Search This Blog

Showing posts with label தமிழச்சி தங்கப்பாண்டியன். Show all posts
Showing posts with label தமிழச்சி தங்கப்பாண்டியன். Show all posts

Sunday, February 20, 2011

தமிழச்சியின் "தொலைந்து போன தூக்கம்" ஒரு அலசல்


28.1.11 தேதியிட்ட 'அவள் விகடனில்' தொலைந்து போன தூக்கம் என்ற தலைப்பில் தமிழச்சி தங்கபாண்டியனின் சிறுகதை படித்தேன். பிரமாதமான கதைக்கரு, அருமையான கதை சொல்லும் பாங்கு, ஆழமான உட் கருத்து என்று அமர்க்களப்படுத்தி விட்டார் தமிழச்சி.

ஜோதி என்ற பெண்ணை, காதல் மணம் புரிந்து கொண்டு ஆண்டு ஒன்றே ஆகியிருந்த கணேஷ் என்ற இளைஞன் இரு சக்கர வாகன விபத்தில் பலியான செய்தியோடு துவங்குகிறது கதை. கதை சொல்லியின் சகோதரன் முறையிலானவன் கணேஷ்...விபத்து பற்றி அறிந்து ,பதறி ,தான் அப்போது இருந்த கடையிலிருந்து வீடு திரும்பும் வழியில், ஹெல்மெட் அணியாத, முன் பின் அறியாத வாலிபன் ஒருவனை" ஹெல்மெட் போடலையா" என்று தன்னையறியாமல் கேட்கும் இடத்தில் அனாயாசமாக நம் மனதை அள்ளிவிடுகிறார் கதை சொல்லி.

கணேஷ், ஜோதி திருமணம் நடந்ததும், ஊருக்கு அடங்காவிட்டாலும் அக்காவுக்கு அடங்கும் நல்ல பிள்ளையாக அவன் இருந்ததை எல்லாம் நினைவுகூர்ந்து துக்கிக்கிறது அக்காளின் மனம். அகால மரணம் ...அதோடு அகோரமானதும் கூடவென்பதால்,சடலத்தை வீட்டில் வைத்து கூட அழவியலாத துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் கணேஷின் குடும்பத்தினர். கர்ப்பவதியான கணேஷின் மனைவி, தன் துயரம் சொல்லி அழுவதில் வெடிக்கிறது கதை சொல்லியின் மனமும்.

அவள் எத்தனை மாதம் கர்ப்பம் என்ற கேள்வியைக் கூட கேட்கவியலாமல் துக்கம் அவர்களிடையில் அழுந்த ஊடுருவி இருப்பதையும் , சடங்குகள் முடிந்த அடுத்த நாள் இரவின் போக்கை, மனித இருப்பின் துயரத்தை, பெண் படும் பாட்டை அழுத்தமாகச் சொல்லி முடிக்கிறார் தமிழச்சி.



திருமணம் முடிந்த நாள் முதலே கொண்டாட்டங்களில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்த கணேஷ், இரவெல்லாம் வெளியில் சுற்றி, பொழுது புலரும் தறுவாயில் தான் வீடு சேர்வான் என்பதும் , அவனுக்காக விழித்தே இரவுகளைக் கழித்து வந்திருக்கின்றாள் ஜோதி என்பதும் தெரிய வருகிறது. கணவன் இரவில் நேரத்தோடு வீடு வருபவனாக இருந்திருந்தால் தானே அவளுக்கு அன்றைய பாழும் இரவில் அவனைக் காணவில்லையே என்ற பயம் ஏற்பட்டிருக்கும்? எப்போதும் போல அன்றிரவும் அவன் வீடு சேரவில்லை என்று நினைத்து விட்டிருக்கிறாள். அவன் இறந்த அடுத்த இரவே அயர்ந்து, தன்னை மறந்து உறங்கும் ஜோதியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் கதை சொல்லி..துக்க செய்தி அறிந்து தாமதமாக வந்திருக்கும் யாரோ உறவினரின் அழுகை ஜோதியை எழுப்பிவிடாதிருக்கக் கதவைச் சாத்துகிறார் என்பதோடு முற்றுகிறது கதை.

தமிழ்க் குடும்பங்களில் பங்காளி முறையானவர்களின் பிள்ளைகளுக்குள் இருக்கும் அழுத்தமான அன்பு மற்றும் நட்புணர்வு,

இன்னமும் மாறாதிருக்கும் ,பிறப்பு மற்றும் இறப்பு சம்பந்தமான சம்பிரதாயங்கள்,

அவற்றோடு சமூகத்துக்கான ஓர் சேதி message...அதாவது இரு சக்கர வாகனங்கள் ஓட்டும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை

இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் எப்பேர்பட்ட துக்கமாக இருந்தாலும் மனித உடலின் தீராப் பிணிகளான பசியும், தாகமும், தூக்கமும் எவ்வாறு மற்றெல்லாவற்றையும் பின் தள்ளுகின்றன என்ற முகத்திலறையும் உக்கிரமான உண்மையையும் தன் கதையின் வாயிலாகப் பதிவு செய்திருகின்றார் தமிழச்சி. உப்பும் உறைப்பும் உள்ளே போக, செத்த துக்கம் தன்னால தீரும் என்று சும்மா தானா சொன்னார்கள்? எத்தனைப் பெண்களுக்கு ஆழ்ந்த, அமைதியான தூக்கம் வாய்த்துவிடுகிறது?...பெண் குழந்தையொன்று வளர்வது உணவை மட்டுமல்ல தன் தூக்கத்தையும் தின்று தானே?

உறங்கிக் கொண்டிருந்த ஜோதியின் முகத்தில் " கொஞ்சம் சிரித்தாற்போல் உதடுகள் அசங்கியிருந்தன" என்கிறாரே கதை சொல்லி... உறக்கம் மட்டுமே இனி அவளுக்கு சுகம் தரும் என்கிறாரா? உடலையும் மனதையும் சேர்த்துக் கட்டிப் பிணைத்திருந்த ,தன் தூக்கதைத் தன்னிலிருந்து விலக்கி வைத்திருந்த விலங்கு அறுந்ததால்அவளும் அறியாமல் உண்டான ஆழ் மனதின் புன்னகை என்கின்றாரா?

...ஷஹி...

Related Posts with Thumbnails