Search This Blog

Tuesday, August 31, 2010

புத்தக விமர்சனம்..வாண்டா வாஸிலவ்ஸ்காவின் "வானவில்"..ஸ்டாலின் விருது பெற்ற நாவல்





இலக்கியம்.. மனித சமூகத்தின் அளவுகோல்.சோஷலிஸ்டு நாகரிகத்தின் இலக்கியம், ஜனங்களின் இலக்கியம்.சோஷலிஸ்டு எழுத்தாளர்கள், சமூகத்தில் உள்ளது உள்ள படி சித்தரிக்கின்ற படியால் சோவியத் இலக்கியம் வெற்றியின் சிகரத்தில் வீற்றிருக்கிறது.


வாண்டா வாஸிலெவ்ஸ்கா, சோவியத்தின் தலைசிறந்த பெண் எழுத்தாளர்.அவருடைய, ஸ்டாலின் விருது பெற்ற "வானவில்" என்ற நாவலைப் பற்றின என் கருத்துக்கள் தங்களின் முன்...


கொடுங்கோலன் ஹிட்லரின் பாஸிஸ்டுகள் சோவியத் யூனியனின் மீது பாய்ந்து ,மனித உயிர்களைக் கொன்று குவிக்கிறார்கள்.ஆனால் தாய் நாட்டைக் காக்க, குழந்தைகள் முதல் முதியோர் வரை போராடி வென்றனர்.சோவியத் யூனியன் மகத்தான வெற்றி பெற்றது.ஹிட்லர் ஒழிந்தான்.இதுவே நாவலின் மைய கருத்து.ஆனால்.. உயிரை உறைய வைக்கும் குளிரில் ஒரு சிறிய கிராமத்தை ஜெர்மானியர் முற்றுகையிட்டு,கிராம மக்களைத் துன்புறுத்தும் அவலக் காட்சிகளை, தம் அழகிய எளிய தமிழ் நடையில்,நம் கண் முன்னே கொண்டு வருகிறார்கள் தமிழாக்க அறிஞர்கள்..ஆர்,ராமனாதன் மற்றும்,ஆர்.ஹெச்.நாதன்.


நாவலின் முக்கிய பாத்திரம் ,போரில் தன் மகனைப் பறிகொடுத்த தாய்,
பெடொஸ்யா கிராவ்சக்.போரில் இறந்த தன் வாலிபப் பருவ மகனின் சடலம் கிடக்கும் பனிக்காட்டுக்குத் தினமும் ஜெர்மானிய வீரர்களின் கண்களுக்கு அஞ்சி அவள் செல்லுவது,நம் உள்ளத்தைப் பதைபதைக்கச் செய்கிறது.தன் ஒரே மகனின் சடலத்தை அடக்கம் செய்யக் கூடவியலாமல் அவள் படும் துயரம் வார்த்தைகளில் வர்ணிக்கவியலாதது.


கொரில்லாப் படையைச் சேர்ந்த ஒலினா என்ற நிறைமாத கர்ப்பிணியை, நிர்வாணமாக்கி, உறைய வைக்கும் பனிப்பொழிவில் சித்திரவதைக்கு ஆளாக்கும் காட்சியும்,பிறந்து விட்ட அவளுடைய சிசு மகனை அவள் கண் முன்னே கொன்று தீர்க்கும் கொடூரமும்,பல வருடங்களுக்கு முன்னே ரஷ்யாவில் நடந்த உண்மைச் சம்பவம் என உணரும் போது நம் ரத்தமும் கொதிக்கிறது.


நாட்டைக் காக்கவென பிஞ்சுகள் முதல் முதியோர் வரை போராடும் போது,ஒரு புட்டி ஒயினுக்காகவும்,ஜோடி பட்டுக் காலுறைகளுக்காகவும் ஜெர்மானியப்படை அதிகாரி ஹாஃப்ட்மான் குர்ட் வெர்னரின், ஆசைகிழத்தியாகச் சம்மதித்த புஸ்ஸி என்ற பாத்திரம் அனைவரின் எரிச்சலுக்கும் ஆளாகும் ஒன்று.


கொரில்லாப் படை வீரர்கள் மிகுந்த காவலுக்கு இடையில் கிராமத்தில் புகுவதும்,தாய் பெடோஸ்யா அவர்களுக்கு உளவு சொல்லி ,ஜெர்மானியர்களை..கொரில்லாக்களும் ,கிராமவாசிகளும் சேர்ந்து அழிப்பதும்..முடிவில் ஜெர்மானியகளால் கொல்லப்பட்டு பனிக்காடுகளில் கிடக்கும் அக்கிராமவாசிகளின் சடலங்களை எல்லாம் சேகரித்து ஒன்றாக ,எஞ்சியிருக்கும் கிராமவாசிகள் செம்படையினரின் உதவியோடு அடக்கம் செய்வதும்.....சரித்திரம்!


முடிவில்.. செம்படை வீரர்கள் கிராமவாசிகளிடம் அவர்கள் பூமியை ஒப்புவித்து விட்டு உக்கிரேன் நோக்கிச் செல்வதை கிராமவாசிகள் கண்ணீரோடு நோக்குவதாய் நிறைகிறது நாவல்.


படிக்கும் வாசகரின் மனங்களில் தாய்நாட்டுப் பற்றையும் ஒற்றுமையின் வலிமையையும் ஆழமாக வேரூன்றச் செய்யும் அற்புதமான நாவல் இது.

...ஷஹி...

2 comments:

  1. வானவில், நெஞ்சை உறையவைக்கிறது.

    ReplyDelete
  2. நன்றி மாமா...மிக்க மகிழ்ச்சி..

    ReplyDelete

Related Posts with Thumbnails