Search This Blog

Wednesday, January 19, 2011

ஷோபனா ரவியிலிருந்து சுதா சந்திரன் வரை..ஒரு ஃபாஷன் பயணம்

ஷோபனா ரவி, எண்பதுகளில் தூர்தர்ஷன் ரசிகர்களை தொலைக்காட்சிப்பெட்டியோடு சேர்த்துக் கட்டிய பெயர். வில் போல வளைந்த அழகான புருவம், நீண்ட கூந்தல், பாந்தமான ட்ரெஸ் சென்ஸ் என்று வெகு அழகான பெண்மணி. அவர் செய்தி வாசித்த காலத்திலேயே பேராசிரியர் நன்னன்,கவிஞர் தமிழன்பன், நிஜந்தன், ராமகிருஷ்ணன் போன்ற மிகச் சிறப்பான உச்சரிப்புக்கும் ,மாடுலேஷனுக்கும் பெயர் போன பலர் இருந்தார்கள் என்றாலும் ஷோபனாவுக்கு இணை அவரே தான். புடவைத்தலைப்பைத் தோளோடு சேர்த்துப் போர்த்திய வண்ணம் செய்தி வாசிப்பது தான் அவருடைய ஸ்பெஷாலிடியே. குமுதம், ஆனந்த விகடன் போன்ற வாராந்திரிகளில் ஷோபனா ரவியின் புடவை போன்றது வேண்டும் என்று அடம்பிடித்து கடைக்காரர்களைப் படுத்தும் பெண்களைப் பற்றின ஜோக்குகள் பிரபலம்.

அவர் செய்தி வாசிக்கும் அழகும், அழகாக உடுத்தும் பாங்கிலும் மயங்கி புடவைகள் மேல் எனக்கும் கூட கிறுக்கு பிடிக்க ஆரம்பித்திருந்த சமயம். பள்ளிச் சிறுமி புடவை உடுத்தி எங்கே செல்வது? அதிலும் எங்கள் பள்ளியில் + 2 வரையிலும் அரைப்பாவாடை தான் சீருடையே. இவ்வாறாக புடவை உடுத்த ஆசை கொண்டிருந்த சமயத்தில் சரியான வாய்ப்பாக வந்தது தோழி சித்ராவின் பிறந்த நாள் பார்ட்டி. அடிச்சிதுடா சான்ஸ் என்று அம்மாவைப் படுத்தி அவர் அலுவலகம் உடுத்த கஞ்சியிட்டு அயர்ன் செய்து வைத்திருந்த அழகான காட்டன் புடவை ஒன்றை உடுத்திக் கொண்டு கிளம்பினேன். சித்ரா வீடு வரை நடக்க முடியாமல் கால் பின்னிக்கொண்டு அவதிப்பட்டது தனிக்கதை. கொஞ்சமே கொஞ்சம் வெட்கம் கூட வந்து விட்டது என்றால் பாருங்கள் புடவையின் மகிமையை.

தலைப்பால் தோளைப் போர்த்திக் கொண்டு ,நண்பர்கள் எல்லாரும் என்ன சொல்வார்களோ என்று படபடக்கும் இதயத்தோடு உள்ளே நுழைகிறேன்...எல்லாம் ஏதோ ஜந்துவைப்பார்த்தார் போல முழித்து வைத்ததுகள். அபி மட்டும் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு" டே அப்துல்லா, இந்தப் பொண்ணுங்களே இப்புடி தான்டா, சின்ன பொண்ணுங்களா இருக்கும் போது நான் பெரியவ பெரியவ ன்னுங்க...வயசானப்பறம் வயசக்கொறக்க படாத பாடு படுங்க "என்று (விளையும் பயிர்?) காமெண்ட் அடித்து ஏகத்துக்கும் என் கடுப்பைக் கிளப்பினார். பார்ட்டி எப்போதடா முடியும் என்று பார்த்திருந்து வீடு வந்து சேர்ந்தேன். அதிலிருந்து திருமணம் வரை புடவையைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. இப்படியாக ஷோபனா ரவியை பார்த்து நானும் சூடு போட்டுக் கொண்ட கதை முடிந்தது. அவரைத் தொடர்ந்து சந்தியா வந்தார், செய்தி வாசிக்க.


இவரும் நல் அழகி, வடக்கில் வளர்ந்தவர் என்பதால் ஸ்டைல் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் , தோளைப் போர்த்தி அடக்க எஃபெக்ட் எல்லாம் கொடுக்க மாட்டார்..பளிச்சென்ற கலர் சாய்ஸ், வித விதமான தலையலங்காரம் என்று தூள் கிளப்பினார். அழகு நிலா சந்தியா என்று இளைஞர் கூட்டம் பாடியது. பின்னர் வந்தார் இளைய நிலா, வேறு யார் ஃபாத்திமா பாபுவே தான். க்யூட் என்ற வார்த்தைக்கே அவரைப் பார்த்து தான் அர்த்தம் சொன்னார்கள். செய்தி வாசிப்பில் ரொம்ப சுகம் இல்லாவிட்டாலும் அவர் ஸ்வீட்டாகப் பேசுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இப்படியாக புடவைக் கலாச்சாரத்தை தொலைக்காட்சி தூபம் இட்டு வளர்த்தது.

பின்னர் மெட்ரோ பிரியா வந்தார் புயல் போல, சுரிதாரும் பாண்ட் டாப்பும் சென்னையச் சுற்றி அடித்தது.

பெப்சி உமா..பளீர் நிற உடைகளும், பட பட பேச்சுமாக எல்லோர் உள்ளங்களையும் கொள்ளை அடித்தார்.

கூந்தலை விரித்துப் போட்டுக்கொள்ளும் ஃபேஷன் தான் இவர் இளம் பெண்களுக்குக் கற்றுக் கொடுத்த முக்கிய ஸ்டைல்..மட்டுமல்லாமல் வலையல்களில் ஜிமிக்கி எல்லாம் தொங்க விட்டு ஏக ரகளை. பெண்களை எல்லாம் காதுக்கு மட்டும் அல்லாமல் கைக்கும் ஜிமிக்கி வாங்க வைத்த ஸ்டைல் ஐகான். தொடர்ந்து வந்த பல காம்பயர்களில் சொல்லிக் கொள்ளும் படியாக யாரும் தேறாவிட்டாலும், இறுக்கமான ஆடைகள் ,தலைவிரிக் கோலம் என்று ஒரு ஃபாஷன் புரட்சி நடக்கத்தான் செய்தது.

இதுவெல்லாம் பரவாயில்லை..சுதா சந்திரன் செய்யும் ரகளைக்கு. தமிழ் ரசிகர்கள் பேரில் அப்படி என்ன காட்டம் அம்மணிக்கு என்று புரியவேயில்லை. காடியாக , கண்களை உறுத்தும் படியாக இருந்தால் கூட பரவாயில்லை..

கண்களைப் பிடுங்கும் படியாக கலர் சாய்ஸ், நெற்றியில் பொட்டு என்ற பெயரில் நீ--------ள நீளமாக வரையப்பட்டு பயமுறுத்தும் கோலங்கள், சந்திரமுகி தோற்றுப்போவாள் அப்படி ஒரு மை தீட்டின முழிகள் என்று ஏகத்துக்கும் மிரட்டுகிறார். சின்ன வீடு படத்தில் பாக்கியராஜ், கல்பனா திருமண சீனில் தான் மாப்பிள்ளை பெண்ணைப் பார்ப்பார்..ஏதோ யானையைப் பாத்த எஃபெக்ட்டில் ஒரு அரண்ட லுக். யானை பிளிருவது போல் பேக்கிரவுண்ட் இசை வேறு. சுதாவைப் பார்க்கும் போதெல்லாம் இப்படித்தான் புஸ் புஸ்ஸென்று பாம்பு சீறுவது போல் ஒரு சவுண்ட் எஃபெக்ட் தலைக்குள் வந்து ரொம்ப கலாட்டா. இவர் பரவாயில்லை என்று நினைக்கவைக்கிறார் ஃபாத்திமா பாபு.

சீரியல்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் அம்மிணி அணிந்து வரும் அணிமணிகள் ஏக அமர்க்களம்.(எப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க) ஒரு முறை மாலை ஒன்று அணிந்திருந்தார், ஒவ்வொரு மணியையும் உருவி வீசினால் ஒவ்வொன்றும் ஒவ்வொருவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பும், அப்படி ஒரு ரகளை ரசனை.

இப்படியாக ஷோபனா ரவியிலிருந்து படிப்படியாக தொலைக்காட்சி, ஒரு ஆடை அணிமணிப் புரட்சி நடத்திகொண்டிருக்கிறது..

அப் டேட் ஆவது என்பது ஒன்று, நமக்குப் பொருத்தமான , கலாச்சாரத்தைக் கூறு போடாத விதமாக உடுத்துவது இன்னொன்று என்று இல்லாமல்,கண்களுக்கு இனிமையாக, கருத்துக்கு ஒப்புவதாக உடுத்தும் ஃபாஷன் கலாச்சாரம் பரவட்டும்.

..ஷஹி..

(மூன்றாம்கோணம் மீள் பதிவு)

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails