Search This Blog

Thursday, January 27, 2011

குல்மொஹர் கனவுகள்..





சீரான லயத்தோடு , அமைதியான மனநிலையுள்ளவர்கள் மனங்களில் ,சுக ராகங்களை எழுப்பும் விதமாக ரயில் ஓடிக்கொண்டிருந்தது.நடுப் படுக்கையில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த மகளை உறுத்து நோக்கியபடியே எதிர் கீழ் படுக்கையில் விழித்துக்கிடந்தேன்.

மகன் பிறந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு அவளை கருவுற்றதும்,வயிற்றில் உள்ளது பெண் சிசு என அறிய வந்து அனைவருக்கும் இனிப்பு பகிர்ந்ததும் ,ஆறு மாதக் குழந்தையான அவளுக்கு பாவாடை சட்டை அணிவித்து புகைப்படம் எடுத்ததும், எப்போது வேண்டுமானாலும் சமையலாம் என்ற எதிர்பார்ப்புடன் வீட்டு பீரோவில வாங்கி வைத்துள்ள மயில் கழுத்து வண்ண பட்டுப்பாவாடையின் நினைவிழைகளும் மனதைச் சுற்றி, நெஞ்சை இறுக்க...ஒசைப்படாமல் கண்ணீர் உகுத்துக் கிடந்தேன்.

''குடியரசு தின விழா பரேடுக்கு டான்ஸ் மாஸ்டர் காஷ்மீர் காஸ்ட்யூம் ல வர சொல்லி இருக்காரு மா " என்ற படியே இரு வாரம் முன்பு பள்ளியிலிருந்து திரும்பினாள் ஷிஃபா .உற்சாகம் தொற்றிக்கொண்டது என்னுள்ளும். பொருத்தமான துணிகளுக்கான தேர்வு, வெள்ளி நிற நகைகளுக்கான வேட்டை என்று பொழுது பறந்தது.
முழு கஷ்மீர காஸ்ட்யூமில் மகள் நின்ற போது காணக் கண்கள் போதாமல் மனம் நிறைந்தது.
பரேட் முடிந்து சோர்ந்து போய் வந்த ஷிஃபாவின் வலது காதுக்குக் கீழ் திடீரெனக் கிளம்பிய வீக்கம் இவ்வளவிற்குக் கொண்டு விடும் என்று யார் தான் நினைத்தார்கள்?
பரிசோதனைகள், மேலும் பரிசோதனைகள்..மருத்துவர்களின் புருவ உயர்த்தல்கள்,குடும்ப மருத்துவரின் கவலை தோய்ந்த முக பாவம் என்று அடி மேல் அடியாய் விழுந்து ,பத்து நாட்களுக்குள் பல வருட மூப்பு என் முகத்தில் படிவதை உணர்ந்தேன்.

"உடனே கிளம்பி சென்னை வந்து விடு " என்று விட்டான் தம்பி. அவனுமே மருத்துவன் என்பதால் துரிதமாக பரிசோதனைகள் செய்யப்பட்டு , அறுவை சிகிச்சைக்கான நாளும் குறிக்கப் பட்டு விட ,வயதான பெற்றோரும் , மாமியாரும் ,செல்ல மகள் கழுத்தில் இருந்த கட்டி புற்று கட்டியோ என்ற பீதியில் இருந்த கணவரும் , தன் ஒரே தங்கை முன்பு போல தன்னுடன் சண்டைக்கு வரவே மாட்டாளோ என்றஅச்சத்தைக் கண்களில் தேக்கியபடி , மௌனியாகி விட்டிருந்த மகனும் , யாருமே என்னுடைய பாரத்தைத் தாங்க போதுமான சக்தி கொண்டவர்களாக எனக்குத் தோன்றவில்லை.

கடிகாரத்தின் நிமிட முள் நிரந்தரமாய்க் குத்த ..மருத்துவமனையின் எனக்கான படுக்கையில் கிடந்த படி ..

"தவளைகளின் கூக்குரலா ,
காயம் பட்ட மனதின் மரண ஓலமா ...
எது பெரித விவாதித்துக் கொண்டிருந்தேன் .
மழை பெய்யவிருந்த அந்தப் பின்னிரவில் ,
குருதி வழிந்து கொண்டிருந்த என் இதயத்தோடு."

விடிந்தும் விட்டது ...வந்து விட்டனர் செவிலியர், ஷிஃபாவுக்கு உடம்பு துடைத்து விட்டு அறுவை சிகிச்சைக்கான ஆயத்தங்கள் செய்யலாயினர்.ஒரு இயந்திரத்தின் கதியோடு நானும் ஒத்துழைக்கலானேன். அவரை இன்னமும் காணவில்லை. வந்ததும் , ஷிஃபா அறியாமல் அவர் மீதுசாய்ந்து அழ வேண்டும்.

"அக்கா ,தைரியமா இருங்க..... உங்க முகத்துல தான ஷிஃபா தைரியம் தேடுறா?நீங்களே ஒடஞ்சு போனா சின்ன கொழந்த அவ என்ன ஆகுறது?"..என்று தம்பியின் மனைவி பாடமாய் படிக்க...என் மனமும் ,முகமும் கல்லாய்ச் சமைந்து விட்டது பத்து நாட்களாய்.

என்ன தான் சமாதானம் சொல்லிக் கொண்டாலும், அவரும் வந்து சேர்ந்து என் கைகளைப் பற்றிக்கொண்டானதும் கூட....இல்லை ...முடியவில்லை ...இதென்ன என் இதயம் இப்படி நொறுங்குகிறது?பிள்ளையைக் கிடத்தி விட்டார்கள் ஸ்ட்ரெச்சரில்"தியேட்டர் வரையிலும் நீங்களும் கூட வாங்கம்மா" என்று ஆறுதலாய்க் கூறினார் மயக்க இயல் நிபுணர்.எப்படி வெளியில் வந்தேன்? பிள்ளையைச் சுற்றி ,நீல உடை தரித்தபடி இருந்த மருத்துவர்களில் தம்பியும் இருந்தானா?....எதுவுமே நினைவில்லை....

தியேட்டருக்கு வெளியில் காத்துக்கொண்டிருந்தாள் மதி."வா" என்றுஅழைத்த அவளின் முக பாவம் தவிர வேறெதுவும் தெரியவில்லை எனக்கு.வேகமாய்ச் சென்று அவள் தோளில் சாய்ந்து கொண்டதும் உடைத்துக் கொண்டது கண்ணீர் காட்டாறு..என் பயமும் ,துயரமும் ... விம்மலும் , விக்கலுமாய் கரைய ...ஏதும் பேசாமல் என்னுடலின் பாரத்தோடு ,மனதின் சுமையையும் தன் மேல் ஏற்றுக் கொண்டவள் போல் அசையாது அமர்ந்த்திருந்தாள் மதி.

வெறுமை, ஏதும் இல்லாத வெற்று அமைதி....சிகிச்சை முடிந்து பிள்ளையை ரெக்கவரி அறைக்கு அழைத்து வரும் வரையில் அப்படியேதான் இருந்தேன்..சுற்றிலும் ஏகப்பட்ட இயந்திரங்கள், ப்ராணவாயுக் குழாய், முகம் வீங்கியிருக்க ,மயக்க மருந்தின் விளைவால் உடல் அதிர்ந்தபடியே அறுந்த பூங்கொடி போல் கிடந்தாள் ஷிஃபா.


விண்டு போன மனம் கால்களைத் துவட்ட, அருகில் இருந்த சேரில் அமர்ந்த படி ஓதலானேன்.

ஆயிற்று ...பிள்ளையை வார்டுக்கு அழைத்து வந்து விட்டோம்.அம்மா, அப்பாவும், அவரும் ஊர் திரும்பி விட்டார்கள். முறையான, அன்பான கவனிப்பில் தேறி வந்தாள் ஷிஃபா. கண்டிப்பாக விசிடிங் அவர்ஸ் பின்பற்றும் மருத்துவமனை என்பதால் காண வரும் நண்பர்களுக்காக நாளெல்லாம் காத்துக்கிடக்கும் நான்.

மருந்துகளின் மயக்கத்தில் மகள் உறங்கி விட...ஜன்னல் திரையை விலக்கித் தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்....கார் பார்க்கிங்கின் அருகே குல்மொஹர் ஒன்று பம்மிப் படர்ந்து ,சில்லென்று சிவப்பாய்ப் பூத்திருந்தது...

என் வீட்டு வாசலில் நானும் ஷிஃபாவும் நட்டு பராமரித்து வந்த , பூக்கும் தருவாயில் இருந்த குல்மொஹாரே பூத்துச் செழித்து அழைக்கும் பிரமையில் சிலிர்த்தது மனம்.

மறு நாள் வரவிருந்த பயாப்சி முடிவு சாதகமாய் வரும் என்ற நம்பிக்கை நெஞ்சில் ஆழமாய் வேரூன்ற...ஏதோ கனவில் புன்னகைத்தபடி தூங்கிக் கொண்டிருந்த மகளை அணைத்த படி உறங்கிப் போனேன்.
......ஷஹி.....

2 comments:

  1. கனக்கும் கதை ஆழமாகவே இருக்கிறது. "ஏதோ கனவில் புன்னகைத்தபடி தூங்கிக் கொண்டிருந்த மகளை அணைத்த படி உறங்கிப் போனேன்." - அழகான வார்த்தை.. இது தான் ஷஹியின் தனித்துவமோ.. ஒரு மாதிரி இந்த குல்மொஹர் பூவும் வியாதிய அரக்கனிடமிருந்து வெளியேறி பூச்சூடும் என்று நம்பிக்கையோடு புன்னகைக்கிறேன் நானும்..

    ReplyDelete
  2. நன்றி இஸ்மாயில் பாய்..

    ReplyDelete

Related Posts with Thumbnails