Search This Blog

Saturday, February 5, 2011

பால்ய கால சகி- வைக்கம் முஹம்மது பஷீர்

வைக்கம் முகம்மது பஷீர்: ஜனவரி 19 ஆம் தேதி கேரளா வைக்கம் தாலுகாவில் தலயோலப் பரம்பில் பிறந்தார். சுதந்திரப் போராட்ட வீரர். உஜ்ஜீவனம் எனும் வாரப் பத்திரிக்கை துவங்கினார். இந்திய அரசின் பத்மஷ்ரீ விருது, கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் டி.லிட் , சம்ஸ்கார தீபம் விருது, பிரேம் நசீர் விருது, லலிதாம்பிகா அந்தர்ஜனம் விருது, முட்டத்து வர்க்கி விருது, வள்ளத்தோள் விருது, ஜித்தா அரங்கு விருது போன்ற பல்வேறு விருதுகள் பெற்றவர். 1994 ஜூலை 5 ஆம் தேதி காலமானார்.

தமிழாக்கிய குளச்சல் மு. யூசுப் : குமரி மாவட்டத்தின் குளச்சலில் பிறந்தவர். மீஸான் கற்கள், மஹ்ஷர் பெருவெளி, அழியாமுத்திரை, நளினி ஜமீலா, சப்தங்கள் ஆகிய பல நூல்களை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

மனிதராய்ப் பிறந்து விட்ட எல்லோர் மனங்களிலும் ஏதோ ஓர் மூலையில் ஒளிந்து கொண்டிருக்கும் பால்ய கால இனிமையான நினைவுகளைத் தட்டி, பெருத்த வாதையையும் ,அந்த வலியைக் கண்ணீரில் கரைத்துக் கொள்ள ஓர் சந்தர்ப்பத்தையும் அமைத்துத் தருகிறது பால்ய கால சகி. பெரும் பணக்காரரின் மகன் நாயகன் மஜீத். அவன் அண்டை வீட்டு ஏழைப் பெண் சுகறா. ஆண் குழந்தைகளுக்கு நம் சமூகமே உண்டாக்கிக் கொடுக்கும் ஆணாதிக்க மனப்பான்மையுடைய மஜீதின் உள்ளத்தில் தன் கள்ளங்கபடமற்ற அன்பாலும், சுய மரியாதை தொனிக்கும் பேச்சினாலும், நட்பெனும் விதை நடுகிறாள் சுகறா.

இருவரும் மாம்பழங்களுக்காக இடும் அழகான , பிள்ளைமை ததும்பும் சண்டையில் ஆரம்பிக்கிறது கதை. தன் கூரிய நகங்களால் மஜீதைப் பிறாண்டியே அவனை அரள வைத்து , ஆணாதிக்க மனோபாவத்தை மண்டியிட வைக்கிறாள் சுகறா.

பள்ளியில் கணக்குக் கைவராமல் ஒன்றும் ஒன்றும் இரண்டு என்னும் உலகளாவிய கருத்துக்கு "ஒன்றும் ஒன்றும் கொஞ்சம் பெரிய ஒன்று" என்ற தன் மாறுபட்ட சிந்தனையின் மூலம் மிகப் பெரிய சவாலை முன் வைக்கிறான் மஜீத். பரிசாக ஆசிரியரின் தணடனையையும் நண்பர்களின் கேலியையும் பெறுகிறான். ஒன்றும் ஒன்றும் கொஞ்சம் பெரிய ஒன்றாக ஏன் பார்க்கப்படக்கூடாது? என்னுடன் பயின்ற தோழனொருவன் ஆண்கள் என்ற வார்த்தையை அ அருகில் துணைக்காலெழுத்தை எழுதி ண்கள் என்று முடித்தானே பார்க்கலாம். இம்மாதிரியெல்லாம் வித்தியாசமாக, தவறு சொல்ல முடியாத, வகையில் குழந்தைகள் அல்லாமல் வேறு யார் யோசிக்க முடியும்? ஒரே மாதிரியான செக்கோட்ட சிந்தனையெல்லாம் வளர்ந்து விட்ட பின் வந்து சேரும் துயரம் அல்லவா?

குழந்தைகள் வளர்கிறார்கள், அன்பும் வளர்கிறது . இம்மாதிரி பிள்ளைமையின் வெள்ளத்தில் பிரவாகம் எடுத்து கரைபுரண்டு ஓடக் கிளம்பும் அன்பை காதல் என்று பொதுமைப்படுத்தி சொல்லி விடக் கூசுகிறதே. எம்மாதிரியான எதிர்பார்ப்பும் இல்லாத மிகப் பரிசுத்தமான அன்பல்லவா அது. பளிச்சென்ற உருவமும், வாழ்வாதாரமும் இல்லையென்றால் சராசரிக்காதல் ஓடி ஒளிந்து விடாதா?

அன்பே உருவான உ (அ)ம்மாவும், கோப ரூபியான வா (அ)ப்பாவுமாக அமைந்து விடுகிறார்கள் மஜீதுக்கு பெற்றோர். அன்பில் மட்டும் வறுமையில்லா குடும்பம் சுகறாவினுடையது. அவளுடைய அப்பா திடீரென இறக்க, அனாதையாகிறார்கள் சுகறா குடும்பத்தினர்.

கதையின் ஓட்டத்தில் மஜீத் நோய்வாய்ப்பட , எல்லோர் வாழ்விலும் நடக்கும் இளமைப்பருவத் திருவிழா தினம் நண்பர்கள் வாழ்விலும் வருகிறது.


ஆம் !!! முத்தமிட்டுக்கொள்கிறார்கள் மஜீதும் சுகறாவும். இன்னது தான் என்றே எழுதப்படாத ஓர் அன்பு ஒப்பந்தம் தீட்டி முடித்தாகிறது.

விதி வசத்தால் அப்பாவின் கோபத்தில் கலங்கி, வீட்டை வெறுத்து வெளியேறுகிறான் மஜீது. எந்தத் தகவலும் தராமல் பல ஆண்டுகளைக் கழித்து வீடு சேரும் போது அறிந்து கொள்கிறான் சுகறாவுக்கு திருமணமாகிவிட்டதை. மட்டுமல்லாமல் தன் குடும்பம் கடனில் மூழ்கிக் கிடப்பதையும், பெற்றோர் தளர்ந்து விட்டதையும் பார்த்துப் பரிதவிக்கிறான். வாழவும் ,குடும்பத்தை வாழ்விக்கவும் வழியேதும் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அவன் வீடு வந்து விட்டதை அறிந்து கணவன் ஊரிலிருந்து காண வருகிறாள், தன் அழகையும் ஆரோக்கியத்தையும் இழந்து பரிதாபமாகத் தோற்றமளிக்கும் சுகறா.

அதிர்கிறான் மஜீத். அதோடு அவள் கணவன் செய்யும் கொடுஞ்செயல்களையும் சுகறாவின் நிலையையும் அறிந்து ,தானே அவளை மணந்து கொள்வதாக வாக்களிக்கிறான். சம்பாதிக்க எண்ணி மீண்டும் ஊர் நீங்குகிறான் மஜீத், சுகறா அவன் இல்லத்தின் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறாள். சென்ற இடத்தில் விபத்தில் கால்களை இழக்கிறான் மஜீத். சுகறாவோ நோய்வாய்ப்பட்டு மரணத்தைத் தழுவுகிறாள்.

அவன் தொழில் செய்ய எண்ணி கிளம்பும் சமயம் ஏதோ சொல்ல விழைவாள் சுகறா, ஆனால் அவள் நினைத்ததை சொல்லக் காலம் இடங்கொடுக்கவில்லை. அது என்னவாக இருக்கும் என்ற கேள்வியோடு முடிகிறது கதை.

மிகுந்த சோகத்தை, வாழ்வின் பக்கங்களில் ஒட்டியிருக்கும் காதல் வசனங்களைப் பிய்த்து, ரததம் ஒழுக எழுதப்பட்டிருக்கும் கதையென்றாலும், பிள்ளைப் பிராய காதலர்களின் வாழ்வை நம் உள்ளங்கள் குதூகலிக்கும் வண்ணம் எழுதியுள்ளார் ஆசிரியர். முதல் காதலும் முதல் முத்தமும் இன்னமும் எத்தனை எழுத்தாளர்கள் எழுதினாலும் தீராமல் பொழிந்து கொண்டேயிருக்கும் பெருமழையின் சிலிர்ப்புச் சாரல்.அருமையான அன்பும், நட்பும், இழையும் காதல் கைவரப்பெற்றும் விதி வசத்தால் வாழ்வில் சேர இயலாமல் பிரியும் சுகறா, மஜீதின் நிலை, இன்னம் எந்த ஒரு ஜோடிக்கும் நேராதிருக்கட்டும் என்று படிப்பவர் நெஞ்சங்களை உருவைக்கிறாரே பஷீர். வாசகர் அனைவரையும் தங்கள் வாழ்வில் நிகழ்ந்த ஏதோ ஒன்றுடன் கதையின் சம்பவங்களைத் தொடர்பு கொள்ளச் செய்வதில் தான் பெரு வெற்றி பெறுகிறார் பஷீர்.

கொஞ்சம் பெரிய ஒன்று என்று மஜீதைக் கிண்டல் செய்கிறாளே சுகறா..அதில் தொனிக்கும் சேதி.... இன்னும் எதை விடவும் அவனைத் தான் பெரிய ஒன்றாக அவள் கருதுவது தானே? தன் வானளாவிய கனவு மாளிகையின் ராஜகுமாரியாக சுகறாவைக் கற்பனை செய்கிறானே மஜீது, அதே இடம் தானே பெண்ணாய்ப் பிறந்து விட்ட ஒவ்வொருத்தியும் தன் காதலனின் நெஞ்சத்தில் அடைந்து விடத் துடிக்கும் இடம்?

பால்ய கால அன்பும் காதலும் வாய்க்கப்பெற்று ,இணையும் பாக்கியமும் பெற்றவர்கள் மட்டுமல்ல.... பிரிந்தவர்களும் பாக்கியசாலிகளே! ஆம் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுமைக்குமான ரணங்களைத், தடவிக் கொடுக்கும் மயிலிறகு நினைவுகளையல்லவா தம் உள்ளங்களுக்குள் பொதிந்து வைத்திருக்கிறார்கள்?

இஸ்லாமியச் சமுதாயத்தினரின் வாழ்வு, கலாச்சாரம், அவர்களை பீடித்திருக்கும் அவலங்கலான வரதட்சிணை, ஆணாதிக்க மனப்பான்மை, பெண்களை நடத்தும் விதத்தை.. யெல்லாம் ,அதே சமூகத்தைச் சார்ந்தவர் என்ற உரிமையில் அக்கக்காக அலசியிருக்கிறார் வைக்கம் முஹம்மது பஷீர். சொல்ல விழைந்தது ஒரு காதல் கதை, அதிலும் தோல்வி அடைந்த ஒரு காதல் கதை என்றாலும் ,நம் உள்ளங்களில் ஆனந்தம், ஆச்சர்யம், வேதனை என்ற பல்வேறு உணர்வுகளைத் தூண்டி தான் எழுதியதன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்.

...ஷஹி...

(நாவலை அறிமுகம் செய்து, புத்தகக் கண்காட்சியில் தேடி வாங்கவென பல நூல்களின் பெயர்களையும் பதிந்து உதவிய " இனியொரு விதி செய்வோம்" நண்பர் முரளிகுமாருக்கு நன்றி)

4 comments:

  1. Nalla irukkunga...
    intha naavalai padikka vendum.

    ReplyDelete
  2. அருமையாக எழுதியிருக்கிறீர்கள்
    வைக்கம் முஹம்மது பஷீரின் ஓரிரண்டு சிறுகதைகள் படித்திருக்கிறேன். மேற்கண்ட நாவல் படித்ததில்லை. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. நன்றி இளங்கோ..அவசியம் படியுங்கள்..சூழல் பற்றின சிந்தனை அறவே அற்று, சிரிக்கவும் அழவும் வைக்கக்கூடிய நாவல்..

    ReplyDelete
  4. மிக்க நன்றி தர்ஷன், மதிலுகள், பாத்துமாவின் ஆடு இவற்றுக்கு இணையானது தான் பால்ய கால சகி..

    ReplyDelete

Related Posts with Thumbnails