Search This Blog

Monday, September 30, 2013

ஒரு புல்வெட்டி வாங்கச்சென்ற போது தெரிந்து கொண்டவை ...


வரம்பின்றி வளர்ந்துவிடும் புல்தரையைச் சமன் செய்ய
வாங்கியே ஆக வேண்டியிருந்தது ஒரு புல் வெட்டும் இயந்திரம்
முகவரி, விலை, துணை ,திரும்பும் காலவரம்பு
குறித்தெல்லாம்
அருளப்பட்டவைகளின் கனத்தோடும்
இலகு சுவாசத்தின் புதுமையோடும்
துவங்கினது அன்றைய பயணம்

புல்வெட்டும் இயந்திரங்களின்
விற்பனைக்கென்றே
தனியான ஒரு தெரு இருப்பது தெரியுமா உங்களுக்கு ?
சரியான கடையில் நுழைந்து
வகை, அளவு, நிறுத்து
தேர்வும் வணிகமும் விரைவாக முடிந்தது..
வெறுமனே ஒரு புல்வெட்டும் இயந்திரம் தானே அது !

எனக்கான மதிய உணவோடு காத்திருந்தது
நகரின் ஏதோ ஒரு விடுதி
என்பதுதான் எத்தனை கிளர்ச்சியூட்டும் செய்தி!
மேசையை மட்டுமல்லாமல் உணவையும் தெரியலாம் என்பதும்
அருளப்பட்டிருந்தவைகளின் பட்டியலில் இருந்தது
நன்றியோடு நினைவுகூறப்பட்டது ..

அன்றைய நிகழ்வுகளில் மிக முக்கியமானது
இறைத்துதியோடு துவங்காமலும்
நன்றிசொல்லி முடிக்காததுமான உணவும்
தொண்டையில் சிக்காமல் இறங்கும் என்பதும்
அஸ்தமனங்களின் போதான காற்று குளிராய் இருக்கிறது
கூடடையும் பறவைகள் V போன்ற வடிவம் கூட்டியும் பறக்கின்றன---
என்பதுமான விபரங்கள் தான் !

திடுமென கனக்கத் துவங்கியிருந்த புல்வெட்டியை மறுகைக்கு மாற்றி
எஞ்சியதால் செய்த பிரிவு முகமனின் சைகையின் போது
லேசாய் இழுவிக்கோணின முகம்
அத்தனை அவலட்சணமாய் இருந்ததை
அடுத்தபகலில் அடங்கினகுரலில் தொலைபேசினபோது
மறுமுனை கூறத்தான் அறிந்தேன் ..


..ஷஹி..

உயிர்மை இதழில் வெளிவந்த கவிதை

Sunday, September 29, 2013

நோன்பு கஞ்சி

 ( படத்தில் : உருளை போண்டா சட்னி , ஆப்பிள் ஜூஸ் , பாசிப்பருப்பு பாயசம் அண்ட் நோன்பு கஞ்சி )

சுமாரா 3 பேருக்கான ஓட்ஸ் நோன்பு கஞ்சி அளவும் , செய்முறையும்

அடுப்புல குக்கர வச்சு ரெண்டு ஸ்பூன் எண்ணெய் , ஒரு ஸ்பூன் நெய் விட்டுக்கனும் . பட்ட , கிராம்பு ஏலம் பிரியாணி இலை ஒண்ணு , அதோட ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு தாளிச்சு , ப.மிளகாய் ரெண்டு , பொடியா , நீள வாக்குல நறுக்கின பெ.வெங்காயம் ஒன்னு போட்டு வதக்கிக்கனும் . ரெண்டு தக்காளி பெசஞ்சு விட்டுட்டு , இஞ்சி பூண்டு பேஸ்ட் அல்லது அதையே பொடியா நறுக்கி சேத்துக்கங்க .

அதோட புதினா மல்லி கொஞ்சம் போட்டு வதக்கனும் . அப்பறம் ரெண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு , ரெண்டு ஸ்பூன் பாசிப்பருப்பு போட்டுக்கங்க . தண்ணி நாலு தம்ளர் ஊத்திக்கலாம் . இந்த சமயத்துல விருப்பம் இருந்தா மட்டன் அல்லது சிக்கன் கீமா அல்லது கேரட் துருவல் சேத்துக்கலாம் . குக்கர மூடி வெய்ட் போட்டுடுங்க , விசில் வந்தப்பறம் 10 - 15 நிமிஷம் வச்சு ஆஃப் பண்ணிடனும் . தேங்காய்துருவல் அல்லது தேங்காய்ப்பால் பிடிக்கும்னா சேத்துக்கலாம் .

ஆவி அடங்கினப்பறம் தெறந்து , ஒரு கைப்பிடி ஓட்ஸ் சேத்து, நல்லா கொதி வந்ததும் வெய்ட் போட்டு அடுப்ப ஆஃப் பண்ணிட வேண்டியது தான் . 5 நிமிஷத்துக்கப்பறம் திறந்தா சரியான பக்குவத்துல நோன்பு கஞ்சி ரெடி .

அரிசி கஞ்சி மாதிரியே தான் செய்முறை ஆனா அதுல மொதல்லியே அரிசிய போட்டுடுவாங்க , ஓட்ஸ அப்டி போட்டா கரஞ்சு கூழா போய்டும் !
அரிசி கஞ்சி செய்முறையிலேயே கோதுமை நொய் , தினை , வரகரிசி ,ரவை இதுல ஏதாவது ஒன்னு சேத்து கஞ்சி செய்யலாம் .

..ஷஹி ..

வானேறிப் பறக்கும் முத்தத்தின் அலகும் பச்சை நிறத்தொரு காமத்திப்பூவும்

 ( pic crtsy : www.artfire.com )

மனஉளைச்சலும் அழுத்தமும் மிகும் நேரங்களில் இனிப்பு உண்ண வேண்டும் என்று இந்த மனம் ஏன் பறக்கின்றது என்று என்னை நானே கேட்டுக்கொள்வது போலவே , அது போன்ற சமயங்களில் கவிதைப் புத்தகங்கள் மீது ஆவல் மிகுவதும் ஏனென்று அடிக்கடி யோசிப்பதுண்டு. முத்தத்தின் அலகு - குட்டி ரேவதி , காமத்திப்பூ - சுகிர்தராணி , உடல் பச்சை வானம் - அனார் என்று கவிதைத் தொகுப்புகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன் .

சமயங்களில் ஒரு கவிதையில் பாதியை மட்டும் படித்துவிட்டு , மீண்டும் வேறு கவிதை , இன்னொரு தொகுப்பு என்று தாவினபடிக்கு . கவிதைத் தொகுப்புகள் அதிகம் படிப்பவர்களுக்கு மற்ற கவிஞர்களின் பாதிப்பில்லாமல் எழுத முடியாது என்று அறுதியிட்டுச் சொல்லும் நண்பரின் நினைவுக்கு ஒரு புன்னகையை பதிலாய் அளித்தபடி தொடர்ந்து வாசிக்கிறேன் ! இசை கேட்டபடி படிக்கவே இயலாது என்றிருந்தது மாறி ஹெட்போனுடன் எழுதும் அளவுக்கு என்ன தான் ஆயிற்று எனக்கு .. 

தினப்படி வாழ்வின் அழுத்தத்திலிருந்து நழுவி கனவுலகுகளில் சஞ்சரிக்கும் , வாசிப்பவரையும் அழைத்துச்செல்லும் தன்மை தான் இந்தக் கவிதைகளை மிகவும் வசீகரமானவையாக்கித் தருகின்றன .கவிஞர்கள் மூவரும் தத்தம் பாதையில் செல்கிறார்கள் என்றாலும் இவர்கள் அனைவரும் சேருவதும் லயித்திருக்க விரும்புவதும் காதல் பனிப்பொழிவில் சில்லிட்டு காமத்திப்பூ பூத்திருக்கும் கனவுலகில் தான் .

சுகிர்தராணி மிகக் கம்பீரமான மொழியில் ஆணைகள் இடும் தோரணையுடன் ( பொருத்தமாய்த்தான் பெயர் வைத்துக்கொண்டிருக்கிறார் ) எழுதுகிறார் .
தான் விரும்பும் ஆணின் மீது ஆதிக்கம் செலுத்தும் வேட்கையில்

//.....
காதலின் புறத்தோல்
கழன்று விழ
புயலின் விசையோடு
உனக்குள் பாய்கிறேன்
...... //

//......
உள்வாங்கும் கடலைப் போல
அவன் உலகிற்குள் பிரவேசிக்கிறேன்
ஏவாளாய் உருமாறுகிறது என்னுடல்
..... //

//அவனைப்
புணர்ந்துவிட்டு எழுகிறேன்
முற்றிலும் மறைந்த
நிலவாகி இருந்தது
என் தொப்புள்//
என்று .

தீவிரப்பெண்ணிய மொழியில் பேசும் அதே சமயம்

//எனக்கெதிராக
நீ வியூகங்களை
வகுக்கும்போதும்
ஆயுதங்களைக்
கூர் தீட்டும்போதும்
ரௌத்ரம் பொங்கக்
களமாடுகிறேன்
ஆயுதங்கள்
ஏதுமற்ற
உன் கண்களில்
அன்பின்
கடைசித் துளி
சொட்டும்போது
வீழ்ந்து போகிறேன்
எதுவுமில்லாமல்//

என்று அவன் அன்பில் கசியும் போது தானும் கசிய முடிகிறது ..

ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் புகட்டிக்கொள்ளும் காதலை மிகுந்த வாஞ்சையுடன் கவனித்து , கவிதைகளாக்கி இருக்கிறார் குட்டி ரேவதி .. காதலில் இருவரும் சமம் என்றாலும் கூட , ஆணிலும் பெண்ணின் காதல் உணர்வும் , அன்பும் சீரியது , கருணை மிக்கது என்பதுமான நிறுவல்களோடான கவிதைகள் இந்தத் தொகுப்பில் அநேகம்..

// ...
அறை
கருவறையானது
இரு சிற்பங்கள் எழும்பி நின்றதைப் போல்
என்னிலிருந்தும் உன்னிலிருந்தும்
உயிர்த்தீ தன் வெப்பத்தைக்
கசியச் செய்தது
.... //

// மலர்க்காம்பென வளையும்
உன் கழுத்தின் வாசனை முகர
உனைத் தேடியலைந்த மனப்பாதை
மறந்தே போயிற்று
( கொஞ்சம் கூடப் பனியென
வியர்வை அதன் மீது )
எந்தச் சபையில் கூற முடியும்
வாசனையை ஒரு சாட்சியாக ?//

மிகுதியான கவிதைகள் இருபாலியல் பண்பில் எழுதப்பட்டவை , பால்பேதம் தொனிக்காதவை , பிரிவாற்றாமை பேசும் கவிதைகள் . பிரிவிலும் காதல் இன்பம் , கசப்பும் ருசி எனும் கருத்தோடு முரணும் என்னைப் போன்றவர்கள் படித்துப் பார்க்க வேண்டிய தொகுப்பு . குட்டி ரேவதியின் படிம மொழி மிகச் செறிவானது , அடுக்கடுக்காக அவற்றின் மீதே கவிதைகளை இயல்பாக நிர்மாணிக்கும் அவரது உத்தியும் .

//.....
கடைசியாய் அவரோடு ரயிலுக்காகக்
காத்திருந்தபோது தான்
கொடூரமான ஊளையுடன் ரயில் வந்து நின்றது
எல்லோரும் அறியவும் காணவும்
தனது மார்பின் திறந்த வெளியில்
என்னை அணைத்து முத்தமிட்டார்
பின் எப்பொழுதுமே
அவரை அங்கு சந்திக்கவில்லை //

பிரிவில் தான் இத்தனை காதல் ருசி சொட்ட எழுத வாய்க்குமென்றால் கவிஞருக்கெல்லாம் காதல்களும் தோல்விகளும் மீண்டும் மீளவும் உண்டாகட்டும் .

அனாரின் கவிதைமொழி பிரத்யேகமானது .. காதல் உலகில் சுழன்று வீசும் மழைக்காற்றாய் கட்டற்று பொழிகிறார் கவிதை வரிகளை .
//....
சாரலாய் .. தூவலாய் ..
சலசலக்கும் சிற்றாறுகளாய் .. புலன்கள்பிரிந்து
முன்வைக்கும் நீரின் கலைகள்
நீச்சலிடும் தண்ணீர்ப் பாதங்கள்
சூட்சுமமாய் நெருங்கியும்.... விலகியும் ..
குமுழிகள் கொப்பளித்து வெள்ளமாய் திளைக்கும்
கோடி வேட்கையின் இணைவு சூழ ..
.... //

//.......
எதுவுமே நிகழமுடியாத இருட்டில்
யுத்தம் தொடங்கி விட்டிருந்தது
நீ பாறைகளில் தெறித்தாய்
பாசியைத் தழுவினாய்
முழுவதுமான இழப்பிலும்
முழுவதுமான வெற்றியிலும் கடல்
கொந்தளிப்பதுபோல
ஓடிப்போய் கரையில் நின்று
வியர்த்து வழியும் காற்றை
மாயப் பொடியாக்கித் தூவினாய்
...//

//நான் வாசனையை சொற்களாக்கிக் கொண்டிருந்தேன்
எனது காதலும் அப்படித்தான்
என்னை பளுவற்று நறுமணமென மிதக்கச்செய்கிறது
உன்னை அழைக்கிறேன் எப்போதுமுள்ள கர்வத்துடன்
என்னுடைய மேன்மைகளுக்கு
எனது அப்பழுக்கற்ற முழுமைக்கு
...//

Age cannot wither her , nor custom stale her infinite variety - ஷேக்ஸ்பியர் 

உக்கிரமும் , முதிர்ச்சியான ஆளுமையும் கூடிய கவிதை மொழி சுகிர்தராணியுடையது என்றால் குட்டி ரேவதியினது அழகும் லயமும் மிக்கது .. அனாரின் கவிதை மொழியில் பழங்குடிப் பெண்ணொருத்தி மலைப்பாதையில் தாவிச் செல்வதில் போன்ற அனாயாசமான பாய்ச்சல் உண்டு . I love the way she goes wild with her words ..

சினம் போலவே காதலும் காமமும் தீவிரமாகத் தெறிக்கும் செய்திகளாக சுகிர்தராணியின் கவிதைகள் , தான் தன்னோடே காதல் நினைவில் பேசிக்கொள்ளும் பாவனையுடன் குட்டி ரேவதியின் கவிதைகள் , உள்வயமான ஒரு காதல் பயணத்தில் புரண்டு விழும் வார்த்தைகளின் கோர்ப்பு அனாரினுடையவை . மூவரின் படைப்பூக்கமும் கிளம்பும் புள்ளியாகக் காதல். 

விமர்சனப் பார்வையில்லாமலும் அளவுகோல்கள் பற்றின புரிதல்களற்றும் , ரசனையின் பேரில் மட்டும் என்னுடைய இந்நேரத்தின் மனநிலையைப் பொறுத்து எழுதியிருக்கிறேன் .. your choices are biased என்று என்னை வசீகரிக்கும் கவிஆளுமைகளின் தேர்வு பற்றி பேசும் தோழமைக்கும் என் புன்னைகையையே பதிலாய்த் தருகிறேன் !

வெளுத்துப் போய் சோபையற்றிருக்கும் வானத்தில் திடீரெனத்தோன்றும் வானவில்லைப் போல அவ்வப்போது வெளிறிப் போகும் வாழ்வில் வர்ணங்களைத் தீட்டித் தரும் கவிஞர்களுக்கு நன்றி .

ஈரக் காற்றில் நடுங்கும் இறகுகளை உலர்த்தியபடி உடல் சிலிர்த்து புலன் குவித்து , புறக்காட்சிகளின் அழகில் மெய்மறந்து நிற்கும் புறாவைப் போல மழை பெய்யவிருக்கும் இந்த மாலைக் காற்றில் சிலிர்த்தபடி , கட்டுக்களை உடைத்து வீசி , கற்பிதங்களைக் கேலி செய்யும் இந்தக் பெண்களின் கவிமனதில் மனதைக் குவித்துக் கிறங்கிக் கிடக்கிறேன் . அற்புத உலகில் உலவித்திரியும் இந்த ஆலிஸுக்கு சமநிலை வாய்க்க ஒரு சிறிய கோப்பைத் தேனீர் பெரிதாய் உதவுமாய் இருக்கலாம் ..


.. ஷஹி ..

Saturday, September 28, 2013

இமையத்தின் " செடல் " - மதுரை மீனாட்சியின் சாபத்தில் சிக்கின சாமி புள்ள - நூல் விமர்சனம்


” எங்கள் மத்தியில் இன்னுமோர் கும்பல் எஞ்சியுள்ளது . அவமானத்தை அது சாப்பிடுகிறது . தலைகுனிந்து நடந்து செல்கிறது . அவர்களின்
பிடரியை நிமிர்த்துவோம் நாங்கள் . எதிர்ப்படும் ஒவ்வொரு கையையும் நக்கும் ஒருவனை எப்படி நாங்கள் எம்மிடையே வைக்கலாம் ? ”

பலஸ்தீனக் கவிஞர் ரஷித் குசைனின் இந்த வரிகள் இமையத்தின் செடல் படிக்கும் போது அடிக்கடி நினைவில் முட்டிய வண்ணமாய் இருந்தது .
ஊரைப் பிடித்தாட்டும் பஞ்சத்துக்கும் வறுமைக்கும் காரணம் தெய்வகுத்தமாகவும் இருக்கலாம் என்று பேசும் ஊர் பெரிய மனிதர்கள் ,  அதை நிவர்த்திக்கும் பொருட்டு சாதியிலும் பொருளிலும் இளைத்தவனான கோபாலின் மகள் செடலை செல்லியம்மன் கோயிலுக்கு பொட்டுக்கட்டி விட தீர்மானிக்கின்றனர் . பஞ்சத்துக்குப் பயந்து பிழைக்க இலங்கை செல்லலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் கோபாலையும் அவன் மனைவி பூவரும்பையும் புராணத்தில் இருந்து கதைகள் மேற்கோளிட்டும் , பொட்டுக்கட்டப்படும் பெண்னுக்கு அளக்கப்படும் படியின் காரணம் குடும்பமே பிழைக்கலாம் என்று ஆசை காட்டியும் பணிய வைக்கிறார்கள் . நிமிரவே இயலாத வண்ணம் அமுக்கிப்பிடித்து கதறக்கதற மொட்டையடித்து செடலுக்கு பொட்டுக்கட்டி விடும் கதை இப்படித்தான் துவங்குகிறது .

பொட்டுக்கட்டுதல்

அழகும் இளமையும் மிக்க பெண்களுக்குப் பொட்டுக்கட்டி,  தெய்வ சேவைக்கென்று அவர்களை அர்ப்பணித்து வந்தது இசை வெள்ளாளர் குடும்பங்களில் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது . கோவில்கள் இருந்த இடத்திலெல்லாம் இந்த நடன மாதர் இருந்திருக்கின்றனர் . கோவிலின் வசதிக்கேற்ப அவர்களின் எண்ணிக்கையும் கூட குறைய இருந்தது .

இஸ்லாமியப்படையெடுப்புக்குப் பிறகு கோவில்களின் செல்வாக்குக் குறைந்ததில் தமிழக கோவில்களின் செல்வநிலை தாழ்ந்தது . ஆனால் இஸ்லாமிய செல்வாக்கு குறைவாக இருந்த தென்தமிழகத்தில் பிரிட்டிஷ் ஆட்சி காலம் வரை தேவதாசி அமைப்பு இருந்தே வந்தது . கிராமங்களிலும் குலதெய்வ வழிபாட்டின் ஒரு கிளையாக இந்த வழக்கம் ஒடுக்கப்பட்ட சாதியான கூத்தாடிக் குடும்பங்களில் வழக்கில் இருந்து வந்திருக்கிறது .

இப்பொழுதும் புதுக்கோட்டை விராலிமலையைச் சேர்ந்த கிராமங்களில் வசித்து வரும் இந்த இனத்தினர் இவ்வழக்கத்தின் பிடியிலிருந்து விடுப்பட்டு விட்டாலும் தாக்கதில் இருந்து மீளாமல் வாழ்கின்றனர் என்பது அவசியம் குறிப்பிடப் படவேண்டிய செய்தி .

வரலாறு

“தாசி குலம் தோன்றியது நம்முடைய காலத்தில் அல்ல. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டு வருகிறது. பலருக்கு இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டும் வருகிறது. இப்படிக் கூறுவதால் என்னைத் தாசிக்கள்ளன் என்று கூட கூறலாம். அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை.சமூகத்திற்குத் தாசிகள் தேவை என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்ல விரும்புகிறேன். தாசிகள் கோவில் பணிக்கென்று படைக்கப்பட்டவர்கள். அது சாஸ்திர சம்மதமானது. தாசிகளை ஒழித்துவிட்டால் பரத நாட்டியக் கலை ஒழிந்துவிடும். சங்கீதம் அழிந்துவிடும். ஆண்டவன் கட்டளையை மீறுவது அடாத செயலாகும். அநியாயமாகும்”

இப்படிப் பேசியவர் சனாதனவாதி தீரர் சத்தியமூர்த்தி ஐயர்

“அப்படியென்றால் ஒரு குறிப்பிட்ட குலத்தைச்சார்ந்த பெண்கள் மட்டுமே ஏன் பொட்டுக்கட்டி விடப்படவேண்டும் ? பிற குலப்பெண்களுக்கும் பொட்டுக்கட்டி அவர்களும் சமூக சேவை செய்யட்டுமே ” என்று பதிலடி கொடுத்த பெரியார் , முத்துலட்சுமி அம்மையாரின் முயற்சியால் இந்தக் கொடுமைக்கு முடிவு கட்டப்பட்டது . ( தகவல் உதவி நூல் – மகளிர் மனம் கவர்ந்த முத்து – பி.எல் . ராஜேந்திரன் )

தமிழகத்திலும் , தில்லியிலும் ஏனைய சில இடங்களிலும் கூட முதலமைச்சர்களாகவும் , பெருந்தலைவர்களாகவும் பெண்கள் முன்னிலை பெற்று வந்தாலும் , பெரும்பான்மையான பெண்களின் நிலையில் நல்ல மாற்றங்கள் இல்லாத நம் நாட்டின் இந்த காலகட்டத்தில் செடல் வாசிக்கப்படவேண்டிய முக்கிய நாவலாகிறது .

கதைச்சுருக்கம்

பொட்டுக்கட்டி விடப்பட்டவர்கள் சில காலமாவது தம் குடும்பத்தில் இருந்து பிரிந்து கோயிலை ஒட்டிய குடியிருப்புகளில் வாழவேண்டும் என்ற விதிமுறைக்கு உடன்படுத்தப்படுகிறாள் செடல் . சின்னஞ்சிறுமி என்பதால் தாயையும் குடும்பத்தினரையும் பிரிந்து பெருந்துயருக்கு ஆளாகிறாள் . கடும் பஞ்சத்தின் போது செடலிடம் சொல்லிக்கொள்ளாமலேயே தாய் தகப்பனும் உடன்பிறந்தோரும் ஊரை நீங்குகின்றனர் , இவளுக்குத் துணையாக அமர்த்தப்படும் கிழவியுடன் தனியாக வாழ்வை எதிர்கொள்கிறாள் செடல் . கிழவியின் மரணம் கடுமையாக பாதிக்கிறது அவளை . ஒரு வழியாக இவளைப் பொட்டுக்கட்டியதன் அர்த்தமாக மழை கிழிந்து கொட்டும் ஒரு நாளில் பூப்பெய்தும் செடலுக்கு கோவிலை ஒட்டிய குடிசையில் தங்க அனுமதி கிடைப்பதில்லை .

ஒண்ட இடமில்லாமல் இரத்தம் பெருக்கிய நிலையில் ஊரை நீங்குகிறாள் .பொன்னன் எனும் தெருக்கூத்து செட் நடத்தும் தூரத்து உறவினன் இவளை அழைத்து அடைக்கலம் கொடுக்கிறான் , விருப்பம் இல்லாத நிலையிலும் கட்டாயத்தின் பேரில் அவனுடன் சேர்ந்து தெருக்கூத்தில் தேர்ச்சி அடைந்து பேர் பெற்ற நடனக்காரியாகிறாள் செடல் .

வனப்புமிக்கவளாக இருக்கின்றதாலும் பொட்டுக்கட்டி விடப்பட்ட பெண் என்பதாலும் எல்லா இடத்திலும் அவளுடய உடலின் மீது ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் ஆண்கள் , (பொன்னன் , உடையார் , ஆரான் ) தான் சாமிப்பிள்ளை என்பதால் கன்னியாகவே தன் காலத்தைக் கழித்து விடும் உறுதியுடன் செடல் என்று போகிறது கதை .

அகாலமாய்ப் பொன்னன் இறந்து போக குழுவின் மற்றவர்களுடன் தெருக்கூத்தாடிப் பிழைக்கிறாள் .சகோதரி வனமயிலின் கட்டாயத்தின் பேரில் பிழைத்து வந்த ஊரை நீங்கி மறுபடி தன் ஊருக்குச்செல்லும் செடலுக்கு சொந்த ஊரில் கொஞ்சமும் மதிப்பில்லாமல் போகிறது . வனமயில் இறந்து போகிறாள் , தன் மகனாய் செடல் பாவிக்கும் அவளுடய மகனும் செடலை நீங்குகின்றான் . வாழ்வில் விருப்பமற்றுப் போகும் நிலையில் தெருக்கூத்தில் பெரும் புகழ் பெற்று , அப்பொழுதில் படுக்கையில் கிடக்கும் பாஞ்சாலியின் விருப்பத்துக்கு  ஒப்பி அவளுடைய நாடக செட்டை தான் நடத்துவதாக வாக்களிக்கிறாள் செடல் .

வாழ்வின் குரூரம்

நாவலின் துவக்கத்திலிருந்து இறுதி வரையிலும் ஒரே வரியில் விவரிப்பதானால் ஆண்டான் x அடிமை , செல்வந்தன் x ஏழை , உயர்சாதி x தாழ்த்தப்பட்ட சாதி , ஆண் x பெண் என்ற தான் வாழ மற்றயதை நசுக்குதல் அல்லது அழித்தல் என்ற மனித குலத்தின் குரூர முகத்தைக் காண முடிகிறதைச் சொல்லலாம்.

கதையின் முதல் வரியிலேயே இந்த வாக்கியத்தில் ஏதோ சரியில்லை என்று தோன்றிப் போகிறதை இமையம் சற்று கவனித்திருக்கலாம் .

” சாமி என்னிக்குமே சாவப்போறதில்லெ. ஒம் மவளும் தாலியறுக்கப்போறதில்லெ ”

இப்படித்தான் “நித்திய சுமங்கலிப் பட்டத்தை” எலும்புத் துண்டாகக் காட்டி செடலின் அப்பனை பொட்டுக்கட்டுதலுக்கு ஒப்ப வைக்கிறது ஊர் !
செடல் பொட்டுக்கட்டப்படுவதோ செல்லியம்மனாகிய கண்ணகிக்கு – பெண் தெய்வத்துக்கு இன்னொரு பெண் எப்படி தாலி கட்டிக்கொள்வது ? அத்தனை அறியாமையில் இருக்கும் மக்கள் அவர்கள் என்பது தானா இமையத்தின் பதில்?

கருத்து , மொழி , வடிவம் , உத்தி இவை அத்தனையும் சார்ந்த புதிதான ஒரு விஷயம் அல்லவா ஒரு படைப்பு!  செடல் தெருக்கூத்தில் தேர்ச்சி பெறுகிறாள் என்பதைக் காட்ட எத்தனை உழைத்திருக்கின்றார் இமையம் ? ஆனால் மிகப் பிரயாசைப்பட்டு எழுதப்பெற்றிருக்கும் அவ்வரிகளை – அதிகப் பக்கங்களை ஆக்ரமித்திருப்பதாலும் கதையோடு ஒன்றாமல் துருத்தி நிற்பதாலும்  – படிக்காமல் தாண்டிச்சென்று விடத்தான் வாசக மனம் துடிக்கிறது . பேசுபொருட்கள் ஒன்றுக்கு மேற்பட்டவை என்பதால் கதையின் போக்கும் பல இடங்களில் நிலை கொள்வதில்லை.

செடல் – பொட்டுக்கட்டி விடப்படுவதால் காலம் முழுக்கவும் கன்னியாக வாழ வேண்டிய கட்டாயத்தில் வயிற்றுப்பாட்டுக்கும் , தன் உடலை பிற ஆண்களிடமிருந்து காத்துக்கொள்வதற்கும் இடையில் சிதறுண்டு போகும் ஒரு பெண்ணின் வாழ்க்கைச் சித்தரிப்பா அல்லது அழிந்து போகும் கூத்துக்கலைஞர்களின் ஆறாக்கண்ணீர் கதையா ? செடலின் கதை என்றால் இம்மாதிரியான ஒரு வாழ்வைச் சுமந்து தடுமாறிக்கொண்டிருக்கும் அவளின் அகஉணர்வுகள் ஒன்றிரண்டு பத்திகளில் மட்டுமே சொல்லப்பட்டிருப்பதாலும் , முற்றுமுழுக்காக தனிமையில் வாழும் செடலின் அகத்தனிமை பற்றின குரலே கதையில் எழும்பாததாலும் சுவாரஸ்யம் வெகுவாக ,மட்டுப்படுக்கிறது . புறச்சார்பு கொண்ட அவளின் பேச்சு மட்டுமே பதிவாகி இருப்பது குறையாகத் தான் தெரிகிறது .

கதையம்சத்தையும் மீறின தெருக்கூத்தின் தொழிற்நுணுக்கங்கள் மற்றும் பாடல்கள் நாவல் முழுக்க வியாபித்திருக்கின்றது என்பது மட்டுமே இது தெருக்கூத்துக்கலைஞர்களின் கதை தான் என்று பொருந்திக்கொள்ள போதுமானதாகவும் இல்லை .

கேள்விகள்

தன்னை உடமையாக்கிக்கொள்ளும் எண்ணத்துடன் வரும் உடையாரிடம் பேசும் போதும் மேலும் பல சந்தர்ப்பங்களிலும் கூட தன் பிறப்பும் குலமும் தாழ்ந்தது தான் என்று செடலே நம்புகிறார் போல் வசனங்கள் வருவது எவ்விதத்தில் நாவல் எழுதப்பட்டதன் நோக்கத்துக்கு வளம் சேர்க்கின்றது என்பது பெரிய ஒரு கேள்விக்குறி ! நான் கட்டுரையின் துவக்கத்தில் மேற்கோளிட்டிருந்த கவிஞர் ரஷித்தின் வரிகளின் பொருளை சரி பார்த்துக்கொள்ள வேண்டியது இந்த இடங்களில் தான் .

” நான் முன் சென்மாந்தரத்துல என்னா பாவம் செஞ்சியிருந்தா, இந்தப் பொறவியில இந்தக் கெதிக்கு ஆளாயிருப்பன்? எனக்கு இன்னமா வேணும்? ஒங்க வூட்டு மாட்டுச் சாணிய வாரி வவுறு வளர்க்கிற சாதி நான். பறச்சிய விட மட்டி ஒங்களத் தொட்டு தீட்டாக்கி நான் இன்னுமா பாவத்தச் சேத்துக்கணும்? ஒங்க சாதிக்கேத்தத் தொயிலா இது? …… எல்லாத்தயுங்காட்டியும் நான் பொட்டுக்கட்டி வுட்டவ. எனக்கு அந்த மாரியான கொடுப்பன எல்லாம் கெடயாது. வேற ஏதாச்சும் சொல் லுங்க….” அட எங் கடவுள, என்னால ஒங்க சாதி மானம் கெடணுமா? சாதி கலப்பு வாண்டாம் சாமி, மாடு திங்கிற பொலச்சியத் தேடி வரலாமா?”

உள்ளது உள்ளபடி என்பதை எழுதுவதை விடவும் அதைத் தாண்டல் , மீறல் என்பதைத் தன் சிறுகதைகளில் பேசுபராயிற்றே இமையம் ?

ஆண்டான் x அடிமை = ஆண் x பெண் ?

செடலுக்குப் பொட்டுக்கட்டும் முடிவை தகப்பன் முன்னும் ஊர் முன்னும் வைப்பது – நடராஜப் பிள்ளை – அதற்கான புராணக்கதையைச் சொல்லி அதை நியாயப்படுத்துவது – ராமலிங்க ஐயர் – ஒடுக்கப்பட்ட குலம் மற்றும் வறுமையின் காரணம் மனைவியின் ஆட்சேபணையையும் மீறி அதை ஒப்புவது – கோபால்-  என்று எல்லாமே ஆண்கள் .

பொட்டுக்கட்டப்பட்டு குடும்பத்தைப் பிரிந்து கோயிலை ஒட்டின வீட்டில் அவள் வசிக்கும் போது துணையாய் இருப்பது – சின்னம்மாள் கிழவி -  தன்னைப் போலவே பொட்டுக்கட்டப்பட்ட பெண் என்ற கரிசனத்தில் இம்மாதிரியான விசித்திரமான வாழ்வை அழகாக பாதுகாப்பாக வாழும் வகையையும் தாங்கள் சாமிப்புள்ள தம் கன்னிமையை காத்துக்கொள்ள வேண்டும் என்ற நினைப்பை அவளுக்குள் உண்டு பண்ணுவது – லட்சுமி – ஒண்ட இடங்கொடாத ஊரை நீங்கி பொன்னனின் தயவில் வாழ நேரும் போது தோழியாய் இருந்து வாழ்வின் மீது மீண்டும் நம்பிக்கை கொள்ள வைப்பது – விருத்தாம்பா – காலச்சுழலில் சிக்கி அவநம்பிக்கை கொள்ளும் போது மீண்டும் நம்பிக்கை உண்டாக்குவது – பாஞ்சாலி – என்று எல்லோரும் பெண்கள் .

மதுரை மீனாட்சி அம்மனின் சாபமே தங்களைப் போன்ற பொட்டுக்கட்டின பெண்களுக்கு வாழ்வு விடியாததன் காரணம் என்று செடலுக்கு போதனை செய்பவளும் பாஞ்சாலியே .

சில தமிழ் சினிமாக்களில் போல பிழியப்பிழிய சோக ரசம் சொட்டும் கதை என்றாலும் தன் பிள்ளையாய் கருதி வந்த வனமயிலின் மகனும் தன்னை நீங்கின பின்னும் கூட ஒடிந்து போகவில்லை அவள் என்பதிலும் தனக்கு சம்மதமில்லாமல் தன் மீது சுமத்தப்பட்ட முட்கிரீடத்தை சுமந்தே அலைந்தாலும் , அதைச்சுமத்தின சமூகத்தைத் தனக்கு அறிந்த வழியில் பழி வாங்குகின்றாள் என்பதெல்லாமும் பெண்ணிய நோக்கில் சிலாகிக்கப்பட வேண்டிய அம்சங்கள் . வட்டார வழக்கும் , சொலவடைகள் மற்றும் பழமொழிகள் ஆகியவற்றின் தாராளமான இயல்பான பிரயோகம் இவையெல்லாமும் இமையத்தின் எழுத்துக்கே  உரிய பிரத்யேகமான தன்மைகள் .

தடுமாறும் செடல்

மிகுந்த சோகமான எத்தனையோ பெண்களின் சித்திரங்களை வாசித்திருக்கிறோம் .. டால்ஸ்டாயின் அன்னா கரேனினா , இங்கென்றால் கண்மணி குணசேகரனின் அஞ்சலை என்று .. ஆனால் குவிமையச்சிதறல் , கூறியது கூறல் , நடையில் வறட்சி  காரணமாகவும் ,அன்னா போலவோ , அஞ்சலை அளவிலோ செடல் நம் நெஞ்சங்களில் நிறைகின்றாள் இல்லை ! இத்தனை உழைப்பில் உருவாகி இருக்கும் கதை எப்பொழுதும் நினைவில் நின்றிருக்குமா என்பதும் …. ?

செடல் என்றால் குடைராட்டினம் என்கிறார் இமையம் .. ரீடபிலிட்டி அதாவது வாசிப்பில் இன்பம் தடைப்படுவதால் காற்றாய்ப் பறந்திருக்க வேண்டிய செடல் சிக்கித் திக்கி தடுமாறுகின்றாள் !

..ஷஹிதா ..

( பண்புடன் ஏப்ரல் 2013 பெண்கள் இதழில் வெளியானது )

உனக்கான அந்தக் கடிதம்

( pic crtsy .. www.wallsave.com )

பெறுநர் நீ என்ற அடையாளத்துடனான
ஒரு கடிதத்தின் வருகைக்காக
யுகங்களாகக் காத்து கொண்டிருக்கிறாய்
நீ சமைத்த உணவின்
ருசியேறின விரல்களினால்,
உன் அழகைப் பற்றின வர்ணனைகள் கொண்டதாய் ,
உலகிலேயே சிறந்த
உன் புன்னகையின் வெளிச்சக் குறிப்புடன்
நீ வளர்க்கும் மலர்கள் தாம்
எப்போதும் பிரகாசிக்கின்றன என்றும்
உன்னிலிருந்து வீசும் நறுமணம்
காற்றில் ஏறி அலைவதாகவும்
நல்லுணர்வுகள் தாங்கியதாகவும்
உன் பதில் கடிதம் கொணரவிருக்கும்
ஏக்கத்தவிப்பின் அங்கலாய்ப்புகள் தூவினதாகவும்
அது இருக்கலாம்
அல்லது
இவற்றில் எதையுமே அது பேசாமலும் போகலாம்
உனக்கானது அது என்பதிலேயே
எழுதாமல் விட்டதையும் வாசித்துக் கொள்வாய்
பொறு
எழுதப் பசித்திருக்கும் விரல்கள்
எங்கோ
யுகங்களாய்
உன் முகவரியைத் தேடி
அலைந்த வண்ணமாய் இருக்கின்றன தாம்..

..ஷஹி..

மட்டன் பிரியாணி செய்முறை ..


ஒரு ஃப்ரெண்ட் பிரியாணி ரெசிப்பி கேட்டிருந்தா ..அவளுக்கு எழுதின மெய்ல் இது .. நாலு பேருக்கு உபயோகமா இருக்கும்னா .... :)))

ஹாய் ....
நல்ல பிரியாணிக்கு கறி , அரிசி ரேஷியோ முக்கியம் .. ஒரு கிலோ அரிசின்னா கண்டிப்பா 1.30 கிலோ கறி போடனும் ! சரி தானா ? மட்டனாயிருந்தாலும் சரி , சிக்கன்னாலும் சரி ..ஓகே ?

1.ஒரு கிலோ பாஸ்மதி அல்லது சீரக சம்பா
2. 1.30 கிலோ சிக்கன் அல்லது மட்டன்
3. முக்கால் கிலோ பெரிய வெங்காயம் , நீள வாக்கில் அரிந்தது
4. முக்கால் கிலோ தக்காளி - இயன்றவரையில் பொடியாக நறுக்கியது
5. இஞ்சி பூண்டு பேஸ்ட் மூணு குழி கரண்டி நிரம்ப
6. தயிர் - முக்கால் டம்ளர்
7. 2 எலுமிச்சைகளின் சாறு
8. ஒரு மூடி தேங்காயில் பாதியை திருகி அதை பால் பிழிந்து வைத்துக்கொள்ளவும்
9. புதினா மல்லி ரெண்டும் ஆய்ந்து தலா இரண்டு கைப் பிடி அளவு
10 .பச்சை மிளகாய் 5, 6 கீறியது
11. பட்டை , கிராம்பு ஏலம் பொடி ஒரு குழி கரண்டி அளவு
12. ரீஃபைண்ட் ஆயில் தேவையான அளவு
13. நெய் - ரெண்டு குழி கரண்டி

மொதல்ல குக்கர அடுப்புல ஏத்தி எண்ணெய் விட்டு , நெய்ல பாதிய விட்டு சூடானதும் பட்டை , கிராம்பு ஏலம் பொடி போட்டு பொரிஞ்சதும் , மிளகாய் , வெங்காயம் போட்டு வதக்கணும் . வெங்காயம் பாதி வதங்கினதும் கறிய போட்டுடு . கறி போட்டதும் உள்ளங்கைல - ஒன் கை இல்ல ..அது முறம் மாதிரில இருக்கும் ! என் கை - பாதி அளவு உப்பு சேக்கனும் . உப்பு போட்டதும் கறில இருந்து அதோட தண்ணி வர ஆரம்பிக்கும் . அந்த தண்ணி வத்த வத்த நல்லா வதக்கனும் .. இது ரொம்ப முக்கியம் - அந்த தண்ணி இருக்கும் போதே மத்ததெல்லாம் போட ஆரம்பிச்சிட்டா - கவுச்சி அடிச்சிட்டே இருக்கும் !

ஊண் தண்ணி நல்லா வத்தினதும் புதினா மல்லிய அள்ளி போடு , ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு வெட்டின தக்காளிய போட்டு அதுக்கு 5 நிமிஷம் கழிச்சு இஞ்சி பூண்டு பேஸ்ட் . அப்பறம் 7 , 8 நிமிஷம் கழிச்சு , அதுல மிளகாய் தூள் --- 11/2 அல்லது ரெண்டு ஸ்பூன் தான் நான் போடுவேன் . நல்லா இந்த மசாலா எண்ண பிரிஞ்சி வரணும் . அப்பறம் தயிர் சேக்கனும் . சேத்து 5 நிமிஷம் ஆனதும் நல்லா தள தளன்னு தண்ணியா இருந்துட்டா அதுவே போதும் , இல்லனா அரை டம்ளர் தண்ணி சேத்து குக்கர மூடி வெய்ட் போட்டுடு . பாத்து ரொம்ப தீ வேண்டாம் . விசில் வந்து பத்து நிமிஷம் சிம்ல இருக்கட்டும் . அப்பறம் தெறந்து தேங்காய்பாலும் தண்ணியுமா அளந்து , பாஸ்மதினா 1 : 1 1/2 சீரக சம்பானா , 1: 2 இந்த கணக்குல தண்ணிய ஊத்திடு .

தண்ணி கொதி வரும் போதே முன்னாடியே ஊற வச்ச அரிசிய வடிச்சிட்டு போட்டுடு .. தண்ணியும் சோறுமா சேந்து வரணும் .. இப்ப ருசி பாத்துக்கலாம் .. தேவைக்கேற்ப உப்பு , மிளகாய் தூள் ஆட் பண்ணிட்டு நல்லா கெளறி விட்டுடு ..அப்பறம் லெமன் ஜூஸ் சேத்து , மீதம் இருக்குற நெய்யவும் சேத்து கிண்டி , குக்கர மூடி வெய்ட் போட்டுடு ... நல்லா சிம்ல இருக்கனும் அடுப்பு , பயமா இருந்தா ஒரு பழைய தோச கல்ல அடுப்புல போட்டு அது மேல குக்கர வச்சிட வேண்டியது தான் .. சரியா பத்து நிமிஷத்துல அடுப்ப ஆஃப் பண்ணிட்டு அங்கிட்டு 15 நிமிஷத்துல குக்கர தொறக்கலாம் .. பிரியாணி ரெடி :)

இதே சிக்கன் பிரியாணினா .. தக்காளி , மிளகாய்தூள் , இஞ்சி பூண்டு பேஸ்ட் எல்லாம் சேந்து எண்ணெய் பிரியற ஸ்டேஜ்ல தேங்காய் பால் , தண்ணி ஆட் பண்ணிடனும் .. அங்கிட்டு இருந்து எல்லாம் அதே தான் ...ஓகே வா .. ஆல் தி பெஸ்ட் .. ஏதாவது டவுட் இருந்தா கேளு.. சரி தானா ?

அன்புடன்
..ஷஹி .. 


கடல்பாசி புட்டிங்

 
கடல் பாசிய அகர் அகர் , சைனா க்ராஸ்னும் சொல்லுவாங்க .. உலக அளவுல நெறைய டெஸட்ஸ்ல உபயோகப்படுத்தப்படறது இந்த ஜெலடின் மாதிரியான , ஆனா .. வெஜிடேரியன் , செட்டிங் ஏஜண்ட் .நோன்பு காலத்துல எங்களுக்கு இதில்லாம முடியாது . ரொம்ப சுவையாவும் நெறய மினரல்ஸும் இருக்கறதால கண்டிப்பா நோன்பு துறக்கும் மெனுல இதிருக்கும் . நோன்புல காஞ்சு போயிருக்கற வாய்க்கும் வயித்துக்கும் அப்டி ஒரு ஆறுதல் இது ..



 இந்த படத்துல இருக்கறது .. மாம்பழத்துண்டங்களும் ஏலக்காய் பொடியும் சேத்து செஞ்சது ... ( இந்த வருட ரமலான் நோன்பில் செய்தது )


 கடல் பாசி இனிப்பு செய்முறை :

தேவையான பொருட்கள்
அரை லிட்டர் பால் ,
ஒரு பெரிய கைப்பிடி அளவு நொறுக்கின கடல் பாசி ,
ரெண்டு பெரிய குழம்புக் கரண்டி அளவு சீனி இது தான் பேஸ் .

 பால காய்ச்சி அதுல கடல் பாசிய போட்டு கரைய விடணும் . முழுக்க கரஞ்சதும் சீனிய போட்டு துளி உப்பு போட்டுக்கனும் . இது தான் அடிப்படை .

அப்பறம் அதுல கலர் , எஸ்ஸென்ஸ் , ஏலக்காய் பொடி , நறுக்கின பழங்கள் , ட்ரை ஃப்ரூட்ஸ் , நட்ஸ் இப்டி எது வேணா சேத்துக்கலாம் .என்ன மாதிரியான கன்ஸிஸ்டென்ஸில அது செட் ஆகணும்ங்கிறதும் அவங்கவங்க விருப்பம் . உதாரணத்துக்கு எங்க வீட்ல அது இளநி வழுக்கை மாதிரி இருக்கனும்னு நெனப்பாங்க , அதனால அதுக்கு ஏத்த மாதிரி கொஞ்சமா கடல் பாசி போட்டுக்குவோம் . சில பேருக்கு  நல்லா பர்ஃபி மாதிரி இருக்கனும் ..அவங்க நெறைய போடுவாங்க ..

சின்ன சின்ன கிண்ணங்கள்ல ஊத்தி , வேண்டிய ஃப்ளேவர் , பழங்கள் சேத்து உறைய விட்டா ரூம் டெம்பரேச்சர்லயே செட் ஆகிடும் ... ஃப்ரிஜ்ல வச்சா இன்னும் சீக்கிரமா செட் ஆகி  , ஜில்லுனும் இருக்கும் . ஒரு பாக்கெட் பாலுக்கு ரெண்டு அல்லது மூணு , நாலு பிடி கடல் பாசி போட்டா , தட்ல ஊத்தி உறைய விட்டு அல்வா அல்லது பர்ஃபி மாதிரி துண்டங்கள் போட்டு எடுக்கலாம் .

..ஷஹி ..



Related Posts with Thumbnails