Search This Blog

Sunday, July 15, 2012

வர்ணங்கள் ஒளிரு முன் உடைந்த ஒரு குமிழ்


( picture courtesy heavensgain.com )

சாரா
ஒரு மலர் உதிர்வது போல
மறைந்து போனாள்
என் தம்பியின் குழந்தை
துஷ்டிப்பயண நெடுகிலும்
இறுதிச் சடங்கிலும் கூட
பேச நிறைய விசயம் இருந்தது
வந்த சனத்துக்கு

நேற்றிரவு கனவில் வந்தவளிடம் கேட்க
எனக்கும் இரண்டு கேள்விகள் இருந்தன
எப்படிப் பிரிந்தது உன் ரூஹு ?
அப்படித்தான் மாமி ...
நீ எழுதியிருக்கிறாயே,
ஒரு பூ உதிர்வது போலத்தான் !
இத்தனை பெரிய துனியாவில்
நீ இருக்க இடமில்லையா ?
அதை விடு மாமி ...
பால்யத்தில் நீயும் என் அப்பாவும்
மலர்த்தி , உடைத்து விளையாடுவீர்களாமே
சோப்புக்குமிழ்களை ?
அப்படியானது தான் வாழ்வும் மரணமும்
என்று நான் சொன்னதாக
நீ ஏன் வந்தவர்களுக்காக
ஒரு கவிதை எழுதக் கூடாது ?

கண்ணாடிச்சில்லுகளின் மீது போல தட்டச்சுகிறேன் ..
குமிழ்த்து முகிழ்க்கும் மலர்கள்
உதிர்கையில் கமழ்கின்றன
ஒரு குழந்தைச்சோப்பின் நறுமணம் கிளர்த்தி


குழந்தை சாராவுக்கு
..ஷஹி..

Monday, July 2, 2012

கடுங்கருப்பின் ஒரு புர்கா




அகன்ற கழுத்தின் புர்கா..
ஆரங்கள் அணிபவளது

டிசைனர் அணிய வாய்த்தால்..
ஸ்லிட்டுகள் வெட்டின புர்கா

வனப்பும் இளமையும் கூடினவளது..
மெல்லிய பொண்ணுத் துப்பட்டி

அழகு ,அதபு* குறித்த..
யூகங்கள் கிளர்த்தும்படிக்கு,
தலை முதல் பாதம் மறைக்கும்,
கடுங்கருப்பிலானது எனது ..

..ஷஹி..

அதபு - ஒழுங்கு , ஒழுக்கம்

Tuesday, February 28, 2012

அத்தம்மாவின் ஆசையும் நேர் செய்த என் கூந்தலும்

நள்ளிரவிலும் உளூச்செய்து
மிக்க பேணுதலுடன் தொழுது வந்தவள் அத்தம்மா
தன் சிறு கொண்டையையும் அப்படியே பேணினாள்,
வளர்ந்து தன் மய்யத்தின் மானம் மறைக்கும் என.

முட்டி வரை நீண்ட கூந்தலுக்குக் கொடுத்த கவனத்தில்
கொஞ்சம் தன் சுவாசகாசத்துக்கும் கொடுக்காததால்..
தலையணையாய் சுருட்டவும்,
மார்பை மறைக்கவுமாய்,
கூந்தல் மட்டும் வளர்த்துப் போய்ச் சேர்ந்தாள் மாமி ..
"சுவர்க்கவாசி அவள்" என்று சின்னம்மா பேசினாள்.

ஆஃபீசுக்கு அலைந்ததில் கொஞ்சமும்
ஹஜ்ஜுச் செய்ததில் கொஞ்சமுமாய்
இருந்ததும் கொட்டிப் போய் எப்படியோ இருக்கிறாள் அம்மா ..
எதற்கும் இருக்கட்டும் என்று
கஃபன் ஒன்று தயாராக இருக்கும்
அவள் அலமாரி திறந்தால் வரும் வாசம் தான்
சொர்க்கத்திலும் அடிக்குமோ என்று கேட்டபடியிருக்கிறாள் மகள்.

தோள்வரையிலுமாக மட்டும் உள்ள, நேர்செய்த என் கூந்தலைப் பயந்து
எப்போதும் இருந்துவிடத் திட்டம் தீட்டி..
இப்படி இருக்கிறேன் நான் .

..ஷஹி..

(அத்தம்மா - பாட்டி , மையத் - சடலம் , உளூ - அங்க சுத்தி , கஃபன் - சடலத்துக்கு அணிவிக்கப்படும் ஆடை )

Sunday, January 29, 2012

புற்றுநோய், அறிகுறி, சிகிச்சை , ஆறுதல் -நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை

நேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் புற்றுநோய் விழிப்புணர்வு கட்டுரைப் போட்டிக்காக திருச்சி ஜி. வி. என் கான்சர் இன்ஸ்ட்டிட்யூட் சென்று அங்கு கீமோதெரபி நிபுணர் டாக்டர் அருணை சந்தித்து புற்றுநோய் பற்றின சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றேன் .

டாக்டர் . திரு . அருண் சேஷாசலம் திருச்சி , தஞ்சாவூர் சுற்றுவட்டாரத்தில் சிறப்பாகப் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவ நிபுணர் . புகையிலை உபயோக ஒழிப்பில் ஆர்வமும் அதற்கான தீவிர செயல்பாடுகளும் கொண்டவர் . சமூகநல ஆர்வமும், மனித நேயமும் மிக்கவர் .

மேலும் டாக்டர் அருண் அவர்களின் குழு புகையிலை சிஸேஷன் (டொபேக்கோ சிஸேஷன் ) புகையிலை உபயோக ஒழிப்பு மாநாடுகளுக்காகவும் புற்றுநோய் சிகிச்சைக்காகவும் 2011 ஆண்டுக்கான Dr . K.S .சஞ்சீவி பரிசு (அவார்ட் ) வென்றவர்கள்

டாக்டர் டாக்டர் அருண் சேஷாசலம் (MD . DNB . MNAMS . DM
டைரக்டர் , தஞ்சாவூர் கான்சர் சென்டர்,
புற்றுநோய் மருத்துவநிபுணர் , DR GCN புற்றுநோய் சிகிச்சை மையம்,
டீச்சிங் ஃபாகல்ட்டி (Teaching Faculty ) சென்னை புற்றுநோய் சிகிச்சை மையம் ,
சென்னை) 5 வருடங்கள் அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரிந்திருக்கிறார் .2010 ஆகஸ்ட்டில் இருந்து திருச்சி GVN புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் உதவியுடன் நான் மேற்கொண்ட சிறிய ஆய்வின அடிப்படையில் எழுதிய புற்றுநோய் அறிகுறி மற்றும் சிகிச்சை குறித்த கட்டுரை :

புற்றுநோய் சிறப்புநிபுணப் படிப்பில் நம் நாடு :

நம் நாட்டில் மிகவும் புறக்கணிக்கப்பட்டு வந்த துறை இது . தேவைக்கு மிகவும் குறைவாகவே புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் இருந்திருக்கிறார்கள் . நாகப்பட்டினம் , திருச்சி , தஞ்சாவூர், புதுக்கோட்டை , பட்டுக்கோட்டை இது போன்ற ஊர்களில் இந்த பத்து வருடங்களாக ஒரு மெடிகல் ஆன்காலஜிஸ்ட் ( புற்றுநோய் மருத்துவ நிபுணர் )இல்லை .

ஒரு சர்ஜிகல் ஆன்காலஜிஸ்ட்டே தான் கீமோதெரபி கொடுப்பதில் இருந்து அறுவை சிகிச்சை செய்வது வரை செய்ய வேண்டி இருந்தது . கதிர்வீச்சு சிகிச்சையும் அவரே தான் செய்து வந்தார் . சிறப்பு சிகிச்சை வேண்டும் என்று நினைப்பவர்கள் சென்னையோ பங்களூரோ செல்ல வேண்டியிருந்தது .ஒரு மெடிகல் ஆன்காலஜிஸ்ட்டுக்கான (கீமோதெரபிஸ்ட் )தேவை மிக அதிகமாக இருக்கிறது நம் நாட்டில் .

வெளிநாடுகளோடு ஒப்பிடும் போது நம் நாட்டில் புற்றுநோய் சிகிச்சையின் தரம் :

திருச்சியிலும் சரி ,சென்னை பெங்களூர் என்று எங்கு போனாலும் சரி அல்லது டெக்ஸாசில் என்றாலும் சரி தான் சிகிச்சை முறை , சிகிச்சை எல்லாமே ஒன்றே தான் .

புற்றுநோய் சிகிச்சை உலகம் முழுவதும் ஒரு ப்ரோடோகாலுக்கு ( ஒழுங்குமுறைக்கு) உட்பட்டது . மருந்துகள் , மருத்துவமுறை எல்லாம் ஒன்றே தான் . உலகநாடுகளில் கிடைக்கும் அதே மருந்துகள் இங்கும் கிடைகின்றன . ஒரு வேளை சூழல் அழகானதாக , மனதுக்கு இசைவானதாக இருக்கலாம் . அதைத்தவிர வேறு ஒரு வித்தியாசமும் கிடையாது .

புற்றுநோய் சிகிச்சையில் ஆகப் புதிய முன்னேற்றம் :

புற்றுநோய் சிகிச்சையின் பக்க விளைவுகள் மிகவும் வேதனை தரத்தக்கவை . கீமோதெரபி கொடுக்கும் போது வாய்புண் , வயிற்றுப்போக்கு , முடிகொட்டுதல் , வாந்தி மற்றும் வெள்ளை அணுக்கள் குறைந்து போகும் .இவை போன்றவை பொதுவாக காணப்படும் விளைவுகள். புற்றுநோயை அழிக்கக் கொடுக்கப்படும் மருந்துகள் , ஆரோக்கியமான அணுக்களையும் சேர்த்தே அழித்துவிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் இவை .

இப்போது புது வரவாக மாஜிக் புல்லெட்ஸ் எனப்படும் மருந்துகள் கிடைக்கின்றன . இவை புற்றுநோய் அணுக்களை மட்டும் டார்கெட் செய்து ( குறி வைத்து ) அழிப்பதால் மிகக்குறைவான பக்கவிளைவுகளே ஏற்படும் . இது தான் மிகவும் ஆறுதல் அளிக்ககூடிய செய்தி .

புகைப்பழக்கம் தனிநபர் மற்றும் சமூக எதிரி

புகையிலை உபயோக ஒழிப்பில் காட்டப்பட வேண்டிய தீவிர ஆர்வமும் செயல்பாடுகளும் :

புகை மற்றும் மதுவை அறவே உபயோகம் செய்யக்கூடாது .

வருமுன் தடுக்கக் கூடிய புற்றுநோய்கள் பலவும் புகையிலை மற்றும் மதுவால் விளையக்கூடியவை .

உதாரணமாக தொண்டைப் புற்று , நுரையீரல் புற்று மற்றும் வயிறு ,குடலில் மதுவால் ஏற்படக்கூடிய புற்றுநோய் இவையெல்லாம் புகை மற்றும் மதுப்பழக்கத்தை கைவிடுவதனாலும் அறவே உபயோகம் செய்யாமல் இருப்பதனாலும் தடுக்கலாம் .

இதற்காகத் தான் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பலவும் ஏற்பாடு செய்து நடத்தப்படுகின்றன திருச்சி , தஞ்சார் போன்ற இடங்களில் . மதுரையில் கூட இந்த மாதம் 13 ஆம் தேதி விழிப்புணர்வு மாநாடு ஒன்று நடந்தது .

டொபேக்கோ சிசேஷன் ( TOBACCO CECCASION PROGRAMMES ) நிகழ்ச்சிகள் இவை. இப்படியான நிகழ்ச்சிகள் தமிழக அரசு சார் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் கூட்டு உதவியோடு நடத்தப்படுகின்றன .

இந்த விழிப்புணர்வு மாநாடுகளின் மூலம் நாங்கள் பொதுமக்கள் எப்படி தங்கள் உறவினர்கள் , நண்பர்களின் மது மற்றும் புகைப்பழக்கத்தை கைவிடச்செய்ய உதவியாக இருக்க முடியும் என்பதை நிறுவ முயல்கிறார்கள் .

முன்னமே இந்த பழக்கங்களுக்கு அடிமையாக இருப்பவர்களுக்கு டீ அடிக்ஷன் சிகிச்சை அளிக்கப் பட வேண்டும் . இந்த வியாதியில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் . அதற்கு இந்தத்துறை வல்லுநர்களின்( proffesssional ) உதவி வேண்டும் . இதற்காக நடத்தப்படும் வர்க்ஷாப்ஸ்களில் சமூக நல ஆர்வலர்கள் சமூக சேவையில் பட்டம் பெற்றவர்கள் உதவியாக செய்கிறார்கள் . இப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு எப்படி அவர்கள் குடும்பத்தினர் உதவி செய்ய வேண்டும் , எப்படி பக்கபலமாக இருந்து அவர்களை இதிலிருந்து மீட்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் அவர்கள் கவுன்சிலிங் செய்வார்கள் .


புகைப்பழக்கம் ஒரு வியாதி :

நிச்சயமாக ! இது வியாதியே தான் . இவர்கள் நம் அன்புக்கும் கவனிப்புக்கும் உரியவர்கள் .இந்த பழக்கங்களுக்கு அடிமையான அநேகம் பேர் இதிலிருந்து மீள வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் . சிறு வயதில் எப்படியோ விளையாட்டாக ஆரம்பித்த இந்த பழக்கம் அவர்களை அறியாமல் அடிமையாக்கி இருக்கும் . பிறகு எத்தனை முயன்றாலும் அவர்களால் அதிலிருந்து வெளியில் வர முடியாது . அவர்கள் ரத்தத்தில் ஊறி விட்ட நிக்கோட்டின் , மது அவர்களை அதிலிருந்து மீள விடாது .அதற்கு குடும்பம் மற்றும் சமூக உதவி மிக இன்றியமையாதது . ஏதோ அவர்கள் வேண்டுமேன்றே செய்வதாக நினைப்பதை முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும் . அடிமைப்பட்டு விட்ட பின் உதவியில்லாமல் அவர்களால் மீளவே முடியாது .

புகைப்பழக்கத்திலிருந்து மீட்பு சிகிச்சை முறைப்படுத்தப்படும் விதம் :

1.புகைபழக்கம் உள்ளவர்களில் சிலருக்கு கவுன்சிலிங் மட்டுமே போதுமாக இருக்கலாம்,

2. சிலருக்கு மருந்துகள் கொடுக்க வேண்டி வரலாம்,

3. சிலருக்கு கவுன்சிலிங்க், மருந்துகள் இவற்றோடு ஒரு புற்றுநோய் சிகிச்சை நிபுணரின் ஆலோசனையும் தேவைப்படும் .

இதையெல்லாம் ஒருங்கிணைக்க ஒரு சமூக ஆர்வலரின் உதவி தேவை அதாவது கவுன்சிலர் . பலமுறை முயற்சி செய்ய வேண்டிவரலாம் . அந்த சமூகநல ஆர்வலர் தொடர்ந்து சிகிச்சை எடுத்துகொள்பவரை கண்காணிப்பார் , தொலைபேசி மூலம் தொடர்பில் இருக்க வேண்டி வரலாம் .

ஒரு முழு வருடம் புகை மற்றும் மதுப்பழக்கத்துக்கு அவர் மீண்டும் சென்று விடவில்லையென்றால் அவர் அதிலிருந்து மீண்டு விட்டார் என்று நினைக்கலாம் .

அடையார் புற்றுநோய் மருத்துவமனை இந்த முயற்சியில் மிகுந்த தீவிரம் காட்டுகிறது. அங்கு பணிபுரியும் டாக்டர் விதுபாலா இந்த குழுவின் மிக முக்கியமான ஒரு நபர் .

பொதுமக்கள் அதாவது சமூகத்தின் பங்கு :

பொது மக்கள் இந்த விஷயத்தில் இம்மாதிரியான முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும். பல உயிர்களை , மிகுந்த நிதியை பலிவாங்கும் இந்த புற்றும்நோயை வரவழைக்கும் முக்கிய காரணியான புகையிலை பயன்பாட்டை ஒழிப்பதில் அனைவரும் உதவ வேண்டும்.

வருத்தத்துக்கு உரிய விஷயம் என்னவென்றால் இப்படி புகையிலை எதிர்ப்புக்குழுக்கள் பணியாற்றிகொண்டு இருக்கும் சமயம் தீவிரமாக அதற்கு ஆதரவாகவும் சில செயல்பாடுகள் இருக்கின்றன என்பது தான் .

இப்போழுது வந்த ஒரு திரைப்படத்தில் அநியாயத்துக்கு புகைப்பழக்கத்தை தூண்டுவது போல் காட்சிகள் அமைந்துள்ளன . படம் முழுவதிலும் ஹீரோ புகைபிடித்த வண்ணமாய் இருக்கிறார் . கடைசியில் இந்திய புகையிலை கழகம் ஐ.டி.சி (INDIAN TOBACCO CORPORATION ) க்கு நன்றி சொல்லியிருக்கிறார்கள் . இது வன்மையாக கண்டிக்கத்தக்கது , வருந்தத்தக்கது .

தீவிர எதிர்ப்புக்குழுக்கள் பணியாற்றிகொண்டிருக்கும் போது , இப்படி மீடியா இவர்களுக்கு எதிராக மக்கள் விரோதமாக நடந்து கொண்டால் புற்றுநோய்க்கு எதிரான இந்தப் போரில் நாம் எப்படி வெல்ல முடியும் ?

பெரிய ரசிகர் கூட்டம் உள்ள கதாநாயகர்கள் இம்மாதிரியான குழுக்களுக்கு ஆதரவாக செயற்பட்டால் மக்கள் எவ்வளவோ நன்மை அடைவர் . மாறாக இந்த மாதிரி தீய வழக்கங்கள் ப்ரொமோட் செய்யப்படும் போது இளம் வாலிபர்கள் அவர்களை அறியாமல் சீரழிகின்றனர் . இவர்கள் பணியில் முக்கியமான ஒரு செயல்பாடாக கல்லூரிகளில் புகைபழக்கத்துக்கு எதிரான காம்ப்கள் நடத்துவதை சொல்லலாம் . இளம் தலைமுறை இப்படி ஒரு கொடூரப் பழக்கத்துக்கு அடிமையாகிவிடாமல் இருப்பது நாட்டு நலனுக்கு அத்யாவசியமான ஒன்று.

வலைத்தளங்கள் மற்றும் பத்திரிக்கைகளின் பங்கு :

புற்றுநோய் பற்றின மற்றும் புற்றுநோய் சிகிச்சை பற்றின சரியான தகவல்கள் மக்களுக்கு சென்று சேர இம்மாதிரியான வலைத்தளங்கள் மற்றும் பத்திரிக்கைகளின் உதவி அவசியம் . மேலும் புகையிலை பயன்பாட்டு ஒழிப்பு பிரச்சாரத்துக்கும் இவற்றின் உதவி அவசியம் தேவை .



புற்றுநோய்க்கு சிறப்பாக சிகிச்சை அளிக்க முடியும் . புற்றுநோய் கண்டு விட்டால் ஒன்றுமே செய்ய இயலாது என்ற எண்ணம் மாற்றப்பட வேண்டும் .

சர்க்கரை வியாதி போல் ,உயர் ரத்த அழுத்தம் போன்ற ஒன்று தான் இதுவும் . சிகிச்சையின் மூலம் அதை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் .

வியாதியின் ஆரம்பநிலையில் கண்டு பிடித்து விட்டால் முற்றுமாக குணப்படுத்த முடியும் . சில மிக முக்கியமான லைஃப் ஸ்டைல் அதாவது வாழ்க்கைப்பாணி மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் .

இந்த மாதிரியான செய்திகளை பத்திரிக்கைகள் , வலைத்தளங்களில் பிரபலப்படுத்தும் போது மக்களுக்கு இலகுவாக செய்தி சென்றடைந்து விடுகிறது .

அறிகுறிகள் மற்றும் வருமுன் காத்தல்

புற்றுநோய் எச்சரிக்கை அல்லது விழிப்புணர்வு :

புற்றுநோயைப் பொறுத்த வரையில் வருமுன் காப்பது , கண்டு கொள்வது தான் சாலச்சிறந்தது . மிக விழிப்பாகவும் சரியான ஸ்க்ரீனிங்கும் ,சரியான காலகட்டங்களில் செய்து கொள்ள வேண்டும் . வருமுன் எச்சரிக்கை நடவடிக்கைகளாக சில விதிமுறைகளை அனுசரிக்கலாம் :

1. திருமணம் ஆன அனைத்துப் பெண்களும் வருடா வருடம் அவசியம் பாப் - ஸ்மியர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் . மிக எளிமையான இந்தப் பரிசோதனையின் மூலம் கர்பப்பைவாய் புற்று நோயை மிக எளிதாக முன் கூட்டியே கண்டு பிடித்து விடலாம் .

2. 40 வயதுக்கு மேலான எல்லாப் பெண்களும் வருடம் ஒரு மாமோகிராம் செய்து கொள்ளவேண்டும் . மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டு கொள்ள .

3. 40 வயதுக்கு மேற்பட்ட அத்தனை ஆண்களும் ப்ராஸ்டரெட் புற்றுநோய்க்கான ஸ்க்ரீனிங் செய்து கொள்வது அவசியம் .

4. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை குடல்புற்றுக்காண பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் . மற்றபடி மார்பு , அக்குள், கழுத்து இது போன்ற இடங்களில் நெறி கட்டுதலோ , வீக்கமோ , கட்டியோ காணப்பட்டால் உடன் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் .

5.ஆறாத வாய்ப்புண் , தொடர் இருமல் முக்கியமாக புகைப்பழக்கம் உள்ளவர்களில் 2 வாரங்களுக்கு மேல் இருப்பது , சிறுநீரில் இரத்தம் , மலத்தில் இரத்தம் , மலம் கருப்பு நிறமாக இருப்பது , பெண்களில் நாட்பட்ட வெள்ளைப் படுதல் , மாதவிலக்கு நின்று விட்ட நிலையில் இரத்தப் போக்கு ஏற்படுவது ஆகிய அறிகுறிகள் காணப்பட்டால் மிக விழிப்புடன் பரிசோதனைக்கு தங்களை ஆட்படுத்திக்கொள்ள வேண்டும் .

இறுதிக்கட்ட நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் அவர்களுக்காக அரசின் திட்டம் :

மொபைல் ஹாஸ்பைஸ் கேர் என்று தற்பொழுது இறுதி நிலையில் இருக்கும் புற்றுநோயாளிகளுக்காக ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது .

எந்த ஒரு பொது மருத்துவமனையிலும் இம்மாதிரியான நோயாளிகளை தொடர்பு கொள்ளும் முகவரியை அல்லது தொலைபேசி எண்ணை அதற்கென்று இருக்கும் பெட்டிகளில் இட்டு விட்டால் போதும் .

ஒரு பயிற்சி பெற்ற செவிலியுடன் கூடிய ஆம்புலன்ஸ் அந்த நோயாளியின் உதவிக்கென அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் . அவருக்கு உணவுக்குழாய் செருகி உட்செலுத்தும் முறை பற்றியும் மற்ற கவனிப்புகள் குறித்தும் குடும்பத்தாருக்கு அந்த செவிலி எடுத்துரைப்பார் .மேலும் வேறு உதவிகள் தேவைப்பட்டால் செய்து தருவார் . பெய்ன் மானேஜ்மெண்ட் அதாவது வலிநீக்குவதிலும் உதவி செய்யப்படும் . உதவி தேவைப்படுபவர்கள் இந்த சேவையை உபயோகித்துக்கொள்ளலாம் . இந்த மாதிரியான செய்திகள் மக்களை சென்று அடைய பத்திரிக்கைகள் பெரிதும் உதவும் .

குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை மையம் திருச்சியில் :

புற்றுநோயாளிகளில் 5 விழுக்காடு குழந்தைகள் .

ஆனால் குழந்தைப்பருவ புற்றுநோய் 90 % முழுதுமாக குணமாக்கப்படக்கூடியது .

சிக்கல் என்னவென்றால் சிகிச்சைகான காலம் நீண்டது . 2 1/2 யிலிருந்து 3 வருடம் சிகிச்சை பெற வேண்டியிருக்கும் . சிகிச்சைக்கான செலவுகள் என்னவோ மிகக்குறைவு தான். குழந்தைகளின் எடைக்கேற்ப மருந்துகளும் கொஞ்சமாகவே செலுத்தப்படும் அதனால் சிகிச்சை செலவு மிகக்குறைவு தான் . ஆனால் கண்ணுக்குத்தெரியாத செலவுகள் மிகவும் அதிகம் . இவை தான் பிரச்சினையை உண்டாக்குகின்றன .அதாவது சிகிச்சைக்காக தங்கள் ஊரை விட்டு போக வேண்டியிருக்கிறது . அங்கு தங்கவும் , தொழிலை , வேலையை விட்டு செல்ல வேண்டியிருப்பதால் வரும் நஷ்டம் இவை எல்லாம் சேர்ந்து கொள்ளும் . ஒரு சில மாத சிகிச்சைக்குப் பிறகு குழந்தை கொஞ்சம் தேறினதும் ஊருக்கு திரும்ப சென்று விடுவார்கள் .நான் சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனையில்ஆறு வருடங்கள் பணி புரிந்த போது கவனித்த விஷயம் இது . அரைகுறை வைத்தியத்தில் போய் விடுவதால் மீண்டும் நோய் திரும்பி விடும் .மறுபடியும் வருவார்கள் . இதில் தான் குழந்தையை இழக்க நேரிடும்.

சிகிச்சை பற்றிய முக்கிய விபரம் :

1.சிகிச்சையை முழுமையாக எடுத்து முடிக்க வேண்டும் .

2.முதல் முறையிலேயே முற்றாக குணம் செய்து விடுதல் தான் மிகச்சரியானது .

3.பாதியில் விட்டு மீண்டும் நோய் திரும்பி விட்டால் குணம் செய்வது ரொம்பவும் சிரமம் . இது குழந்தைகள் புற்று என்று அல்ல எல்லா புற்றுக்கும் பொதுவான விதி . முதல் முறையிலேயே முழு சிகிச்சையை எடுத்துவிட வேண்டும் . அரைகுறை சிகிச்சை ஆபத்து .

4.இரண்டாம் முறை சிகிச்சை எடுப்பது அத்தனை வெற்றிகரமாக இருப்பதில்லை .

இதற்கு அவர்கள் ஊருக்கு அருகில் இருக்கும் மையங்களிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்வது தான் சிறந்த முடிவு .

முறையான சிகிச்சை , முழுகால அவகாசமும் எடுத்துக்கொண்டால் பக்கவிளைவுகளின் போது மருத்துவர் அதை சரியாக கவனிக்கவும் , தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கவும் , ஊரை விட்டுச்செல்வதால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மீளவும் அவரவர் ஊரிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்வது தான் சிறந்தது .

குழந்தைகளில் அதிகமாகக் காணப்படும் புற்றுநோய் மற்றும் அதன் அறிகுறிகள் :


குழந்தைகளில் பெரும்பான்மையாக இரத்தப்புற்று நோய் தான் வருகிறது .

உடலில் எந்த பகுதியிலும் நெறிகட்டியோ , வீக்கமோ இரண்டு வாரங்களுக்கு மேலான ஜூரமோ இருந்தாலும் விழிப்பாக உடனே மருத்துவ உதவியை நாட வேண்டும் .

ஒரு சாதாரண ரத்தப் பரிசோதனையில் கண்டு கொள்ள முடியும் இதை .

புற்றுநோய் சிகிச்சை செலவும் ,நிதிவசதியற்ற குழந்தைகளின் நிலையும் :

சிகிச்சைக்கான செலவை செய்ய முடிந்தவர்கள் அவர்களே செய்து கொள்கிறார்கள் . இயலாதவர்களுக்கு அரசுகாப்பீடு திட்டம் இருக்கிறது . இன்னமும் இயலாதவர்களுக்கு அரசு சாரா இயக்கங்கள் , முதலமைச்சர் நிவாரணநிதி , பிரதமர் நிவாரண நிதி இப்படி ஏற்பாடு செய்யலாம் .

நிதி வசூல் முறைப்படுத்தப்படும் விதம் :

ஒரு எம். பி யின் கடிதத்தோடு மருத்துவரின் கடிதமும் தேவைப்படும் இம்மாதிரியான நிவாரண நிதி ஏற்பாடு செய்ய .உள்ளூரிலும் உதவி செய்பவர்கள் உண்டு .( உதாரணமாக திருச்சியில் கஜானா நகைக்கடை , இன்னம் சில அரசு சாரா நிறுவனங்கள் போன்றவை . )சிகிச்சை முடிந்து செல்லும் நபர்களும் மற்ற நோயாளிகளுக்கு உதவுவது உண்டு . இப்படியான நிதி உதவிகளில் இயன்ற வரை குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் போதுமான நிதி இல்லை என்பதே உண்மை .

இப்படியான நிதி உதவிகளை எங்களுக்கு ஏற்பாடு செய்து தரும் நல் உள்ளங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள்

டாக்டர் .சாய்லக்ஷ்மி( EKAM FOUNDATION) என்ற குழந்தைகள் நலசிகிச்சை நிபுணர்

மற்றும்

சங்கர்மஹாதேவன் இவர் உதவும் உள்ளங்கள் என்ற ஒரு இயக்கம் நடத்தி வருகிறார் .

நிதியில்லாமல் அவதியுறும் குழந்தைகளுக்காக இவர்கள் நிதி ஏற்பாடு செய்து தருகிறார்கள்.

திருச்சி , தஞ்சாவூர் மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை இன்றைய நிலை :

டாக்டர் அருண் சேஷாசலத்தின் தலைமையிலான ட்யூமர் போர்ட் குழு புகைப்படம்

கீமோதெரபிஸ்ட் டாக்டர் அருணின் குழு அறிமுகம் செய்த மல்ட்டி மோடல் அப்ரோச் ட்யூமர் போர்ட் கான்செப்ட்டை திருப்திகரமான ஒரு விஷயம். அதாவது முன்பு இங்கு இருந்த நிலையில் ஒரு சர்ஜிகல் ஆன்காலஜிஸ்ட் தானே நோயாளிகளைக் கவனித்து , கீமோதெரபி கொடுத்து அறுவையும் செய்து கதிரியக்கமும் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது .

ஆனால் இப்போழுது மல்ட்டிமொடல் அப்ரோச் அறிமுகம் செய்த பிறகு ஒரு நோயாளியை மூன்று மருத்துவர்கள் கவனிக்கிறார்கள் .

ஒரு புற்றுநோய் அறுவை நிபுணர் ,

ஒரு கதிரியக்க சிகிச்சை நிபுணர்

மற்றும்

மெடிகல் ஆன் காலஜிஸ்ட் அதாவது கீமோதெரபி நிபுணர்

மூவரும் சேர்ந்து நோயாளிக்கான சிகிச்சையை முடிவு செய்கிறார்கள் . அவர் புகைப்பழக்கம் உள்ளவராக இருக்கும் பட்சத்தில் ஒரு சமூகசேவகரும் இந்த குழுவில் இருப்பார் . அவர் கவுன்ஸிலிங் பொறுப்பை ஏற்றுக் கொள்வார் . இங்கு மெடிகல் ஆன் காலஜிஸ்ட்டின் பொறுப்பு கீமோதெரபி கொடுப்பது .

கீமோதெரபி நிபுணர் டாக்டர் அருண் சேஷாசலம் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செந்தில்குமார்

திரு. செந்தில்குமார் அறுவை சிகிச்சை நிபுணர், கதிரியக்க சிகிச்சை நிபுணர் திரு.சுஜித்.

அதாவது தி ரைட் மேன் ஃபார் தி ரைட் ஜாப் -

ஒரு நோயாளிக்கான சிகிச்சை திட்டமிடலில் இவர்கள் அத்தனை பேரின் உழைப்பும் இருக்கும்.

தஞ்சாவூர் திருச்சி வட்டாரத்தில் புற்றுநோயாளிகளின் தேவை :

தஞ்சாவூரில் ஒரு மல்ட்டி ஸ்பெஷாலிட்டி யூனிட் மற்றும் ட்ராஸ்ப்ளாண்ட் யூனிட் ஆரம்பிக்கப்பட வேண்டும் .

டாக்டர் திரு. மருதுதுரை ( பொது அறுவை சிகிச்சை நிபுணர்) மற்றும் டாக்டர். அருண் அவர்களின் குழு தஞ்சாவூர் கான்சர் இன்ஸ்ட்டிடூட் துவங்கினார்கள் .

(இந்த முகவரியில் அந்த மருத்துவமனை பற்றிய தகவல்கள் அறியலாம் . .thanjavurcancercentre.org/)டொனேஷன்களின் உதவியைக்கொண்டே கட்டப்பட்ட அந்த மருத்துவமனை முழுவதும் லாபநோக்கில்லாத ஒன்று .

அங்கு சிகிச்சை பெற்றுச்செல்லும் இரத்தப்புற்று நோயாளிகளில் 50 சதவிகிதத்தினருக்கு மீண்டும் அந்த நோய் திரும்ப வாய்ப்புள்ளது . இரத்தப்புற்றின் இயற்கை அது தான் . அம்மாதிரியானவர்களுக்கு மறு சிகிச்சை ட்ரான்ஸ்ப்ளாண்ட் மட்டும் தான் . அதாவது அவர்கள் உடம்பில் உள்ள இரத்தம் அனைத்தையும் வெளியேற்றி புது இரத்தம் செலுத்துவது . ஆனால் இதை நிறுவுவதற்கான நிதித்தேவை மிக அதிகம் .



மேலும் எந்த ஒரு புற்றுநோயாளியும் பொருளாதார வசதி இன்மை காரணமாக சிகிச்சை அளிக்கப்படாமல் போகக் கூடாது .

எல்லா நோயாளிகளுக்கும் தேவையான முறையான சிகிச்சையும் கவனிப்பும் அளிக்கப்பட வேண்டும் .

அதற்கு ஆவன செய்ய வேண்டும் . இது லேசான விஷயம் அல்ல . இது தனி ஒரு நபரால் இயல்கிற காரியமுமல்ல . தன்னார்வத்தொண்டர்களும் பொதுமக்களும் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களும் ஒன்று சேர்ந்தால் தான் இந்தக் கனவு நனவாகச் செய்ய இயலும் .

திருச்சி ஜீ . வி .என் மருத்துவமனையின் நோயாளிகளுக்கு நிதிஉதவி செய்ய விரும்பும் உள்ளம் படைத்தோர் கீழ்க்காணும் வகைகளில் உதவலாம்:

1. தங்கள் வாழ்வின் விசேஷ தினங்களின் போது திருமண நால் , பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போது ஒரு நோயாளியின் மருத்துவத் தேவைக்கான உதவி செய்யலாம்

2. JEEVACETENARY CANCER TRUST என்ற பெயருக்கு காசோலை அல்லது வரையோலை அனுப்பலாம்

3. ஒரு புற்றுநோயாளியை தத்தெடுத்து அவரின் முழு சிகிச்சைக்கான செலவுகளை ( வசதி உள்ளோர் ) ஏற்றுக்கொள்ளலாம் . புகைபழக்கத்துக்கு எதிரான செயல்பாடுகளிலும் நிதித்தேவைகளை நிறைவு செய்ய உதவவும் தன்னார்வத் தொண்டர்களின் சேவை அவசியத் தேவை !

செர்விகல் கான்சர் எனப்படும் வகையான புற்றுநோய் எல்லா வயதிலும் பெண்களைத் தாக்கக்கூடியது ! இந்த வகை புற்றுநோய் பற்றின தகவல் அறிய ஹெல்ப்லைன் எண். 1800- 102- 1002 , குறுஞ்செய்தியில் தகவல் பெற sms " GYC" to 99 800 11111 அல்லது இந்த வலையில் படிக்கலாம் www.guardyourself.co.in

மேலும் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர் திருமதி . அகிலாவை நான் மூன்றாம்கோணம் வலைப் பத்திரிக்கைக்காக நேர்கண்டதன் பதிவை இங்கே படிக்கலாம் .

புற்றுநோய் சிகிச்சையில் இருப்பவர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்குமான டாக்டர் . அருணின் அறிவுரை படிக்க இங்கேயும் ,

இங்கும் சொடுக்கவும்
.

..ஷஹி..

Friday, January 20, 2012

சொஸ்தக் களிம்பு - சிறுகதை

ஜிகு ஜிகுவென்ற வேலைப்பாட்டுப் புடவைகளும் அள்ளிப்போட்டிருந்த நகைகளோடு பேச்சரவமும் போட்டி போட்டுக்கொண்டிருந்த நூர் ராவுத்தர் வீட்டின் பளிச்சென்ற முற்றம் ,ஐசாம்மாவின் மங்கல் துப்பட்டியைப் பார்த்ததும் கொஞ்சமே கொஞ்சம் மங்கத்தான் செய்தது. முதலில் சுதாரித்தவள் ஜாஸ்மின் தான். என்ன பேசுவது ? யார் இவளை அழைத்தது? எப்படி ஓர் உரையாடலைத் துவங்குவது என்றெல்லாம் வயசாளிகள் கூட யோசித்துக்கொண்டிருக்க ,

" அஸ்ஸலாமு அலைக்கும் பெரீம்மா, வாங்க ---மெஹர் எங்க? "

என்று பேசி தேவை வீட்டை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தாள்.

" வாலைக்கும் அஸ்ஸலாம் ஜாஸூ..நல்லாருக்கியா? எங்க மருமயன வாசல்ல காணலியே ? புள்ளைக எல்லாம் சொகமா? "

மூச்சிரைத்த படி சோபாவில் அமர்ந்தாள் ஐசா. சோபாவில் நடுநாயகமாக அமர்ந்திருந்த ராபியா , பருத்த சரீரமும் அப்பியிருந்த நகையும் பவுடருமாக முகத்தைக் கோணியவாறே நகர்ந்து அமர்ந்தாள். நூர் ராவுத்தரின் மருமகள் சபியாவுக்கு *மடிநிரப்பு. நூராருக்கு மனைவி இல்லாததால் மடிநிரப்பி விடவென ராபியா அழைக்கப்பட்டிருந்தாள்.

அப்படியெல்லாம் எல்லாரையும் அழைத்து விடுவார்களா? சுமங்கலியாகவும் பிள்ளைகள் பெற்றவளாகவும் மட்டுமல்லாமல் நல்ல பவிசாக வாழ்பவளாகவும் இருக்கும் பெண்கள் தான் மடிநிரப்ப , தாலி கட்ட, சமைந்த பெண்களுக்குக் குளியாட்டவென அழைக்கப்படுவார்கள்.இப்படி செல்வாக்காக வாழும் பெண்மணி வந்து மடி நிரப்பினால் தான் சூல் கொண்டிருக்கும் பெண் நல்லபடியாக, அதுவும் ஆண் பிள்ளையாகப் பெற்று பிழைப்பாள் . அல்லாமல் கணவனை இழந்து , ஆண் பிள்ளைகள் மூன்றும் திசைக்கொன்றாய் பிரிந்து போக , ஒரே பெண் பிள்ளை மெஹருக்கு வயது ஏகமாய் ஏறியும் மணமுடிக்காமல், வீட்டைக் கட்டிக்காத்துக் கொண்டு மகளும் தானுமாய் வாழும் ஐசாவை அழைப்பார்களா என்ன?

மணமாகி சில வருடங்களில் புருஷனுக்கும் தன் அண்ணன்களுக்கும் சொத்துப் பிரச்சினை ஒன்றில் ஏகமாய் முட்டிக்கொண்டு விட உடன் பிறந்தோர் என்று ஒரு கூட்டமே இருந்தாலும் தனிமைப்பட்டுப் போனாள் ஐசா. தாய் வீட்டுப் பங்காய் அவளுக்குத் தரப்பட்ட அந்த பிரம்மாண்டமான பங்களா தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம். அவளுடைய தாயும் தந்தையும் கடைசிக் காலத்தில் கேட்க பார்க்க நாதியில்லாமல் படுக்கையோடு கிடந்து ஒருவர் பின் ஒருவராக நாற , அண்ணன்மார் அத்தனை பேரும் சுற்றிலும் வேடிக்கை பார்த்தார்களே ஒழிய உதவ முன் வந்தது ஐசா ஒருத்தி தான் . மாமியார் மாமனாருக்கும் பார்த்து அம்மா வாப்பாவையும் அவளே தான் கவனித்தாள்.

மணமாகிச் சென்றும் மகள் தானே மனைவிக்கும் பார்த்து தனக்கும் செய்தாள் என்ற நினைப்பில் அவளின் அப்பா அந்த வீட்டை அவளுக்கே எழுதி வைக்க வந்தது வினை . நல்லது கெட்டது என்று எதற்கும் அவளை அழையாமல் ஒதுக்கி வைத்தான்கள் அண்ணன்மார்.

பெரிய வசதிக்காரி என்பதால் ஐசாவைத் திருமணம் செய்து கொண்டவன் ரஜாக். நான்கு பிள்ளைகள் ஆன பிறகும் செயல் சரியில்லாமல் நடுவயதிலேயே இறந்தும் போனான். கணவனையும் பறிகொடுத்து விட்டவளுக்கு பிள்ளைகளும் வீடும் தான் உலகம் என்றானது. தினமும் நான்கு பேரையும் சுற்றி அமர வைத்து கதைகளும் ஊர் நடப்பும் பேசிவந்தாள். வெறுமையாகிப் போன வாழ்வில் அவள் கண்ட சுகம் அது ஒன்று தான். மகன்கள் திருமணம் செய்து கொண்ட கையோடு தனியாய்க் கிளம்பி விட மீண்டும் மகளோடு அத்தனை பெரிய வீட்டில் தனித்து விடப்பட்டாள்.

நல்ல நாள் பெரிய நாளில் கூட ஏதோ விதியே என்று வந்து கடனுக்கு சலாம் சொல்லி மகன்கள் கிளம்பிப் போக ஒடிந்து போகத் துவங்கினாள் ஐசா. மனதின் பாரமெல்லாம் வியாதியும் வெக்கையுமாக வேறு பிடுங்கித் தின்னத் துவங்கியது அவளை.

கொழுந்தன் கூட்டாளி வீட்டுப்பெண்கள், மருமகள்கள் என அனைவரிடமும் தானாய் வலியச்சென்று பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தாள் ஐசா .

"ஏன் ஜாஸூ இந்த காசு மால எத்தினி பவன்? பதினஞ்சு தானா? எங்க மெஹருது இருவத்தியோரு பவன். வளவி தேன் தோதா பண்ணல..ஒன்னூட்டு குடுவேன் மாடலுக்கு . நம்ம சண்முகத்துட்ட காட்டிட்டு தாரேன்."

"அதனால என்னாங்க பெரீம்மா..இந்தா மடி ரொப்பினதும் வீட்டுக்குப் போயி வளவியக் கொண்டாரேன், மெதுவாக் குடுங்க"

ஜாஸ்மீன் ஜாடை காட்டவும் மற்ற சகோதரிகள் வந்து அருகில் அமர்ந்து கொள்ள வீடு சகஜ நிலைக்குத் திரும்பியது.ராபியாவின் கோணிய முகம் மட்டும் ஒரு பக்கம் இழுவலாய் கோணியபடியே தானிருந்தது. ஐசாளின் கொழுந்தன் பெண்டாட்டி பாரிசா வந்து அமரவும் அவளைப் பிடித்துகொண்டாள்.

"இந்தாவுளே பாரிசா ஒன் கொளுந்தன் பொண்டாட்டிக்குத் தான் அல்லா அறிவையே வச்சுப் படைக்கல.வயசுக் *கொமர குதுராட்டம் வீட்டோட வச்சு அளகு பாக்கா..நீங்கள்லாம் என்னன்டு டீ பாத்துக்கிட்டு கெடக்கீக?என்னத்துல இப்ப கொறையா இருக்கு? சனக் கட்டுலையா? பணக்கட்டுலையா? நெட்டையோ குட்டையோ பொட்டப்புள்ளய கட்டிக்குடுக்காம பூதம் காத்துக்கிட்டு இருக்கா வீட்ட..பத்தாம இப்புடி ஏவ தேவ வீட்டுகளுக்கும் வந்துடுறா வெக்கமில்லாம. என்னடி பண்றாய்ங்க உங்க புருசன்மாரெல்லாம்? பொண்டுசெட்டி பயலுக?".

"அல்லாவே ஏன்க்கா நீங்களும் புரியாம பேசுறீங்க? எம்புட்டோ நாமளும் சொல்லிப் பாக்கத்தான செஞ்சோம்? மெஹருக்கும் எத்தினி மாப்புள்ள பேசுனோம் ஒண்ணும் சரியாவே வரல்லியே.ஐசாக்காவும் இப்புடி தேவ வீடுகளுக்கு வந்து போனாலாவது ஒரு நல்ல மாப்புள்ள அமையாதான்னு தான் பாக்குது !எங்க மச்சான் மவுத்தாப்போனதுல இருந்து தான் வீடு வெளங்கலையே"

எழுந்து போனாள் வயிற்றுப்பிள்ளைக்காரி அமரும் நாற்காலியை அலங்கரிக்க.ஒரு சின்னத்தேர் அசைவது மாதிரி மெள்ள வந்து அமர்ந்தாள் சபியா . தங்களுக்குள்ளாகவே பேசிக்கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தின் மொத்த கவனமும் அவள் புறம் திரும்பியது. ஏழு கட்டுக்கழுத்தியர் சுற்றிலும் நிற்க, மூத்தவள் என்ற ஹோதாவில் ராபியா முதலில் வெற்றிலை, பாக்கு ,மருந்துச்சங்கு, வாழைப்பழம், இனிப்பு, தேங்காய் , பூ என்று அவள் முந்தானாயை நிரப்பினாள்.வரிசையாய் மற்ற ஆறு பேரும் நிரப்ப..முடிந்தது சடங்கு. முண்டியடித்து வளையல் போட வந்த ஐசாவுக்கு வெற்றிலை கொடுக்கக் கூட ஆளைக்காணும்.

பந்தியிலும் ஐசா குடும்பத்துப் புறணி தான்.

"எப்புடித்தேன் அந்த பூத்பங்களாவுல அம்மா மக இருக்குதுக? இந்த மெஹரும் இப்பவெல்லம் வெளியில வாரதே இல்ல என்ன?"

"ஆமாடீ என்னன்டு வருவா? அவ வயசுல நாம கையில இடுப்புல வயித்துலன்னு சொமந்துக்கிட்டு அலையிதோம்.அவளுக்கு வெக்கமா வராதா ?"

"இக்பால் அண்ணன் தேன் இப்புடி வீட்ட விட்டுப் போச்சு, ரபீக்கும் ராஜாவும் கூடவா பெறயே போகுங்க? தங்கச்சிக்காரி இந்த கிறுக்கு அம்மாள்ட்ட மாட்டி தனியா தவிக்கிதா பாவம்..இதுல இந்த பெரியம்மா பாரு கூச்சமில்லாம கல்யாணம், மடிநெரப்புன்னு கெளம்பிக்கிட்டு வந்துடுது. லச்சணத்துல மெஹருக்கு நக பண்ணுதாம்ல நக?"

விருந்து முடிந்ததும் கிளம்பின ஐசாவைத் தேடி வந்தாள் ஜாஸ்மீன்.

"பெரியம்மா..இந்தாங்க என் வளவி..நானே வந்து வாங்கிக்கிடுறேன். ஏங்க பெரியம்மா இந்த வெள்ளிக்கிழமை சாயங்காலம் என் கொளுந்தன் பொண்டாட்டியவும் அது அம்மாவையும் கூட்டியாறேன் நம்ம வீட்டுக்கு. நம்ம மெஹர அவுக வீட்டு பையனுக்குக் கேக்குறாக"

"மகராசியா கூட்டியா ஜாஸூ..வரேன்..அஸ்ஸலாமலைக்கும்".

விடிந்ததில் இருந்தே வீட்டை ஒதுங்க வைத்துக்கொண்டு பதட்டத்தோடு திரியும் அம்மாவைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள் மெஹர்.

"இப்ப என்னத்துக்குமா இப்புடி டென்ஷன் பண்ணிக்கிடுறீங்க? ஒங்களுக்கு முடியாம வரதுக்கா ? வீடெல்லாம் நல்லா சுத்தமாத்தானே இருக்கு? இந்தா காலையில தான் நாகு தொடச்சும் விட்டா அப்பறம் ஏன் நீங்க கெடந்து செரமப்படுதீங்க? சும்மா அல்லான்னு இருங்கம்மா..".

பார்த்துபார்த்து பக்குவமாக கடல் பாசி காய்ச்சி, ஃப்ரிஜ்ஜில் உறைய வைத்தாள் ஐசா, வடைக்கு ஊறப்போட்டு விட்டு கொஞ்சம் சாய வந்தாள் அறைக்கு.

நல்ல கருநீல வண்ணத்தில், நட்சத்திரப்பூக்கள் இட்ட ஷிஃபான் புடவைக்கு ஃபால்ஸ் தைத்துக்கொண்டிருந்தாள் மெஹர்.அவள் வாப்பாவைப்போல நல்ல மஞ்சள் நிறம். பெரிய கண்களும், மெல்லிய வாகான உடலும் அழகி தான்.

பள்ளிக்கு புர்காவில் சென்று வந்து கொண்டிருந்த போதே வெறும் உயரத்தையும் கைகளின் அழகையும் நிறத்தையும் பார்த்து விட்டு பெண் கேட்டு வந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் தோழியர் திருமணங்களுக்கு செல்வதற்கே மருதாணி இட்டுக்கொண்டு மணிக்கணக்கில் அலங்காரம் செய்தவள் தான். இப்போது அதைப் பற்றியெல்லாம் பெரிதாக அவள் லட்சியம் செய்து கொள்வதில்லை. அம்மா வெகுவாக வற்புறுத்துகிறாளே என்று அந்தப் புதுச் சீலையை தயார் செய்து கொண்டிருந்தாள் மாலையில் உடுத்திக்கொள்ள.

"அம்மா தைராய்ட் மாத்திரையும் போடல..டிஜாக்சினும் போட்டுக்காம இருக்கீங்க போல காலைல இருந்தே? அப்புடி என்னம்மா மெய் மறந்துடுறீங்க? "

கண்ணயர்ந்து விட்ட அம்மாவை எழுப்பி மாத்திரையை போட வைத்தாள்.

"நீயும் செத்த தூங்கு மெஹரு..அவங்க மஹரிப்புக்கு பெறகு தான் வருவாங்க. சொன்னதெல்லாம் நெனப்பிருக்கா ?காலைல இருந்தே படிச்சு படிச்சு சொல்றேன்..அம்மா சொன்னாப்பல கேக்கணும்மா..என் சீதேவி "

நான்கு மணியளவிலே தயாராகி விட்டது வீடு. அழகாக உறைந்திருந்த கடல்பாசியை நீள் சதுரத்துண்டங்களாக நேர்த்தியாக வெட்டி அடுக்கினாள் ஐசா, ரோஸ் மில்க் கலந்து தயாராக இருந்தது ..ஒரு வேளை குளிர்பானம் வேண்டாம் என்றால் என்று தேனீருக்கு பால் காய்ச்சி தயார். தேங்காய் சட்னியும், சாம்பாருமாக மணத்தது அடுக்களை. வடை மட்டும் சூடா இருக்கட்டும் என்று அவர்கள் வந்த பிறகு பொரிக்கவென நாகு இருத்தி வைக்கப்பட்டாள்.

முகம் கழுவி தயாராகத் துவங்கினாள் மெஹர். கருநீல ரவிக்கை, சேலை..செட்டாக வெள்ளைக்கல் பதித்த நட்ச்சத்திர வடிவ நகைகள், கூந்தலைத் தளரப்பின்னி நீள நீளக்காம்புகள் தெரியுமாறு தானே தொடுத்த ஜாதிச்சரம் வைத்துக்கொண்டு நிமிர்ந்தாள் . மகளையே பார்த்துக்கொண்டிருந்த ஐசா "மாஷா அல்லாஹ்" என்று திருஷ்டிக்கழித்தாள். கண்கள் கனிய அம்மாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டாள் மெஹர் .

*மஹரிப்புக்கு பாங்கு சொல்லி சரியாய் அரை மணியில் வந்தனர் ஜாஸூம் மாப்பிள்ளை வீட்டாரும். அறிமுகங்கள் ஆன பிறகு

"மெஹரகூப்டுங்க பெரியம்மா "

என்றாள் ஜாஸ்மீன்.

அல்லாவே என்ன செய்யக் காத்திருக்காளோ -உள்ளூர நடுங்கிய வண்ணம் உள்ளே சென்றாள் ஐசா. ஒரே நிமிடத்தில் மெஹருடன் வந்தாள் திரும்ப.

பளீரென்ற நிறமும் நெடுநெடுவென்ற உடல்வாகும் கண்ணில் பட ஆர்வமானாள் மாப்பிள்ளையின் தாய்.

"எங்கேம்மா ஒரேடியாக் குனியாம செத்த நிமிரு பாப்பம் ஒன் மொகத்த" .

முகம் இறுக இன்னம் குனிந்தாள் மெஹர்.

"என்னாடிம்மா இந்தக் காலத்துல இப்புடி நாணுற? நல்லா மொகத்த நிமுத்தி சலாஜ் சொல்லும்மா"

மறுபடியும் முக்காட்டை விலக்கி அவள் வற்புறுத்த விருட்டென்று எழுந்து அறைக்குள் சென்று மறைந்தாள் மெஹர்.

விதிர்த்துப் போனார்கள் வந்தவர்கள். சட்டென சுதாரித்துக்கொண்டாள் ஜாஸ்மீன்.

"விடுங்க பெரியம்மா மெஹர் வெக்கம் தெரிஞ்சது தானே..பெறயே போகாதீக. கல்யாணம் ஆச்சுன்னா தெளிஞ்சிடுது ..நாகு கொண்டாடி பலகாரமெல்லாம். "

நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தாள். அரைகுறையாக உண்டு விட்டு கடுப்பேறிய முகத்துடன் கிளம்பியது கூட்டம்.

பிலுபிலுவெனக் கத்திவிட்டுக் கிளம்பினாள் ஜாஸ்மீன் .

"ஆனாலும் இப்புடி ஆகாத்தியம் பண்ணலாமா மெஹரு நீ ..நல்லாத்தேன் வெக்கப்படுற போ. ஒங்க மச்சான் அப்பவும் சொன்னாக நான் தான் கேக்கல..போன வெசயும் இதே மாதிரி தான் உங்க மச்சான் கூட்டாளி ஒருத்தரு வீட்டு ஆட்கள கூட்டியாந்தேன். அந்தம்மா கேக்க கேக்க பேரே சொல்ல மாட்டேன்னுட்ட! சரியான ராங்கி புடிச்ச பொண்ணுன்டு அவங்க வெறுத்துப் போனாக .

அதுக்கு முன்ன சின்னம்மா சொன்ன ஒரு மாப்புள்ள ,கிட்டத்தட்ட பேசி முடிச்சு சக்கர போடுற அளவுல வந்து என்னமோ போன் கால் அப்புடி இப்புடிங்கிறாங்க அல்லா ஒருவன் தான் அறிவான் அதுவும் நின்னு போச்சு .இப்ப இம்புட்டு நாச்செண்டு ,தானா வந்த சம்பந்தத்த ஒதச்சு வெரட்டுறியே மெஹரு ..ஒனக்கே நல்லா இருக்கா? இன்னும் எம்புட்டு காலம் தான் கொமராவே பெரியம்மாவுக்கு பாரமா இருப்ப ?

இப்பமே நம்ம சாதி சனமெல்லாம் என்னமோ பெரியம்மாவுக்கு தான் ஒன்னய கட்டிக்குடுக்கவே இஷ்டம் இல்லங்கிற மாதிரி பேசுறாக...நல்லாத்தான் போ இப்புடி மானத்த வாங்குற . போதும்மா !பெரியத்தா மக, நம்ம தங்கச்சின்னு நான் மல்லுக்கட்டுறதுக்கு நீ குடுத்த மரியாத".

இறுகிப்போய் சலனமற்று டைனிங் டேபிள் அருகில் அமர்ந்திருந்த அம்மாவைக் கட்டாயப்படுத்தி இட்லியைப் பரிமாறி உண்ண வைத்தாள் மெஹர். தானும் உண்டு விட்டு படுக்கச் சென்றாள்.

அம்மா வழக்கமாகப் போடும் தூக்க மாத்திரையை எடுத்துக்கொண்டு போனவள் கண்ணயர்ந்து விட்ட ஐசாவை ஒரு நிமிடம் போல கண்வாங்காமல் பார்த்தாள். நகைகளைக் களைய ட்ரெஸ்ஸிங் டேபிளில் சென்று அமர்ந்தவள்... எழுந்து கொண்டாள். அம்மா உறங்கி விட்டாள் தான் என்று உறுதி செய்துகொண்டு திரும்பியும் நேராகவும் பார்த்துக்கொண்டாள் தன் உருவத்தைக் கண்ணாடியில்.

சிரித்து, சடையை முன்னால் விட்டு என்று புகைப்படக்கோணங்களில் பலவாறு பார்த்தான பின் புடவை நகையைக்களையாமல் அப்படியே உறங்கப்போனாள்.

..ஷஹி..

மடிநிரப்பு - வளைகாப்பு , கொமர் - கன்னிபெண் , மஹரிப் - மாலைத் தொழுகை

Related Posts with Thumbnails