரித்துள்ளது. இதற்கு முன் மக்களுக்கு வழங்கிய கல்வி, மருத்துவம், சிறுதொழில் வளர்ச்சி, சிறுவிவசாயிகளின் வளர்ச்சிக் கொள்கைகளையெல்லாம் அரசு கைவிட்டுவிட்டது. வெளிநாட்டு மூலதனத்திற்கு கதவை அகலத்திறந்து வைத்துவிட்டு, எண்ணை வளத்திற்குக் கூட தன்னிறைவு அடைய வெளிநாடுகளுடன் ஒப்பந்தம் போட பயந்து அமெரிக்காவின் சார்புக் கொள்கையை வெளிநாட்டுக் கொள்கையாக மாற்றிவிட்டது. ஒரு நிலைக் கொள்கையின் நாயகனாக இருந்த இந்தியா, இன்று மேற்கத்திய, வீழ்ந்து கொண்டிருக்கும், அரசுகளுக்குத் துணை போய் கொண்டிருக்கிறது.

சர்வதேச அரசியல்---அமெரிக்கா...

18 வது நூற்றாண்டின் இறுதியில் முதலாளித்துவத்தின் இன்னொரு வடிவான ஏகாதிபத்தியமாக உருவெடுத்தது. இவைகள் நடத்திய முதல் உலகப்போர் இவர்களையே பலவீனமாக்கி, பல லட்சம் பேர் மடிந்தனர். 2 ஆம் உலகப் போர் உலகச்சந்தையை மறுபங்கீடு செய்வதற்காக திரும்பவும் நடத்தப்பட்டது. ரஷ்யா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனாவில் பாட்டாளிவர்க்கம் வெற்றியை நோக்கிச் சென்றது. ஆனால் சில காலம் கழித்து கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவுடன் சேர்ந்து மூழ்கின. இது ஏகாதிபத்திய சதி. பின்னர் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவமும் ரஷ்யாவிலும் சீனாவிலும் அதிகார வர்க்க முதலாளித்துவத்தின் மூலம் ஆட்சியதிகாரம் கைப்பற்றப்பட்டது.

இவ்வாறாக அமெரிக்கா உலகத்தின் தனிப்பெரும் சக்தியாக தன்னை நினைத்து ஆட்டம் போடுகிறது. புதிய சந்தைகளை தனக்குத் தேடி அலைந்த அமெரிக்கா, உலகம் முழுவதும் தன் குடையின் கீழ் கொண்டு வரவும், உள்ள சந்தைகளை காப்பாற்றிக் கொள்ளவும் உலகம் முழுவதும் தன் ராணுவங்களை நிறுத்தி வைத்துள்ளது. இல்லாத பேரழிவு ஆயுதங்களை ஈராக்கில் தேடி ஈராக்கிய மக்கள் 1 லட்சத்தி 17 ஆயிரம் பேரை கொன்றொழித்து, நாகரிகத்தின் தொட்டிலான பாக்தாத் நகரை சுடுகாடாக்கி விட்டது.

பொருளாதார பின்னடைவு காலமான 2009 இல் கூட உலக ஆயுத விற்பனையில் 70% தான் மட்டுமே விற்று 37.8 பில்லியன் டாலர்களைப் பெற்றுள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக ஆஃப்கன் தீவிரவாதிகளை தானே வளர்த்து விட்டு, கடந்த 11 ஆண்டுகளாக அவர்களை அழிப்பதாக சொல்லிக் கொண்டு ஆஃப்கன் மக்களைக் கொன்று குவித்து வருகிறது. ஜப்பானில் உள்ள தனது படை முகாமை இது மாற்றாததன் காரணமாக ஜப்பானிய பிரதமர் தன் பதவியை இழந்தார். தான் மட்டும் 2200 அணுஆயுதங்களை வைத்துக் கொண்டு..... மின்சாரம் தயாரிக்கவும், புற்றுநோய்க்கு ஐசோடோப் தயாரிக்கவும் , அணு ஆற்றலை வளர்த்துக் கொள்ள நினைக்கும் ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்து அதனை அச்சுறுத்தி வருகிறது.

கடந்த 50 ஆண்டுகளாக கியூபாவை முடக்கிப் போட்டுள்ளது. அணு ஆயுதம் வைத்திருக்கும் இஸ்ரேலை தன் அடியாளாக அரேபிய தீப கர்ப்பத்தில் வளர்த்துவிட்டு, பாலஸ்தீன, காஃஜா, சிரியா மற்றும் லெபனான் பகுதி மக்களைத் தொடர்ந்து கொன்று குவித்து வருகிறது. வட கொரியா மற்றும் தென்னமெரிக்க நாடான வெனிசுலாவையும் அச்சுறுத்துகிறது. உலக மக்களால் பெரிதும் வெறுக்கப்படும் நாடான அமெரிக்காவின் நண்பர்கள் இஸ்ரேல், தைவான், சவூதி அரேபியா மற்றும் ஐரிஸ் ரிபப்லிக் ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே. இந்த நான்கு நாடுகளும் உலகின் மூன்று மூலைகளில் உள்ளன. இவற்றின் மக்கள் தொகை நம் தமிழ் நாட்டு மக்கள் தொகையை விடக் குறைவு. உலகில் அமெரிக்கா தான் அதிகமாகக் கடன் வைத்துள்ள நாடு. இந்த நாட்டால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் மீது அதிகமாக வரி விதிக்க முடிவதில்லை. ஏனெனில் அவர்கள் தான் இந்த நாட்டை ஆண்டு வருகின்றனர். எனவே ஏழைகளுக்கு சமூகப் பாதுகாப்புக்குக் கூட செலவழிக்க கார்ப்பரேட்டுகள் இசைவதில்லை. ஹால் பர்ட்டன் மற்றும் பிளாக் வாட்டர் ஆகிய நிறுவனங்கள் ஈராக்கிலும் ஆஃப்கானிலும் அமெரிக்காவுக்காக சண்டையிடும் அளவுக்கு ஆட்களை வைத்துள்ளனர். இவர்களின் 71 ஆயிரம் பேர் இப்போது ஆஃப்கனில் சண்டையிட்டு வருகின்றனர். இவர்கள் விளையாட்டுக்காகக் கூட மக்களைக் கொல்கின்றனர்.

கார்ப்பரேட்டுகளின் தலைவனான அமெரிக்கா உலக மக்களை தான் கொல்கிறது. தன் மக்களை வாழ வைக்கிறதா? அது தான் இல்லை!!!! 1976 இல் இந்நாட்டின் ஒரு சதவிகித மக்கள் இந்நாட்டின் வருமானத்தில் 8.6% பெற்றனர். 2007 இல் இது 23.5 % ஆக உயர்ந்து விட்டது. 2008 இல் பத்தில் ஏழு அமெரிக்கர்களின் வருமானம் உயராமல் அப்படியே நின்று விட்டது. 1983 இல் இங்கிலாந்துப் பிரதமர் தாட்சர் தன் நாட்டு வங்கிகள் தங்கள் மொத்த மூலதனத்தில் 5 % ஐ பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்ய அனுமதித்தார். 1996 இல் இது 25% ஆகி பின்னர் 1999 இல் இந்த வரையரையும் கை விடப்பட்டது. இந்த முறையை அப்படியே பின்பற்றிய அமெரிக்க வங்கிகள் ஊக வணிகத்தில் ஈடுபட, அமெரிக்க பொருளாதார பலூன் வெடித்து விட்டது. பேராசை பெரு அழிவை உண்டாக்கி சாதாரண அமெரிக்க மக்களின் சேமிப்பை எல்லாம் அழித்துத் தெருவில் நிறுத்தி விட்டது. இவர்களை மீட்க இவர்களுக்கு அரசு 70 ஆயிரம் கோடி டாலர்களை கடன் அளித்தது. இந்தப் பணக்கார வங்கியாளர்கள் தற்போது சீரழிவிலிருந்து மீண்டு மக்கள் பணத்தின் மூலம் போனசும் பெறுகின்றனர். பெரும்பாலான தொழிற்சாலைகள் பொருளாதார சீரழிவால் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கி விட்டது. புதிய வேலை வாய்ப்புகளும் இல்லை. வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை இப்போது 10 % ஆகும்.

ஐரோப்பிய யூனியன் மற்றும் இதர பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள்...

இவர்கள் ஒன்றும் அமெரிக்காவுக்கு சளைத்தவர்கள் அல்ல..இவர்களும் பேராசையும், சுயநலமும் ,திமிரும் உள்ளவர்களே! தங்கள் நாட்டு மக்களின் செல்வத்தையெல்லாம் ஊக வணிகத்தில் அழித்து விட்ட இவர்கள் அரசை நடத்தக் கூட பணம் இல்லாமல் உலக வங்கியிடம் கடன் வாங்கி ,அது சொல்லும் கட்டுப்பாடுகளுக்கெல்லாம் கீழ்ப்படிந்து, செலவினத்தைக் குறைக்க மக்களின் சமூக நலத் திட்டங்களில் கை வைத்து விட்டன. இதனால் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் உள்ள அரசு ஊழியர்கள், போக்குவரத்துத் தொழிளாளர்கள் மற்றும் தனியார் நிறுவனத் தொழிலாளர்கள் , முனிசிபல் தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவரும் தங்களை ஆள்பவர்களுக்கு எதிராகக் கலகம் செய்து வருகின்றனர். இங்கிலாந்து நாட்டு போக்குவரத்துத் தொழிலாளர் தலைவர் ஒத்துழையாமை இயக்கம் நடத்தித் தான் இந்த அரசைப் பணிய வைக்க முடியும் என்கிறார்.

தற்போது பிரிட்டன் அரசு 1லட்சத்து 50 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கியதுடன் 155 பில்லியன் ஸ்டெர்லிங்க் பட்ஜட் குறைவை ஈடுகட்ட ஒவ்வொரு துறையும் 25 % முதல் 40% வரை சிக்கனதைக் கடைபிடிக்க ஆணையிட்டு வருகிறது. ஸ்டூவட் ஃப்ரேஸர் என்ற பங்கு வர்த்தகர் இங்கிலாந்து வங்கி 7 பில்லியன் போனஸ் வழங்கியது சரி தான் என்றும், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நிலவத்தான் செய்யும் என்றும் ஏனெனில் இறைவன் மனிதர்களுக்கு மூளையை ஒரே அளவாக வைப்பதில்லை என்றும் திமிராகப் பேசியுள்ளார்.

ஃப்ரான்ஸ் நாடு கூட்டாண்மையில் கைப்பாவையாக செயல்பட்டு, தொழிலாளர்களின் ஓய்வு பெரும் வயதை உயர்த்தி, பென்ஷனைக் குறைத்துள்ளது. ஹங்கேரியில் பயங்கரப் பொருளாதார வீழ்ச்சி. ஸ்பெயின் தன் வரலாற்றிலேயே கண்டிராத வேலையின்மையைக் கண்டுள்ளது. ஐஸ்லாந்தில் வலது சாரி அரசாங்கம் மக்களின் எதிர்ப்பில் நொறுங்கிப்போனது. இத்தாலியில் புலம் பெயர்ந்து வந்த தொழிலாளகளுக்கு எதிராக உள்ளூர் தொழிலாளர்கள் கிளம்பியுள்ளனர். ரோமில் அரசுக்கெதிரான போராட்டங்கள் நடக்கின்றன. கிரீஸ் அரசின் நிலையும் இதுவே. சுவிட்ஸர்லாந்தின் யூபிஎஸ் வங்கி 17 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்து, 2000 தொழிலாலர்களை வேலையை விட்டு விலக்கியது. கனடாவில் ஓன்டிரியோ என்ற புகழ் மிக்க தொழில் பகுதி கடும் நெருக்கடியில் தவிக்கிறது. ஜப்பானின் சோனி நிறுவனம் 16 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பி, தென்னமெரிக்க நாடுகளில் இருந்து பிழைப்புத்தேடி ஜப்பான் வந்தவர்களுக்கு விமானக் கட்டணம் கொடுத்து அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்புகிறது. மிஸ்ஸான் 20 அயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பி விட்டது.

இவ்வளவு நடந்தும் அமெரிக்காவோ ஐரோப்பிய யூனியன் நாடுகளோ அல்லது ஜப்பான் போன்ற முதல்லாளித்துவ கார்பரேட்டுகளின் பிடியில் உள்ள அரசுகளுக்கு புத்தியோ வந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் இவை அனைத்துமே கூட்டாண்மையால் நிறுவப்பட்ட அரசுகள். இவர்கள் தொடர்ந்து வலது சாரி தத்துவங்களையே கடை பிடிக்கப் போவதாகவும், உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியம் சொன்ன படி மக்கள் நலத்திட்டங்களைக் குறைத்து விடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். பொருளாதார மற்றும் தொழிற்நுட்பத்தில் பின் தங்கியுள்ள ஏழை நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் தெற்கு நாடுகளில் தங்கள் பொருட்களுக்கு சந்தைகளைப் பிடிக்க இவர்கள் அலைகின்றனர். இந்தியாவும் ஐரோபிய யூனியன் வலையில் சிக்கி பெரும் நெருக்கடியை சந்திக்க உள்ளது.

கூட்டாண்மையின் தோற்றம்...

நிலப்பிரபுத்துவத்தை அழித்து முதலாளித்துவமும் ,முதலாளித்துவம் ஏகாதிபத்தியங்களாகவும்-ஏகாதிபத்தியங்கள் விளைவித்த கூட்டாண்மை (கார்பரேட்) அதிபர்கள் தான் நம் உலகை இன்று ஆள்பவர்கள். இவர்கள் நிறுவனங்கள் உலகம் முழுவதும் 17,800 இருப்பதாக ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. இவர்களுக்கு வேண்டியது எல்லாம் கொழுத்த லாபம். இவர்களின் எண்ணம் முழுவதும் கொள்ளை லாபம் அடிப்பதில் தான்.

பால் க்ருக்மேன் தனது கட்டுரையில், ரிபப்ளிகன் கட்சியினர் தங்களுக்காக ஃபாக்ஸ் நியூஸ் ஏஜென்ஸியினர் வேலை செய்வதாக எண்ணியிருந்தனர். ஆனால் பின்னர் தான் அவர்களுக்குத் தெரிந்தது தங்கள் கட்சியில் கொள்கைகளை வகுப்பவர்கள் ஃபாக்ஸ் நிறுவனத்தில் சம்பளம் பெற்று வேலை செய்கிறார்கள் என்று. எனவே ரிபப்ளிகன் கட்சியினர் தான் ஃபாக்ஸ் நியூசின் வேலையாட்கள். இதே போல் எல்லா விளம்பர நிறுவனங்களும் கூட்டாண்மைக்கு விலை போகிறவை அல்லது முழுவதும் விலைக்கே வாங்கப்பட்டவை.

ஏன்.... தமிழ் நாட்டில் கூட ஒரு கட்சி தொடங்க முக்கிய நிபந்தனை கொள்கைகள் அல்ல. பணமும் தொலைக்காட்சி உரிமமும், பத்திரிக்கைகளும் தான். ஹிந்து நாளிதழின் நிருபர் திரு. பி. சாய்நாத் 5/8/2010 அன்று வெளியிட்ட செய்தியில் பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு தனி நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் சாதகமான விஷயங்களை செய்திகளைப் போல் வெளியிடுகின்றன என்கிறார். இந்திய பத்திரிக்கையாளர் சங்கம் இது உண்மை தான் என்று ஆதாரங்களுடன் தெரிந்தும் குற்றவாளிகள் மீது வழக்குத் தொடுக்காதது மட்டுமன்றி அவர்கள் பெயரைக் கூட வெளியிடவில்லை. இந்தக் கூட்டாண்மை நிறுவன அதிபர்கள் ஒன்று சேர்ந்து உலக சந்தையை பங்கு போட்டுக் கொண்டனர்.

மார்க்ஸ் சொன்னதைப் போல் உலகத் தொழிளாலர்கள் ஒன்று சேரவில்லை. உலக முதலாளிகள் ஒன்று சேர்ந்து கூட்டாண்மை நிறுவனங்களை அமைத்து அந்தந்த நாட்டு அரசுகளை தம் ஆளுகையின் கீழ் வைத்துள்ளனர். உலக வங்கியின் முன்னாள் ஆலோசகரான ஹாஜுங்கேங்க் தனது முதலாளித்துவம் என்ற புத்தகத்தில் நோபல் பரிசு பெற்ற ஹெர்பர்ட் சைமன் என்பவர் தெரிவித்த கருத்து ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அந்தக் கருத்து வேற்று கிரகத்திலிருந்து எந்த மனிதன் இப்பூவுலகிற்கு வந்தாலும் இங்கு சந்தைப் பொருளாதாரம் இல்லை, மாறாக முதலாளிகள் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்ட அமைப்புப் பொருளாதாரம் உள்ளது என்பதாகும்.

இவர்களுக்கு வேண்டிய எல்லா நிதி வசதிகளையும் வங்கிகளே அளிக்கின்றன, அரசே இதற்கான நிதி அமைப்புகளையும் தங்கு தடையின்றி மின்சாரத்தையும் தண்ணீரையும் குறைந்த விலைக்கு வழங்குவதுடன் இவர்கள் ஆலைகளுக்கு தொழிலாளர் நல சட்டங்கள் அமல் படுத்துவதில் இருந்து விலக்கும் அளிக்கிறது. இவர்களுக்கு நிலம் கையகம் செய்யும் பணியை அரசே செய்கிறது. இவர்களுக்கு வரி விடுமுறையும் உண்டு. இந்த வரியை 10% லிருந்து 71/2 % ஆகக் குறைத்து நமது அரசு 25 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை இழந்துள்ளது.

ஒரு முறை ஜார்ஜ் புஷ் பேசும் போது நான் கோல்கேட் பேஸ்ட் தான் உபயோகிக்கிறேன் என்று ஒரு பொதுக் கூட்டத்தில் இவர்களுக்கு விளம்பரம் செய்கிறார்.ஒரிசாவில் வேதாந்தா நிறுவனம் தொழிற்சாலை அமைக்க சுற்றுச்சூழல் அமைச்சரிடம் நமது பிரதமர் சிபாரிசு செய்கிறார். ஏர்டெல் நிறுவனம் தென்னாப்பிரிக்காவில் செயல்பட நமது பிரதமர் தென்னாப்பிரிக்க அரசிடம் சிபாரிசு செய்கிறார். வெளிநாடுகளுக்கு நமது இந்திய நாட்டு வர்த்தக, அயல்உறவு, பிரதமர் போகும் போதெல்லாம் இந்நிறுவனங்களின் பிரதிநிதிகளும் செல்வது வாடிக்கையான ஒன்று. அரசு வரவு செலவுத் திட்டங்கள் தயாரிக்கும் போது இவர்களைக் கலந்து ஆலோசித்தே தயாரிக்கிறது. தேர்தல்கள் வந்து விட்டால் கட்சிகளுக்கு தேர்தல் செலவுக்கு அள்ளி அள்ளி கொடுப்பவர்களும் இவர்களே. இவர்களின் செல்வச்செழிப்பும், ஊதாரித்தனங்களும், வாழ்முறைகளும், வருமானங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

உலகிலேயே அதிக செலவில் கட்டப்படும் 27 மாடிகள் கொண்ட குடியிருப்பு அம்பானியுடையது. இதற்கான செலவு 8000 கோடி ரூபாய் ஆகும்.இந்த நிறுவனங்கள் பணம் பாதாளம் வரை பாயும் என்ற தத்துவத்தை நன்கு அறிந்தவர்கள். இவ்வுலகில் தான் எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டே! எனவே கர்நாடகாவில் இவர்கள் நினைத்தால் பணத்தைக் கொட்டி ஆட்சி அமைக்க முடியும்! இவர்கள் மறுத்தால் ஆட்சி கவிழும். இவர்கள் வெறும் சுரங்கங்களை மட்டும் அங்கு நடத்தவில்லை. இவர்கள் மதுபான உற்பத்தியாளர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், மருத்துவக் கல்வி நிறுவனர்கள் மற்றும் ஒப்பந்தப் பணிபுரிபவர்கள் என்று பல வடிவில் இருப்பார்கள்.

கூட்டாண்மை சுரண்டல்..

இந்தக் கூட்டாண்மை அதிபர்கள் ஆஃபிரிக்க நாடுகளில் 2006 ஆம் ஆண்டிலிருந்து 15.20 மில்லியன் ஹெக்டேர் நிலங்களை விலைக்கோ அல்லது 99 ஆண்டு குத்தகைக்கோ வாங்கியுள்ளனர். இந்த நிலங்கள் ஆஃபிரிக்க கண்டத்தில் எத்தியோபியா, கானா, மாலி, மடகாஸ்கர், மொசாம்பிக், சூடான், டிஆர் சி காங்கோ மற்றும் தான்சானியா நாடுகளில் இருந்து வாங்கப்பட்டதாகும். வாங்கியவர்கள் வலைகுடா நாடுகளிலும், தென் கொரியாவிலும், சைனாவிலும், இந்தியாவிலும் உள்ளவர்கள் ஆவர். இந்த நிலங்களை வாங்க அரசுகளும் குறைந்த வட்டிக்கு இவர்களுக்கு கடன் தருகிறது. இதில் உணவுப் பயிர்களும், எத்தனால் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர்.

கூட்டாண்மை நிறுவனங்களால் அமைக்கப்பட்ட நம் அரசு மக்கள் நலனையும் கிராமப்புர விவசாய நலனையும் பின்னுக்குத் தள்ளியதால், படு மோசமாக பாதிக்கப்பட்டு சுரண்டலுக்கு ஆட்பட்டு கடனில் தத்தளித்த இந்திய விவசாயிகள் சுமார் 2 லட்சம் பேர், தற்கொலை செய்துள்ளனர் . 2009 இல் விவசாயத்துக்கு செய்த ஒதுக்கீடு 3.34 %. 2010 இல் இது 2.59 ஆகி விட்டது. 11 ஆவது திட்டத்தில் கிராமப்புர கட்டமைப்புக்கு மொத்த நிதியில் 30.5% ஆன வெறும் 14.40 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. 12/8/2010 நாளிட்ட ஹிந்து பத்திரிக்கையின் நிருபர் திரு. சாய்நாத் அவர்கள் தேசீய ஊரக வேலை வாய்ப்புத் திட்டங்களுக்கு அரசின் நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்படுகின்றன. பொது வினியோகத் திட்டத்தின் கீழ் தானியங்கள் வழங்கப்படும் தகுதியை மக்கள் பெற பல வித வரையறைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் சுரண்டல் மட்டும் தங்கு தடையின்றி உலக மயமாக்கப்படுகின்றது என்று தெரிவிக்கின்றார். ஒட்டு மொத்த இந்திய உற்பத்தி அதிகரிப்பால் ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகின்றனர் என்பதே உண்மை.

ஒட்டு மொத்த உற்பத்தி உயர உயர பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகவும், ஏழைகள் மேலும் பரம ஏழைகள் ஆகவும் இந்த சுரண்டல் போக்கு தான் காரணம். இவ்வாறு முகேஷ் அம்பானியின் சொத்து ஒரு நிமிடத்திற்கு ரூபாய் 40 லட்சம் அதிகரிக்கிறது. இந்தியாவில் ரூ.4.60 கோடிக்கு மேல் சொத்து உள்ளவர்கள் 126700 பேர். இவர்கள் நம் நாட்டு மக்கள் தொகையில் 0.01% இவர்களிடம் உள்ள பணம் ரூ.20 லட்சம் கோடி. இந்தியாவின் ஒட்டு மொத்த உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு சராசரி இந்தியனின் ஆண்டு வருமானம் ரூபாய். 40,141 . இந்திய மக்களில் 70% மக்கள் பெரும் சராசரி தினசரி ஊதியம் ரூ.20 மட்டுமே என்று செங்குப்தா கமிட்டி கூறுகிறது. 116 கோடி மக்கள் தொகையில் ஆண்டு வருமானம் பெரும் மொத்த மக்களில் 70% மக்கள் 7300 மட்டும் பெறுகின்றனர். மீதமுள்ள 30% மக்களின் ஆண்டு வருமானம் ரூ.1,16,770. 70% சாதாரண மனிதனை விட இந்த 30% அசாதாரண மனிதன் 16 மடங்கு பெறுகிறான்.

இந்த கூட்டாண்மை நிறுவனங்கள் நம் நாட்டு மூலப் பொருட்களையெல்லாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து நம் நாட்டை காலி செய்து விட்டன. 1990-91 இல் ஈயம் உற்பத்தி செய்ய தேவையான தாதுப் பொருட்கள் ஏற்றுமதி 1,39,419 டன்களில் இருந்து 2006-07 இல் 612641 டன்களாகின. இதே போல் சுண்ணாம்புக்கல் ஏற்றுமதி 1995-96 இல் 2 லட்சம் டன்களில் இருந்து 2007-08 இல் 8,79,000 டன்களாயின. கர்நாடகாவிலிருந்து இரும்புத்தாது சென்னை, க்ரிஷ்னப்பட்டினம், காகிநாடா மற்றும் மர்மகோவா துறைமுகங்கள் மூலம் 2003-2004 இல் 20,49,961 டன்களாக இருந்து 2009-2010 இல் 71,27,937 டன்களாயின. கடல் சார் உயிரின ஏற்றுமதி 1990-1991 இல் 1,39,419 டங்களில் இருந்து 2006-2007 இல் 6,12,641 டன்களாயின. திரு. மதுகோடா 2006 இல் ஜார்கண்டில் முதல்வர் ஆனவுடன் அதுவரை போடப்பட்டிருந்த 44 சுரங்கப் பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்யப் போவதாக மிரட்டினார். ஆனால் இவரே புதிதாக 23 சுரங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டு 100 அனுமதிகளை வழங்கியுள்ளார். இவர் பெற்ற லஞ்சம் மட்டும் ரூ.4300 கோடி என்றால் ......இந்த சுரங்க தாதுப் பொருட்களின் மதிப்பு என்னவென்று நாம் யூகிக்கலாம். ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மாப்பிள்ளை அனில் குமாருக்கு 37 லட்சம் ஏக்கர் இரும்புத்தாது சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து ஆந்திர சட்ட சபையில் எதிர் கட்சிகள் கூச்சல் போட்டனர். இதில் 13 லட்சம் கோடி டன்கள் தாது உள்ளதாகத் தெரிகிறது.

நம் பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என். எல் இல் வேலை பார்க்கும் உயர் மட்ட அலுவலர்கள் தனியார் தொலைபேசி சேவை நிலையங்களுக்கு சாதகமாகவே எல்லா வேலைகளையும் செய்து ஓய்வு பெற்ற பின் அவர்களிடம் அதிக சம்பளத்துக்கு வேலைக்கு சென்று கூட்டாண்மைக்கு ஆதரவாகவும் பி.எஸ். என். எல் லுக்கு விரோதமாகவும் செயல் படுகின்றனர். இந்த கூட்டாண்மை நிறுவனங்கள் சென்ற பார்லிமென்ட் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்குக் கொடுத்த தேர்தல் செலவுக்கான பணம் மட்டும் ரூ.80 ஆயிரம் கோடி என்று ஒரு தகவல் தெரிவிக்கின்றது.

உலக மற்றும் இந்திய நாடுகளில் கூட்டாண்மை ஏற்படுத்திய தாக்கங்கள்....

இந்த கூட்டாண்மை அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு பரவலான உலக அதிகாரங்கள் ஒரு தலைபட்சமாக அதிகம் வழங்கப்படுகின்றன. பிரேஸில்,ரஷ்யா, இந்தியா மற்றும் சைனா சேர்ந்த பிரிக் நாடுகள் உலக ஜனத்தொகையில் 40% கொண்டுள்ளன. இவர்களின் பொதுதொழில் பொருள்வளர்ச்சி உலகில் 20% .ஆனால் இவர்கள் அனைவருக்கும் சேர்த்து சர்வதேச நிதியக் குழுமத்தில் (ஐ.எம்.எஃப்) 10% தான் ஓட்டளிக்கும் அதிகாரம் உள்ளது. இந்த நிதியத்தின் கட்டளைக்கிணங்க எல்லாவற்றையும் தனியார் மயமாக்கியதன் விளைவை அனைத்து நாடுகளும் இன்று தினந்தோறும் சந்தித்து வருகின்றன.

இவைகள் அனைத்தும்...அதாவது ஆளும் வர்க்கங்களும் அரசும் மக்களை விட்டும் தனிமைப்பட்டுள்ளன. இந்த எல்லா அரசுகளையும் அந்தந்த நாட்டு மக்கள் வெறுக்கிறார்கள். நமது நாட்டின் மனித வள மேம்பாட்டு எண் 128. உலகில் உள்ள 177 இல் நம் வரிசை 128!.இந்த உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு, சர்வதேச நிதியம் அனைத்துமே கூட்டாண்மைக்கான அமைப்புகள். இவை அந்தந்த நாட்டு அரசுகள் மக்களுக்கு சேவை செய்வதையோ அல்லது கல்வி, சுகாதாரம்,வீட்டு வசதி ,குறைந்த வட்டியில் அல்லது வட்டியில்லா கடன் வசதி ஆகியவை வழங்குவதையோ எதிர்க்கின்றன. ஏனெறால்...அது கூட்டாண்மைக்கு எதிரானது. இருப்பினும் வளர்ந்த நாடுகள் வளர்ச்சி அடையாத நாடுகளைச் சுரண்டி, தன் நாட்டு மக்களுக்கு சமூகப் பாதுகாப்பை அளித்து வந்தன. இந்த கூட்டாண்மை நிறுவனங்களின் பேராசையால், வேலை இழந்து, வீடிழந்து பணக்கார நாடுகளின் மக்களே , தற்போது டெண்டுகளில் தங்கும் நிலமைக்கு வந்து விட்டனர். இந்தியா இன்னும் மோசம். நம் நாட்டின் மொத்த வருமானத்தில் சமூகப் பாதுகாப்புக்கு செலவழிப்பது வெறும் 6.7%. ஜெர்மனியில் இது 25% ,ஃபிரான்ஸில் 23%.அமெரிக்காவில் சராசரி வருமானம்( பெர் காபிடா இன்கம்) 47014 டாலர்.

இந்த கூட்டாண்மை நிறுவன கொள்ளையால் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு... விவசாயம், கிராமப்புர அடிப்படை கட்டமைப்புகள், சிறு தொழில் கடன் வசதி எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டன. இந்தக் கூட்டாண்மை நிறுவனங்கள் வருவதற்கு முன் இந்திய மக்களுக்கு சராசரியாக 440 கிராம் உணவுப் பொருள் கிடைத்து வந்தது. 2005-2008 இல் இது 436 ஆகக் குறைந்து விட்டது. இதே காலகட்டத்தில் பருப்பு வகைகள் 70 கிராமில் இருந்து 35 கிராமாக குறைந்து விட்டது.

கிராமப்புறங்களுக்கு மஹாராஷ்டிர அரசு வேளாண் பணிகளுக்காக 82.4 % கடன் உதவியை 1990 களில் அளித்து வந்தது. நகர்ப்புறங்களுக்கு 17.4% ஆக இது இருந்தது.இதே அரசு 2008 ஆம் ஆண்டில் கிராமப்புறங்களுக்கு வழங்கிய கடன் 42.4 % ஆக குறைந்து நகர்ப்பகுதிகளுக்கு 57.6 % ஆக உயர்ந்து விட்டது. சரியான உணவு, வீடு ,கல்வி மற்றும் சுகாதாரம் இல்லாத ஒரு சமூகம் நோய் பிடித்தவர்களாக எந்த ஒரு கடின வேலையையும் செய்ய இயலாதவர்களாகத்தானே இருப்பார்கள்? அது தான் நடந்தது. 2005-2006 ஆம் ஆண்டுகளில் 3 வயதுக்கு கீழ் உள்ள 46% குழந்தைகள் எடை குறைவாய் உள்ளனர். 33% மகளிர் மற்றும் 28% ஆண்கள் பாடி மாஸ் குறைவாய் உள்ளனர். பிறந்து 36 மாதங்கள் மற்றும் ஆறு வருடங்களுக்குள் இருக்கும் குழந்தைகளில் 79% பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 வயது முதல் 49 வயதுக்குள் உள்ள பெண்களும் ஆண்களும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களின் சதவிகிதம் 56 ஆகும். கர்ப்பிணிகள் 58% பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே தண்டகாரன்யா பகுதிகளில் பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர். இந்த இடங்களில் சுரங்கப்பணிக்கும் தொழிற்சாலை கட்டுவதற்கும் அந்தப் பகுதி மக்களை இடம் பெயரச்சொல்கிறார்கள். ஆனால் அந்த மக்களுக்கு அந்தப் பகுதியில் தான் வாழ்விடமும், உணவும், தண்ணீரும், தேனும், சிறு சிறு வேட்டைப் பிராணிகளும் உள்ளன. கூட்டாண்மை நிறுவனங்களுக்கு உதவி செய்யும் உயர் மட்ட மாநில அரசு தலைமைப் பதவிகளில் உள்ள காவல் மற்றும் அதிகாரிகள் இந்த இடங்களை அவர்களுக்கு ஒதுக்கலாம்... அவர்களும் பெறலாம். ஆனால் அந்த இடங்களுக்குச் சொந்தமான பழங்குடியினர் எங்கு செல்வார்கள்? எனவே தான் அந்தப் பகுதிகளில் இப்போது பெரிய போராட்டம் நடந்து வருகிறது.

அருந்ததி ராய் சொல்வது போல பழங்குடியினர் தங்கள் பூமியைக் காக்கவே ஆயுதம் ஏந்துகிறார்கள்..எல்லா மாவோயிஸ்டுகளும் ஆதிவாசிகள் ஆனால் எல்லா ஆதிவாசிகளும் மாவோயிஸ்டுகள் அல்ல. இந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கி ஏந்திய காந்திகள்.

நமது நாட்டிற்கு அத்தியாவசிய தேவையான தாதுப் பொருட்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து நமது சுற்றுச்சூழலையும் மீட்டு எடுக்க முடியாத அளவுக்கு மாசு படுத்துவதால் நாமும் நமது சந்ததியினரும் பெரும் இன்னலுக்கு ஆளாவோம். லஞ்சத்திலேயே ஊறித்திளைக்கும் அதிகாரி வர்க்கத்தை வளர்த்து எடுத்ததே இந்த முதலாளி வர்க்கம் தான். தற்போது மொத்த சமூகமே லஞ்ச லாவண்யத்தில் திளைக்கிறது.

தற்போது ஐ.டி அமைச்சர் திரு. ஏ. ராஜா 1.40 லட்சம் கோடி ஊழலினால் பதவி விலகியதற்கு இந்த கூட்டாண்மையினரே காரணம். காமன் வெல்த் கேம்ஸ் லஞ்சம், ஐ.பி.எல் கிரிக்கெட் லஞ்சம், மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடு லஞ்சம் எல்லாம் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிகள். முன்னாள் சட்ட அமைச்சர் ஷாந்தி பூஷன் ஓய்வு பெற்ற 16 உச்ச நீதி மன்ற நீதிபதிகளில் 8 பேர் ஊழல்வாதிகள் என்று உச்சநீதி மன்றத்திலேயே தெரிவிக்கின்றார். கர்நாடகாவில் லஞ்சப் புகாரில் அகப்பட்ட அரசு அலுவலர்களில் 10% கூட தண்டனை பெறவில்லை. போபால் விஷ வாயு வழக்கு, பாபர் மஸூதி இடிப்பு வழக்கு, பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு, சத்தியம் கூட்டாண்மை நிறுவன வழக்கு , குஜராத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட வழக்கு, சோரப்புதீன் என்கவுன்டர் வழக்கு,கோத்ரா ரயில் வண்டி எரிப்பு வழக்கு, டெல்லியில் சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கு, ஜெயலலிதா சொத்து சேர்த்த வழக்கு இவையெல்லாம் எத்தனை ஆண்டு வழக்குகள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இதில் , சத்தியம் அதிபர் ஜெயிலிலேயே இல்லை என்பதும் தற்போது தான் உச்ச நீதி மன்றம் தலையிட்டு ஜெயிலில் அடைத்துள்ளது என்பதும் அறிந்ததே.

கிரிகெட் சூதாட்டம், ஐ.பி.எல் சூதாட்டம், வெளிநாடுகளில் கால்பந்தாட்ட வீரர்களை வைத்து நடத்தும் சூதாட்டம் என்று கலை மற்றும் பண்பாட்டுத் தடங்களை இவர்கள் போகும் வீச்சு மிகவும் அதிகமாகும். 150 கோடி ரூபாய் செலவில் எந்திரன் படம் தயாரித்து முதல் ஷோ பார்ப்பவர்களிடம் 5000 ரூபாய் கட்டணம் வாங்கப்பட்டிருக்கிறது. கூட்டாண்மையின் தாக்கத்தால் தமிழ் மொழி அழிந்து வருகிறது என்று கவிஞர் வைரமுத்து வருந்துகிறார். ஜங்க் உணவுகளை உண்டு பாப் கலாச்சாரத்தில் ஊறித்திளைக்கிறது மேல் தட்டு வர்க்கம். அல்லலுறும் கீழ் தட்டு மக்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உண்ணக் கூட வழியின்றி வாழ்வாதாரமான உணவு, தண்ணீர், கல்வி சுகாதாரம், வீடு ,வேலைவாய்ப்பு, கழிப்பிட வசதி, விளையாட்டு,கலை மட்டுமல்ல பண்பாட்டு வாசல்களும் மூடப்பட்டு விட்டன.இவர்களை மேலும் ஓட்டாண்டியாக்க தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் மதுபானக்கடைகள் திறந்து சென்ற ஆண்டு 12500 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. சென்ற தீபாவளியில் மட்டும் இவர்கள் 90 கோடிக்கு மது அருந்தியுள்ளனர். காமன் வெல்த் போட்டிக்காக டெல்லியிலிருந்து 60 ஆயிரம் பிச்சைக்காரர்கள் துரத்தப்பட்டுள்ளனர். .

.சுற்றுச்சூழல் மாசு...

உலகில் எந்தப் பொருளையும் வாங்கிவிடலாம் அல்லது அதிகரித்துக் கொள்ளலாம் நிலத்தைத் தவிர. கூட்டாண்மை வாதிகள் உலகம் முழுவதிலும் உள்ள நிலம், நீர், காற்று ஆகியவைகளை மாசுபடுத்தி தங்கள் லாபவேட்டையை தொடர்கின்றனர். பங்களாதேஷ் ,லட்சத்தீவு மற்றும் கடல் மட்டத்தில் உள்ள அனேக நாடுகள் கடல் நீர் மட்ட உயர்வால் விரைவில் அழியப் போகின்றன. இந்த கூட்டாண்மைவாதிகள் இதைப்பற்றியெல்லாம் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. இவர்களின் தலைவர் திரு. ஒபாமா அவர்கள் கோபன்ஹேகனில் நடந்த சர்வதேச சுற்றுச்சூழல் மாநாட்டில் தக்க முடிவை எடுக்கத்திணறி , தன் தோல் உரிபட்டு நிற்கிரார். தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்னால் உலகில் இருந்த கரியமில வாயுவின் அளவு ஒரு மில்லியனில் 280 பகுதி. 2 டிகிரி புவியின் வெப்பம் உயர்ந்தால் 50 % கரியமில வாயு உயர்ந்து 450 பகுதியாக மாறும். இது தான் அதிகபட்சமாக இருக்க முடியும். உலக மக்கள் தொகையில் 5% உள்ள அமெரிக்கா, 27% கரியமில வாயுவை வெளியிடுகிறது. 7.5% மகக்ள் தொகை மட்டுமே கொண்ட ஐரோப்பிய யூனியன் நாடுகள் 25% கரியமில வாயுக்களை வெளியேற்றுகிறது. அதாவது உலக மக்கள் தொகையில் வெறும் 12.5% அதாவது அரைக்கால் வாசி மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் 51% நச்சு வாயுக்களை வெளியிடுகின்றன. உலக மக்கள் தொகையில் 17.5% உள்ள இந்தியா 3% ம் 20% கொண்ட சீனா 10% ம் ,கரியமில வாயுக்களை வெளியிடுகின்றன. வளர்ந்த நாடுகளில் சராசரியாக ஒரு மனிதன் 5 ஹெக்டேர் நிலங்களை பயன்படுத்துகிறான். ஏழை நாடுகளில் சராசரியாக ஒரு மனிதன் பயன்படுத்தும் நிலத்தின் அளவு 0.20 ஹெக்டேர் இந்த முன்னேறிய நாடுகள் தங்கள் கழிவுப்பொருட்களை ஏழை நாடுகளுக்கு கப்பல்கள் மூலம் அனுப்பி விடுகின்றன.இந்த பூமியின் ஒரு ஆண்டு இயற்கை வள உபயோகம் மறுசுழற்சியில் நிலை பெற 11/2 ஆண்டுகள் ஆகின்றன.

பிரிட்டிஷ் பெட்ரோலியம் மெக்ஸிகோ வலைகுடாவில் எண்னை எடுத்துக் கொண்டிருந்த போது அந்த இயந்திரம் உடைந்து கச்சா எண்ணை 50 ஆயிரம் பேரல்கள் கடல் நீரில் கலந்து 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூர அளவுக்கு பரவி கடல் வாழ் உயிரினங்களை அழித்துள்ளன. 11 தொழிளாலர்களும் மாண்டுபோயுள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமா பிரிட்டிஷ் பெற்றோலியத்தை திட்டித் தீர்க்கிறார். இந்தக் கசிவு நிற்க 5 மாதம் ஆகியுள்ளது.

அமெரிக்க ஆண்டர்சனின் ஆலை போபாலில் விஷவாயுவை கசிய விட்டதால் 20 ஆயிரம் பேர்கள் மடிந்தனர். பல லட்சம் பேர்கள் நிரந்தர ஊனமாயினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்த நஷ்ட ஈடு சராசரியாக ரூ.10 ஆயிரம். இக்கொடுமைக்கு நம் நாட்டு அரசு அதிகாரிகள் , நீதிபதிகள் எல்லோரும் உடந்தை. அதனால் தான் அமெரிக்க ஆண்டர்சன் அவர் நாட்டில் பத்திரமாக இருக்கிறார். இதைப் பெரிது படுத்தினால் கூட்டாண்மை நிறுவனங்கள் இந்தியாவில் தமது ஆலைகளை அமைக்க வர மாட்டார்களாம்.

தூத்துக்குடி ஸ்டெரிலைட் ஆலை பல்லாயிரம் கோடி வரியேய்ப்பு செய்து, தூத்துக்குடியையே மாசு படுத்தி இந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் உள்ளது. எல்லாம் அறிந்த நம் அரசு அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்க அமெரிக்க, ரஷ்ய மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இது பல்லாயிரம் கோடி வருமானத்தை அந்த நாடுகளுக்கு அளிக்கும்.இவற்றில் தயாரிக்கப்படும் மின்சாரம் 2 மடங்கு செலவு பிடிக்கக் கூடியவை. மேலும் இந்த அணு உலை கழிவுகளான யூரேனியம் அழிய 710 மில்லியன் ஆண்டுகளாகும்! புளூடோனியம் அழிய 24400 ஆண்டுகளாகும். இந்த அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் குறைந்த அளவு இழப்பீடு வழங்க சட்டம் இப்போதே தயார். இதற்கு பி.ஜே. பி யும் உடந்தை.

அமெரிக்க நாடு ஈராக்கில் பயன்படுத்திய சக்தி வாய்ந்த ஆயுதங்களால் எரிந்து போன எண்ணை வயல்கள் மாபெரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தின. முதல்முதலாக ஜப்பானில் ஹிரோஷிமா மற்றும் நாகாசாகி நகரங்களில் அணுகுண்டு போட்டு புல் பூண்டு முதற்கொண்டு அந்தப் பகுதியையே அழித்தவர்கள் இவர்கள் தான். புவிவெப்பமும் சுற்றுச்சூழலும் இதே போல் சீர்கேடு அடைந்து வருமானால், இன்னும் 150 ஆண்டுகளில் இந்தியாவில் தென்மேற்கு பருவ மழையே இருக்காது. 60 லட்சம் ஹெக்டேர் பயிர் நிலங்கள் கடந்த 20 ஆண்டுகளில் தரிசு நிலங்களாக மாறிவிட்டன. இதே போல் கடல்வாழ் உயிரினங்களும் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 69,300 கோடி கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் மிதந்து வந்ததால் கடல் நீர் மாசடைந்து உயிரினங்களை அழித்து விட்டது. நம் தமிழ் நாட்டில் நிலத்தடி நீர் மாசடைந்து 19,000 கிராமங்களில் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத அளவிற்கு சீர் கெட்டு உள்ளது. கொகோகோலா என்ற கூட்டாண்மை கொள்ளைக் காரன் இந்தியா முழுவதிலும் நல்ல நீர் உள்ள பகுதிகளில் எல்லாம் எல்லா நீரையும் உறிஞ்சி நம்மை வஞ்சிக்கிறான்.

வன நிலங்களின் பரப்பளவு இந்தியாவில் குறைந்து கொண்டே வருகிறது. சுரங்கப்பணிகளுக்கு இவை தாரை வார்க்கப் படுவதால் இந்த நிலை. இது போல் தாரைவார்க்கப்பட்ட நிலங்கள் நிக்கோபாரில் 100%, ஆந்திராவில் 14%, ஒரிசாவில் 16.2%, சதீஸ்கரில் 15.2%, குஜராத்தில் 10.2%, ஜார்க்கண்டில் 9.5% ,மத்தியப்பிரதேசத்தில் 10.6%, கர்நாடகாவில் 8% ஆக இந்த வன நிலங்கள் மொத்தம் 1.64 லட்சம் ஹெக்டேர் வனநிலங்களில் அடங்கும். 2005-2006 இல் 77 மில்லியன் டன் தண்ணீர் இரும்புத்தாது வெட்டியெடுக்க மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது . கூட்டாண்மை நிறுவனங்களின் வருகைகுப்பிறகு தான் வன நிலங்கள் வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டன. அதாவது 2001 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தான் 600 லட்சம் ஆதிவாசிகள் காட்டை விட்டும் துரத்தப்பட்டனர், 1,30,000 தாவர இனங்களும் அழிந்தன. சுரங்கப்பணிகளால் 90 தேசியப் பூங்காக்களும், வன விலங்குகளின் புகலிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

சிலி நாட்டின் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தண்ணீர் வியாபாரம் தங்குதடையின்றி நடைபெறுகிறது. இந்தியாவில் சர்தார் சரோவர் அணைத் திட்டம் சாதாரண மக்களின் குடிநீர் தேவையை விட கூட்டாண்மை நிறுவனங்களின் ஆலைகளின் தேவையையே பெரிதும் நிறைவேற்றுகின்றன. இந்த அணைக்கட்டு திட்டத்தால் பயன்பட உள்ள விளைநிலங்கள் கூட கூட்டாண்மை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன.


கூட்டாண்மையின் தாக்கத்தால் இந்தியாவிலும் உலக அளவிலும் உள்ள மக்களின் நிலை..

இந்தியாவில் 70 விழுக்காடு மக்களை வறுமை கோட்டிற்குக் கீழ் இந்தக் கூட்டாண்மை நிறுவனங்கள் கொண்டு வந்து விட்டன. மேலும் பழங்குடியினர் மற்றும் ஆதிவாசிகளை அச்சுறுத்தி ஆயுதங்களை ஏந்த வைத்து விட்டது. இதனால் இந்தியாவில் சட்டீஷ்கர், மஹாராஷ்டிரா, ஒரிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் ஆந்திர மாநிலங்களில் 229 மாவட்ட்டங்களில் மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு வளர்ந்து 70 விழுக்காடு பகுதிகள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. இந்திய மக்களின் 66 விழுக்காடு விவசாயத்தையே நம்பியுள்ளன. விவசாய உற்பத்தியை நமது அரசு ஊக்கப்படுத்தாமல் கடனுதவி வழங்காமல் நகர்ப்புரங்களுக்கு கிராமப்புர மக்களை துரத்தி விடுகிறது.

நகர்ப்புர மக்கள் தொகை 20..இல் இருந்ததைக் காட்டிலும் 2001..ஆம் ஆண்டுகளில் 11 சதவிகிதம் கூடியுள்ளது. இவர்களில் 20% த்தினருக்கு பாதுகாப்பான குடிநீர் வசதி இல்லை. 58% த்தினருக்கு கழிப்பிட வசதி இல்லை. இந்நகர்களில் உருவாகும் குப்பைகளில் 40% அப்புறப்படுத்தப் படுவதேயில்லை. உதாரணத்திற்கு பீகார் மாநிலத்தில் பத்து விழுக்காடு மக்கள் தான் நகர்ப்புரங்களில் வசிக்கின்றனர். பீகாரில் கல்வி அறிவு 47% . பீகாரில் வறுமை கோட்டிற்குக் கீழ் இருப்பவர்கள் 42%. இம்மாநிலத்தில் சுகாதாரப் பணிகளுக்காக செலவிடும் தொகை மொத்த வருமானத்தில் 1 விழுக்காடு தான். மஹாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மாநகரில் தற்போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, அந்நகர பரப்பளவு 438 சதுர கிலோ மீட்டர். இதில் 375 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள நிலத்தில் அந்நகரின் 40% மக்கள்.. அதாவது , பெரும் பணக்காரர்கள் நடுத்தர மக்கள் வாழ்கின்றனர். மீதமுள்ள 60% மக்கள் வெறும் 63 சதுர கிலோ மீட்டரில் வசிக்கின்றனர்.

அலகாபாத் மாவட்டத்தில் , "கன்னே" என்ற கிராமத்தில் பசிக்கொடுமை காரணமாக சிறுவர்கள் கற்களையும் மண்ணையும் தின்பதாக 4/4/2010 இல் செய்தி வந்து, உச்ச நீதி மன்றம் ஆய்வு செய்து , இது உண்மை தான் என்று அதன் பிரதிநிதிகள் உறுதி படுத்தியுள்ளனர். இக்கிராமத்தில் 80% மக்களுக்கு உணவுக்கு உத்திரவாதம் இல்லை என்றும் 90% சிறுவர்களுக்கு சத்துக் குறைவு உள்ளதாகவும் இவர்கள் கொத்தடிமைகளாக வாழ்ந்து வருவதாகவும் அதிகாரிகளோ அரசியல் தலைவர்களோ இவர்களை கண்டுகொள்ளவில்லை என்று அறிக்கை கூறுகிறது.

மில்லினியம் டெவலப்மெண்ட் பிளாண்ட் என்ற திட்டத்தின் கீழ் ஐ.நா சபை தற்போது 2006ஆம்ஆண்டில் 1.4 பில்லியன் மக்கள் கடும் பட்டினியில் தவிப்பதாகவும் இவர்களுக்கு உதவ பணக்கார நாடுகளிடம் நிதி உதவி கோரியது. தாங்களே கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்த நாடுகள் இம்மக்களுக்கு நிதி உதவி எதுவும் அளிக்கவில்லை. தென்னாபிரிக்க நாடுகளில் வெனிசுலாவின் அதிபர் சாவேஷ் அமெரிக்கா தன் நாட்டைத் தாக்கினால் ...அமெரிக்காவுக்கு எண்ணை அனுப்ப மாட்டேன் என்றும், தன் நாட்டு மக்கள் இதனால் கற்களை சாப்பிட்டாலும் சரியே என்று சொல்லியுள்ளார். பொலீவியாவின் மொரேல்ஸ் அரசு கூட்டாண்மை அதிபர்களின் பிடியில் இருந்து விடுபட்டதால் 6% அளவிற்கு வறுமையை ஒழித்தும் , 4.4 பில்லியன் டாலர் வெளிநாட்டுக்கடனை 2.4 பில்லியன் டாலராகக் குறைத்தும் உள்ளது. கூட்டாண்மை நிறுவனங்களால் தன் நாட்டு என்ணை அபகரிக்கப் பட்டதை நாட்டுடைமை ஆக்கியதால் தனது ஒரு மில்லியன் தெர்மல் யூனிட்டிற்கு 0.6 டாலர் கிடைத்தது ..தற்போது 5 டாலராக ஆக்கியுள்ளது.

தற்போது 5 கோடி டன் உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளன. ஆனால் மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இந்த உணவு தானியங்களை சரியாகப் பாதுகாக்காததால் 60 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. தற்போது ஏற்பட்ட மழை வெள்ளத்தால் உணவு தானியங்கள் வீணாகி விட்டதை கண்டித்த உச்ச நீதி மன்றம்...இவைகளை வறுமையில் வாடும் மக்களுக்கு இலவசமாக வழங்க சொன்னது. ஆனால் நமது நாட்டுப் பிரதமர் உணவு தானியங்களை பட்டினியில் இடப்பட்டவர்களுக்கு இலவசமாக வழங்க மறுத்ததுடன் அரசின் கொள்கை விஷயங்களில் நீதி மன்றம் தலையிடுவதாகவும் கூறியுள்ளார்.

தற்போது உள்ள உலக நிலைமைகளில், வளர்ந்த நாடுகள் இப்போது மாபெரும் பொருளாதார நெருக்கடிகளை கூட்டாண்மை நிருவனங்களுக்கு சேவையாற்றி ஊகவணிகம் உடைந்ததால் பொருளாதார பின்னடைவை சந்தித்து மக்களை ஓட்டாண்டிகளாக ஆக்கி..மக்களுக்கு, உழவர்களுக்கு , உழைப்பாளிகளுக்கு வழங்கி வந்த சமூக பாதுகாப்பு மற்றும் வேலை வாய்ப்பு உத்திரவாதத்தை கைவிட்டதால் மக்களிடம் இருந்து தனிமைப் பட்டு பதவி இழக்கும் அல்லது புரட்ச்சி வெடிக்கும் நிலையில் உள்ளன. இந்நிலையில் சைனாவும் இந்தியாவும், பிரேசிலும் ,ரஷ்யாவும், ஒரு சில தென் கிழக்கு ஆசிய நாடுகளும், ஆஃப்ரிக்காவில் ஒரு சில நாடுகளும் பொருளாதார சீர் குலைவால் தலை குப்புறக் கவிழாமல்..ஓரளவிற்கு நின்று கொண்டிருக்கின்றன. இதிலும் சைனாவின் 3 டிரில்லியன் டாலர் வெளிநாட்டு செலாவணி கையிருப்பையும் 580 பில்லியன் டாலர் சீன நாட்டின் ஊக்கத்திற்காக செலவிட்டதையும் கண்ட வளர்ந்த நாடுகள் தங்களை சைனாவே மீட்க முடியும் என நம்பி, அதன் செலாவணி நாணயத்தின் மதிப்பைக் கூட்டச்சொல்லி வற்புறுத்துகின்றன.

உலகம் இனிமேலும் அமெரிக்காவின் பிடியின் இல்லை. எல்லா நாடுகளும் கூட்டாண்மை முதலாளித்துவ தத்துவங்களுக்கு சாவுமணி அடித்து , மக்களின் தேவைகளுக்காக உற்பத்தி செய்து, மக்கள் அனைவருக்கும் உணவு, கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு ,இருப்பிடம் ஆகிய வாழ்வாதாரங்களை வழங்கும் கொள்கைகளைக் கடைபிடித்தால் தான் உலகம் வருங்காலங்களில் உய்ய முடியும். இல்லையேல் பெரும் பேரழிவையும், சீர்குலைவையும், உள்நாட்டுக் கலவரங்களையும், வெளிநாடுகளுடன் போர் புரிய வேண்டிய ஆபத்திற்கும் தள்ளப்படும்.

முடிவுரை...

உற்பத்தி சக்திகளைப் பெருக்கி ஒரு சிலரிடம் அவை குவிந்தால்...உற்பத்தி உறவுகளில் மட்டும் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றால்...உலகச்சக்கரம் முன்னேற்றத்தை நோக்கி எப்படி நகர முடியும்? பிரபுல் பத்வாய் சொல்கிறார் "டெமாஸ்" என்ற வார்த்தைக்கு" மாஸ்" என்று அர்த்தம். அதாவது மக்கள் திரள். அந்த மக்கள் திரள் என்பது சாதாரண மக்கள் என்று பொருள் படும். அந்த சாதாரண மக்களால் நடத்தப்படும் ஆட்சியே டெமாக்ரஸி ஆகும். இந்த கூட்டாண்மை ஆட்சிகள் தங்களை (முதலாளித்துவ) டெமாக்ரடிக் நாடுகள் என்று சொல்லிக் கொள்வது சாத்தான் தன்னைக் கடவுள் என்று சொல்லிக் கொள்வதற்கு ஒப்பாகும்.

மைக்கேல்மூர்----நாடக -சினிமா தயாரிப்பாளர், முதலாளித்துவம் ஒரு தீமை( ஈவில்) என்கிறார். இந்தத் தீமையை ஒழுங்குபடுத்துவது அல்லது கட்டுப்படுத்துவது என்பதெல்லாம் நடக்காத காரியம். எனவே அதனை ஒழித்தழித்துவிட்டு , சாதாரண ( உழைக்கும்) மக்கள் ஜனநாயகத்தை நிறுவ வேண்டும் என்கிறார்.

மாபெரும் சிந்தனையாளர் சோம்ங்கி அவர்கள் தான் எதற்காகவாவது நினைவுகூறப்பட வேண்டும் என்று நினைப்பீர்களானால், தன்னுள் புதிய சிந்தனையைத் தோற்றுவித்த ஹோவர்ட் ஜின் அவர்கள் எழுதிய (1922---2010) அமெரிக்க (சாதாரண) மக்களின் வரலாறு (1980)" எ பீப்பில்ஸ் ஹிஸ்டரி ஆஃப் யு.எஸ் " என்ற புத்தகத்தை படிக்க தனக்கு சிபாரிசு செய்தவரைத்தான் என்கிறார். அந்தப் புத்தகத்தில் அவர் ஆட்சி அதிகாரம் இதுவரை பணபலமும், துப்பாக்கியின் பலமும் உள்ளவர்களிடம் இருந்து வந்துள்ளது..இது எப்படியும் பொது மக்களிடம் தான் வந்தாக வேண்டும்..ஏனென்றால் அவர்களிடம் இருந்து தான் இவர்கள் அதைப் பெற்றுள்ளனர்.

பொது மக்கள் ஆட்சி அதிகாரத்தைப் பெற்று அதைப் பயன் படுத்த வேண்டும். வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் பொது மக்கள் இந்த ஆட்சி அதிகாரத்தை முற்காலங்களில் சரியாகப் பயன்படுத்தி இருப்பதை அறியலாம் என்று தெரிவித்துள்ளார்.

புஷ்பா எம். பார்கவா என்பவர், தனது 5/6/2010 " தி ஹிந்து" என்ற நாளிதழில் இன்னபிறவற்றுடன் "நமது பிரபஞ்சம் 120 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியது..ஆனால் பெருவெடிப்பிற்குப் பிறகு இயற்பியல் விதிகள் தோற்றத்திற்கு வருவதற்கும் தனிமங்கள் உருவாகவும் சில விநாடிகள் தான் தேவைப்பட்டன. எனவே , ஒடுக்குவோரின் இறுதி அழிவு விதி தோன்றுவதற்கு மிக நீண்டகாலம் பிடித்தது. ஆனால் இன்று கல்வி, தகவல் தொடற்புத்துறை, அறிவியல் வளர்ச்சி ஆகியன மக்களை முன்னேற்றி இருக்கிறது. எனவே 80% மக்களை சுரண்டுபவர்கள், ஒடுக்குபவர்கள் தங்கள் செயலுக்கு இனிமேலும் நியாயங்கள் கற்பித்துக் கொண்டிருக்க முடியாது. உண்மையில் ஒரு புரட்சியில் அதன் லட்சியம் நியாயப் படுத்தப்பட்டாலும் கூட , நடக்கப் போகும் விளைவுகள் எப்போதும் நியாயப் படுத்தக்கூடியதாக இருப்பதில்லை. எனவே நம் நாடு இந்த பேரழிவைத் தடுக்க தக்க ஏற்பாடுகளை இப்பொழுதே எடுக்கத்தவறினால் நம் நாட்டு மக்களான நாம் மற்றும் நம் சந்ததிகள் பெரும் அழிவிற்கு ஆளாக வேண்டியிருக்கும்" என்று எச்சரிக்கிறார்.

இந்த கேடுகெட்ட கூட்டாண்மையின் நலன்களைப் பேணும் அரசியல்அதிகார வர்கத்தின் எல்லாத் துறையினருக்கும், படித்த மேல் தட்டு வர்க்கத்தினருக்கும் இந்த நியாயமற்ற சமூக அமைப்பு, நன்கு தெரியும். ஆனால் இதில் தங்களுக்கு ஆதாயம் உள்ளது என்று நினைக்கும் அவர்கள் தங்களின் பிற்கால சந்ததிகளையும் புவியின் அழிவையும் பார்க்க மறுக்கிறார்கள். சுரண்டப்படுபவர்களும் ஒடுக்கப்படுபவர்களும்... என்றைக்கும் , திரு.எம். பார்கவா கூறியுள்ளதைப் போல் எப்போதும் அடிபணிந்து கொண்டே இருக்க மாட்டார்கள். மத்திய மாநில அரசுகள் எவ்வளவு சீக்கிரம் விழித்துக் கொள்கிறதோ, அவ்வளவிற்கு அவ்வளவு நாம் பேரழிவுகளைத் தடுக்கலாம்.

...ஷஹி...

Friday, September 23, 2011

இறை(அ)ஞ்சுகிறேன்

(ஆகஸ்ட் 10இல் மூன்றாம்கோணத்தில் பதிந்தது)

தந்தைக்கு அஞ்சி

தாயை நாடும்

பிள்ளையைப் போல்

உலகைப் பயந்து

உன்னிடம் தேடுகிறேன்

புகல்.

உன்

பாதம் பற்றிடத் தாகிக்கும்

என் விரல்களை

மறுதலிப்பெனும்

தீ தீண்டிடும்

முன்

பாதுகாப்பின் தண்ணிழல்

கொடுத்து ஆற்று.

ஆயிரமாயிரம்

திரைகளுக்கு அப்பால்

இருக்கிறேன் என்கிறாய்..

திரை நீக்கும் வெளிச்சம்

எம் இறையச்சம்

அறிவேன்!

அருவமாயிருக்கிறாய்,

ஆறுதலளிக்கிறாய்..

கோடையில் வாடுபவனுக்கு

குளிர் தென்றலாய்.

எப்போதும்

யாசிக்கும் என் கரங்களில்,

இதோ

உனக்கு ஓர் பரிசு

பரிபூரண அர்ப்பணிப்பு...

மண்ணிலும் விண்ணிலும்,

உன்

கிருபை உண்டெனும்;

நற்செய்தி கிடைக்குமா

இந்தஅற்பப் பிறவிக்கு?

..ஷஹி..

Thursday, September 15, 2011

நோன்பு திறக்க உப்பும், அப்பாக்களின் அன்பும்

(ஆகஸ்ட் 1 இல் மூன்றாம்கோணத்தில் பதிந்தது)

உலக மக்கள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உரித்தாகட்டும்...உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான்: "விசுவாசங்கொண்டோரே ! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கின்றது; (அதனால்) நீங்கள் உள்ளம் சுத்தி பெற்று பயபக்தியுடையவர்களாகலாம்."

நோன்பானது , செறிமானக்கருவி மற்றும் குடல் அவ்விரண்டின் தொடர் இயக்கத்தின் சிரமத்திலிருந்து ஓய்வை நல்குகிறது , மனதைச் சுத்தப்படுத்தி நன்மை செய்தல், ஒழுங்குற எதையும் செய்தல், கீழ்படிதல், சகித்துக்கொள்ளுதல், தூய எண்ணத்துடன் செயல்படுதல் ஆகியவற்றுக்கு அம்மனதை பழக்கப்படுத்துகிறது.

இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஊர் என்பதால் ரமலான் மாதம் துவங்கும் முன்பே ஆயத்தங்கள் ஆரம்பமாகிவிடும். வீட்டை சுத்தம் செய்வது, அதிகமதிகமாக வணக்கங்களில் ஈடுபடுவது என்று. நோன்பு துவங்கி விட்டாலோ...பகலெல்லாம் நோன்பாயிருந்து மாலையில் நோன்பு திறக்கும் நேரம் படு பிசியாகி விடுவோம். அதுவரையில் மந்த கதியில் போகும் நாள் மாலை நான்கு மணியில் இருந்து சூடு பிடித்து விடும். வயிற்றுக்குக் கெடுதல் செய்யாத, அதே சமயம் சத்தான உணவுவகைகள் செய்து , அனைவருமாக அமர்ந்து நோன்பு திறக்கும் இன்பம் ..ஆ..அது சொல்லில் அடங்காது. பசியும் தாகமும் அடங்கி மனதுக்கும் வாழ்வுக்கும் வலு சேர்க்கும் இறைதியானத்தில் வீடே திளைத்திருக்கும் .

பொதுவாக நோன்பு நாட்கள் முப்பதையும் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பத்தாகப் பிரித்து , முறையே பேரீட்சை, தண்ணீர், உப்பு என்ற மூன்றையும் கொண்டு நோன்பு திறப்போம்.

பேரீச்சையும் தண்ணீரும் உடலுக்கு தேவையான அதிமுக்கியமான சத்துக்கள். உப்பு? உயிர் காக்கும் பொருளாயிற்றே!

மட்டுமல்லாமல் நோன்பின் இறுதிப் பத்தில் நோன்பு காலம் முடிகிறதே என்ற வருத்ததுடன் உப்பில் நோன்பு திறப்பதாக ஒரு கருத்தும் உண்டு.

உப்பு கொண்டு நோன்பு திறக்கும் நேரம் எல்லாம் என் நினைவில் அப்பா தான். அப்பாவும் அம்மாவும் காதல் ,கலப்பு மணம் புரிந்து கொண்டவர்கள். அலுவலகம் கிளம்பும் பரபரப்பில் அம்மா இருக்கும் போது அவருக்கு சரியாக வீட்டின் அத்தனை வேலைகளிலும் அப்பா கைகொடுப்பார். எங்கள் அனைவருக்குமாக டிபன்பாக்ஸ் ரெடி செய்யும் பொறுப்பு அப்பாவினது தான். ஒரு நாள் பகலுணவு நேரம், பசியுடன் டப்பாவைத்திறந்து ஒரு கவளம் உண்கிறேன்.. சுத்தமாக உப்பில்லை உணவில்! பசியும் கோபமுமாக அப்படியே கொட்டிக் கவிழ்த்து விட்டு வகுப்பில் சென்று அமர்ந்து விட்டேன்.

மதியத்தின் முதல் வகுப்பு துவங்கி சிறிதே நேரத்தில் அழைப்பு வந்துவிட்டது. 'ஷஹி, யுவர் டாட் இஸ் வெய்ட்டிங்க் ஃபார் யூ இன் தி ஆஃபிஸ் ரூம்' என்று. என்னவோ என்று ஓடினேன்.' என்னப்பா ?' என்றதற்கு 'ஆஃபிஸில சாப்பிடும் போது தான் சுத்தமா உப்பில்லைன்னு தெரிஞ்சிது நீ சாப்பிட்டிருக்க மாட்டியேன்னு தான் அரை நாள் லீவ் போட்டுட்டு வந்தேன் என்கிறார்!" என்னை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த ஒரு ஓட்டலில் உணவருந்த வைத்து விட்டு பிறகு பள்ளியில் விட்டுச்சென்றார். என் திருமண வரவேற்பின் போது அப்பாவின் நண்பர் ஒருவர் இந்த சம்பவத்தை என் கணவரிடம் சொல்ல இன்றும் அது என்னவரின் நினைவில் நீங்காமல் இருக்கிறது. வாழ்வில் சுவை கூட்டும், உயிர் காக்கும் ,பெண்களின் மனங்களில் உறைந்திருக்கும் வலு சேர்க்கும் உப்பாகத் தான் அப்பாக்கள் இருக்கின்றனர்.

கவலைகளற்ற பதின் வயதில், அத்தை மகனையே திருமணம் செய்து கொண்டதால் தாய் வீடு நீங்கும் போது அழ வேண்டும் என்றே தெரியவில்லை எனக்கு. அம்மாவும் கண்ணீர் ததும்பிய விழிகளோடு அமைதியாகப் 'போய் வா' என்றார். அப்பாவுக்கு சலாம் சொல்ல திரும்புகிறேன்.. ஓவென்ற அழுகைச்சத்தம் ! ஒரு பெண் பிள்ளை போல் கதறி அழுகிறார் அப்பா! அப்பா அழுகிறாரே என்ற தாபத்தில் துளிர்த்த கண்ணீர்த் துளிகளைத் துடைத்துக் கொண்டு நானே அப்பாவை சமாதானம் செய்ய வேண்டியதாகி விட்டது!

அராபியாவில் பெண்குழந்தைகளை அவமானச் சின்னமாகக் கருதி,அராபியர்கள் உயிரோடு புதைத்துக் கொண்டிருந்த சமயம் ..முகம்மது நபியவர்கள்"இரண்டு பெண் மக்களைப் பெற்று அன்புடன் வளர்த்து, மார்க்கம் பயிற்றுவித்து, கரை சேர்ப்பவர் ,சுவனத்தில் என்னுடன் இருப்பார் "என்று கூறியதாக ஒரு ஹதீத் கேட்டிருக்கிறேன். என் அப்பாவுக்கு நான் ஒரு பெண் தான். நடுத்தர வர்க்கமென்றாலும் ஒரு இளவரசிக்குரிய சகல சந்தோஷங்களுடன் என்னை வளர்த்த என் அப்பாவுக்கும், பெண் மக்களைப்பெற்று அவர்களைப் பேணி வளர்க்கும் உலகின் எல்லா அப்பாக்களுக்கும் இறைவன் இம்மையிலும் மறுமையிலும் நற்கிருபை செய்யட்டும்.

பால்ய வயதிலேயே உலக இலக்கியம், உலக சினிமா, கம்யூனிச சிந்தனை என்று அத்தனையையும் அறிமுகம் செய்து, இன்றும் என்னைப் படிக்கவும் எழுதவும் தூண்டிவரும் என் அப்பாவுக்கே நான் எழுதிய, எழுதவிருக்கும் அத்தனையும் சமர்ப்பணம்.

நோன்பு நாட்களின் நல்வாழ்த்துக்களுடன்

...ஷஹி...

Wednesday, September 14, 2011

உடலுறுப்பு தானமும் அதன் இன்னொரு கோணமும்-MY SISTER'S KEEPER


மை ஸிஸ்டர்'ஸ் கீப்பெர் (MY SISTER'S KEEPER) ,

(ஜூலை-15 இல் மூன்றாம்கோணத்தில் பதிவிட்டது)

நிக் கஸாவெட்ஸ் இயக்கி,

காமெரூன் டயஸ் (ஸாரா ஃபிட்ஸ்கெரால்ட்),தாய்

அபிகைல் ப்ரெஸ்லின் (அன்னா ஃபிட்ஸ்கெரால்ட்), இரண்டாவது மகள்

அலெக் பால்ட்வின் (காம்ப்பெல் அலெக்ஸாண்டெர்),வக்கீல்

ஜேஸன் பேட்ரிக் (பிரையன் ஃபிட்ஸ்கெரால்ட்),கணவன்

சோஃபியா வாசிலியெவா(கேட் ஃபிட்ஸ்கெரால்ட்),முதல் மகள்

ஜோன் குசாக் (ஜட்ஜ் டீ சால்வோ), நீதிபதி

ஈவான் எல்லிங்க்சன் (ஜேசீ)மகன்

ஆகியோர் நடித்த ஹாலிவுட் படம்.

ஸாரா , பிரையன் காதல் மணம் புரிந்து கொண்ட இளம் தம்பதி. முதல் குழந்தை கேட். கேட்டுக்கு இரண்டே வயதான சமயம் தொடர்ந்த உடல் நலக் குறைபாட்டுக்கான காரணம் அறிய முற்படுகையில் அவளுக்கு ரத்தப் புற்று என்பது அறிய வந்து அதிர்ந்து போகிறார்கள் ஸாராவும் பிரையனும். டாக்டரின் ஆலோசனையின் பேரில் கேட்டுக்கு ரத்தம், முதுகுத் தண்டு வடத்திலிருந்து பிரித்து எடுக்கக் கூடிய திரவம் மேலும் தேவையான உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்வதற்காகவே ஒரு குழந்தையை ஜெனெடிக் எஞ்சினியரிங் என்று கூறப்படும் முறையில் பெற்றுக் கொள்கிறார்கள்.

குழந்தையின் பெயர் அன்னா, மிக ஆரோக்கியமான அழகான அன்னா, பிறந்ததில் இருந்ததே தன் சகோதரி கேட்டுக்கு ரத்தம், மஜ்ஜை ஆகிய உயிர் காக்கும் உடல் உறுப்புகளை கொடுத்தவண்ணமே இருக்கிறாள். இதற்காக அவள் பல சிக்கலான, வலி மிகுந்த மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கு ஆளாகிறாள். அன்னாவுக்கு பதினோரு வயதான சமயம் தன்னால் இனியும் தன் சகோதரிக்காக எந்த மருத்துவ சிகிச்சைக்கும் ஆளாக முடியாது என முடிவடுத்து மிகப் பிரசித்தி பெற்ற வழக்கறிஞர் காம்ப்பெல் அலெக்ஸாண்டரின் உதவியை நாடுகிறாள்.புற்று நோய் சிகிச்சையால் கேட்டின் சிறுநீரகம் செயல் இழந்துவிட அன்னாவின் சிறுநீரகத்தை கேட்டுக்குப் பொறுத்திவிட ஸாரா முடிவெடுப்பதில் உடன்பாடில்லாமல் ஆரம்பிக்கிறது அன்னாவி்ன் போராட்டம்.



தன் முதல் குழந்தையின் வியாதியோடு போராடவே தன் வக்கீல் தொழிலை விட்டிருக்கும் ஸாரா, வழக்கை தன் கையில் எடுத்து, தன் முதல் மகளுக்காக இன்னொரு மகளிடம் போராடுகிறாள்.

.காம்ப்பெல், எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு தன் உடலின் மீது தனக்கே ஆளுமையற்ற துயரம் பற்றி நன்கு அறிந்தவர் என்பதும், நீதிபதி டீ சால்வோ மிகச் சமீபத்தில் தன் மகளைப் பறி கொடுத்த தாய் என்பதும் கதையில் குறிப்பிடத்தக்க அம்சங்கள்.

ஃப்ளாஷ் பேக்குகளில், கதாபாத்திரங்களின் மூலம் கேட் தன்னைப் போன்றே புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஓர் இளைஞனிடம் காதல் கொள்வதும் அவன் நோய் முற்றி இறப்பதும், அச்சமையங்களில் ஸாரா தன் மகளின் துயர் துடைக்கப் போராடுவதுமாக மனதைக் கனம் கொள்ளச் செய்யும் காட்சிகள் பல.

பிறந்ததில் இருந்தே பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கு ஆளாகினாலும் தன் சகோதரியிடம் மிகுந்த அன்பு கொண்ட சிறுமி அன்னா, ஏன் இம்மாதியான ஓர் அதிர்ச்சியை தன் குடும்பத்தின் மீது சுமத்தினாள்?


தன் வயதுக்கு மீறின ஓர் முடிவை அவள் எடுக்க என்ன காரணம் என்ற கேள்விகளுக்கு விடைகளை, மிக அழகாகவும் நெகிழ்வாகவும் விளக்குகிறது படம்.

எப்படியும் இறந்து விடக்கூடிய தன் காரணமாக தன் மொத்தக் குடும்பமும் அலைகழிவதை விரும்பாத கேட் தான், தன் தங்கையை மெடிகல் எமான்சிபேஷன்(MEDICAL EMANCIPATION) அதாவது தனக்கு தன் அக்காவின் உயிர் காக்கவென செய்யப்பட்டு வந்த சிகிச்சைகளில் இருந்து விடுதலை வேண்டுமென சட்டத்தின் உதவியை நாடச்செய்கிறாள். தன் மகளின் உயிர் காக்கவே வாழ்வை அர்ப்பணித்திருக்கும் ஸாரா தன் இளைய மகளின் செய்கையை குடும்பத்துக்கு எதிரான துரோகச்செயலாகப் பார்க்க, அன்னாவின் கண்ணோட்டத்திலிருந்து அவள் செய்கையின் நியாயம் பற்றி வாதிடுகிறது படம் ,காம்ப்பெலின் மூலம்.கேட் இறந்து கொண்டிருக்கும் பெண் , அவளுக்காக ஸாரா போராடுவதில் அர்த்தம் இல்லை என்று கணவன், மருத்துவர்கள், சகோதரி என்று எல்லோரும் சொல்லியும் விடாமல் போராடும் ஸாராவின் தாய்மை உணர்வு நெகிழ்வூட்டுவது.

தன் உடலின் மீது தனக்கே உரிமை இல்லாத துயர நிலையும், தன் ஒரு சிறுநீரகத்தை தானம் செய்வதால் தனக்கு ஏற்பக்கூடிய பிரச்சினைகள் பற்றியும் அந்தச்சின்னஞ்சிறுமி பேசும் வசனங்கள்மிக யதார்த்தமான, அதே சமயம் மனதில் தைக்கக் கூடியவை.

"என்னோட ஒரு கிட்னிய குடுத்துட்டு நான் வாழ்நாள் முழுக்க ஆரோக்கியமா இருப்பேன்னு நிச்சயமில்லையே..என்னால கொழந்த பெத்துக்க முடியாமப் போகலாம்"

...என்றெல்லாம் அச்சிறுமி பேசுவது கொஞ்சமும் மிகையாகத் தோன்றாமல் போவது தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். நோயுற்றிருக்கும் சிறுமியிடம் நமக்குத் தோன்றும் அதே பரிதாப உணர்வை அன்னாவின் பாலும் தோன்றச்செய்து விடுகிறார் இயக்குனர். இருவரின் தாயாக நடித்திருக்கும் காமெரூனின் திறமைக்கு இந்தப் படம் ஓர் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. முடிவில் அன்னாவின் பக்கம் வெல்கிறது.


கேட் தன் முடிவை அமைதியாக ஏற்றுக் கொள்கிறாள்.

கீமோதெரபியின் எதிர்வினையாக கேட்டின் தலைமுடியெல்லாம் கொட்டி அவள் மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளாகும் போது தன்னுடைய அழகிய தலைமுடியை மழித்து தன் மகளுக்குக் துணையாக காமெரூன் டயஸ் வலம் வரும் காட்சியும் , காதலனுடன் ஒரு நடன நிகழ்சிக்குச் செல்ல கேட் தயாராவதும், தன்னுடைய மரணத்துக்குப் பிறகும் அவர்களுக்கான வாழ்வு உண்டு, அதை அவர்கள் அழகாக வாழ வேண்டுமென்பதே தன் விருப்பம் என்று கேட் தன் தாயை சமாதானம் செய்யும் காட்சியும் மிகுந்த கவித்துவம் மிக்கவை.


மரணம் பற்றியும் அதற்குப் பிறகான வாழ்வு பற்றியும் சகோதரிகள் இருவரும் பேசிக் கொள்வதை ஒரு மெலோடிராமா போலல்லாமல் மிக யதார்த்தமான ஒரு காட்சியாக பதிவிட்டிருக்கிறார்கள். இம்மாதிரியான காட்சிகளின் போது இதுவே ஒரு தமிழ்ப் படமாக இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நம்மால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

சாவோடு போராடும் ஒரு சிறுமியின் அவலத்தை இப்படி படமாக்கியிருக்கிறார்களே என்று துக்கிக்க வைக்காமல் உறுப்பு தானம், மரணத்தை அழகாக எதிர்கொள்ளும் தைரியம், புற்றுநோயாளிகளின் மனநிலை, அவர் தம் குடும்பத்தாரின் மனநிலை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், உறுப்பு தானம் பற்றின சகலமும் என பல்வேறு தளங்களில் பயணிக்கிறது திரைப்படம். மிகத்திறமையான கலைஞர்களின் நடிப்பால் ஒரு அசாதாரணமான , அருமையான உணர்வை அளிக்கின்றது மை ஸிஸ்டர்ஸ் கீப்பர்.

இந் நிலை பலரின் குடும்பங்களில் ஏற்படக் கூடியது தான். எங்கள் அத்தையின் வீட்டில் நடந்தது. அத்தைக்கு நான்கு மகள்கள், இரண்டு மகன்கள்...மூன்றாவது பெண்ணுக்கு நெஃப்ராடிக் சின்றோம் என்ற சிறுநீரக வியாதி. அழகிய இளம் பெண்ணாக அவள் வளர்ந்து வந்த சமயத்தில் சிறுநீரகங்கள் செயல் இழந்து போயின. பண வசதி உள்ளவர்கள் என்றாலும் சிறுநீரகம் யார் தானம் செய்வது என்ற குழப்பத்தில் குடும்பமே நிலை குலைந்தது. கடைசி மகள் சிறுமி என்பதாலும் இரண்டாம் மகளுக்கு அப்போது வரையிலும் குழந்தைப் பேறு வாய்க்கவில்லை என்பதாலும், மகன்கள் இருவரது ரத்தமும் நோயாளிக்கு பொருந்தவில்லையாதாலாலும் முதல் மகள் தான் தானம் செய்தாக வேண்டும் என்ற நிலை. அவளுக்கு மறுக்கவும் முடியாமல் சம்மதிக்கவும் இயலாமல் மிகுந்த இக்கட்டு, தனக்கு ஏதாவது சிக்கலென்றால் தன் கணவன், நான்கு சிறு குழந்தைகள் கதி என்னவென்ற கவலையில் மறுத்தே விட .குடும்பமே அவளோடு கோபம் கொண்டு இன்று வரையில் அதே கசப்புணர்வு தொடர்கிறது. அவளுடைய கோணம் என்றும் ஒன்று இருக்கலாமோ என்று யாருக்குமே தோன்றவில்லை...

எந்த ஒரு பிரச்சினைக்கும் இரண்டு அல்ல மூன்றல்ல பல கோணங்கள் உண்டு, சம்பந்தப்பட்டவர்களின் பார்வையில் அணுகினால் மட்டுமே அது புரியும் என்பதை ஆழமாக ஆணித்தரமாகப் பதிந்திருக்கும் படம் தான் மை ஸிஸ்டர்ஸ் கீப்பர்.

....ஷஹி...

Saturday, September 10, 2011

இடது கை உயர்த்து வரமொன்று வேண்டும்( july 15 -2011)


பற்களிடை வெளிகளின் எண்ணமேதுமற்று

எப்போதும் எப்போதும் மலர்ந்து சிரிக்கவும் ,

அறியாத முகம் என்ற பேதம் புரியாமல்

அழகாய்த் தலையசைத்து கைகள் ஆட்டவும்,

படுக்குமுன் உறங்கவும்,

விழித்த விநாடியே விளையாட்டைத் தொடரவும்,

சற்று முன் நகம் பதியக் கீறியவளுக்கு

அவள் கேட்ட பொம்மையை ஆசையாய்க் கொடுக்கவும்,

முள்ளும் செதிலுமாகச் சிலிர்த்து சண்டையிடும்

அசிங்கக் கரட்டானை

ஆவலாய் ரசிக்கவும் ,

மஞ்சளாய் சிரிக்கும் காந்தியைப் பாராமல்

பட்ட ஓலைகளைத் தேடித் தடவவும்,

ஓடித்திரிந்து பாடாய்ப் பட்டு

பிடித்த வண்ணாத்தியை பறக்க விடவும்,

மின்சாரம் இல்லாத வியர்வைப் பொழுதிலும்

ஒற்றைக் கண் பொம்மைக்கு சோறாக்கி ஊட்டவும் ,

இல்லாத டாக்டரிடம்" இன்றும்காய்ச்சல்"

என்று புகாரிட்டு மருந்து புகட்டவும்

மட்டும் அல்லாமல்....

சமச்சீரும் ,ஸ்பெக்ட்ரமும்

கோவில் புதையலும்

அண்டைச் சகோதரரின் ஆயுள் கண்ணீரும்

பெருமூச்சாகிக்

குறையும் எம் ஆயுளை...

நீண்டிடச் செய்திடும் மாயமும் கூட

எல்லாம் எல்லாம்

உன்னால் முடியும்!!!

..ஷஹி..

Friday, September 9, 2011

பசியெனும் முள் -(ரமலானில் எழுதியது)

இப்படியாக: நோன்பு நாட்களில் கடிகார முள்ளும் சரி, மனதின் ஓட்டமும் சரி..நிதானமாகத்தான் இருக்கிறது. ஜெயமோகனின் "பண்படுதல்" இன்று தான் வாசித்து முடித்தேன்.

ஜெயமோகனின் கேள்வி "நாம் ஒருவரையொருவர் பார்த்தால் சாப்பிட்டாச்சா? என்று கேட்கிறோம். விசித்திரமான இந்தப் பழக்கம் எப்படி நமக்கு வந்தது? சாப்பாடு அரிதாக இருந்த ஒரு காலகட்டம் நமக்கிருந்ததா? பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நம் தேசத்தைப் பதற அடித்து பல லட்சம் பேர் சாகக் காரணமாக அமைந்த மாபெரும் பஞ்சங்களின் விளைவா அது?"என்று ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார் ஜெமோ. சாப்பிட்டாச்சா என்ற கேள்வி நம் சமூகத்தில் எத்தனை சகஜமான ஒன்றாக இருந்தால்- இது ஒரு விசித்திரமான கேள்வி என்று ஜெயமோகன் சொல்வது நமக்கு ஏக விசித்திரமாக இருக்கும்? தவிரவும் "இப்படி நாளெல்லாம் நோன்பிருந்து தான் உங்கள் இறைவனுக்கு நீங்கள் வழிப்பட வேண்டுமா? அப்படித் துன்புறுத்துவதில் என்ன இன்பமாம் இறைவனுக்கு" என்று மாற்று மதத்தினர் பலரின் கேள்வியும் ,பசி குறித்த பல்வேறு கோணங்களை யோசிக்க வைக்கிறது.

நோன்பு என்பது

நோன்பைப் பொறுத்த மட்டில் நாம் நோன்பாய் இருந்தாலும், வணங்கினாலும், அவனைத் துதித்தாலும் இவற்றுக்கு மாற்றமாக நடந்து கொண்டாலும் இறைவனுக்கு எந்த உயர்வும் தாழ்வும் இல்லை..புகழ் அனைத்தும் அவனுடையது. "பின்னே ஏன் தான் பசியாக் கெடக்கணும்" என்றால்..ஈமானின் (இறையச்சம்) மிக உயரிய நிலை அது...இறைவனின் பண்புகளில் ஒன்றான உண்ணாமை, பருகாமை, துணை நாட்டம் இல்லாமை ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறோம் நோன்பு நேரத்தில். அதற்குரிய பரிசு அவனிடத்தில் உள்ளது.

சகோதரர்களின் கதை

இப்படியாகப் பசியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில், இளமையில் வறுமை கொண்டு ,தந்தையை இழந்த காரணத்தால்- பசியும், துயரமுமாக வளர்ந்த மூன்று சகோதரர்களின் கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மூத்தவர் இலக்கியத்தின் மீதும், ஓவியம் வரைவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்,பசியை அலட்சியம் செய்து மணிக்கணக்கில் இலக்கியம், சமூகம் பற்றிப் பேசக்கூடியவர். தந்தை இறந்த போது பதின் வயதை எட்டியிருந்தவர்...வாழ்வு குறித்த பல வண்ணக் கனவுகளில் மனம் அலையத்துவங்கும் வயது. உணவின் மீதும், அதன் நுட்பமான (nuances) ருசிகளிலும், உடலைப் பண்படுத்துவது உணவுதான் என்று தெரிந்து விடுவதால் அதன் அளவுகளிலும் கூட விருப்பம் ஏற்படும் வயது.

உடன் பிறந்தோரையும் உலகம் அறியாத் தாயையும் கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இளம் தோளில் விழுந்து விட, பசி எனும் முள்ளும் ஆழமாகத் தைத்து, அதன் ஒரு பாதியை மட்டும் பிடுங்கி வெளியேற்றி , மறு பாதியோடு வாழ்நாளெல்லாம் போராடியவர். வாழ்வு குறித்த ஆசைகளும் கனவுகளும் ஒரு புறம் இழுக்க, குடும்ப பாரம் மற்றொரு புறம் சாய்க்க, தன் பசியைப் பொறுத்துக் கொண்டு கனவுகளோடே வாழ்ந்து மறைந்தார். வெகு ருசியான உணவு வகைகள் பறிமாறப்படும் சமயங்களில் மட்டும்- நரைத்து விட்ட அவர் கண்ணிமைகளின் படபடப்பினுள் உணவின் மீது வெகு விருப்பம் கொண்டு, அது மறுக்கப்பட்ட ஒரு இளைஞனின் ஆசை ததும்பும் முகம் வெளிப்படும்.

இரண்டாம் சகோதரர் உயர்நிலைப்பள்ளிப் படிப்பிலிருந்தார்...உண்டு வந்த கொஞ்சம் உணவுக்கும் பஞ்சம் என்றானதை ஒரு போராளிக்குரிய அலட்சியத்தோடு கையாண்டார்..கிடைத்தால் சரி கிடைக்காவிட்டால் எப்போது கிடைக்குமோ அப்போது. ஆனால் பசியின் மீது கொண்டு விட்ட வன்மத்தை அவர் படிப்பில் காட்டினார். குடும்பத்தின் முதல் கிராஜுவேட், ஊரிலேயே முதன்முதலில் அரசாங்க வேலை என்ற ,பல எட்ட இயலா லட்சியங்களை அவரை அடைய வைத்தது இளமையில் அவரும், அவர் உடன்பிறந்தோரும் அனுபவித்த பசி தான்.

வாழ்வின் சிறப்பான இளமையில், நல்ல ஓர் நிலைமைக்கு அவர் வந்து விட்ட பிறகும் கூட, மிகப் பிடித்தமான உணவுகளைக் கூட ஒரு சிறுவனின் அளவே தான் உண்ண முடியும் என்ற நிலைப்பாட்டுக்கு அவர் உடலும் சரி மனமும் சரி வந்து விட்டது. உணவைப் பொறுத்த மட்டில் அதன் அளவு, அவர் மட்டிலும் பசியின் கொடூரத்தை அவர் ருசிக்க நேர்ந்து விட்ட இளம் பிராயத்தோடே நின்று போனது. தான் அனுபவித்த கொடுமையை யாரும் சந்திக்கலாகாது என்ற எண்ணம் வேரூன்றி விட, சோஷலிசத்தின் பால் ஈடுபாடு கொண்டவராகவும், மிகுந்த இரக்க சுபாவியாகவும் ஆனார்.

இளையவர் உணவு தான் வாழ்வின் சுவை என்றெண்ணும்,அது தவிர வேறெந்தச் சுவை பற்றியும் அறியாத வயது. பசிக் கொடுமையைத் தாள இயலாத துயரம் சமூகத்தின் பால் கோபமாக மாற, முன்னேற வேண்டும், உணவுக்கு வழியில்லாமல் கிடந்த நிலையை மறக்க, மறைக்க வேண்டும் என்று வெறி கொண்டு உழைத்தார். தன் பிள்ளைகளின் மீது தன் இளமையின் நிழல் கூடப் பட்டு விடலாகாது என்ற தீவிர எண்ணம் கொண்டார். தினமும் செய்யும் சமையலே விசேஷமானதாகத் தான் இருக்க வேண்டும் அவருக்கு, வருவோர் போவோர் அனைவரையும் உண்ண வைத்தே அனுப்புவார்." சாப்பிடத்தானே இத்தன கஷ்டப்படுறேன்..அதுல என்ன அளவு? என்ன சிக்கனம்?" என்று எப்போதும் பேசி வந்தார். குடும்பத்தில் யார் யாரின் கைப்பக்குவம் எத்தகையது, எங்கு என்ன உணவு சிறப்பானது? என்று எல்லாம் அத்துப்படி. உண்ணும் போது ஒரு பருக்கையை யார் சிந்தி விட்டாலும் துடித்து , அதை எடுத்து தன் தட்டில் இட்டுக்கொள்வார். ஆனால்---வழிவகையிலேயே யாரும் உண்ணாத சிறப்பான உணவு வகைகள், உடுத்தாத உடுப்புகள் என்று பிள்ளைகளைப் பேணினார்.

தன் இலட்சியத்தில் வெற்றி அடையும் சமயம், சிறு வயது முதற் கொண்டு, பசியைத் தணித்துக் கொள்ளவெனப் பழகியிருந்த புகைப்பழக்கத்தினால் புற்றுநோய்க்கு ஆளாகி துடித்து இறந்தார். பிள்ளைகள் இரண்டும் இலட்சக்கணக்கில் ஈட்டி, பல ஆயிரம் பேரின் பசியாற்றும் வல்லமை பெற்று விட்டார்கள்..ஆனால் தொண்டைப் புற்றின் காரணமாக வாய்வழியாக திரவம் கூட உட்கொள்ள இயலாமல் அவர் உயிர் பிரிந்தது.

இப்படியாக ஒரே தாய் வயிற்றில் பிறந்து, வளர்ந்த மூன்று பேரின் வாழ்வில் நுழைந்த பசியெனும் முள் மூத்தவரின் இதயத்தில் வாழ்நாளெல்லாம் தைத்துக் கிடந்தது, இரண்டாமவரைத் தைத்த முள் அவரின் வயிற்றைச் சுருக்கி, வாழ்வை விரித்தது. இளையவரைத் தைத்த புண் புரையோடிப்போனது..

பசியெனும்சக்தி எல்லா தேடல்களுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும், போர்களுக்கும், உலக இயக்கத்துக்கும் ஆதாரமான சக்தி! பசி கொடுக்கும் பாடங்கள் தான் எத்தனை, எத்தனை? அது கொண்டு வரும் நினைவுகள் ஆயிரம்..பசி நேரத்தில் உணவிட்டவரை உள்ளளவும் மறந்து விட இயலுமா? பூமியில் விழுந்த முதல் கணம் தோன்றும் உணர்வு பசி தானே? அதைத் தீர்க்கும் தாயை விடப் பெரும் உறவு எது உலகில்? தன் பசியை உணர்பவன் அன்றோ மற்றையோரின் பசியை உணர்ந்து ஆற்றத்துணிவான்?

இப்படியான பசியின் அருமையை, கொடுமையைப் பேசும் சமயம்--- உணவை வீணாக்காமலும், பசியோடு இருப்பவர்கள் முகம் பார்த்து அதைப் போக்கும் எண்ணம் கொண்டவர்களாகவும் ,' உலக மாந்தர் யாவருக்கும் பசிபிணியைப் போக்கு' என்று இறைவனை இறைஞ்சுபவர்களாகவும் நாமெல்லாரும் இருப்போம்.

பசியெனும் போதே நம் மனக்கண்களில் எத்தியோப்பியப் குழந்தைகளின் எலும்பும் தோலுமான துயர் தோய்ந்த சித்திரம் முள்ளாய்த்தைக்கிறது அல்லவா? தமிழச்சியின் "கலவி" எனும் தலைப்பிலான நினைவில் நிற்கும் கவிதை ஒன்று------

ஒரு கர்ப்பிணியின் வாந்தியினை

எடுத்து உண்ட எத்தியோப்பியக்

குழந்தைகளின் பட்டினியைத்

தொலைக்காட்ச்சியில் பார்த்த பின்பும்,

கலவி இன்பம் துய்த்த

அந்த இரவிற்குப் பின்தான்

முற்றிலும் கடைந்தெடுத்த

நகரவாசியானேன் நான்.

(தமிழச்சி)

முடிவாக சொல்லி வந்த கதையை நான் முடிக்கவில்லையே? சகோதரர்களில் மூத்தவர் என் பெரியப்பா, இரண்டாமவர் அப்பா...இளையவர் சித்தப்பா.

..ஷஹி..

Tuesday, September 6, 2011

அப்பா அம்மாக்களுக்கான சிறுவர் கதை- ஸெர்யோஷா..

சோவியத் நூலாசிரியை வேரா பானோவா அயல்நாட்டு வாசகர்களிடையே விரிவாகப் புகழ் வாய்ந்தவர். மூன்று முறை அரசாங்கப் பரிசுகள் பெற்றவர். நான்கு பெரிய காதல் நவீனங்கள், மக்களால் பெரிதும் விரும்பப்படும் ஐந்து நாடகங்கள், சுவையுள்ள சிறு கதைகள், குறுநாவல்கள் ஆகியன அவரது படைப்புகள். இவற்றில் பல திரைப்படங்கள் ஆக்கப்பட்டுள்ளன. ஸெர்யோஷா ஆசிரியையின் கவிதை நயம் மிக்க படைப்புகளில் ஒன்று. ஸெர்யோஷா என்ற இந்த நாவலின் படி எடுக்கப்பட்ட திரைப்படம் 1960 ஆம் ஆண்டு சர்வதேசத் திரைப்பட விழாவில் முதல் பரிசு வென்றது.

மொழிபெயர்ப்பாளர்: பூ.சோமசுந்தரம்.

கதைச் சுருக்கம்:

போரில் தந்தையை இழந்த ஸெர்யோஷாவுக்கு மரியாஷா என்னும் தாயும், பாஷா அத்தையும் லுக்யானிச் என்னும் மாமாவும் இருக்கிறார்கள். ஆறே வயதான ஸெர்யோஷாவுக்கு கவலைகள் அவன் வயதளவுக்கு கொஞ்சமல்ல.

பார்க்கவும் அனுபவிக்கவும் ஏராளமான விஷயங்கள் உள்ள உலகில் அவ்வளவு கவனம் செலுத்தப் போதுமான வலு இருப்பதில்லை அவனிடம்..

மேலும் மனிதர்களும் சரி கதவுகளும் சரி..ரொம்ப உயரம்..அவனால் அப்படி எட்டமுடிவதில்லை அவர்களை..

பிராண்டி ரத்தம் வரவழைக்கக் கூடிய பிராணிகள்,

விழும் போதெல்லாம் ரத்தக் காயம் ஏற்படுத்தும் தரை, ஏற முடியாத சுவர்கள்,

தாங்கள் எதை உடைத்தாலும் பதறாமல், சிறுவர்கள் ஏதும் உடைத்துவிட்டால் மட்டும் மோசம் என்று ஏசும் பெரியவர்கள்

என்று அவன் வாழ்க்கையிலும் ஏகப்பட்ட சிரமங்கள்.

இப்படியாகப் போகும் ஸெர்யோஷாவின் வாழ்வில் ஒரு மிகப் பெரிய மாற்றம் நிகழ்கிறது. "நம் வீட்டிலும் அப்பா இருக்க வேண்டுமென" ஆசைப்பட்ட அம்மாவுக்காக அவளின் மறுமணத்துக்கு சம்மதிக்கிறான் ஸெர்யோஷா. ஆனால் அவனைப் பொறுத்த வரையில் அப்பா இருந்தாலும் இல்லாவிட்டலும் பெரிய ஒரு வித்தியாசம் இருக்கப்போவதில்லை.."ஆமாம் சில பையன்களுக்கு அப்பா இருக்கிறார், சில பேருக்கு அப்பா இல்லை அவ்வளவுதான்!"

யாஸ்னிய் பேரிக் என்னும் அரசாங்கப் பண்ணையின் நிர்வாகி கொரெஸ்தெல்யோவை மணம் செய்து கொள்கிறாள் ஸெர்யோஷாவின் அன்னை.

தன் நெஞ்சுக்கூட்டுக்குள் இதயம் என்று ஒன்று உண்டு, அது எப்போதும் துடிக்கும், என்பதைக் கூட அன்னை சொல்லித் தான் தெரிந்து கொண்ட அந்தச் சின்னஞ்சிறுவனின் இதயத்துக்குள் ...தன் அன்பாலும், அறிவார்ந்த நடவடிக்கைகளாலும் கொரெஸ்தெல்யோ இடம் பிடித்து விடுவது தான் கதை.

எல்லோரின் பால்யமும் ஒன்று தானோ?:

கதை நெடுகும் ஸெர்யோஷாவின் கண்ணோட்டத்தில் தான் எழுதப்பட்டிருக்கிறது. புது சைக்கிள் ஒன்றை கொரெஸ்தெல்யோவ் அவனுக்கு வாங்கித் தரும் இடம் மிகவும் நயம் மிக்கது. சின்னஞ்சிறுவன் ஒருவனுக்கு சைக்கிள் ஒன்று எத்தனை கிளர்ச்சி தரக்கூடிய பொருள்..அவன் அதை பெருமை பொங்க நண்பர்களிடம் காட்டுகிறான்..ஆளாளுக்கு அதை எடுத்து ஓட்டுவதுமாக உடைத்தே விடுகிறார்கள். கொஞ்சமும் முகம் கோணாமல் கொரெஸ்தெல்யோவ் அதை சீர் செய்து கொடுக்கிறான். தன் மகனின் மனதிலும் நீங்காத இடம் ஒன்றைப் பிடிக்கிறான்.

சிகரெட் பெட்டிகள் சேகரிக்காத பிள்ளைப் பருவமும் ஒரு பிள்ளைப் பருவமா? மினு மினுவென அழகாக இருக்கும் பெட்டிகள் எத்தனையோ வைத்திருந்தேன் நான்..ஸெர்யோஷா மட்டும் என்ன விதிவிலக்கா? அவன் அப்பா கொரெஸ்தெல்யோவ் சேகரித்துக் கொடுக்கிறான் அவனுக்கு..

அசையாமை , சில்லிடுதல் - இதுதான் சாவு எனப்படுகிறது போலும்.

ஒரு குருவியின் சவ அடக்கத்தை ஸெர்யோஷாவும் அவன் தோழியும் "அந்த குருவியே கனவு கூடக் கண்டிருக்காத "முறையில் அருமையாக நிகழ்த்திவிடுகிறார்கள். படித்ததும் எங்கள் வீட்டு மின்விசிறியில் அடிபட்டு இறந்த குருவியும், ஓவென்று பெரிதாய் அலறி, நண்பர்கள் புடை சூழ அதை சகல மரியாதைகளுடன் நான் அடக்கம் செய்ததும், கூடவே ஆசையாய் வளர்த்த லவ் பேர்ட் ஒன்று இறந்து போக , மௌனமாய் கண்ணீர் சிந்தி இரண்டு நாட்கள் உண்ண மறுத்த என் மகளின் நினைவும் எழுந்தது.

அந்த திகிலூட்டும் அனுபவம்--- மரணம்..

கொரெஸ்தெல்யோவின் பாட்டி மரணிக்கிறாள். அதிர்ந்து போகிறான் சிறுவன் ஸெர்யோஷா..அவன் பார்த்த மரணங்கள் எல்லாம் குருவி, பூனை இவற்றினோடது தான்..பாட்டியின் சடலம் பார்த்து அதிர்ச்சியுற்று பீதியில் கலங்கும் ஸெர்யோஷாவுக்கு மீண்டும் அபயம் அளிக்கிறான் தந்தை கொரெஸ்தெல்யோவ்." நானுமா செத்துப் போவேன்? "எனும் மழலையின் கேள்விக்கு அவன் நம்பும் வண்ணம், கம்பீரமாக "மாட்டாய் ஒரு நாளும் நீ மரணிக்க மாட்டாய் "என்று ஆறுதல் அளிக்கிறான்.

கால் வலிக்கும் போதெல்லாம் அவன் அப்பனின் தோல் மீது சவாரி செய்தான்..அதோடு சொந்தக் கால்களால் நடந்து வந்த தன் நண்பர்களை அலட்சியமாகவும் பார்த்தான்..

அவன் அம்மாவும் அப்பாவும் பன்னிப் பன்னி" நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்று ஒருவரையொருவர் சொல்லிக் கொண்டது அவனுக்கு சகிக்கவேயில்லை.ஆனாலும் பெரியவர்கள் பேசிக் கொள்ளும் போது குறுக்கே பேசலாகாது என்ற அவன் கற்ற பாடத்தினால் பொறுமை காத்து வந்தான்!

ஆனால் அவன் விரும்பாத ஆட்களிடம் அவன் விருப்பமின்மையை வெளிக்காட்டியதை அம்மா வெறுத்தாலும், கொரெஸ்தெல்யோவ் ஆதரித்தான். ஒரு முரட்டு மாமாவை ஸெர்யோஷா "முட்டாள் மாமா" என்று அவரிடமே சொல்ல, அம்மா திட்டினாலும் அப்பா ஏற்றுகொண்டான். "முட்டாளை அப்படிக் கூறாமல் வேறு என்னவென்பதாம்?"

அதோடு ஸெர்யோஷா ஒரு ஆண்பிள்ளை , அதை நிரூபிக்கும் விதமாக அவன் பக்க வாட்டுத் தடுப்புகள் இல்லாத கட்டிலில் படுக்க வேண்டும், அடி பட்டால் அழ வேண்டியதில்லை..மருந்திட்டுக்கொண்டால் போதும் ..போரே வந்தாலும் வீட்டின் ஆண் மக்கள் ஸெர்யோஷாவும் கொரெஸ்தெல்யோவும் தான் போக வேண்டும் என்றெல்லாம் அன்பாகவும் அறிவார்ந்த முறையிலும் ,அதாவது குழந்தைகள் விரும்பும் வண்ணம் பேசி ஒரு அருமையான தகப்பனாக இருக்கிறான் கொரெஸ்தெல்யோவ்.

வந்தது வினை:

பச்சை குத்திக் கொள்ள வேண்டுமென ஆசைவந்து விடுகிறது நண்பர்கள் வட்டத்தில்- பயத்தை வெளிகாட்டிக்கொள்ள துணிவில்லாமல், ஸெர்யோஷாவும் குத்திக் கொள்கிறான்.

சொந்த செலவில் சூனியம் தான் வேறென்ன? கிருமித்தொற்று ஏற்பட்டு கடுமையான காய்ச்சலால் பீடிக்கப்படுகிறான். படுக்கையை விட்டே எழ முடியாமல் விளையாடவும் போகாமல் மிகவும் வேதனையுற்று விடுகிறான் ஸெர்யோஷா. பத்தும் பத்தாததற்கு கொரெஸ்தெல்யோவும் அவன் அம்மா வும் ஹோல்மகோரி எனும் மலைப்பிரதேசத்துக்கு ஜாகை மாற்றி விடலாம் எனும் எண்ணம் கொண்டு விடுகின்றனர்...

இதில் ஸெர்யோஷாவுக்கு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் அவனை மட்டும் பாஷா அத்தையிடம் விட்டுச்செல்லலாம் என்று முடிவெடுக்கப்படுகிறது. மலைப்பிரதேசத்தின் சீதோஷ்ண நிலையில் அவன் தாக்குப்பிடிப்பது கடினம் என்ற காரணம் கூறப்படுகிறது. ஸெர்யோஷாவின் பிஞ்சு உள்ளம் இந்த முடிவை தாங்கவியலாமல் துடிக்கிறது. தன் தம்பி லியோன்யா பிறந்ததில் இருந்தே தாய்க்கு தன் மீது அத்தனை பிரியம் இல்லாமல் போய்விட்டது என்று துயறுருகிரான்.

தாயும் தந்தையும் கிளம்பும் நேரம் --- கதையின் க்ளைமாக்ஸ்...

ஸெர்யோஷாவின் தாய், தம்பி மற்றும் கொரெஸ்தெல்யோவும் பயணிக்கும் வண்டி கிளம்பி சில அடிகளே சென்று நிற்கிறது, கொரெஸ்தெல்யோவ் ஸெர்யோஷாவை விட்டுச் செல்வது "ஒரு அங்கத்தையே விட்டுச் செல்வது போல் இருக்கிறது" என்று கூவியவாறு அவனை உடன் அழைத்துக் கொள்கிறான். ஸெர்யோஷா தாய் தந்தையுடன் ஹோல்மகோரி செல்கிறான் ஆனந்தமாக.

கதை படித்ததும் நம் மனங்களில் எழும்பும் கேள்விகள்:

எங்கோ தமிழகத்தின் ஓர் மூலையில் உள்ள சிறுவர்களுக்கும் ரஷ்யாவில் வாழும் பிள்ளைகளுக்கும் உணர்வு ரீதியாகவோ, நடத்தையிலோ, மனப் பாங்கிலோ எந்த ஒரு வேறுபாடும் இல்லை எனும் போது மனிதர்கள் அனைவருக்கும் அதேநிலை தானே? அப்படியாகும் போது நாடுகளுக்கிடையிலான போர்கள் மூள்வது ஏன்?

நம் குழந்தைகளின், நம் அருகில் வாழும் குழந்தைகளின் ,நாம் சந்திக்கும் மழலைகளின் மனங்களைப் புரிந்து கொள்ள எப்போதாவது முயல்கிறோமா?

நாம் பெற்ற குழந்தைகளின் அன்றாட நிகழ்வுகளை அமைதியாக அமர்ந்து பகிர்ந்து கொள்ளும் பெற்றோர் நம்மில் எத்தனை?

நம் குழந்தைகளுக்கு, அவர்களின் குழந்தைகளுக்கு நாம் விட்டுச்செல்லக் கூடிய அருமையான பரிசு உலக அமைதியும், மாசற்ற சூழலும் தான் ..இதற்கான எம்மாதிரியான முயற்சியிலாவது நாம் ஈடுபட்டிருகிறோமா?

குளிரும் உள்ளம்:

ஆலங்கட்டி மழையில் திடுமென நனைந்து விட்டார் போன்ற ஒரு சிலிர்ப்பு கதையெங்கும் வாசகனுக்கு ஏற்படுகின்றது..அத்தனை இன்பம், அத்தனை ஆசுவாசம். காதல், மோதல், ஏமாற்று, துயரம் என்று பேசும் கதைகளைப் படித்த நம் கண்களுக்கு குழந்தைகளின் சின்னஞ்சிறு உலகம் எவ்வளவோ ஆறுதலை, குளிர்ச்சியை அளிக்கின்றது.

நம் உள்ளத்தின் ஆயிரமாயிரம் அடுக்குகளில் உறைந்து கிடக்கும் நம் பால்ய கால நினைவுகளை உயிர்ப்பித்து, நம் கண்களின் முன்னே உலவ விடுவதில் ஆசிரியர் வெல்கிறார் என்றால்..நான் அனுபவித்த அருமையான இன்பத்தை, ஒரு ஆலங்கட்டியை சேமிக்கும் உணர்வோடு என் கரங்களில் பொத்தி ....இதோ உங்களுக்காகக் கொண்டு வந்திருக்கிறேன்..ஒரு சில துளிகளாவது எஞ்சி, உங்கள் இதயங்களைக் குளிர்வித்தால் அதுவே என் எழுத்தின் வெற்றி.

ஒரு பறவைக்குஞ்சு தன் கூட்டில் இருந்து விழுந்து விடுவதைக் காண நேர்ந்தால் எப்படி நம் இதயங்கள் துடிக்குமோ அப்படித்தான் துடிக்கிறோம் ஸெர்யோஷாவை அவன் தாயும் தந்தையும் நீங்கும் போது..அதே போல அவன் தன் குடும்பத்துடன் சேர்ந்தான் என்ற செய்தியோடு கதை நிறைகையில் அப்பாடா எனும் ஆனந்தம் விழிக்கடையில் துளிர்க்கிறதே..

அப்படிப் பொங்கி எழும் ஒரு உளப்பூர்வமான அன்பின் மிகுதியில் உலக மாந்தர் அனைவரையும் ஒன்றாக அணைத்துக் கொள்ள உள்ளம் ஏங்குகிறதே இதுவல்லவோ இலக்கியத்தின் பலன்? இலக்கியத்தின் பெரு வெற்றி?

..ஷஹி..

Sunday, September 4, 2011

மணல் அரவம்..

தன்னந்தனியளாக இருப்பதொன்றும்

புதிதல்லவே எனக்கு..

அச்சமும் குளிரும்

கவியும் இந்தப் பாலை இருளில்

ஒரு மணல் அரவம் போல்

நீ

என் மீது

வழுக்கிச்சென்ற தடங்களையும்,

தனிமையையும்

இழுத்துப் போர்த்தி

உறங்கவியல்கிறதே எனக்கு...

வெம்பகலையும்

தனிமைக் கூரை வேய்ந்து

கடந்து விடுகின்றேன்..

நழுவி நீ சென்ற இடம்

தணல் தான் என்கிறாய்...

கானலும் அப்படித்தான்..

ஊர்ந்த துன்பம் தீர

புரண்டிருந்து

மீள வருவாய்..

கள்ளியும் முள்ளுமாய்

அடைந்திருக்கும் இங்கு

என்னைத்தவிர

வேறு யார் உளர்?

...ஷஹி..

Monday, August 29, 2011

இந்தக் கவிதையும்..

இந்தப் பேனா

நீ கொடுத்தது தான்..

.....................................

தீப்பெட்டியில் வைத்து

இரண்டு பொன்வண்டுகள் ,

வெகு காலம் வரை..

குட்டி போடும்

என,

நாம் நம்பிய மயிலிறகு,

பட்டாம்பூச்சி படமிட்ட

தபால்தலைகள்,

இதயப்படமிட்ட

வாழ்த்து அட்டைகள்,

என் கன்னமா விரல்களா

எது சிவக்குமெனப் பார்க்க

சுவரேறிக் குதித்து

நீ பறித்து வந்த

மருதாணிக் கொத்துகள்,

என் பாதம் ஏறியதால்

அழகு பெற்ற

ஒரு ஜோடிக் கொலுசுகள்..

விடைபெறும் அன்று

ஒரு பிரேதத்தினது போல்

குளிர்ந்து போன இதழ்களினால்..

அதே போல் சில்லிட்டிருந்த

உதடுகளில்

ஒரு முத்தம்.

.....................

அப்புறம்

இந்தப்

பேனா..

..ஷஹி..

Thursday, August 25, 2011

வெண்ணிற இரவுகள்- தஸ்தெயெவ்ஸ்க்கி

ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள்-

ஒரே முறையில் படித்து, ஒரு குறுநாவலுக்கான பக்கங்கள் மட்டுமே கொண்ட இந்தக் கதையை முழுமையாக உள்வாங்கி விட யாராலாவது முடியுமா? என்பது மிகுந்த சந்தேகமே. உளவியல் மேதை தஸ்தயேவ்ஸ்கியின் இந்தக் கதையை அதன் சாரமும், வாசிப்பனுபவமும் சிறிதும் குறைந்து விடாமல் எழுத என் போன்ற ஆரம்ப நிலை வாசகியால் நிச்சயம் முடியாது...முயன்றிருக்கிறேன்..


"நின் காதல் நிழல் தன்னில்

நின்று மகிழ்வோம் ,

மின்னி மறையும்

கண்ணிமைப் பொழுதெனினும்

போதுமது என்றெண்ணிப்

பிறந்தானோ ?"

எனும் இவான் துர்கேனெவின் வரிகளுடன் துவங்குகிறது, வாசகனை தனக்குள் இழுத்து கதாநாயகனின் மனநிலையை தன்னுடையதாக எண்ணி, தவித்து, மகிழ்ந்து, தன்னால் என்றோ ஒரு நாள் அனுபவிக்கப்பட்ட உணர்வுகள் தாம் இவை என்று அடையாளம் கொள்ளச் செய்யும் வாசிபானுபவம். தனிமையால் கிட்டத்தட்ட மனநோயாளியாக மாறவிருந்த கதாநாயகன், கதைசொல்லி. இறுதி வரை பெயர் குறிப்படப்படவில்லை அவனுக்கு...காரணமாக வேறெதைச்சொல்வது? படிக்கும் ஒவ்வொருவரும் அவனே தாம் நாம் என்ற நினைப்புக் கொள்வதற்குத் தான் என்பது அல்லாமல்?


ஒரு பித்தனைப் போல் கனவுகள் கண்டு அவற்றிலேயே வாழ்ந்து, அழுது, மகிழ்ந்து கொண்டிருக்கும் அவனுக்கு கதையின் முதல் நாளிரவில் அழகிய இளம் பெண் நாஸ்தென்காவின் அறிமுகம் கிடைக்கிறது..அதுவும் துயரார்ந்த தன் வாழ்வை எண்ணி அழுது கொண்டிருந்த அவளிடம் ஒரு மனிதர் வம்பு செய்ய முற்படுகிறார், நாயகன் அவளை மீட்கிறான். சிறிதே நேரப்பேச்சுக்களில் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முற்படுகின்றனர். தன்னிடம் அவன் காதல் கொண்டு விட மாட்டான் என்று உறுதி அளித்தால் மட்டுமே அவனிடம் தொடர்ந்து நட்பு கொள்வதாக நிபந்தனை இடுகிறாள் நாஸ்தென்கா..நாயகன்..சம்மதிக்கிறான்.பின்னிரவு வேளையாகிவிட்டதால் நாஸ்தென்கா வீடு திரும்புகிறாள் ....மறு இரவில் சந்திக்கும் வாக்குறுதியோடு.


பேசிப்பழக என்றும் சொந்தமென்றும் கூறிக்கொள்ள எவருமற்ற நாயகனும், சிறுபிராயத்திலேயே தாய் தந்தையை இழந்து , தன்னுடன் சேர்த்து ஊக்கினால் அவளைப் பிணத்தே வளர்க்கும் பாட்டியிடம் வளர்ந்து தனிமையே வாழ்வாகக் கொண்டிருக்கும் நாஸ்தென்காவும் நட்பு கொண்டு விடுகின்றனர்.

இரண்டாவது இரவில் மீண்டும் சந்திக்கும் போது... வேலைகள் முடிந்த பிறகு, தனக்கேயான மாலைபொழுதுகளில், கற்பனாதேவியின் உதவியுடன் ,பெரும் புலவர்களையும் புகழ்பெற்றவர்களையும் தான் சந்தித்து நட்பு கொள்வது போன்றும், தனக்கென்று இருக்கும் ஒரு கோடைக் காலக் குடிலில் தன் காதலியுடன் இன்பமாக இருப்பது போன்றெல்லாமும் தான் வளர்த்து வந்த கற்பனை உலகினைப் பற்றி நாஸ்தென்காவிடம் மனம் திறந்து பேசுகிறான் கதை சொல்லி.

இத்தனை ஏக்கமும், துக்கமும் நாம் வாழும் இந்த உலகில் மனிதர்களை பீடிக்கக் கூடுமா ?என்ற கேள்வி எழும் அதே நேரம் இம்மாதிரியான மனநிலையில் அமிழாத உயிர்களும் உண்டா என்ற பதிலும் நம் உள்ளங்களில் எழவே செய்கிறது. தன்னுடையது போன்றே மனநிலை கொண்டவன் இவன் என்ற நட்புணர்வுடன் அவனைப் புரிந்து கொள்கிறாள் நாஸ்தென்கா. தானும் கனவுகளில் வாழ்பவள் தான் என்று துவங்கி, தன்னைப் பராமரித்து வரும் பாட்டி எங்கும் சென்று விடாத படி ஊக்கினால் பிணைத்து வைக்கும் நிலையையும், சீனத்து இளவரசனை மணந்து கொள்வதாக தான் கண்டு வரும் கனவுகளையும் கூறுகிறாள். வீட்டு மாடியில் குடியிருக்க வரும் இளைஞனிடம் காதல் கொண்டு விடும் நாஸ்தென்கா, தானும் அவனும் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தின் படி அவன் தன்னை மணந்து அழைத்துச்செல்வதாக வாக்களித்திருந்த சமயம் வந்தும் இன்னமும் அவனிடமிருந்து எந்த செய்தியும் வராத துயரத்தைப் பகிர்கிறாள். அவளுடைய துயர் துடைக்கத் துடிக்கும் நாயகன் கடிதம் ஒன்று எழுதி அவளுடைய காதலனிடம் அதைச்சேர்ப்பித்து அவர்களை இணைத்து வைக்கும் பொறுப்பைத் தனதாக்கிக் கொள்கிறான்.

"என்னென்பது இதை! இன்பமும் மகிழ்ச்சியும் எப்படிப்பட்ட அழகை உண்டாக்கிவிடுகின்றன!" என்னும் ஆனந்தமான வரிகளுடன் துவங்குகிறது அவர்களின் மூன்றாம் இரவின் சந்திப்பு பற்றின விபரம். தன்னையும் அறியாமல் செய்துகொடுத்த சத்தியத்தையும் மீறி அவள் பால் தன் மனம் லயித்து விட்டதை உணருகிறான்..கதாநாயகன். அனுப்பிய கடிதத்துக்கு எந்த பதிலும் இல்லாதது கண்டு துடிக்கிறாள் நாயகி..அவளை சமாதானம் செய்து தேற்றுகிறான் கதை சொல்லி. அவளுடைய காதலன் வராமல் போனதற்கு நிச்சயம் ஏதோ காரணம் இருக்கும் என்று அவளை நம்பவைப்பதோடு மூன்றாமிரவு முடிகிறது.

நான்காம் இரவில் கதைசொல்லியைக் கண்டவுடன் பரபரக்கிறாள் நாஸ்தென்கா..கடிதம் கொண்டு வந்திருப்பான் தன் காதலனிடம் இருந்து என்று..அவள் உள்ளத்திலிருந்த கடைசி நம்பிக்கையும் இல்லையெனும் அவன் சொல்லில் தகர்ந்து போகிறது. எத்தனையோ பேசியும் அவள் மனம் நம்பிக்கை கொள்ள மறுக்கிறது, மட்டுமல்லாமல், தன்னை நிற்கதியாய் விட்டுவிட்டு ,ஒரு வரி கூட எழுத மனம் இல்லதாவரைப் பற்றி தான் பேசக் கூட விரும்பவில்லை என்று கதறுகிறாள் நாஸ்தென்கா.

மேலும் "நீங்களாக இருந்தால் இப்படிச்செய்திருக்க மாட்டீர்கள் அல்லவா? உங்களை விரும்பியவளை பேணிப் பாதுகாத்திருப்பீர்கள் அல்லவா? "என்று காதலனையும் நண்பனையும் அவள் ஒப்பிட்டுப் பேசப் பேச, தன் நிலை மறந்து ,அவள் பால் தான் கொண்டு விட்ட காதலை ஒப்புக்கொண்டுவிடுகிறான் கதை சொல்லி.

ஆச்சர்யம் ஏதுமில்லாமல் அவள் அதை எதிர்பார்த்தவள் போல அவன் காதலை ஏற்றுகொள்கிறாள் நாஸ்தென்கா..இருவரும் எதிர்காலம் பற்றியெல்லாம் பேசிக்களிக்கிறார்கள்..வீடு திரும்பும் சமயத்தில் நாஸ்தென்காவின் காதலன் வருகை நிகழ்கிறது. கதைசொல்லியின் அணைப்பிலிருந்த நாஸ்தென்கா, தன்னை மறந்து கூவியவாறு காதலனின் அணைப்புக்குள் அடங்குகிறாள் .தன்னை முத்தமிட்டு ,விடைபெற்றுச் செல்லும் அவளின் கடிதம் கண்டு கண்ணீர் விடுகிறான் கதைசொல்லி. தான் ஒரு போதும் அவளை மறப்பதற்கில்லை என்றும் தன்னுடைய துன்பம் அவளை பாதிக்கக் கூடும் என்பதால் துயர் கொள்ளவும் மாட்டேன் என்றும் உறுதி கொள்கிறான் .


"தனிமையான , நன்றி நிறைந்த ஓர் இதயத்துக்குக் கணப்பொழுதுக்கு ஆனந்தமும் இன்பமும் அளித்தாய் அல்லவா, அதற்காக என்றென்றும் இறைவன் உனக்கு அருள் புரிவாராக. என் தெய்வமே ! முழுதாய் ஒரு கணப் பொழுதுக்கல்லவா ஆனந்த இன்பம் கிட்டிற்று! போதாதா அது , ஓர் ஆயுட்காலம் முழுமைக்கும் அது போதாதா? "

என்று மனம் நிறைய ,நாஸ்தென்காவின் நல் வாழ்வுக்காக கதை சொல்லி உருகுவதாக நிறைவுறுகிறது கதை.

தனிமையில் வாடி, கனவுகளில் மட்டுமே இன்பம் கண்டு வந்த ஒருவனுக்கு ஒரு பெண்ணின் நட்பும் காதலும் எத்தகைய ஆறுதலையும் இன்பத்தையும் அளிக்கும், அவளிடம் காதல் கொண்டு விட்ட பிறகு தன்னால் அவளுக்கு ஒரு சிறு துன்பமும் நேரக் கூடாது என்று நினைக்கும் மனோபாவம் ஏற்பட்டு விடும் ஆச்சர்யம் என்று காதல் கொண்டு விடும் ஒரு ஆணின் மிக நுட்பமான எண்ண ஓட்டங்களை அழகாகப் பதிந்திருக்கிறார் தஸ்தாவெஸ்கி. ஒரு மாய உலகில் கண்ட இன்பத்தை உண்மையில் தனக்கு அளித்தாள் , அது ஒரு கணப் பொழுதுக்கே என்றாலும் கூட என்று அக்கணத்தையும் போற்றும் அளவில் இனிமையானதும் , நன்றி மிக்கதும், தூய காதல் கொண்டு விட்டதுமானது ...கதை சொல்லியின் உள்ளம்.

கதையின் துவக்கத்தில் பீட்டர்ஸ்பர்க் நகரைச் சுற்றிலும் உள்ள இயற்கையானது அந்நகரை வசந்தத்தில் எழிற்கோலம் பூணச்செய்து விடுவதை கதைசொல்லி காணும் விதத்திலேயே பின்னாள் வரவிருப்பதை சொல்லிவிடுகிறார் தஸ்தவெஸ்க்கி. அழகுக்கோலம் பூணும் நகரை, நாயகன் காசநோயால் பீடிக்கப்பட்டு, திடுமென ஒரு பொழுது அழகு கொண்டு துலங்கும் ஒரு இளநங்கைக்கு ஈடாக நினைக்கிறான். இத்தனை அழகு அவளுக்கு எப்படி திடீரென வந்தது என்று புரிந்து கொள்ளத் துவங்கும் கணத்திலேயே அவள் அழகு மறைந்து, வியாதிக்கோலம் கொண்டு விடுவதைப் போலத் தான் பீட்டர்ஸ்பர்க் நகரம் வசந்த கோலம் கொள்வது என்று பேசுகிறான் . தனிமையால் பீடிக்கப்பட்டு துன்பதில் உழன்று பரிதாபமாக இருக்கும் அவன் நிலையையே வாசகனுக்கு இவ்விதம் சொல்கிறாரோ தஸ்தவெஸ்கி? காதல் கொண்டு, அது ஏற்கப்பட்ட கணம் அவன் அனுபவித்த இன்பம் திடுமென மறையப்போவது தான் என்பதற்கான குறியீடு தானே அது?

இங்கு டால்ஸ்டாயின் அன்னா கரீனா வின் ஒரு காட்சி நினைவில் வருகிறது. நாயகி அன்னாவும் வ்ரான்ஸ்கியும் சந்திக்கும் முதல் காட்சியில் ரயிலில் அடிபட்டு ஒருவன் இறந்து போவதாக ஒரு காட்சி அமைத்து, அது ஒரு துர் சகுனம் என்பதாக எழுதியிருப்பார் டால்ஸ்டாய்..கதையின் முடிவில் அன்னா தற்கொலை செய்துகொள்ள ரயில் முன் பாய்ந்து விடுகிறாள். டால்ஸ்டாய் மற்றும் தஸ்தாவெஸ்கியின் சிந்தனையோட்டம் மற்றும் எழுத்து முறை ஏறக்குறைய ஒன்றே போல் உள்ளதைக் காணலாம்.

"தன்னந்தனியனாய் இருப்பது எவ்வளவு சோகம் மிக்கது -நினைத்து வருந்துவதற்குக்கூட ஒன்றும் இருக்காதே, ஒன்றுமே இருக்காதே...ஏனெனில் நான் இழப்பது எதுவாயினும் , அது உண்மையில் ஒன்றுமில்லாததாகத்தானே , வெறும் அசட்டுச் சின்னமாகத்தானே , வெறும் கனாக்களாகத்தானே இருக்கும்." இப்படி புலம்பும் நாயகனுக்கு, காலம் முழுவதும் துணையாய்ச் செல்லாவிட்டாலும், வாழ்நாள் முழுவதும் நினைத்து வருந்துவதற்கும் ,அழவும் ,அசலான துயரம் ஒன்றை அளித்து பேருதவி தான் புரிந்து விட்டாள் நாஸ்தென்கா.

நாயகனின் அணைப்பில் இருக்கும் போதே காதலன் குரல் கேட்டு அவனிடம் ஓடும் அவள் ...மறுநிமிடமே பாய்ந்து வந்து இவனை ஆசையோடு அணைத்து முத்தமிடுகிறாள், உங்கள் இருவரையும் காதலிக்க முடிந்தால் என்று ஏங்குகிறாள், நண்பனை காதலனோடு ஒப்பிடுகிறாள், காலம் முழுக்க தாங்கள் என்னைக் காதலிக்க வேண்டும் என்கிறாள்...மனித மனத்தின் உணர்வுகளையும் அவற்றில் ஏற்படும் சிக்கல்களையும் அப்படியே சித்தரித்துள்ளார் தஸ்தாவெஸ்க்கி. ஒருவனை மட்டுமே நினைக்க முடியும், அவனையே தான் காலம் முழுக்கக் காதலிப்பேன் என்றெல்லாம் கதாநாயகியர் பேசும் வசனங்கள் பெரும்பாலும் செயற்கையாக நம் காதுகளில் ஒலிப்பது ஏன் என்பது வெண்ணிற இரவுகள் படிக்கும் போது விளங்கும். நாயகனுக்கு மாறு செய்து விட்டாள் என்று நம்மாலும் நாஸ்தென்காவை வெறுக்க முடியாத அளவில் அவளுடைய பாத்திரத்தை அன்பும், பேதமையும் , கண்ணியமும் மிக்கதாகப் படைத்திருக்கிறார் தஸ்தாவெஸ்கி.


WHITE NIGHTS- ஃப்ரெஞ்சு,

TWO LOVERS- ஆங்கிலம்,

FOUR NIGHTS OF A DREAMER- ஃப்ரெஞ்சு

என்றெல்லாம் உலக அரங்கிலும்,

இயற்கை என்ற பெயரில் தமிழிலும்

கூட வெண்ணிற இரவுகளைத் தழுவியும், சாராம்சத்தை உள்வாங்கியும் எத்தனையோ திரைப்படங்கள் வெளிவந்து விட்டன. ஆனாலும் பலப்பல படங்களுக்கான, பல முக்கோண காதல் கதைகளுக்கான கதைக்களனை வழங்கிய வண்ணமே இருக்கிறது வெண்ணிற இரவுகள்.

"இப்படிப்பட்ட ஒரு வானத்தின் கீழ் பல வகையான முசுடுகளும் மூர்க்கர்களும் எப்படி வாழ முடியும்" என்ற நாயகனின் கேள்வியோடு துவங்குகிற வெண்ணிற இரவுகள்..இருள்கவிந்து, கருவண்ணமாக எல்லோருக்கும் இருக்கும் இரவு அவனுக்கு மட்டும் வெண்ணிறமாக இருந்தது காதல் எனும் ஒளிக்கிரணம் அந்நான்கு இரவுகளில் மட்டுமே அவன் மீது பாய்ந்ததால் தான் ...என்று.. காதலின் மகோன்னதத்தையும், மனித மனங்களின் ஆழத்தில் புதைந்திருக்கும் அன்புக்கான தேடலையும் ஒரு தீவிரமான காதல் கதையாக அளித்திருக்கிறார் தஸ்தாயேவ்ஸ்கி.

....ஷஹி...

Related Posts with Thumbnails