Search This Blog

Showing posts with label நோன்பு. Show all posts
Showing posts with label நோன்பு. Show all posts

Friday, September 23, 2011

இறை(அ)ஞ்சுகிறேன்

(ஆகஸ்ட் 10இல் மூன்றாம்கோணத்தில் பதிந்தது)

தந்தைக்கு அஞ்சி

தாயை நாடும்

பிள்ளையைப் போல்

உலகைப் பயந்து

உன்னிடம் தேடுகிறேன்

புகல்.

உன்

பாதம் பற்றிடத் தாகிக்கும்

என் விரல்களை

மறுதலிப்பெனும்

தீ தீண்டிடும்

முன்

பாதுகாப்பின் தண்ணிழல்

கொடுத்து ஆற்று.

ஆயிரமாயிரம்

திரைகளுக்கு அப்பால்

இருக்கிறேன் என்கிறாய்..

திரை நீக்கும் வெளிச்சம்

எம் இறையச்சம்

அறிவேன்!

அருவமாயிருக்கிறாய்,

ஆறுதலளிக்கிறாய்..

கோடையில் வாடுபவனுக்கு

குளிர் தென்றலாய்.

எப்போதும்

யாசிக்கும் என் கரங்களில்,

இதோ

உனக்கு ஓர் பரிசு

பரிபூரண அர்ப்பணிப்பு...

மண்ணிலும் விண்ணிலும்,

உன்

கிருபை உண்டெனும்;

நற்செய்தி கிடைக்குமா

இந்தஅற்பப் பிறவிக்கு?

..ஷஹி..

Thursday, September 15, 2011

நோன்பு திறக்க உப்பும், அப்பாக்களின் அன்பும்

(ஆகஸ்ட் 1 இல் மூன்றாம்கோணத்தில் பதிந்தது)

உலக மக்கள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உரித்தாகட்டும்...உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான்: "விசுவாசங்கொண்டோரே ! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கின்றது; (அதனால்) நீங்கள் உள்ளம் சுத்தி பெற்று பயபக்தியுடையவர்களாகலாம்."

நோன்பானது , செறிமானக்கருவி மற்றும் குடல் அவ்விரண்டின் தொடர் இயக்கத்தின் சிரமத்திலிருந்து ஓய்வை நல்குகிறது , மனதைச் சுத்தப்படுத்தி நன்மை செய்தல், ஒழுங்குற எதையும் செய்தல், கீழ்படிதல், சகித்துக்கொள்ளுதல், தூய எண்ணத்துடன் செயல்படுதல் ஆகியவற்றுக்கு அம்மனதை பழக்கப்படுத்துகிறது.

இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஊர் என்பதால் ரமலான் மாதம் துவங்கும் முன்பே ஆயத்தங்கள் ஆரம்பமாகிவிடும். வீட்டை சுத்தம் செய்வது, அதிகமதிகமாக வணக்கங்களில் ஈடுபடுவது என்று. நோன்பு துவங்கி விட்டாலோ...பகலெல்லாம் நோன்பாயிருந்து மாலையில் நோன்பு திறக்கும் நேரம் படு பிசியாகி விடுவோம். அதுவரையில் மந்த கதியில் போகும் நாள் மாலை நான்கு மணியில் இருந்து சூடு பிடித்து விடும். வயிற்றுக்குக் கெடுதல் செய்யாத, அதே சமயம் சத்தான உணவுவகைகள் செய்து , அனைவருமாக அமர்ந்து நோன்பு திறக்கும் இன்பம் ..ஆ..அது சொல்லில் அடங்காது. பசியும் தாகமும் அடங்கி மனதுக்கும் வாழ்வுக்கும் வலு சேர்க்கும் இறைதியானத்தில் வீடே திளைத்திருக்கும் .

பொதுவாக நோன்பு நாட்கள் முப்பதையும் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பத்தாகப் பிரித்து , முறையே பேரீட்சை, தண்ணீர், உப்பு என்ற மூன்றையும் கொண்டு நோன்பு திறப்போம்.

பேரீச்சையும் தண்ணீரும் உடலுக்கு தேவையான அதிமுக்கியமான சத்துக்கள். உப்பு? உயிர் காக்கும் பொருளாயிற்றே!

மட்டுமல்லாமல் நோன்பின் இறுதிப் பத்தில் நோன்பு காலம் முடிகிறதே என்ற வருத்ததுடன் உப்பில் நோன்பு திறப்பதாக ஒரு கருத்தும் உண்டு.

உப்பு கொண்டு நோன்பு திறக்கும் நேரம் எல்லாம் என் நினைவில் அப்பா தான். அப்பாவும் அம்மாவும் காதல் ,கலப்பு மணம் புரிந்து கொண்டவர்கள். அலுவலகம் கிளம்பும் பரபரப்பில் அம்மா இருக்கும் போது அவருக்கு சரியாக வீட்டின் அத்தனை வேலைகளிலும் அப்பா கைகொடுப்பார். எங்கள் அனைவருக்குமாக டிபன்பாக்ஸ் ரெடி செய்யும் பொறுப்பு அப்பாவினது தான். ஒரு நாள் பகலுணவு நேரம், பசியுடன் டப்பாவைத்திறந்து ஒரு கவளம் உண்கிறேன்.. சுத்தமாக உப்பில்லை உணவில்! பசியும் கோபமுமாக அப்படியே கொட்டிக் கவிழ்த்து விட்டு வகுப்பில் சென்று அமர்ந்து விட்டேன்.

மதியத்தின் முதல் வகுப்பு துவங்கி சிறிதே நேரத்தில் அழைப்பு வந்துவிட்டது. 'ஷஹி, யுவர் டாட் இஸ் வெய்ட்டிங்க் ஃபார் யூ இன் தி ஆஃபிஸ் ரூம்' என்று. என்னவோ என்று ஓடினேன்.' என்னப்பா ?' என்றதற்கு 'ஆஃபிஸில சாப்பிடும் போது தான் சுத்தமா உப்பில்லைன்னு தெரிஞ்சிது நீ சாப்பிட்டிருக்க மாட்டியேன்னு தான் அரை நாள் லீவ் போட்டுட்டு வந்தேன் என்கிறார்!" என்னை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த ஒரு ஓட்டலில் உணவருந்த வைத்து விட்டு பிறகு பள்ளியில் விட்டுச்சென்றார். என் திருமண வரவேற்பின் போது அப்பாவின் நண்பர் ஒருவர் இந்த சம்பவத்தை என் கணவரிடம் சொல்ல இன்றும் அது என்னவரின் நினைவில் நீங்காமல் இருக்கிறது. வாழ்வில் சுவை கூட்டும், உயிர் காக்கும் ,பெண்களின் மனங்களில் உறைந்திருக்கும் வலு சேர்க்கும் உப்பாகத் தான் அப்பாக்கள் இருக்கின்றனர்.

கவலைகளற்ற பதின் வயதில், அத்தை மகனையே திருமணம் செய்து கொண்டதால் தாய் வீடு நீங்கும் போது அழ வேண்டும் என்றே தெரியவில்லை எனக்கு. அம்மாவும் கண்ணீர் ததும்பிய விழிகளோடு அமைதியாகப் 'போய் வா' என்றார். அப்பாவுக்கு சலாம் சொல்ல திரும்புகிறேன்.. ஓவென்ற அழுகைச்சத்தம் ! ஒரு பெண் பிள்ளை போல் கதறி அழுகிறார் அப்பா! அப்பா அழுகிறாரே என்ற தாபத்தில் துளிர்த்த கண்ணீர்த் துளிகளைத் துடைத்துக் கொண்டு நானே அப்பாவை சமாதானம் செய்ய வேண்டியதாகி விட்டது!

அராபியாவில் பெண்குழந்தைகளை அவமானச் சின்னமாகக் கருதி,அராபியர்கள் உயிரோடு புதைத்துக் கொண்டிருந்த சமயம் ..முகம்மது நபியவர்கள்"இரண்டு பெண் மக்களைப் பெற்று அன்புடன் வளர்த்து, மார்க்கம் பயிற்றுவித்து, கரை சேர்ப்பவர் ,சுவனத்தில் என்னுடன் இருப்பார் "என்று கூறியதாக ஒரு ஹதீத் கேட்டிருக்கிறேன். என் அப்பாவுக்கு நான் ஒரு பெண் தான். நடுத்தர வர்க்கமென்றாலும் ஒரு இளவரசிக்குரிய சகல சந்தோஷங்களுடன் என்னை வளர்த்த என் அப்பாவுக்கும், பெண் மக்களைப்பெற்று அவர்களைப் பேணி வளர்க்கும் உலகின் எல்லா அப்பாக்களுக்கும் இறைவன் இம்மையிலும் மறுமையிலும் நற்கிருபை செய்யட்டும்.

பால்ய வயதிலேயே உலக இலக்கியம், உலக சினிமா, கம்யூனிச சிந்தனை என்று அத்தனையையும் அறிமுகம் செய்து, இன்றும் என்னைப் படிக்கவும் எழுதவும் தூண்டிவரும் என் அப்பாவுக்கே நான் எழுதிய, எழுதவிருக்கும் அத்தனையும் சமர்ப்பணம்.

நோன்பு நாட்களின் நல்வாழ்த்துக்களுடன்

...ஷஹி...

Friday, September 9, 2011

பசியெனும் முள் -(ரமலானில் எழுதியது)

இப்படியாக: நோன்பு நாட்களில் கடிகார முள்ளும் சரி, மனதின் ஓட்டமும் சரி..நிதானமாகத்தான் இருக்கிறது. ஜெயமோகனின் "பண்படுதல்" இன்று தான் வாசித்து முடித்தேன்.

ஜெயமோகனின் கேள்வி "நாம் ஒருவரையொருவர் பார்த்தால் சாப்பிட்டாச்சா? என்று கேட்கிறோம். விசித்திரமான இந்தப் பழக்கம் எப்படி நமக்கு வந்தது? சாப்பாடு அரிதாக இருந்த ஒரு காலகட்டம் நமக்கிருந்ததா? பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நம் தேசத்தைப் பதற அடித்து பல லட்சம் பேர் சாகக் காரணமாக அமைந்த மாபெரும் பஞ்சங்களின் விளைவா அது?"என்று ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார் ஜெமோ. சாப்பிட்டாச்சா என்ற கேள்வி நம் சமூகத்தில் எத்தனை சகஜமான ஒன்றாக இருந்தால்- இது ஒரு விசித்திரமான கேள்வி என்று ஜெயமோகன் சொல்வது நமக்கு ஏக விசித்திரமாக இருக்கும்? தவிரவும் "இப்படி நாளெல்லாம் நோன்பிருந்து தான் உங்கள் இறைவனுக்கு நீங்கள் வழிப்பட வேண்டுமா? அப்படித் துன்புறுத்துவதில் என்ன இன்பமாம் இறைவனுக்கு" என்று மாற்று மதத்தினர் பலரின் கேள்வியும் ,பசி குறித்த பல்வேறு கோணங்களை யோசிக்க வைக்கிறது.

நோன்பு என்பது

நோன்பைப் பொறுத்த மட்டில் நாம் நோன்பாய் இருந்தாலும், வணங்கினாலும், அவனைத் துதித்தாலும் இவற்றுக்கு மாற்றமாக நடந்து கொண்டாலும் இறைவனுக்கு எந்த உயர்வும் தாழ்வும் இல்லை..புகழ் அனைத்தும் அவனுடையது. "பின்னே ஏன் தான் பசியாக் கெடக்கணும்" என்றால்..ஈமானின் (இறையச்சம்) மிக உயரிய நிலை அது...இறைவனின் பண்புகளில் ஒன்றான உண்ணாமை, பருகாமை, துணை நாட்டம் இல்லாமை ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறோம் நோன்பு நேரத்தில். அதற்குரிய பரிசு அவனிடத்தில் உள்ளது.

சகோதரர்களின் கதை

இப்படியாகப் பசியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில், இளமையில் வறுமை கொண்டு ,தந்தையை இழந்த காரணத்தால்- பசியும், துயரமுமாக வளர்ந்த மூன்று சகோதரர்களின் கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மூத்தவர் இலக்கியத்தின் மீதும், ஓவியம் வரைவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்,பசியை அலட்சியம் செய்து மணிக்கணக்கில் இலக்கியம், சமூகம் பற்றிப் பேசக்கூடியவர். தந்தை இறந்த போது பதின் வயதை எட்டியிருந்தவர்...வாழ்வு குறித்த பல வண்ணக் கனவுகளில் மனம் அலையத்துவங்கும் வயது. உணவின் மீதும், அதன் நுட்பமான (nuances) ருசிகளிலும், உடலைப் பண்படுத்துவது உணவுதான் என்று தெரிந்து விடுவதால் அதன் அளவுகளிலும் கூட விருப்பம் ஏற்படும் வயது.

உடன் பிறந்தோரையும் உலகம் அறியாத் தாயையும் கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இளம் தோளில் விழுந்து விட, பசி எனும் முள்ளும் ஆழமாகத் தைத்து, அதன் ஒரு பாதியை மட்டும் பிடுங்கி வெளியேற்றி , மறு பாதியோடு வாழ்நாளெல்லாம் போராடியவர். வாழ்வு குறித்த ஆசைகளும் கனவுகளும் ஒரு புறம் இழுக்க, குடும்ப பாரம் மற்றொரு புறம் சாய்க்க, தன் பசியைப் பொறுத்துக் கொண்டு கனவுகளோடே வாழ்ந்து மறைந்தார். வெகு ருசியான உணவு வகைகள் பறிமாறப்படும் சமயங்களில் மட்டும்- நரைத்து விட்ட அவர் கண்ணிமைகளின் படபடப்பினுள் உணவின் மீது வெகு விருப்பம் கொண்டு, அது மறுக்கப்பட்ட ஒரு இளைஞனின் ஆசை ததும்பும் முகம் வெளிப்படும்.

இரண்டாம் சகோதரர் உயர்நிலைப்பள்ளிப் படிப்பிலிருந்தார்...உண்டு வந்த கொஞ்சம் உணவுக்கும் பஞ்சம் என்றானதை ஒரு போராளிக்குரிய அலட்சியத்தோடு கையாண்டார்..கிடைத்தால் சரி கிடைக்காவிட்டால் எப்போது கிடைக்குமோ அப்போது. ஆனால் பசியின் மீது கொண்டு விட்ட வன்மத்தை அவர் படிப்பில் காட்டினார். குடும்பத்தின் முதல் கிராஜுவேட், ஊரிலேயே முதன்முதலில் அரசாங்க வேலை என்ற ,பல எட்ட இயலா லட்சியங்களை அவரை அடைய வைத்தது இளமையில் அவரும், அவர் உடன்பிறந்தோரும் அனுபவித்த பசி தான்.

வாழ்வின் சிறப்பான இளமையில், நல்ல ஓர் நிலைமைக்கு அவர் வந்து விட்ட பிறகும் கூட, மிகப் பிடித்தமான உணவுகளைக் கூட ஒரு சிறுவனின் அளவே தான் உண்ண முடியும் என்ற நிலைப்பாட்டுக்கு அவர் உடலும் சரி மனமும் சரி வந்து விட்டது. உணவைப் பொறுத்த மட்டில் அதன் அளவு, அவர் மட்டிலும் பசியின் கொடூரத்தை அவர் ருசிக்க நேர்ந்து விட்ட இளம் பிராயத்தோடே நின்று போனது. தான் அனுபவித்த கொடுமையை யாரும் சந்திக்கலாகாது என்ற எண்ணம் வேரூன்றி விட, சோஷலிசத்தின் பால் ஈடுபாடு கொண்டவராகவும், மிகுந்த இரக்க சுபாவியாகவும் ஆனார்.

இளையவர் உணவு தான் வாழ்வின் சுவை என்றெண்ணும்,அது தவிர வேறெந்தச் சுவை பற்றியும் அறியாத வயது. பசிக் கொடுமையைத் தாள இயலாத துயரம் சமூகத்தின் பால் கோபமாக மாற, முன்னேற வேண்டும், உணவுக்கு வழியில்லாமல் கிடந்த நிலையை மறக்க, மறைக்க வேண்டும் என்று வெறி கொண்டு உழைத்தார். தன் பிள்ளைகளின் மீது தன் இளமையின் நிழல் கூடப் பட்டு விடலாகாது என்ற தீவிர எண்ணம் கொண்டார். தினமும் செய்யும் சமையலே விசேஷமானதாகத் தான் இருக்க வேண்டும் அவருக்கு, வருவோர் போவோர் அனைவரையும் உண்ண வைத்தே அனுப்புவார்." சாப்பிடத்தானே இத்தன கஷ்டப்படுறேன்..அதுல என்ன அளவு? என்ன சிக்கனம்?" என்று எப்போதும் பேசி வந்தார். குடும்பத்தில் யார் யாரின் கைப்பக்குவம் எத்தகையது, எங்கு என்ன உணவு சிறப்பானது? என்று எல்லாம் அத்துப்படி. உண்ணும் போது ஒரு பருக்கையை யார் சிந்தி விட்டாலும் துடித்து , அதை எடுத்து தன் தட்டில் இட்டுக்கொள்வார். ஆனால்---வழிவகையிலேயே யாரும் உண்ணாத சிறப்பான உணவு வகைகள், உடுத்தாத உடுப்புகள் என்று பிள்ளைகளைப் பேணினார்.

தன் இலட்சியத்தில் வெற்றி அடையும் சமயம், சிறு வயது முதற் கொண்டு, பசியைத் தணித்துக் கொள்ளவெனப் பழகியிருந்த புகைப்பழக்கத்தினால் புற்றுநோய்க்கு ஆளாகி துடித்து இறந்தார். பிள்ளைகள் இரண்டும் இலட்சக்கணக்கில் ஈட்டி, பல ஆயிரம் பேரின் பசியாற்றும் வல்லமை பெற்று விட்டார்கள்..ஆனால் தொண்டைப் புற்றின் காரணமாக வாய்வழியாக திரவம் கூட உட்கொள்ள இயலாமல் அவர் உயிர் பிரிந்தது.

இப்படியாக ஒரே தாய் வயிற்றில் பிறந்து, வளர்ந்த மூன்று பேரின் வாழ்வில் நுழைந்த பசியெனும் முள் மூத்தவரின் இதயத்தில் வாழ்நாளெல்லாம் தைத்துக் கிடந்தது, இரண்டாமவரைத் தைத்த முள் அவரின் வயிற்றைச் சுருக்கி, வாழ்வை விரித்தது. இளையவரைத் தைத்த புண் புரையோடிப்போனது..

பசியெனும்சக்தி எல்லா தேடல்களுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும், போர்களுக்கும், உலக இயக்கத்துக்கும் ஆதாரமான சக்தி! பசி கொடுக்கும் பாடங்கள் தான் எத்தனை, எத்தனை? அது கொண்டு வரும் நினைவுகள் ஆயிரம்..பசி நேரத்தில் உணவிட்டவரை உள்ளளவும் மறந்து விட இயலுமா? பூமியில் விழுந்த முதல் கணம் தோன்றும் உணர்வு பசி தானே? அதைத் தீர்க்கும் தாயை விடப் பெரும் உறவு எது உலகில்? தன் பசியை உணர்பவன் அன்றோ மற்றையோரின் பசியை உணர்ந்து ஆற்றத்துணிவான்?

இப்படியான பசியின் அருமையை, கொடுமையைப் பேசும் சமயம்--- உணவை வீணாக்காமலும், பசியோடு இருப்பவர்கள் முகம் பார்த்து அதைப் போக்கும் எண்ணம் கொண்டவர்களாகவும் ,' உலக மாந்தர் யாவருக்கும் பசிபிணியைப் போக்கு' என்று இறைவனை இறைஞ்சுபவர்களாகவும் நாமெல்லாரும் இருப்போம்.

பசியெனும் போதே நம் மனக்கண்களில் எத்தியோப்பியப் குழந்தைகளின் எலும்பும் தோலுமான துயர் தோய்ந்த சித்திரம் முள்ளாய்த்தைக்கிறது அல்லவா? தமிழச்சியின் "கலவி" எனும் தலைப்பிலான நினைவில் நிற்கும் கவிதை ஒன்று------

ஒரு கர்ப்பிணியின் வாந்தியினை

எடுத்து உண்ட எத்தியோப்பியக்

குழந்தைகளின் பட்டினியைத்

தொலைக்காட்ச்சியில் பார்த்த பின்பும்,

கலவி இன்பம் துய்த்த

அந்த இரவிற்குப் பின்தான்

முற்றிலும் கடைந்தெடுத்த

நகரவாசியானேன் நான்.

(தமிழச்சி)

முடிவாக சொல்லி வந்த கதையை நான் முடிக்கவில்லையே? சகோதரர்களில் மூத்தவர் என் பெரியப்பா, இரண்டாமவர் அப்பா...இளையவர் சித்தப்பா.

..ஷஹி..

Related Posts with Thumbnails