Search This Blog

Wednesday, September 14, 2011

உடலுறுப்பு தானமும் அதன் இன்னொரு கோணமும்-MY SISTER'S KEEPER


மை ஸிஸ்டர்'ஸ் கீப்பெர் (MY SISTER'S KEEPER) ,

(ஜூலை-15 இல் மூன்றாம்கோணத்தில் பதிவிட்டது)

நிக் கஸாவெட்ஸ் இயக்கி,

காமெரூன் டயஸ் (ஸாரா ஃபிட்ஸ்கெரால்ட்),தாய்

அபிகைல் ப்ரெஸ்லின் (அன்னா ஃபிட்ஸ்கெரால்ட்), இரண்டாவது மகள்

அலெக் பால்ட்வின் (காம்ப்பெல் அலெக்ஸாண்டெர்),வக்கீல்

ஜேஸன் பேட்ரிக் (பிரையன் ஃபிட்ஸ்கெரால்ட்),கணவன்

சோஃபியா வாசிலியெவா(கேட் ஃபிட்ஸ்கெரால்ட்),முதல் மகள்

ஜோன் குசாக் (ஜட்ஜ் டீ சால்வோ), நீதிபதி

ஈவான் எல்லிங்க்சன் (ஜேசீ)மகன்

ஆகியோர் நடித்த ஹாலிவுட் படம்.

ஸாரா , பிரையன் காதல் மணம் புரிந்து கொண்ட இளம் தம்பதி. முதல் குழந்தை கேட். கேட்டுக்கு இரண்டே வயதான சமயம் தொடர்ந்த உடல் நலக் குறைபாட்டுக்கான காரணம் அறிய முற்படுகையில் அவளுக்கு ரத்தப் புற்று என்பது அறிய வந்து அதிர்ந்து போகிறார்கள் ஸாராவும் பிரையனும். டாக்டரின் ஆலோசனையின் பேரில் கேட்டுக்கு ரத்தம், முதுகுத் தண்டு வடத்திலிருந்து பிரித்து எடுக்கக் கூடிய திரவம் மேலும் தேவையான உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்வதற்காகவே ஒரு குழந்தையை ஜெனெடிக் எஞ்சினியரிங் என்று கூறப்படும் முறையில் பெற்றுக் கொள்கிறார்கள்.

குழந்தையின் பெயர் அன்னா, மிக ஆரோக்கியமான அழகான அன்னா, பிறந்ததில் இருந்ததே தன் சகோதரி கேட்டுக்கு ரத்தம், மஜ்ஜை ஆகிய உயிர் காக்கும் உடல் உறுப்புகளை கொடுத்தவண்ணமே இருக்கிறாள். இதற்காக அவள் பல சிக்கலான, வலி மிகுந்த மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கு ஆளாகிறாள். அன்னாவுக்கு பதினோரு வயதான சமயம் தன்னால் இனியும் தன் சகோதரிக்காக எந்த மருத்துவ சிகிச்சைக்கும் ஆளாக முடியாது என முடிவடுத்து மிகப் பிரசித்தி பெற்ற வழக்கறிஞர் காம்ப்பெல் அலெக்ஸாண்டரின் உதவியை நாடுகிறாள்.புற்று நோய் சிகிச்சையால் கேட்டின் சிறுநீரகம் செயல் இழந்துவிட அன்னாவின் சிறுநீரகத்தை கேட்டுக்குப் பொறுத்திவிட ஸாரா முடிவெடுப்பதில் உடன்பாடில்லாமல் ஆரம்பிக்கிறது அன்னாவி்ன் போராட்டம்.



தன் முதல் குழந்தையின் வியாதியோடு போராடவே தன் வக்கீல் தொழிலை விட்டிருக்கும் ஸாரா, வழக்கை தன் கையில் எடுத்து, தன் முதல் மகளுக்காக இன்னொரு மகளிடம் போராடுகிறாள்.

.காம்ப்பெல், எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு தன் உடலின் மீது தனக்கே ஆளுமையற்ற துயரம் பற்றி நன்கு அறிந்தவர் என்பதும், நீதிபதி டீ சால்வோ மிகச் சமீபத்தில் தன் மகளைப் பறி கொடுத்த தாய் என்பதும் கதையில் குறிப்பிடத்தக்க அம்சங்கள்.

ஃப்ளாஷ் பேக்குகளில், கதாபாத்திரங்களின் மூலம் கேட் தன்னைப் போன்றே புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஓர் இளைஞனிடம் காதல் கொள்வதும் அவன் நோய் முற்றி இறப்பதும், அச்சமையங்களில் ஸாரா தன் மகளின் துயர் துடைக்கப் போராடுவதுமாக மனதைக் கனம் கொள்ளச் செய்யும் காட்சிகள் பல.

பிறந்ததில் இருந்தே பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கு ஆளாகினாலும் தன் சகோதரியிடம் மிகுந்த அன்பு கொண்ட சிறுமி அன்னா, ஏன் இம்மாதியான ஓர் அதிர்ச்சியை தன் குடும்பத்தின் மீது சுமத்தினாள்?


தன் வயதுக்கு மீறின ஓர் முடிவை அவள் எடுக்க என்ன காரணம் என்ற கேள்விகளுக்கு விடைகளை, மிக அழகாகவும் நெகிழ்வாகவும் விளக்குகிறது படம்.

எப்படியும் இறந்து விடக்கூடிய தன் காரணமாக தன் மொத்தக் குடும்பமும் அலைகழிவதை விரும்பாத கேட் தான், தன் தங்கையை மெடிகல் எமான்சிபேஷன்(MEDICAL EMANCIPATION) அதாவது தனக்கு தன் அக்காவின் உயிர் காக்கவென செய்யப்பட்டு வந்த சிகிச்சைகளில் இருந்து விடுதலை வேண்டுமென சட்டத்தின் உதவியை நாடச்செய்கிறாள். தன் மகளின் உயிர் காக்கவே வாழ்வை அர்ப்பணித்திருக்கும் ஸாரா தன் இளைய மகளின் செய்கையை குடும்பத்துக்கு எதிரான துரோகச்செயலாகப் பார்க்க, அன்னாவின் கண்ணோட்டத்திலிருந்து அவள் செய்கையின் நியாயம் பற்றி வாதிடுகிறது படம் ,காம்ப்பெலின் மூலம்.கேட் இறந்து கொண்டிருக்கும் பெண் , அவளுக்காக ஸாரா போராடுவதில் அர்த்தம் இல்லை என்று கணவன், மருத்துவர்கள், சகோதரி என்று எல்லோரும் சொல்லியும் விடாமல் போராடும் ஸாராவின் தாய்மை உணர்வு நெகிழ்வூட்டுவது.

தன் உடலின் மீது தனக்கே உரிமை இல்லாத துயர நிலையும், தன் ஒரு சிறுநீரகத்தை தானம் செய்வதால் தனக்கு ஏற்பக்கூடிய பிரச்சினைகள் பற்றியும் அந்தச்சின்னஞ்சிறுமி பேசும் வசனங்கள்மிக யதார்த்தமான, அதே சமயம் மனதில் தைக்கக் கூடியவை.

"என்னோட ஒரு கிட்னிய குடுத்துட்டு நான் வாழ்நாள் முழுக்க ஆரோக்கியமா இருப்பேன்னு நிச்சயமில்லையே..என்னால கொழந்த பெத்துக்க முடியாமப் போகலாம்"

...என்றெல்லாம் அச்சிறுமி பேசுவது கொஞ்சமும் மிகையாகத் தோன்றாமல் போவது தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். நோயுற்றிருக்கும் சிறுமியிடம் நமக்குத் தோன்றும் அதே பரிதாப உணர்வை அன்னாவின் பாலும் தோன்றச்செய்து விடுகிறார் இயக்குனர். இருவரின் தாயாக நடித்திருக்கும் காமெரூனின் திறமைக்கு இந்தப் படம் ஓர் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. முடிவில் அன்னாவின் பக்கம் வெல்கிறது.


கேட் தன் முடிவை அமைதியாக ஏற்றுக் கொள்கிறாள்.

கீமோதெரபியின் எதிர்வினையாக கேட்டின் தலைமுடியெல்லாம் கொட்டி அவள் மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளாகும் போது தன்னுடைய அழகிய தலைமுடியை மழித்து தன் மகளுக்குக் துணையாக காமெரூன் டயஸ் வலம் வரும் காட்சியும் , காதலனுடன் ஒரு நடன நிகழ்சிக்குச் செல்ல கேட் தயாராவதும், தன்னுடைய மரணத்துக்குப் பிறகும் அவர்களுக்கான வாழ்வு உண்டு, அதை அவர்கள் அழகாக வாழ வேண்டுமென்பதே தன் விருப்பம் என்று கேட் தன் தாயை சமாதானம் செய்யும் காட்சியும் மிகுந்த கவித்துவம் மிக்கவை.


மரணம் பற்றியும் அதற்குப் பிறகான வாழ்வு பற்றியும் சகோதரிகள் இருவரும் பேசிக் கொள்வதை ஒரு மெலோடிராமா போலல்லாமல் மிக யதார்த்தமான ஒரு காட்சியாக பதிவிட்டிருக்கிறார்கள். இம்மாதிரியான காட்சிகளின் போது இதுவே ஒரு தமிழ்ப் படமாக இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நம்மால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

சாவோடு போராடும் ஒரு சிறுமியின் அவலத்தை இப்படி படமாக்கியிருக்கிறார்களே என்று துக்கிக்க வைக்காமல் உறுப்பு தானம், மரணத்தை அழகாக எதிர்கொள்ளும் தைரியம், புற்றுநோயாளிகளின் மனநிலை, அவர் தம் குடும்பத்தாரின் மனநிலை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், உறுப்பு தானம் பற்றின சகலமும் என பல்வேறு தளங்களில் பயணிக்கிறது திரைப்படம். மிகத்திறமையான கலைஞர்களின் நடிப்பால் ஒரு அசாதாரணமான , அருமையான உணர்வை அளிக்கின்றது மை ஸிஸ்டர்ஸ் கீப்பர்.

இந் நிலை பலரின் குடும்பங்களில் ஏற்படக் கூடியது தான். எங்கள் அத்தையின் வீட்டில் நடந்தது. அத்தைக்கு நான்கு மகள்கள், இரண்டு மகன்கள்...மூன்றாவது பெண்ணுக்கு நெஃப்ராடிக் சின்றோம் என்ற சிறுநீரக வியாதி. அழகிய இளம் பெண்ணாக அவள் வளர்ந்து வந்த சமயத்தில் சிறுநீரகங்கள் செயல் இழந்து போயின. பண வசதி உள்ளவர்கள் என்றாலும் சிறுநீரகம் யார் தானம் செய்வது என்ற குழப்பத்தில் குடும்பமே நிலை குலைந்தது. கடைசி மகள் சிறுமி என்பதாலும் இரண்டாம் மகளுக்கு அப்போது வரையிலும் குழந்தைப் பேறு வாய்க்கவில்லை என்பதாலும், மகன்கள் இருவரது ரத்தமும் நோயாளிக்கு பொருந்தவில்லையாதாலாலும் முதல் மகள் தான் தானம் செய்தாக வேண்டும் என்ற நிலை. அவளுக்கு மறுக்கவும் முடியாமல் சம்மதிக்கவும் இயலாமல் மிகுந்த இக்கட்டு, தனக்கு ஏதாவது சிக்கலென்றால் தன் கணவன், நான்கு சிறு குழந்தைகள் கதி என்னவென்ற கவலையில் மறுத்தே விட .குடும்பமே அவளோடு கோபம் கொண்டு இன்று வரையில் அதே கசப்புணர்வு தொடர்கிறது. அவளுடைய கோணம் என்றும் ஒன்று இருக்கலாமோ என்று யாருக்குமே தோன்றவில்லை...

எந்த ஒரு பிரச்சினைக்கும் இரண்டு அல்ல மூன்றல்ல பல கோணங்கள் உண்டு, சம்பந்தப்பட்டவர்களின் பார்வையில் அணுகினால் மட்டுமே அது புரியும் என்பதை ஆழமாக ஆணித்தரமாகப் பதிந்திருக்கும் படம் தான் மை ஸிஸ்டர்ஸ் கீப்பர்.

....ஷஹி...

2 comments:

  1. நல்ல விமர்சனம்..எந்த வருடம் வந்தது, என்ன மொழி படம் என்பதையும் சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்..

    ReplyDelete
  2. நன்றி அனந்த்..வருடம் தெரியவில்லை..காமெரூன் நடித்திருக்கிறார் ஆங்கிலப்படம் தான்..

    ReplyDelete

Related Posts with Thumbnails