Search This Blog

Tuesday, September 6, 2011

அப்பா அம்மாக்களுக்கான சிறுவர் கதை- ஸெர்யோஷா..

சோவியத் நூலாசிரியை வேரா பானோவா அயல்நாட்டு வாசகர்களிடையே விரிவாகப் புகழ் வாய்ந்தவர். மூன்று முறை அரசாங்கப் பரிசுகள் பெற்றவர். நான்கு பெரிய காதல் நவீனங்கள், மக்களால் பெரிதும் விரும்பப்படும் ஐந்து நாடகங்கள், சுவையுள்ள சிறு கதைகள், குறுநாவல்கள் ஆகியன அவரது படைப்புகள். இவற்றில் பல திரைப்படங்கள் ஆக்கப்பட்டுள்ளன. ஸெர்யோஷா ஆசிரியையின் கவிதை நயம் மிக்க படைப்புகளில் ஒன்று. ஸெர்யோஷா என்ற இந்த நாவலின் படி எடுக்கப்பட்ட திரைப்படம் 1960 ஆம் ஆண்டு சர்வதேசத் திரைப்பட விழாவில் முதல் பரிசு வென்றது.

மொழிபெயர்ப்பாளர்: பூ.சோமசுந்தரம்.

கதைச் சுருக்கம்:

போரில் தந்தையை இழந்த ஸெர்யோஷாவுக்கு மரியாஷா என்னும் தாயும், பாஷா அத்தையும் லுக்யானிச் என்னும் மாமாவும் இருக்கிறார்கள். ஆறே வயதான ஸெர்யோஷாவுக்கு கவலைகள் அவன் வயதளவுக்கு கொஞ்சமல்ல.

பார்க்கவும் அனுபவிக்கவும் ஏராளமான விஷயங்கள் உள்ள உலகில் அவ்வளவு கவனம் செலுத்தப் போதுமான வலு இருப்பதில்லை அவனிடம்..

மேலும் மனிதர்களும் சரி கதவுகளும் சரி..ரொம்ப உயரம்..அவனால் அப்படி எட்டமுடிவதில்லை அவர்களை..

பிராண்டி ரத்தம் வரவழைக்கக் கூடிய பிராணிகள்,

விழும் போதெல்லாம் ரத்தக் காயம் ஏற்படுத்தும் தரை, ஏற முடியாத சுவர்கள்,

தாங்கள் எதை உடைத்தாலும் பதறாமல், சிறுவர்கள் ஏதும் உடைத்துவிட்டால் மட்டும் மோசம் என்று ஏசும் பெரியவர்கள்

என்று அவன் வாழ்க்கையிலும் ஏகப்பட்ட சிரமங்கள்.

இப்படியாகப் போகும் ஸெர்யோஷாவின் வாழ்வில் ஒரு மிகப் பெரிய மாற்றம் நிகழ்கிறது. "நம் வீட்டிலும் அப்பா இருக்க வேண்டுமென" ஆசைப்பட்ட அம்மாவுக்காக அவளின் மறுமணத்துக்கு சம்மதிக்கிறான் ஸெர்யோஷா. ஆனால் அவனைப் பொறுத்த வரையில் அப்பா இருந்தாலும் இல்லாவிட்டலும் பெரிய ஒரு வித்தியாசம் இருக்கப்போவதில்லை.."ஆமாம் சில பையன்களுக்கு அப்பா இருக்கிறார், சில பேருக்கு அப்பா இல்லை அவ்வளவுதான்!"

யாஸ்னிய் பேரிக் என்னும் அரசாங்கப் பண்ணையின் நிர்வாகி கொரெஸ்தெல்யோவை மணம் செய்து கொள்கிறாள் ஸெர்யோஷாவின் அன்னை.

தன் நெஞ்சுக்கூட்டுக்குள் இதயம் என்று ஒன்று உண்டு, அது எப்போதும் துடிக்கும், என்பதைக் கூட அன்னை சொல்லித் தான் தெரிந்து கொண்ட அந்தச் சின்னஞ்சிறுவனின் இதயத்துக்குள் ...தன் அன்பாலும், அறிவார்ந்த நடவடிக்கைகளாலும் கொரெஸ்தெல்யோ இடம் பிடித்து விடுவது தான் கதை.

எல்லோரின் பால்யமும் ஒன்று தானோ?:

கதை நெடுகும் ஸெர்யோஷாவின் கண்ணோட்டத்தில் தான் எழுதப்பட்டிருக்கிறது. புது சைக்கிள் ஒன்றை கொரெஸ்தெல்யோவ் அவனுக்கு வாங்கித் தரும் இடம் மிகவும் நயம் மிக்கது. சின்னஞ்சிறுவன் ஒருவனுக்கு சைக்கிள் ஒன்று எத்தனை கிளர்ச்சி தரக்கூடிய பொருள்..அவன் அதை பெருமை பொங்க நண்பர்களிடம் காட்டுகிறான்..ஆளாளுக்கு அதை எடுத்து ஓட்டுவதுமாக உடைத்தே விடுகிறார்கள். கொஞ்சமும் முகம் கோணாமல் கொரெஸ்தெல்யோவ் அதை சீர் செய்து கொடுக்கிறான். தன் மகனின் மனதிலும் நீங்காத இடம் ஒன்றைப் பிடிக்கிறான்.

சிகரெட் பெட்டிகள் சேகரிக்காத பிள்ளைப் பருவமும் ஒரு பிள்ளைப் பருவமா? மினு மினுவென அழகாக இருக்கும் பெட்டிகள் எத்தனையோ வைத்திருந்தேன் நான்..ஸெர்யோஷா மட்டும் என்ன விதிவிலக்கா? அவன் அப்பா கொரெஸ்தெல்யோவ் சேகரித்துக் கொடுக்கிறான் அவனுக்கு..

அசையாமை , சில்லிடுதல் - இதுதான் சாவு எனப்படுகிறது போலும்.

ஒரு குருவியின் சவ அடக்கத்தை ஸெர்யோஷாவும் அவன் தோழியும் "அந்த குருவியே கனவு கூடக் கண்டிருக்காத "முறையில் அருமையாக நிகழ்த்திவிடுகிறார்கள். படித்ததும் எங்கள் வீட்டு மின்விசிறியில் அடிபட்டு இறந்த குருவியும், ஓவென்று பெரிதாய் அலறி, நண்பர்கள் புடை சூழ அதை சகல மரியாதைகளுடன் நான் அடக்கம் செய்ததும், கூடவே ஆசையாய் வளர்த்த லவ் பேர்ட் ஒன்று இறந்து போக , மௌனமாய் கண்ணீர் சிந்தி இரண்டு நாட்கள் உண்ண மறுத்த என் மகளின் நினைவும் எழுந்தது.

அந்த திகிலூட்டும் அனுபவம்--- மரணம்..

கொரெஸ்தெல்யோவின் பாட்டி மரணிக்கிறாள். அதிர்ந்து போகிறான் சிறுவன் ஸெர்யோஷா..அவன் பார்த்த மரணங்கள் எல்லாம் குருவி, பூனை இவற்றினோடது தான்..பாட்டியின் சடலம் பார்த்து அதிர்ச்சியுற்று பீதியில் கலங்கும் ஸெர்யோஷாவுக்கு மீண்டும் அபயம் அளிக்கிறான் தந்தை கொரெஸ்தெல்யோவ்." நானுமா செத்துப் போவேன்? "எனும் மழலையின் கேள்விக்கு அவன் நம்பும் வண்ணம், கம்பீரமாக "மாட்டாய் ஒரு நாளும் நீ மரணிக்க மாட்டாய் "என்று ஆறுதல் அளிக்கிறான்.

கால் வலிக்கும் போதெல்லாம் அவன் அப்பனின் தோல் மீது சவாரி செய்தான்..அதோடு சொந்தக் கால்களால் நடந்து வந்த தன் நண்பர்களை அலட்சியமாகவும் பார்த்தான்..

அவன் அம்மாவும் அப்பாவும் பன்னிப் பன்னி" நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்று ஒருவரையொருவர் சொல்லிக் கொண்டது அவனுக்கு சகிக்கவேயில்லை.ஆனாலும் பெரியவர்கள் பேசிக் கொள்ளும் போது குறுக்கே பேசலாகாது என்ற அவன் கற்ற பாடத்தினால் பொறுமை காத்து வந்தான்!

ஆனால் அவன் விரும்பாத ஆட்களிடம் அவன் விருப்பமின்மையை வெளிக்காட்டியதை அம்மா வெறுத்தாலும், கொரெஸ்தெல்யோவ் ஆதரித்தான். ஒரு முரட்டு மாமாவை ஸெர்யோஷா "முட்டாள் மாமா" என்று அவரிடமே சொல்ல, அம்மா திட்டினாலும் அப்பா ஏற்றுகொண்டான். "முட்டாளை அப்படிக் கூறாமல் வேறு என்னவென்பதாம்?"

அதோடு ஸெர்யோஷா ஒரு ஆண்பிள்ளை , அதை நிரூபிக்கும் விதமாக அவன் பக்க வாட்டுத் தடுப்புகள் இல்லாத கட்டிலில் படுக்க வேண்டும், அடி பட்டால் அழ வேண்டியதில்லை..மருந்திட்டுக்கொண்டால் போதும் ..போரே வந்தாலும் வீட்டின் ஆண் மக்கள் ஸெர்யோஷாவும் கொரெஸ்தெல்யோவும் தான் போக வேண்டும் என்றெல்லாம் அன்பாகவும் அறிவார்ந்த முறையிலும் ,அதாவது குழந்தைகள் விரும்பும் வண்ணம் பேசி ஒரு அருமையான தகப்பனாக இருக்கிறான் கொரெஸ்தெல்யோவ்.

வந்தது வினை:

பச்சை குத்திக் கொள்ள வேண்டுமென ஆசைவந்து விடுகிறது நண்பர்கள் வட்டத்தில்- பயத்தை வெளிகாட்டிக்கொள்ள துணிவில்லாமல், ஸெர்யோஷாவும் குத்திக் கொள்கிறான்.

சொந்த செலவில் சூனியம் தான் வேறென்ன? கிருமித்தொற்று ஏற்பட்டு கடுமையான காய்ச்சலால் பீடிக்கப்படுகிறான். படுக்கையை விட்டே எழ முடியாமல் விளையாடவும் போகாமல் மிகவும் வேதனையுற்று விடுகிறான் ஸெர்யோஷா. பத்தும் பத்தாததற்கு கொரெஸ்தெல்யோவும் அவன் அம்மா வும் ஹோல்மகோரி எனும் மலைப்பிரதேசத்துக்கு ஜாகை மாற்றி விடலாம் எனும் எண்ணம் கொண்டு விடுகின்றனர்...

இதில் ஸெர்யோஷாவுக்கு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் அவனை மட்டும் பாஷா அத்தையிடம் விட்டுச்செல்லலாம் என்று முடிவெடுக்கப்படுகிறது. மலைப்பிரதேசத்தின் சீதோஷ்ண நிலையில் அவன் தாக்குப்பிடிப்பது கடினம் என்ற காரணம் கூறப்படுகிறது. ஸெர்யோஷாவின் பிஞ்சு உள்ளம் இந்த முடிவை தாங்கவியலாமல் துடிக்கிறது. தன் தம்பி லியோன்யா பிறந்ததில் இருந்தே தாய்க்கு தன் மீது அத்தனை பிரியம் இல்லாமல் போய்விட்டது என்று துயறுருகிரான்.

தாயும் தந்தையும் கிளம்பும் நேரம் --- கதையின் க்ளைமாக்ஸ்...

ஸெர்யோஷாவின் தாய், தம்பி மற்றும் கொரெஸ்தெல்யோவும் பயணிக்கும் வண்டி கிளம்பி சில அடிகளே சென்று நிற்கிறது, கொரெஸ்தெல்யோவ் ஸெர்யோஷாவை விட்டுச் செல்வது "ஒரு அங்கத்தையே விட்டுச் செல்வது போல் இருக்கிறது" என்று கூவியவாறு அவனை உடன் அழைத்துக் கொள்கிறான். ஸெர்யோஷா தாய் தந்தையுடன் ஹோல்மகோரி செல்கிறான் ஆனந்தமாக.

கதை படித்ததும் நம் மனங்களில் எழும்பும் கேள்விகள்:

எங்கோ தமிழகத்தின் ஓர் மூலையில் உள்ள சிறுவர்களுக்கும் ரஷ்யாவில் வாழும் பிள்ளைகளுக்கும் உணர்வு ரீதியாகவோ, நடத்தையிலோ, மனப் பாங்கிலோ எந்த ஒரு வேறுபாடும் இல்லை எனும் போது மனிதர்கள் அனைவருக்கும் அதேநிலை தானே? அப்படியாகும் போது நாடுகளுக்கிடையிலான போர்கள் மூள்வது ஏன்?

நம் குழந்தைகளின், நம் அருகில் வாழும் குழந்தைகளின் ,நாம் சந்திக்கும் மழலைகளின் மனங்களைப் புரிந்து கொள்ள எப்போதாவது முயல்கிறோமா?

நாம் பெற்ற குழந்தைகளின் அன்றாட நிகழ்வுகளை அமைதியாக அமர்ந்து பகிர்ந்து கொள்ளும் பெற்றோர் நம்மில் எத்தனை?

நம் குழந்தைகளுக்கு, அவர்களின் குழந்தைகளுக்கு நாம் விட்டுச்செல்லக் கூடிய அருமையான பரிசு உலக அமைதியும், மாசற்ற சூழலும் தான் ..இதற்கான எம்மாதிரியான முயற்சியிலாவது நாம் ஈடுபட்டிருகிறோமா?

குளிரும் உள்ளம்:

ஆலங்கட்டி மழையில் திடுமென நனைந்து விட்டார் போன்ற ஒரு சிலிர்ப்பு கதையெங்கும் வாசகனுக்கு ஏற்படுகின்றது..அத்தனை இன்பம், அத்தனை ஆசுவாசம். காதல், மோதல், ஏமாற்று, துயரம் என்று பேசும் கதைகளைப் படித்த நம் கண்களுக்கு குழந்தைகளின் சின்னஞ்சிறு உலகம் எவ்வளவோ ஆறுதலை, குளிர்ச்சியை அளிக்கின்றது.

நம் உள்ளத்தின் ஆயிரமாயிரம் அடுக்குகளில் உறைந்து கிடக்கும் நம் பால்ய கால நினைவுகளை உயிர்ப்பித்து, நம் கண்களின் முன்னே உலவ விடுவதில் ஆசிரியர் வெல்கிறார் என்றால்..நான் அனுபவித்த அருமையான இன்பத்தை, ஒரு ஆலங்கட்டியை சேமிக்கும் உணர்வோடு என் கரங்களில் பொத்தி ....இதோ உங்களுக்காகக் கொண்டு வந்திருக்கிறேன்..ஒரு சில துளிகளாவது எஞ்சி, உங்கள் இதயங்களைக் குளிர்வித்தால் அதுவே என் எழுத்தின் வெற்றி.

ஒரு பறவைக்குஞ்சு தன் கூட்டில் இருந்து விழுந்து விடுவதைக் காண நேர்ந்தால் எப்படி நம் இதயங்கள் துடிக்குமோ அப்படித்தான் துடிக்கிறோம் ஸெர்யோஷாவை அவன் தாயும் தந்தையும் நீங்கும் போது..அதே போல அவன் தன் குடும்பத்துடன் சேர்ந்தான் என்ற செய்தியோடு கதை நிறைகையில் அப்பாடா எனும் ஆனந்தம் விழிக்கடையில் துளிர்க்கிறதே..

அப்படிப் பொங்கி எழும் ஒரு உளப்பூர்வமான அன்பின் மிகுதியில் உலக மாந்தர் அனைவரையும் ஒன்றாக அணைத்துக் கொள்ள உள்ளம் ஏங்குகிறதே இதுவல்லவோ இலக்கியத்தின் பலன்? இலக்கியத்தின் பெரு வெற்றி?

..ஷஹி..

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails