Search This Blog

Sunday, November 14, 2010

எஸ். ராவின் ஜெயந்தி ..பக்குவமற்றவளா?


ஆனந்த விகடனில் என் அபிமான எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "ஜெயந்திக்கு ஞாயிற்றுக்கிழமை பிடிப்பது இல்லை " என்ற சிறுகதை படித்தேன். பிரமாதம், வழக்கம் போல் பாத்திரங்களின் எண்ண அலைகள் நம் மனங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தும் விதமாக எழுதியிருக்கிறார் எஸ்.ரா.

காதல் திருமணம் செய்து கொண்ட பெண் ஒருத்தி, தன் புகுந்த வீட்டினரின் அசைவ உணவுப் பழக்கத்தால் அடையும் அசூயையையும், தன் பிறந்த வீட்டில் தான் அனுபவித்து வந்த இன்பங்களையெல்லாம் எண்ணி ஏங்குவதையும், காதலனாய் இருந்த போது அவள் அழகை ரசித்து, கொஞ்சி மகிழ்ந்த கணவன் இப்போது சாப்பாட்டில் காட்டும் ஆர்வத்தைக் கூட தன்னிடத்தில் காட்டுவதில்லை என்ற ஆதங்கத்தையும் மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார் எஸ்.ரா.

ஆனால் ஏனோ கதையைப் படித்ததிலிருந்தே கதாநாயகி ஜெயந்தியின் மீது எப்போதும் நாயகிகளின் துன்பம் பார்த்து எனக்கு ஏற்படும் பரிதாப உணர்வு தோன்றவேயில்லை.
" நல்ல வேலை,சொந்தவீடு,வங்கி சேமிப்பு, அன்பான கணவன், அக்கறையான மாமியார், மாமனார், காதல் திருமணம் என்று எல்லாமும் நன்றாகத்தானே இருக்கிறது. பின் ஏன் அழுகிறோம் என்றூ அவளாகத் தன்னைத் திட்டிக் கொள்வதும் உண்டு." என்ற கதையின் வரிகளால் ஏற்பட்ட எரிச்சல் என்று நினைக்கிறேன்.

அவளுக்கு 26 வயது..நல்ல பக்குவம் ஏற்பட்டிருக்க வேண்டிய வயது தான்! படித்து, வேலையில் இருப்பவள், நம்மிலும் கேடு நாட்டிலே கோடி என்பதெல்லாம் இவளுக்கு சொல்லக்கூடிய அறிவுறை அல்லவே! இவளை விட அதிர்ஷ்ட சாலி எவர் உண்டு என்று கேட்கும் விதமான வாழ்வில், "இன்னும் எவ்வளவோ வருடங்கள் மீதம் இருக்கின்றன. எப்படி வாழப்போகிறோம்" என்றெல்லாம் இவள் ஏன் கவலைப் பட வேண்டும்.? ஒரு வேளை கணவன் இல்லத்தாரின் உணவுப்பழக்கமல்ல இவளுடைய ஆதங்கம் , கணவனின் அன்பு குறைந்து விட்டதோ என்ற எண்ணம் தான்..என்றும் எண்ணத்தோன்றுகிறது. எதுவானாலும் இந்த அழுமூஞ்சி கதாநாயகிகள் இனி வேண்டாமே! எத்தனையோ இன்னல்களுக்கிடையே வாழ்க்கைப் போராட்டத்தில் தனியாக வென்று வரும் கதாநாயகிகளைப் பற்றி கதைகள் தாம் இன்றைக்கு அவசியம். அழுமூஞ்சிப் பெண்களைப் பற்றித்தான் ஏகப்பட்ட சீரியல்கள் வருகின்றனவே!

அதிலும் இதையெல்லாம் எழுத நாங்கள் போதுமே...எங்கள் பக்கமெல்லாம் மருமகள் அன்றிரவு எங்கு உறங்க வேண்டும் என்பதைக்கூட மாமியார் தான் முடிவு செய்யவேண்டும் என்ற நிலையில் வாழும் பெண்களெல்லாம் உண்டு. உணவு, உடுப்பு என்ற அத்தியாவசியத் தேவைகளைப் பற்றியெல்லாம் கேட்கவே வேண்டாம் . இப்படியெல்லாம் பெண்கள் சிரமங்களுக்கு ஆளாகும் போது இந்த ஜெயந்திக்கு என்ன குறை?


கணவனின் அன்பு தான் பிரச்சினை என்று எண்ணும் விதமாகவும் ரொம்பவும் வரிகள் இல்லை கதையில்..அவனுடைய ஆர்வம் வேண்டுமானால் குறைந்திருக்கலாம். இதுவும் கூட இயற்கை தானே! இதில் ஆண் , பெண் என்ற பேதம் இல்லையே! காதலிக்கும் போது பெண்ணுக்கு ஆண் மேல் இருந்த ஆர்வம் மட்டுமென்ன வளர்ந்து கொண்டேவா போகிறது திருமணத்துக்கு பிறகு? இல்லையே! பக்குவம் இல்லாத பெண் என்று தான் எண்ணத் தோன்றுகிறது இந்த ஜெயந்தியைப் பார்த்து!

ஒரு வேளை ஆசிரியர் சொல்ல விழைவது, ஆண் பெண் இருவரிடத்தும் திருமணத்துக்கு முன், அதற்குப் பின் என்ற மனோ நிலை மாற்றங்களைப் பற்றியது தானோ?
இது மூன்றாம் கோணத்தில் இருந்து என்னுடைய ஒரு மீள் பதிவு...
....ஷஹி...

Thursday, September 30, 2010

புத்தக விமர்சனம்..லியோ டால்ஸ்டாயின் "ஆன்னா கரேனினா"..



"லியோடால்ஸ்டாயிடம் எனக்குள்ள மனப்பாங்கு, வாழ்க்கையில் அவருக்குப் பெரிதும் கடமைப்பட்டு, பக்தியுடன் வழிபடுகிறவனுடைய மனப்பாங்காகும்" என்கிறார் மஹாத்மா காந்தி.

ஆன்னா கரேனினா "இது வரையில் எழுதப்பட்ட நாவல்களிலேயே ஒப்பற்ற ஒன்று" என்று J.Pederzane இன் "The Top Ten" இல் பரிந்துரைக்கப்பட்ட நாவல். எட்டு பகுதிகளாக விரிகிறது ஆன்னாகரேனினா.


ஆன்னா -கதையின் நாயகி, ஒப்பற்ற அழகி, அவளை விட இருபது வயது மூத்தவரான அலெக்ஸேய் அலெக்ஸேன்ரோவிச் கரேனின் என்ற பிரபல அரசியல் தலைவரை மணந்து கொண்டவள். இனிய சுபாவமும், ரசனைகளும், உடையலங்காரமும், அறிவுக்கூர்மையும் கொண்ட உயர் குடிப்பெண். அவளுடைய மகன் ஸெர்யோஷாவிடம் மிகுந்த அன்பு கொண்டவள். ஸ்டீபன் அப்லான்ஸ்கி என்கிற ஸ்டீவா அவளுடைய சகோதரன்.

நாவலின் துவக்க வரிகள் பல லட்சம் முறை மேற்கோள் காட்டப்பட்ட வரிகள். "மகிழ்ச்சியான குடும்பங்கள் அனைத்தும் ஒன்றே போன்றவை, துன்பமிக்கவை ஒவ்வொன்றும், ஒவ்வொரு வகையானவை". ஆன்னாவின் சகோதரன் ஸ்டீவா, அவனுடைய வீட்டைக் கவனித்துக்கொள்வதற்காக அமர்த்தப்பட்டிருக்கும் பெண்ணுடன் தொடர்பு கொண்டு விடுகிறான். அவன் மனைவி டாலிக்கும் அவனுக்கும் பெரும் பூசல் உருவாக, சமாதானம் செய்விக்க ஆன்னா, பீட்டர்ஸ்பர்கிலிருந்து ரயிலில் வருகிறாள். ஸ்டீவாவின் இளம் பிராய நண்பன் லெவின், ஸ்டீவாவின் கொழுந்தி, கிட்டி என்னும் கேத்தரீனாவிடம் தன்னை மணக்கக் கோருவதற்காக எண்ணமிடுகிறான். அதே எண்ணம் வ்ரான்ஸ்கி என்னும் படைத்தலைவனுக்கும் இருக்கிறது.

சகோதரியை வரவேற்க ரயில் நிலையம் செல்லும் ஸ்டீவா,தன் தாயை அழைக்க வந்திருக்கும், வ்ரான்ஸ்கியைக் காண்கிறான். அறிமுகம் செய்விக்கப்படும் ஆன்னாவைப் பார்த்த மாத்திரத்திலேயே தன் மனதை அவளிடம் இழக்கிறான் வ்ரான்ஸ்கி.
கதையின் இந்தப் பகுதியில் ஆன்னாவின் மனதை வெகுவாக பாதிக்கும் சம்பவம் ஒன்று நிகழ்கிறது. ரயில் பாதையில் தொழிலாளி ஒருவன் தவறி விழுந்து, அடிபட்டு இறக்கிறான். இதனை ஒரு துர் சகுனமாகக் கருதுகிறாள் ஆன்னா.


ஸ்டீவாவின் மனைவி டாலியின் மனதைத் தன் சாதுர்யமான பேச்சினால் மாற்றும் ஆன்னா, அவளைத் தன் சகோதரனை மன்னிக்குமாறு வேண்டுகிறாள், பிரியவிருந்த குடும்பம் இணைகிறது. தன் அக்கா டாலியைச் சந்திக்க வருகிறாள் கிட்டி. மாலையில் நடக்கும் ஒரு நடன விருந்தில் ,வ்ரான்ஸ்கி தன்னுடன் ஆட வருவான் என்று எதிர்பார்த்து ஏமாறுகிறாள். வ்ரான்ஸ்கியின் கவனம் முழுதும் ஆன்னாவின் பால் திரும்புகிறது. அவனுடைய கவனத்தை ஈர்த்தது குறித்து உள்ளூர மகிழும் ஆன்னா, அது குறித்து கலக்கமும் அடைகிறாள்.

தன்னை மண்ந்து கொள்ளவிருந்த வ்ரான்ஸ்கி, ஆன்னாவின் பால் நாட்டம் கொண்டது அறிந்து மனம் உடைகிறாள் கிட்டி. இதற்கு முன்பே லெவின் தன்னை மணக்கக் கோரி கிட்டியை வேண்ட, வ்ரான்ஸ்கியின் நினைவில் மறுத்து விடுகிறாள் கிட்டி. காதல் மறுக்கப்பட்ட துன்பமிக்க நிலையில் ஊர் திரும்புகிறான் லெவின்.
ஆன்னாவும் வ்ரான்ஸ்கியும் ஒரே ரயிலில் பயணிக்க நேர்கிறது, தான் ஆன்னாவை விரும்புவதை அவளிடம் தெரிவிக்கிறான் வ்ரான்ஸ்கி. தன் மனமும் அவனை விரும்புவதை திகிலுடன் உணர்கிறாள் ஆன்னா.லெவினை மறுத்து, வ்ரான்ஸ்கியால் மறுக்கப்பட்ட நிலையில் உடல் நலம் கெட்டு, படுக்கையில் விழுகிறாள் கிட்டி.ஸ்டீவா சில காலம் நண்பன் லெவினுடன் அவன் பண்ணையில் தங்குகிறான்.




பீட்டர்ஸ்பர்கில் ஆன்னா, இளவரசி பெட்ஸியுடன் நட்பு பாராட்டி,வ்ரான்ஸ்கியைச் சந்திக்கும் வாய்ப்புகளுக்காக கேளிக்கைகளில் ஈடுபடுகிறாள். மேலும் அவனுடைய காதலை ஏற்கிறாள்.ஒரு குதிரைப் பந்தையத்தில் வ்ரான்ஸ்கி விபத்துக்குள்ளாகிறான், அது பொது இடம் என்பதை மறந்து, தன் வேதனையை வெளிப்படுத்துகிறாள் ஆன்னா. அவளுடைய கணவர் கரேனின் விசாரிக்க, தான் வ்ரான்ஸ்கியின் குழந்தையைச் சுமந்து கொண்டிருப்பதைச் சொல்கிறாள் ஆன்னா. எதன் பொருட்டும் சமூகத்தில்,தன் நற்பெயரைக் கெடுத்துக்கொள்ள விரும்பாத கரேனின், அவளை எச்சரித்து, தகாத உறவைக் கைவிடுமாறு பணிக்கிறார்.


கிராமத்தில் சில காலம் கழிக்க வருகிறாள் டாலி. அவளைச் சந்திக்கிறான் லெவின்.கிட்டியை பற்றி பேசி அவன் மனதைப் புரிந்து கொள்ள முயல்கிறாள் டாலி. பொய்மையையும் சுயநலத்தையும் அடியோடு வெறுக்கும் லெவின், இந்தப் பேச்சினால் மேலும் எரிச்சல் அடைந்து, கிட்டியை மறந்து விடுவதாக முடிவெடுகிறான்.

ஆன்னாவுக்கும் கரேனினுக்கும் இடையே மிகுந்த மனக்கசப்பு உண்டாகிறது. தன்னைப் பணியாவிட்டால் மகன் ஸெர்யோஷாவை அவளை விட்டுப் பிரித்து விடுவதாக மிரட்டுகிறார் கரேனின். வ்ரான்ஸ்கியை மறப்பதாக இல்லை என்பதைத் தெளிவு செய்கிறாள் ஆன்னா.ஸ்டீவா தம்பதியர் ஆன்னாவை மன்னிக்குமாறு கரேனினை வேண்ட, மறுக்கிறார் கரேனின்.

குழந்தைப்பேற்றின் போது ஜன்னி கண்டு மரணத்தறுவாய்க்கே போகிறாள் ஆன்னா. இதில் மனம் கசியும் கரேனின், அவளையும் வ்ரான்ஸ்கியையும் மன்னிக்கிறார். ஒருவாறு பிழைத்தெழுகிறாள் ஆன்னா. குற்ற உணர்வு உந்த, தற்கொலைக்கு முயன்று, பிழைக்கிறான் வ்ரான்ஸ்கி. பிறந்த குழந்தை ஆன்னியிடம் தன் மனதை இழக்கிறாள் ஆன்னா. வ்ரான்ஸ்கியைப் பிரிய இயலாமல், அவன் தாஷ்கண்ட் செல்லவிருப்பதை அறிந்து, அவனிடம் செல்கிறாள், மகன் ஸெர்யோஷாவை கணவரிடம் விட்டு விட்டு.

ஸ்டீவாவின் ஏற்ப்பாட்டில் சந்திக்கும் லெவினும் கிட்டியும் மனம் கனிகிறார்கள். காதல் கல்யாணத்தில் முடிகிறது. லெவினின் சகோதரன் நிக்கலாய் மரணப்படுக்கையில் கிடப்பது அறிந்து அவரைக் காணப் பயணிக்கிறார்கள் தம்பதி. கிட்டி நிக்கலாயை அருமையாகக் கவனித்துக்கொள்கிறாள். கிட்டியின் அன்பின் துணை கொண்டு சகோதரனின் மரண துக்கத்தைத் தாங்கிக்கொள்கிறான் லெவின். கிட்டி தாயாகவிருப்பதை அறிந்து மகிழ்கிறார்கள் இருவரும்.

யூரோப்பில் வசித்து வரும் வ்ரான்ஸ்கியும் ஆன்னாவும் சமூகம் தங்கள் தகாத உறவை ஒப்ப மறுப்பதை பல இடங்களில் கண்ணுற்று கலங்குகிறார்கள். தன்னை விட்டு வ்ரான்ஸ்கி விலகுவதாக நினைக்கிறாள் ஆன்னா. தன் மகன் ஸெர்யோஷாவைப் பார்க்க அவன் பிறந்த நாளன்று செல்லும் ஆன்னாவைப் பார்த்து கடும் அதிருப்த்தி அடைகிறார் கரேனின்.

மன அமைதியில்லாமல் அல்லல் கொள்ளும் வ்ரான்ஸ்கியும் ஆன்னாவும் அவனுடையை பண்ணைக்குச் செல்கிறார்கள். டாலி தன் தாய் இளவரசி ஸ்கெர்பட்ஸ்கயாவுடனும் தன் குழந்தைகளுடனும் பண்ணை வீட்டில் வசிக்க வருகிறாள். இடையில் வெஸ்லோவஸ்கி என்னும் பெண் பித்தன் கிட்டியிடம் காட்டும் கவனத்தைக் கண்டு வெறுக்கும் லெவின், அவனை வீட்டில் இருந்து வெளியேற்றுகிறான். அவன் உடனே வ்ரான்ஸ்கியிடம் செல்கிறான். அவனிடம் சிரித்துப் பேசி, அனைவரின் எரிச்சலுக்கும் ஆளாகிறாள் ஆன்னா.

ஆன்னாவைச் சந்திக்க வரும் டாலி, வ்ரான்ஸ்கியின் படாடோபமான மாளிகையையும் ,ஆன்னாவின் ஆடையலங்காரத்தையும் அவளுடைய புதிய பாவனைகளையும் கண்டு மிரள்கிறாள்.தங்களின் உறவு சிதிலமடைவதை உணரும் வ்ரான்ஸ்கி, டாலியிடம் ஆன்னா, கரேனின் விவாகரத்து குறித்து பேசுகிறான். விவாகரத்து பெற மறுக்கிறாள் ஆன்னா. சில நாட்களில், வ்ரான்ஸ்கியைத் தன் வசப்படுத்த விவாகரத்து பெற்றே ஆக வேண்டும் என முடிவு செய்யும் ஆன்னா , கணவரிடம் விவாகரத்து கோரி கடிதம் எழுதுகிறாள். பிறகு வ்ரான்ஸ்கியுடன் மாஸ்கோ செல்கிறாள்.


கிட்டியின் பிரசவத்துக்காக மாஸ்கோ செல்கிறார்கள் லெவின் தம்பதியர். அங்கு ஆன்னாவைப் பார்க்கும் லெவின் அவளால் கவரப் படுகிறான். இதை உணரும் கிட்டி, ஒரு சிறு பிணக்குக்குப் பிறகு கணவனுடன் இணைகிறாள். ஆண் மகவு ஒன்றைப் பெற்றெடுகிறாள் கிட்டி, திமித்ரி என்று குழந்தைக்குப் பெயரிடுகிறார்கள்.

பல ஆண்களைக் கவரும் தன்னால், தன் காதலனின் கவனத்தைத் தக்க வைத்துக் கொள்ள இயலாமல் போனது குறித்து மறுகுகிறாள் ஆன்னா. சஞ்சலத்துக்கும், சந்தேகத்துக்கும் ஆளாகி, உறக்கமில்லாமல் தவிக்கும் ஆன்னா, மார்பைன் பயன்படுத்தத் துவங்குகிறாள். தன்னைப் புறக்கணித்து, வேறு பெண்ணை வ்ரான்ஸ்கி மணந்து கொள்வானோ என்ற அச்சத்திலேயே உழலும் ஆன்னா, ஒரு கட்டத்தில், மன உளைச்சல் அதிகமாகி, ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

சில தன்னார்வமிக்க இளைஞர்களுடன் ரஷ்யாவை விட்டு போருக்குப் புறப்படுகிறான் வ்ரான்ஸ்கி. ஆன்னாவிடமிருந்து விவாகரத்துப் பெறாததால், குழந்தை ஆன்னி, கரேனின் வசம் ஒப்படைக்கப் படுகிறாள்.
ஒழுக்கமான ,நேர்மையான வாழ்வே நிம்மதியளிக்கும் என்ற கருத்துடைய லெவின், தன் மனைவியையும் மகனையும் தான் உயிரெனக் கருதுவதை உணர்ந்து கொள்கிறான்.

மனிதனின் அடிப்படை உணர்வுகளையும், அவன் வாழ்க்கையின் நோக்கத்தையும் ,ஆன்மாவைப் பற்றிய சிந்தனைகளையும் எழுப்புகிறது ஆன்னாகரேனினா என்னும் இந்த நாவல்.



"நேர்மையாய் வாழவேண்டியதை விட்டு வதை படுதலும், குழம்பிக்கலங்குதலும், முட்டி மோதுதலும், பிழை புரிதலும், தொடங்குதலும் மறுபடியும் தூக்கியெறிதலும், எந்நேரமும் போராடுதலும், இழப்புக்கு உள்ளாதலும் இன்றியமையாதவை. மன நிம்மதி- அது ஆன்மாவின் இழிநிலை" இவ்வாறு எழுதினார் லியோ நிக்கலாயெவிச் டால்ஸ்டாய். அவரின் இச்சொற்கள் அவரது வாழ்க்கை குறித்தும், படைப்பு இலக்கியப்பணி குறித்தும் நமக்கு உணர்த்துகின்றன.

நேர்மையான, ஒழுக்கமான வாழ்வே நமக்கும் பிறருக்கும் நன்மை பயக்கும் என்பதே, ஒழுக்கவாதியான டால்ஸ்டாய் சொல்ல விழைவது.

சின்னஞ்சிறுமியும்..செல்ல பலூனும்..


பத்து வயதினளாய் இருந்தேன்..
பள்ளிக்கூட வாசலில் பலூன் விற்றானொருவன்..
ஐந்தே பைசாவுக்கு....
வண்ண பலூனொன்று ,
விலைக்கு வாங்கியதென்னை!

நீலம் ,ஆரஞ்சென்று,
நாளைக்கொரு நிறம் மாறும்!
குளிக்கும் என்னுடன் கூடவே நனையும்,
நான் உறங்கும் போது...
அது மிக விழித்திருக்கும்!

எப்போதும் என் துணை அது..
என் பெற்றோரின் பிரிவெல்லாம்,
களையும் இணை அது!

கணக்கில்..பூஜ்ஜியம் வாங்கிய ஓர் நாளில்..
வானவில் காட்டி ஆற்றுப்படுத்தியதெனை,
ஓட்டப் பந்தையத்தில் தோற்ற நாள் ஒன்றில்,
அதன் வால் பிடிக்கச் சொல்லி,
விண்ணில் சேர்த்தது என்னை!

வகுப்பறையின் வாசலில்,
நாளெல்லாம் காத்திருக்கும்!
தோழியர் சண்டைகளில், எப்போதும் என்
கட்சி சேரும்!
பதின் பருவத்து மயக்கங்கள்
பகிர அதன் செவிகள்
எப்போதும் திறந்திருக்கும்!
அதிர்ச்சிகள்,அச்சங்களில்..அன்போடு
என் கண்ணீர் துடைத்தெறியும்!

பருக்கள் இல்லா சருமம்,
பால் போல் நிறம் என்று..
நான் விரும்பியவாரெல்லாம்
என் தோற்றம் தன்னில் காட்டும்!
பல நாள் பல பொழுது,
அதைப் பார்த்தே என் பசி தீரும்!

ஆனால்....

பள்ளி இறுதியிலே ...
பட்டென்று உடைந்தது என் பலூன்!!!

சிறுமியர் ஸ்ரீமதியர் ஆனால்....
செல்ல பலூன்கள் .....
சட்டென்று ....
உடையும் தானே!!!

Tuesday, August 31, 2010

அம்மா நான்..





அதட்டும் தொனியிலான உன் பேச்சு,
திமிரும் உன் தோள்களுணர்த்தும் உன் ஆளுமை,

நண்பனை உயிராகவும்,
சகோதரியை விரோதியாகவும்..
பாவிக்கும் உன் மனோபாவம்,

வேகமாய்க் கறுத்தடரும் மீசையில்
ஒளிந்து கொள்ளும் உன் பிள்ளைமை..

இறுகச்சாத்தப்படும் மன மற்றும் அறைக் கதவுகள்..

உன் கைபேசிக்குள் காணாமல் போகும்
உன்னைப் பற்றிய என் கனவுகள்,

முள் போலவும் ,மீண்டும் அலையாகவும்
மீள மீளத் திருத்தப்படும் உன் சிகை,

குளியலறைக்குக் கிடைக்கப் பெறும்
உன்னுடனான கூடுதல் நிமிடங்கள்,

உன் தந்தை,
திடீரென...
என் கணவனாக மட்டும் பார்க்கப்படும்
அவலம்,

இரு சக்கர வாகனமும்,
பின்னமர்ந்து செல்ல தோழியொருத்தியும்
இல்லாதவனெல்லாம் சபிக்கப்பட்டவன்
என்ற உன் சித்தாந்தமும்,

வளர்கிறாயா ?விலகுகிறாயா?
என்ற தாபத்தில்
தள்ளுதெனை எக்கணமும்!

உறங்கும் போது.....
உனை....
நீ அறியாமல் பார்க்கும்
அந்த சில விநாடிகள்
தவிர்த்து!

புத்தக விமர்சனம்..வாண்டா வாஸிலவ்ஸ்காவின் "வானவில்"..ஸ்டாலின் விருது பெற்ற நாவல்





இலக்கியம்.. மனித சமூகத்தின் அளவுகோல்.சோஷலிஸ்டு நாகரிகத்தின் இலக்கியம், ஜனங்களின் இலக்கியம்.சோஷலிஸ்டு எழுத்தாளர்கள், சமூகத்தில் உள்ளது உள்ள படி சித்தரிக்கின்ற படியால் சோவியத் இலக்கியம் வெற்றியின் சிகரத்தில் வீற்றிருக்கிறது.


வாண்டா வாஸிலெவ்ஸ்கா, சோவியத்தின் தலைசிறந்த பெண் எழுத்தாளர்.அவருடைய, ஸ்டாலின் விருது பெற்ற "வானவில்" என்ற நாவலைப் பற்றின என் கருத்துக்கள் தங்களின் முன்...


கொடுங்கோலன் ஹிட்லரின் பாஸிஸ்டுகள் சோவியத் யூனியனின் மீது பாய்ந்து ,மனித உயிர்களைக் கொன்று குவிக்கிறார்கள்.ஆனால் தாய் நாட்டைக் காக்க, குழந்தைகள் முதல் முதியோர் வரை போராடி வென்றனர்.சோவியத் யூனியன் மகத்தான வெற்றி பெற்றது.ஹிட்லர் ஒழிந்தான்.இதுவே நாவலின் மைய கருத்து.ஆனால்.. உயிரை உறைய வைக்கும் குளிரில் ஒரு சிறிய கிராமத்தை ஜெர்மானியர் முற்றுகையிட்டு,கிராம மக்களைத் துன்புறுத்தும் அவலக் காட்சிகளை, தம் அழகிய எளிய தமிழ் நடையில்,நம் கண் முன்னே கொண்டு வருகிறார்கள் தமிழாக்க அறிஞர்கள்..ஆர்,ராமனாதன் மற்றும்,ஆர்.ஹெச்.நாதன்.


நாவலின் முக்கிய பாத்திரம் ,போரில் தன் மகனைப் பறிகொடுத்த தாய்,
பெடொஸ்யா கிராவ்சக்.போரில் இறந்த தன் வாலிபப் பருவ மகனின் சடலம் கிடக்கும் பனிக்காட்டுக்குத் தினமும் ஜெர்மானிய வீரர்களின் கண்களுக்கு அஞ்சி அவள் செல்லுவது,நம் உள்ளத்தைப் பதைபதைக்கச் செய்கிறது.தன் ஒரே மகனின் சடலத்தை அடக்கம் செய்யக் கூடவியலாமல் அவள் படும் துயரம் வார்த்தைகளில் வர்ணிக்கவியலாதது.


கொரில்லாப் படையைச் சேர்ந்த ஒலினா என்ற நிறைமாத கர்ப்பிணியை, நிர்வாணமாக்கி, உறைய வைக்கும் பனிப்பொழிவில் சித்திரவதைக்கு ஆளாக்கும் காட்சியும்,பிறந்து விட்ட அவளுடைய சிசு மகனை அவள் கண் முன்னே கொன்று தீர்க்கும் கொடூரமும்,பல வருடங்களுக்கு முன்னே ரஷ்யாவில் நடந்த உண்மைச் சம்பவம் என உணரும் போது நம் ரத்தமும் கொதிக்கிறது.


நாட்டைக் காக்கவென பிஞ்சுகள் முதல் முதியோர் வரை போராடும் போது,ஒரு புட்டி ஒயினுக்காகவும்,ஜோடி பட்டுக் காலுறைகளுக்காகவும் ஜெர்மானியப்படை அதிகாரி ஹாஃப்ட்மான் குர்ட் வெர்னரின், ஆசைகிழத்தியாகச் சம்மதித்த புஸ்ஸி என்ற பாத்திரம் அனைவரின் எரிச்சலுக்கும் ஆளாகும் ஒன்று.


கொரில்லாப் படை வீரர்கள் மிகுந்த காவலுக்கு இடையில் கிராமத்தில் புகுவதும்,தாய் பெடோஸ்யா அவர்களுக்கு உளவு சொல்லி ,ஜெர்மானியர்களை..கொரில்லாக்களும் ,கிராமவாசிகளும் சேர்ந்து அழிப்பதும்..முடிவில் ஜெர்மானியகளால் கொல்லப்பட்டு பனிக்காடுகளில் கிடக்கும் அக்கிராமவாசிகளின் சடலங்களை எல்லாம் சேகரித்து ஒன்றாக ,எஞ்சியிருக்கும் கிராமவாசிகள் செம்படையினரின் உதவியோடு அடக்கம் செய்வதும்.....சரித்திரம்!


முடிவில்.. செம்படை வீரர்கள் கிராமவாசிகளிடம் அவர்கள் பூமியை ஒப்புவித்து விட்டு உக்கிரேன் நோக்கிச் செல்வதை கிராமவாசிகள் கண்ணீரோடு நோக்குவதாய் நிறைகிறது நாவல்.


படிக்கும் வாசகரின் மனங்களில் தாய்நாட்டுப் பற்றையும் ஒற்றுமையின் வலிமையையும் ஆழமாக வேரூன்றச் செய்யும் அற்புதமான நாவல் இது.

...ஷஹி...

Friday, August 27, 2010

உறக்கம் கலைப்பான்..


உறக்கம் தொலைத்திட்ட
ஓரிரவுக்கு மறுநாள்..
உன்னிடம் சொன்னேன்..
நேசத்தை!

விழிகள் பளபளக்க..
ஆமோதித்தாய் நீயும்.
ஆன்றிரவும் ,
தொலைந்தது
தூக்கம்!

ததும்பிக்கொண்டிருந்த
நேசக் கோப்பையைப்
போட்டுடைத்தாய்
நீயே!
நீண்டன இரவு பல..

மீதம் இருந்த
உறக்கம்
கலைக்கவே போல்..
மீண்டும் வந்தாய்!

நீ என்ன..
வெய்யிலா?
வெளிச்சமா?
விடியலா?

Monday, August 23, 2010

துயரம் தவிர்...


புறப்பட்டு விட்டதாலேயே..
போய்ச்சேர வேண்டியதில்லை!
பயணித்த சுகம் போதும் ...
பாதியில் திரும்புகிறேன்!

சக பயணியின் ,
சௌக்கியம் முக்கியம்!
சங்கடங்கள் தவிர்க்க..
சந்தோஷமாய்..
விடை கொடு!

முட் காடு மீதெந்தன் ,
பாதம் பட வேண்டாம்!
பார்வை பட்டாலே,
புண்ணாகும் என் நெஞ்சம்!

சுற்றி நீ காட்டுகையில்..
சுகமாய் சாய்ந்திருந்தேன்..
சொக்கின கண்கள்..
ஆனாலும்
சுயமாய் இருந்தேன் நான்!

என்னை நான் தொலைத்து..
இன்னுயிர் வளர்க்க விருப்பமில்லை!
வாழும் வரையிலாவது,
சாகாமல் இருக்கிறேனே!

கனவு இல்லம்!


வாசலில் வேம்பு..
கொல்லையில் துளசி..
தொட்டிகளில் மலர்ந்து சிரிக்கும் ரோஜாக்கள்..
தரையெங்கும் பளிங்கு..
முற்றத்தில் ஊஞ்சள்..
நன்றாய்த்தான் இருக்கிறது வீடு!

ஆனாலும்..

கொசுக்கடியோடும், தண்ணீர்ப் பஞ்சத்தோடும்,
தடுமாறிய பழைய வீடு வருதென் கனவுகளில் அடிக்கடி!

கனவுக் காரணம்...

அப்போது நான் கவலையில்லா பள்ளி மாணவி என்பதா?
இல்லை....

பள்ளியில் இருந்தெனை
உன் மிதிவண்டியில்
கொண்டு விடும் தொலைவில் இருந்த வீடென்பதா?

Friday, August 6, 2010

பெயரிடு..


கலங்கங்களோடும் நிலவு..
வரைமுறைகளோடான விண்வெளி...
எண்ணிக்கையில் அடங்கும் இதயத்துடிப்பு..
நடுக்கங்களோடும் ஸ்வாசம்..
முடிச்சுக்களோடு முழு உண்மை..
திடுக்கங்களோடான பரவசம்..
தயக்கங்களோடான வெடிப்பு..
தடுமாற்றத்தோடான முழு உச்சம்!

Monday, August 2, 2010

தெரிந்தால் சொல்லும்..


இருத்தல்,நடத்தல் _நிகழ்வு,
தோண்டல்,எடுத்தல்_ அகழ்வு,
துய்த்தல்,ரசித்தல்_ மகிழ்வு,
இரத்தல்,பறித்தல் _இகழ்வு,
சுரண்டல்,பதுக்கல் _களவு,
அறிதல்,புரிதல்_தெளிவு,
அன்பு,இரக்கம்_கனிவு,
ஏற்று..அடங்கல்_பணிவு,
சினமும்,குணமும்_உணர்வு,
அஞ்சாதிருத்தல்_துணிவு!
எது...எது..என்னவெல்லாம் பிறழ்வு??

Sunday, August 1, 2010

என் கட்டம் போட்ட தலையணை உறை..


அவனுடைய விளையாட்டு மட்டையை
நான் உடைத்த..மற்றும்...
என்னுடையை மதிப்பெண் சான்றிதழை ,
அம்மாவிடம் நான் அறியாமல் அவன் காட்டி கொடுத்த
போர்க்காலங்களில்...
என்னுடைய தலையணையில்,
அவன் மூச்சும் பட்டுவிடலாகாதென்றும்
அவனுடைய பங்கு தின்பண்டத்தில்,
எனக்கான சலுகைப் பங்கு நிராகரிப்பிலும்
கண்டிப்பாயிருப்போம் தம்பியும் நானும்!
பெற்றோரின் யுத்த காலங்களின் போது...
என்னுடைய கட்டம் போட்ட தலையணை உறை,
கறைபடும் எம்மிருவரின் கண்ணீரால்.
என்னுடைய ஆளுமை குறித்தான
விமர்சனங்களில் அவனும்,
அவன் வாழ்வியல் கொள்கைகள் குறித்த
அதிருப்தியில்நானும்
போருக்கான ஆயத்தங்கள் புரிந்து கொண்டிருக்கும்
தற்பொழுதுகளில்.....
'வெளியில் போ' என்று விட ,
அவனுக்கும்,
முகத்தை முறித்துக் கொள்ள
எனக்கும்..
எளிதாயிருக்கிறது!
அவனுடைய தலையணைஉறை,
பூப்போட்ட ரோஜா வண்ணம்..
என்னுடையதில் காணலாம் ,என் பிள்ளைகளின் எச்சில் தடம்.

Thursday, July 29, 2010

ஒரு மௌனத்தின் அலறல்


மௌனம் என்பதென்ன மௌனம் மட்டும் தானா?
சில மௌனங்கள் கவிதைகள் படிக்கும்!
சில மௌனங்கள் கண்ணீர் வடிக்கும்!
சில மௌனங்கள் காவியம் படைக்கும்!
ஒரு சிலர் மௌனத்தால் குடும்பங்கள் பிழைக்கும்.
சிலரின் மௌனம் போர்க்கொடி உயர்த்தும்!
சிலரின் மௌனத்தால் புன்னகை பிறக்கும்.
ஒரு சில மௌனம் நடந்தவை நினைக்கும்!
சில பேர் மௌனம் நினைத்தது நிகழ்த்தும்.
பிடிவாத மௌனம் பெருந்துன்பம் கொடுக்கும்!
பேதைகள் மௌனம் பொறுமை உணர்த்தும்...
பிள்ளையின் மௌனம் பெற்றவள் துயரம்!
புரிதலின் மௌனம் நன்மை பயக்கும்,
சில வேளை அது மயிலிறகுத்தடவல் ...
பல வேளை அது குத்தீட்டியின் குதறல்!
மௌனம் என்பதொன்றும் மௌனம் மட்டும் அல்ல!!!

Sunday, July 18, 2010

வேறொரு பெயர்....


விடுதிகளில் உண்டு முடித்ததும்
பரிமாறியவருக்கும்...
மகிழுந்துகளில் பயணித்து இறங்குகையில்
ஓட்டுநருக்கும்....
நன்றி சொல்லவும்,
சமையற்காரம்மாளை மாமி என்றழைக்கவும்...
சொல்லிப்.. பழக்கியுள்ளாள் உன் தாய்!
வந்தனம் அவளுக்கு!
"ஏய் " என்பதல்லாமல் வேறெப்படியும்..
நான் அழைகப்படலாமாவென கேட்க மட்டும்
ஏனோ நீயும் தானில்லை ...
அவளும் தான் மறந்து போனாள்!

காலம்..


குழந்தையாய் இருந்த போது,
ஓயாமல் கேட்பேன் கேள்விகள்...
விபரமாய் பதில் வரும் ..அப்பாவிடமிருந்து.
இப்போது அவர் உறங்கும் நேரம் தவிர,
அருகில் செல்வதில்லை நான்!
நச்சரிப்புகளுக்கு ஆளாக நேரமில்லை எனக்கு!
நாளையைப் பற்றிய கவலையும் எனக்கில்லை.
வசதியான முதியோர் இல்லத்தில்...
எனக்கான , முன்பதிவுகள் ..
முடித்துவிட்டேன்!

Friday, July 16, 2010

ரோஜா என்பது அதன் பெயர்...


ரோஜாவை முள் என மாட்டேன் நான்...
மேகத்தை மேகமென்பேன்!
நிலா எப்படி நட்சத்திரமாகும்?
ஊஞ்சல் நாற்காலியாகாது!
ஒரு போதும் சூரியன் பூமியில்லை!
பூ என்றே தான் பூவை அழைப்பேன்....
கடல் எப்போதும் கடல் தான்!
அலையும் கூட அப்படியே...
உன்னை மட்டும் எப்படியாம்"........"என்று
அழைப்பது?

எல்லையாம்!!!..தாண்டலாம்!!!




கடலோரம் வசித்தவரை,
மீனுக்கில்லை கவலை...
நகருக்குள் வந்தவுடன்...
சோறே இறங்கவில்லை!
வஞ்சிரங் குழம்பென்றால்...
சொத்தெழுதித்தரலாம்..
வஞ்சிரம் கிடைக்காவிட்டால்,
விராலும் தேவலாம்!
விராலும் இல்லையென்றால்..இறால்!
கெண்டை இல்லாவிட்டால்,கெளுத்தி!
ஆனால்.......
எல்லை தாண்டி கொல்லப்பட்ட மீனவனின் பிள்ளை,
செல்லப்பன் இல்லையென்றால்..சண்முகத்தின் அப்பன்,
கன்னியப்பன் செத்துவிட்டால்..ஆறுமுகன் அப்பன்,
என்று... மீன் வகை மாற்றுவது போல்...
தேற்ற இயலுமா மனதை?
பெருந்தலைகளைச் சொல்லி ஆவதென்ன பிழை?
சட்டை கசங்காமல் வேலை,
தேதி ஒன்றானால்...காசோலை!
தட்டில் தடையில்லாமல் விழும் மீன் தலை!
இயற்கை எய்திவிட்டால் நடுரோட்டில் சிலை...
எவன் அப்பன் செத்தால்...யாருக்கென்ன கவலை!

Thursday, July 15, 2010

குட்டி மனுஷி...


கால் முளைத்த புஷ்பம்....
புன் சிரிக்கும் தென்றல்....
அணைத்து முகரும் போது,
உயிரின் வாசம் வீசும்!
நெஞ்சை உதைக்கும் கால்கள்...
நின்ற துடிப்பைத் தூண்டும்!
கன்னம் தடவக் கைகள்...
தவங்கள் செய்ய வேண்டும்!
சின்னச் சிரிப்பைப் பார்த்தால்..
மனக் காயம் ஆறிப் போகும்!
பட்டுக் கேசம் தடவி..
மயிலிறகு தோற்கும்!
இறுகப் பற்றும் விரல்கள்...
முத்த மழை வெல்லும்!
நீராட்டிய தண்ணீர்...அது..
ஆசி வழங்கும் பன்னீர்!
இதழ்கள் சிந்தும் முத்தம்...
ஆயுள் வளர்க்கும் தீர்த்தம்!
உன்னை அணைத்த கரங்கள்...
வாளேந்த மறுக்கும்!
மழலைப் பேச்சு கேட்டால்..
தோட்டாக்களும் நமுக்கும்...!
dedicated to jenithaa's baby..Arshaa

Tuesday, July 13, 2010

சாமி சத்தியம்!




பலிபீடத்தில்..இன்னொரு ரத்தம் சிந்தும் வரையிலும்,
நடை பெருக்கும் கிழவிக்கு நேரத்தில் பிரசாதம்..கிட்டும் வரையிலும்,
அன்னதானங்களில் சமபந்தி நடக்கும் வரையிலும்,
தூணில் சாய்ந்தழும் துயரங்களுக்காகவும்...
நேர்ச்சைத் தொட்டில்களில் பிள்ளைகள்,ஆடவும்..
முகமறியாப் ப்ரார்த்தனைகள் நிகழும் வரையும்..
முதிர் கன்னிகள் மனம் கோணாமல் கோவிலில்..
பெண் பார்த்து முடியும் வரையும்,
குறுந்தகடுப் பூசாரிகள் கர்பக்கிரகம் நுழையும் நிமிடம் வரையிலும்...
அங்கேயே....இருப்பதாக சாமி சத்தியம் செய்ததாம்!
நேற்றிரவு...பொம்மியின் கனவில்..வந்து!!!

ம்ம்ம்ம்.......





வாசம் என்பதென்ன சுவாசம் நமக்களித்த,
சின்ன உபாயம் மட்டும் தானா?
ஊருக்குப் போயிருக்கும் அப்பாவின் ...
அழுக்குச் சட்டையில் வீசுமே அது பாதுகாப்பு!
கனவில் பயந்தலறி அணைப்பேன் அம்மாவை,
சந்தனச் சோப்பில் வீசும்... அது அன்பு வாசம்!
சடங்கான சமயம் அத்தை தேய்த்துவிட்ட சின்த்தால்...
வயிற்றைப் பிசையும் கலவர வாசம்!
புதுப் புத்தகங்கள்,முகர்வேன் பிரித்ததும்...
சுவாசப் பை நிறைக்கும்...பரவச வாசம்.
புலவு சமைக்குந்தோறும் நினைவில் மணக்கும்...
உறவுகள் கூடும் பண்டிகை வாசம்...
பாட்டியின் மீது வீசும் எண்ணைச் சிக்கு,
அது வயோதிகம் நினைவுறுத்தும்..மூப்பு வாசம்!
எப்போதோ சென்ற துக்க வீட்டில் புகைந்த ,
ஊதுபத்திப் புகை..அது மரணம் பற்றிய பய வாசம்.
பள்ளிச் சுற்றுலா நினைவில் கொணரும்..கோடைத் தைலம்..
அது நெஞ்சை விட்டு நீங்காத இளமை வாசம்!
குழந்தைச் சோப்பு முகர மாட்டேன் நான்...
அது பிரசவ அறையின் அலறல் வாசம்!
காற்றில் கலந்தடிக்கும் மருதாணிப் பூ வாசம்..
அது காதல் நினைவு தரும் வசந்த வாசம்!
சவரச் சோப்பு மிகப் பிடிக்கும் எனக்கு!!!
அது.......ம்ம்ம்ம்ம்......!!!

Monday, July 12, 2010

தேடினால் மட்டும்?


புத்தகக்கண்காட்சி...
பை நிறைய ஞானம்...
கை பிடித்து ஓயாமல் பேசும் பள்ளித்தோழி..
மழைச் சாரலின் போது...
பேருந்தின் சன்னலோர இருக்கை அருமை
என்று...
ரகளை ரசனையோடு சந்தோசக் கொண்டாட்டம்!
பரவசத்தில் உரக்கப் பேசினேன்..
'"உண்மை மனிதனின் கதை"..
ரஷ்ய மொழியாக்க நாவல்,
பத்தாண்டுகளாய்த் தேடுகிறேனடி...
இன்று கிடைத்தது பார்!
எல்லாம் கிடைக்கும்...
என்ன! தேட வேண்டும் அவ்வளவுதான்'...
என்றபடி வெற்றி வியாக்கியானம்!
முன்னிருக்கையில் அரைக்கண் மூடி,
அமர்ந்திருந்த பெரியவர்,
திரும்பி எனைப் பார்த்த பார்வையை...
'தூக்கம் கலைந்த துக்கம்' என நான் மொழிபெயர்க்க..
தோழியின் கூற்று வேறு!
அவர் தன் நான்கு பெண்களில்,
மூத்தவளுக்கு,கட்டுப்படியாகும் தட்சிணையில்,
பல ஆண்டுகளாய் வரன் தேடுகிரவராம்!

Wednesday, July 7, 2010

என் கண்ணாடியும் ஒரு பூனைக்குட்டியும்!


பூனைக்குட்டி வளர்த்திருக்கிறாயா?பூனைக்குட்டி?..
நான் வளர்த்தேன்...
நானே அப்போது குட்டி தான்!
மிகுந்த பிரியம் ..
என் மீது அவற்றுக்கும்..
அவை மீது எனக்கும்!
மனிதப் பாசம் என்றாலே மோசமும் தானே?
அன்பை மட்டுமல்லாது,
ஆத்திரத்தையும் காட்டுவேன் அவற்றின் மீதே!
எல்லாம் மறந்து என்னிடமே வரும் ,
அவற்றைப் பார்க்கையில் ...
மனம் மிக வலிக்கும்!
ஆச்சர்யம் பார்..
சில நாட்களாய்..
கண்ணாடியில் பார்க்கையில்,
என் முகமே தெரிவதில்லை!
நான் பார்ப்பதெல்லாம்..
ஒரு...
குட்டிப் பூனையைத் தான்!!!

Tuesday, July 6, 2010

இரவெனும் ஆழி....


கறுந்துயரலைகள் தோற்றும்..
இரவெனும் பேராழி,
பகலொளியெனும்,
மாயத்திரை மறைக்கும் வலியெல்லாம்,
வலித்துச் சேர்க்கும் வெளியெங்கும்!
திண்மைப் படகுகள்..
கதிரொளியில் மட்டுமே பயணிக்கும்!
ராவெனும் பேரலை ,
அமிழ்த்திடும் திடமெல்லாம் ஆழ!
துயரின் தொலைவுக்கு,
நீளும் இரவின் தூரம்.
மார்பின் கனமெல்லாம்..
பெருமூச்செறிவுகளில் தெரிக்க,
புலரும் பிரிதொரு பொழுது,
எறிந்ததெல்லாம்,
மீண்டும் ஒளிக்க!

விகாரம்...


அன்னையர் தினத்தன்று அம்மாவின் அறுவைக்கு..
நாள் குறித்தாகிவிட்டது,
தோட்டத்தில் அரவம் ஒன்றைப் பார்த்தலறி,
காயலில் கிடக்கிறாள் மகள்...
ரத்த அழுத்தம் மிக வென மருத்துவர் கணவன் பார்த்து
உதடு பிதுக்க..
வேலைக்காரியின் மகள் பிரசவித்து,
என் இல்லைத் தூசியில் கிடத்தினாள்!
விடுதியில் பயிலும் ஒற்றை மகன்..
உணவு ஒவ்வாமலும்,தனிமை கொள்ளாமலும்,
அழுதரற்ற....
ஆசுவாசம் தேடி அடைக்கலமான அறை...
குளிரூட்டப்பட்டிருந்திருக்கலாம்!

Sunday, July 4, 2010

என்ன அது?


தெருவோரமாய் நின்றிருந்தேன் ...
கைகள் பிசைந்த வண்ணம்,
கால்கள் நடுங்க...
முகம் கருத்து,
கண்கள் ஆறாய்ப் பெருக..
தொலைந்ததைத் தேடியவளாய்,
வருவோர், போவோரின் கேள்விப் பார்வைகள்,
கடைக்கார அண்ணாச்சியின்..
பரிதாப விழிவீச்சு!
பள்ளிச் சிறுமி ஒருத்தியின் கேள்வியில்..
கதறி அழுதேன்...தெரியலையேம்மா என்று!
கேட்டாளே ஒரு கேள்வி!
என்னக்கா தொலச்சீங்க என்று!!!

வெம்புகை...






மனதினோரத்து,
நெருப்புக்கங்காய்க்.. கனன்று..
நாளெல்லாம்..
வெம்மை பரப்பும்,
உன்னிலேயே..
உன்னினைவுத்தூள் பரப்பி
மூச்சடைத்துச் சாக,
பொழுதில்லை,
எனக்கு...
இப்பொழுது...

Saturday, July 3, 2010

araivaekkaadu..




கருக்கல் கொணர்ந்தது...
கருகிய காதலின் வாடையை,

இமைகளின் இடுங்கிய துடிப்பில் அறிந்தேன்..
பிரிவின் வெடிப்பை!

காந்திய ரொட்டியின் கருகல் உணர்த்தியது,
இடைவெளிகளின் அகழ்வை...

பழச்சாற்றின் பருகா மிச்சங்கள் பகர்ந்தன ,
எஞ்சியுள்ள பகைமையை...

கதவுகள் கதறின,
மனங்களின் அடைப்புகள் குறித்து...

படுக்கை விரிப்பின் அழகுரைத்தது,
உண்ணாமல் ஊசிய விருந்துகளின் கதையை...

முட்டை ஓட்டின் விரிசலில் தெரிந்தது,
அரைவேக்காட்டு அனைத்தும்...


செல்லுமுன் சொல்லிச் செல்...
நீ முடிக்காமல் விட்ட காதல் வாசகத்தை,
பிரசுரிக்கவா...
கிழித்தெறியவா ....என்று?
......ஷஹி...

நடக்குமா?


ஒரு வேளை யுத்தம் நிஜமாக நின்று போனால்...
அதன் பின்னே தனி ஈழம் அரிதாக சாத்தியமானால்..
அவ்வேளை ஆவியோடு அயராமல் நானிருந்தால்,
கால் பதிப்பேன் நான்,
என் உயிர் பதிந்த பூமியிலே!
என் கரங்களால் நான் நட்ட மாஞ்செடியும் மாண்டிருக்கும்,
பிஞ்சுகளோடு நான் விட்டு வந்த கொய்யாவும் வீழ்ந்திருக்கும்...
அதில் கூடு கட்டிக் குடியிருந்த கிளி ஜோடியெங்கு போயிருக்கும்?
என் ஜோடியென நான் வரித்திருந்த கல்யாணிக்கென்ன நேர்ந்திருக்கும்?
பதுங்கு குழி தேடி உயிர் விட்ட தங்கையின்...
கல்லறையா பிழைத்திருக்கும்?
கால் ஒடிந்ததால் கைவிடப்பட்ட தாத்தா எங்கு அடங்கியிருப்பார்?
காணச் சலியாத எங்கள் பண்ணை வீட்டில் இன்று
யார் குடியிருப்பார்?
இறந்து போன நம்பிக்கையை எம்மக்கள் உள்ளங்களில்
யார் விதைத்திடுவார்?
அச்சம் என்பது மடமை என்று எம் பொடியர்களுக்கார்
கதைத்திடுவார்?
நடக்குமா?ஈழம் கிடைக்குமா?

அப்பாடா....


தரித்ததில் இருந்தே
பிரசவ வலி,
மை ரத்தம் சிந்தி
பிறந்தது,
கவிதை!

வா.......


வா.....
முகில்களில் மிதக்கலாம்..
அலைகளில் அலையலாம்,
கண்கள் மூடிக் கனவினில் கிடக்கலாம்,
கதைகள் பேசிக் காற்றினில் கரையலாம்
நீரில் அமிழ்ந்து நினைவகற்றி இருக்கலாம்...
வா.....
எந்த மலரில் வாசம் அதிகம்,
முகர்ந்து நுகர்ந்து மெச்சலாம்..
சின்னச் சின்ன சல்லாபச் சண்டைகள்..
செல்லமாய் நாம் போடலாம்,
பசித்து ருசித்து இன்றொரு நாளில்,
பழைய சோறு உண்ணலாம்,
வா....
வார விடுமுறை வந்து விட்டது,
வாழ்ந்து இன்றொரு நாளில் பார்க்கலாம் ...

நீயும்...நீயும்!!!


சுருண்டிருந்த இறக்கைகள்..
விசிறி விரிக்கத்தான்,
வேண்டினேன் ஓர் விண்வெளி...
வேலிகளோடான...
வானம் வழங்கத்தான்,
வசதிப்பட்டதுனக்கு!
வரைகள் விரும்பாதவை...
வானம்பாடிகள்!
விரித்தனன்...
சிறகுகள்,
சுருண்டது...
விண்வெளி!

காணோமா....?


அன்பு தொலைந்து போனால்....
அம்மாவிடம் இருக்கும் மிச்சம்!கவலையில்லை!
பாசம் காணோமா?...
பச்சிளம் பிள்ளை முகம் பார்..
மண் பிளக்கும் மழையென மனம் பிளந்து பீறிடும்!
நட்பா தொலைந்தது?
தேடத்தகுந்த இடம் பழைய பள்ளித்தோழியின் உள்ளம் தான்!
இளமை இல்லையா?..
இயலாமை விரட்டு..
செல்வமா தேடுவது?
சோம்பல் தொலை...
தூக்கமா தொலைத்தாய்?
ஆசை அழி...அழமாய்த் துயில..
ஞானமா? பெரியோர் நட்பில் பெருகும் பார்!
அறிவு?
நூல் பல வாசி!நூலகத்தில் வசி!!
காதல் காணவில்லையா?
உன் கூந்தல் நரையில் தான் சிக்கியிருக்கும்..தேடு!
மகிழ்ச்சி எங்கே?
மனதில் தான்...
பெருமை?
ஆ!!!..அது பிள்ளைகள் தேடித்தரணும்..
இன்பம் இல்லையா?
ஒப்பீடு நிறுத்து ..ஒரு வேளை கிட்டலாம்!
சுதந்திரமா தொலைந்தது?
உடன் பிறந்ததாயிற்றே?தொலைத்தால் தொலைந்தாய் போ!
சிங்காரம் போனதோ?
பிள்ளைகள் ஏராளமோ?..
ஆரோக்கியம் இல்லையா?
உள்ளம் சீர் செய்!
அழகு இல்லையா?
அவசியம் இல்லை...விடு!
மனிதம் தொலைத்தாயா?
மரணி உடனே....

சவ(சிலர்)நிலை...


சவத்தை அடிக்க சவுக்கெதற்கு?
சுவரோரமாய் உட்க்கார்த்தினால் உட்காரும் அது!
கூடத்தில் கிடத்தினாலும் கிடக்கும் தான்!
வேண்டிய போது உயிர் கொடுப்போம்...
வேலைகள் பல ஆக வேண்டுமே!!!
அப்போதும் துள்ளலும் துடிப்பும் ஆகாது!
திரியலாம் மீண்டும் கிடத்தும் வரை..
செத்தால் தெரியும் சுடுகாடு..
சவம் அறியும் சவத்தின் மன(ண)ம்!
எப்போதும் யாராவதாகவே இருந்து விட்டு,
சவமாய் இருப்பதும் சுகம் தான்..
சுயமாய் இருக்குமே சவம்!!!

Friday, July 2, 2010

பிரிவு....


தற்காலிக மரணம்!
தினந்தோறத் துயரம்!
நிமிட முள்ளின் நிரந்தரக் குத்தல்!
நாடும் நெஞ்சத்தின் நித்திய வேதனை!
இறப்பு எளிதாக்கும் ஒத்திகை!
இருப்போர் எண்ணிக்கை பாதியாக்கும் வியாதி!
உடல் அடங்கும் காடு கூட்டிச் செல்லும் வீதி!!!

ஏன்த்த???...


தாயோட பொறந்தவனெல்லாம் ஆம்பள அம்மான்னு,
சொன்னாரு அப்பா...
அப்பாவோட பொறந்த நீ...
பொம்பள அப்பா இல்லையாத்த?
சுல்த்தான் பெத்த சொக்கத்தங்கம்..
ரோசா நெறத்துல மின்னும் ஒன் அங்கம்..
படிச்சிருந்தா..நீ..பாராண்டிருப்ப!
என்ன..பிடிக்காமத்தான்..போராடுர இப்ப!
சின்ன மகன், செல்ல மகனுக்கு,
ஒன்..சின்ன ஊருல பொண்ணு தேடாம..
சீமக்கி வந்து ஏன்த்த சீரழிஞ்ச?
என்ன...ஒன் ஊருக்கு கட்டியாந்து,ஏன்த்த சீரழிச்ச?
சீருல கொற,வகிட்டு நேருல கொற,
வளராத மாருல கொறன்னு ..என் பேருல..ஆயிரம் கொற!
வாராத மாமணியா வந்த ஒன் புள்ள தேடி...
நானாத்த வந்தேன் ஒன் ஊருக்கு?
பின்ன வீணா ஏன் சொன்ன கொற என் பேருக்கு?
பள்ளிக் கூடம் படிச்சி வந்த
பாவி மக என் கழுத்துல..
தாலிக்கொடி ஏத்த, ஏன்த்த நெனச்ச?
என் அறிவு வெளக்க ஏன்த்த நீ அணச்ச?
அளகு ராசா ஒன் புள்ளன்னு..
தெரிஞ்சு தான புடிச்ச என்ன?
கட்டச்சின்னு ஏன்த்த பின்ன சொன்ன?
என் தன்னம்பிக்கைய ஏன்த்த நீ கொன்ன?
கொளுந்தன், கூட்டாளிக ,மருமக்க பெருமையெல்லாம்
என் காதுல நீ கேக்கும் படி பண்ண!
என் கொறைய மட்டும் அவுகளுக்குச் சொன்ன!
என்ன தான் சொல்லத்த...
ஏதும் தான் பண்ணத்த...
எங்கப்பனோட பொறந்துட்ட நீயும் பொண்ணா..
நான் ஆடாட்டியும்..என் சத ஆடுது தானா!!!

அறுந்த வேர்கள்..


கைகள் கொப்பளிக்க நட்டேன் ஒரு தென்னம்பிள்ளை..
பேசிக்கொண்டிருப்பேன் அதோடு தினம் அரை மணி...
வீட்டை இழுத்துக் கட்ட வேண்டி ...
வெட்டி விட்டார்.. அதனை ..அப்பா..
வீழ்ந்தது என் தென்னை.
வேர் இருக்கும்..அதன்..என் தோட்டத்தில்,
என்று தேற்றி வந்தேன் என் மனதை...
தாய் வீடு செல்லுந்தோரும் தவறியதில்லை,
அது இருந்த இடம் தடவ..
விற்க நேர்ந்தது எங்கள் வீட்டை!
வந்து விட்டார் அப்பா,ஊரை விட்டே!
தென்னையினதோடு ,சேர்ந்து அறுந்தது..
என் வேரும்!!!

Thursday, July 1, 2010

அப்படித்தான்..


பொன் மீன்கள் நீந்திய..
அந்த சிறு குளத்தை,
நாம் கடக்கையில்..
நான்...
சற்று நின்று..
நீருக்குள்...
பார்த்து..
ரசித்தது,
பொன் மீன்களை,
மட்டும்...
அல்ல!!!

வறண்ட மாலை...


விட்டெறியும் சிறு கல்லின் கனம் வாங்கி...
பரப்பில், வட்டங்கள், அரை வட்டங்கள்,...
தோற்றுவிக்கும் ...
இந்தப் பிரிவுக்கால...
மாலைப்பொழுதில்...
நான்...
உன்னைத் தவிர...
நீரையும்...
பார்த்துக்கொண்டிருக்கிறேன்!

Wednesday, June 30, 2010

சரி...சரி..


அகழிகள் வெட்டச் சொன்னாய்...
செய்தேன்...
சுற்றிலும் கோட்டைகள் வேண்டுமென்றாய்..
ஆணைப்படியே....
உள்ளிருந்து ஒசியும் புரிதல் புன்னகையை,
எப்படியாம் மறைப்பது?

வேட்டை...


உள்ளார்ந்த உறை பசிக்கு...
உணவான நீயே,
இரையாக எனை அள்ளி உண்ண வருகையில்..
உணர்வுகள் மறத்து..
உயிர் உறைந்து...
என் நினைவுத்திரியும் சேர்ந்தணையும் அவலம்..
பசி தோன்றும் போதெல்லாம்..
நினைவில் தோன்றும்!

தேவை...


மறுதலிப்பின் அச்சுறுத்தலையும்..
தனிமையின் கொடூரத்தையும்..
உதைத்தெறிகிறது..
நேற்று பிறந்த சிசுவின்..
நிஷ்டூர அழுகை.

கணிப்பு..


தினம் வருதொரு பெயரறியாப் பறவை என் தோட்டத்துக்கு..
காத்திருப்பது உண்டு நானும் ..
கைகளில் தானியத்தோடு..
சிலவமயங்களில் உற்சாகமாய்,
சிற்சமயம் சோகமாய்..
பலவமயம் பாவமாய்த் தோன்றுதது எனக்கு!
அதே போல் என் பற்றியும் அது எண்ணியிருக்கலாம்..
சரியாய்!

ஆணைப்படி!!!


கிளியொன்று பாலிக்கின்றாய்...
பழக்கியுள்ளாய் அதனை நீ பேச..
கொஞ்சும் அதன் மொழியால்,
கோபம் மறப்பாய்!
அழகு செய்கின்றது அது, உன்னில்லம்!
பசிக்குமுன் பால்,பழம் தருவாய்,
பார்வையை அது திருப்பினாலும் ...
பொறுக்காதுனக்கு!
பக்குவங்கள் பல செய்வாய்...
பிடிக்குமே அதை!
ஆடுவதற்கோர் ஊஞ்சல்..
ஆசை வார்த்தைகளால் கொஞ்சல்...
சிறப்பானது அது என்பதால்..
சிறகுகள் வெட்டப்படவில்லை!
சுதந்திரமாய்த் திரியலாம் அது...
எத்தனை வேண்டுமானாலும் ...
தன் கூண்டுக்குள்ளேயே!

தொலைந்த பிள்ளைமை...


சின்னவளாயிருந்தேன்....
பின்னலில் கட்டியிருந்த ரிப்பன் ஒன்று தொலைந்தது..
பின்னலே தொலைந்தது போல் பதறினேன்..துடித்தழுதேன்!
வேறு ரிப்பன் வாங்கிய பின் ஆறிவிட்டதென் அழுகை.
கண்ணாடி அணிந்திருந்தேன் பல காலம்!
உறுப்புகளில் ஒன்றாய் இருந்தது அது எனக்கு!
தொலைந்து அது போனால்..
அதனோடே போகும் என்னுயிரின் ஒரு துளியும்!
வழமையே போல் புதியதில் மறப்பேன் பழயதை...
கைப்பை,
கடியாரம்,
குடை..
என்று.....
அந்தப் பட்டியல் நீளும் பலவாறு!
தொலைந்ததை மறக்கச் செய்யும்...
புதிய ஒன்று எப்போதும் கிடைத்தால்...
கவிதைகள் எழுதும் கிறுக்கு...
பிடித்திருக்குமா ...
இன்று..
எனக்கு?

தேடித்...தேடி...

அர்த்தமற்ற தேடல்களிலேயே..
தொலைகின்றதோ....
அதிகம் காணத ...
வாழ்வின் பொருள்?
பொருள் தேடலே..
வாழ்வின் பொருளென்றால்...
வளமான எல்லோரும் ..
வாழ்கின்றார் என்றா பொருள்?

ஒட்டு...


அவ்வப்போது உடைந்த இதயத்தில்..
இதென்ன? ஆங்காங்கே ஒட்டிய சுவடு?
ஆ.........
என் மக்கள் சிரிப்பில் இருந்து சிந்திய பசை!

துக்கம் மறக்க...


உறங்கப் பிடிக்கும் எனக்கு...
உணர்வில்லாமல் உயிரோடிருத்தல்..
வேறெப்போது வாய்க்கும் உலகில்?

ஆஹா...பரவசம்...


இது என்ன உணர்வு?
கவிதைகள் எழுதிடத் துடிக்கின்ற கரங்கள்...
கனவுகள் காணப் பறக்கின்ற மனது,
இயற்கையைக் கண்டு நெகிழ்கின்ற நெஞ்சம்..
இயலாமை கண்டு ஊறும் கண்ணீர்...
இது என்ன உணர்வு?
பாடல்கள் கேட்டால் சேர்ந்து பாடும் உதடுகள்,
பழைய ஞாபகத்தில் மலர்ந்து விரியும் புன்னகை..
எதிரியையும் எளிதாய் மன்னிக்கும் ஈரம்..
எதிலும் இறைவனைக் கண்டு விடும் எண்ணம்!
இது என்ன உணர்வு?
வயது மறக்கச் செய்திடும் மாயம்,
வீதியில் இறங்கி விளையாட விருப்பம்..
சிறகுகள் விரித்துப் பறந்திடும் தாகம்..
சில்லென்ற மழையில் நனைந்தாடத் தோன்றும்...
இது என்ன உணர்வு?
Related Posts with Thumbnails