Search This Blog

Friday, September 9, 2011

பசியெனும் முள் -(ரமலானில் எழுதியது)

இப்படியாக: நோன்பு நாட்களில் கடிகார முள்ளும் சரி, மனதின் ஓட்டமும் சரி..நிதானமாகத்தான் இருக்கிறது. ஜெயமோகனின் "பண்படுதல்" இன்று தான் வாசித்து முடித்தேன்.

ஜெயமோகனின் கேள்வி "நாம் ஒருவரையொருவர் பார்த்தால் சாப்பிட்டாச்சா? என்று கேட்கிறோம். விசித்திரமான இந்தப் பழக்கம் எப்படி நமக்கு வந்தது? சாப்பாடு அரிதாக இருந்த ஒரு காலகட்டம் நமக்கிருந்ததா? பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நம் தேசத்தைப் பதற அடித்து பல லட்சம் பேர் சாகக் காரணமாக அமைந்த மாபெரும் பஞ்சங்களின் விளைவா அது?"என்று ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார் ஜெமோ. சாப்பிட்டாச்சா என்ற கேள்வி நம் சமூகத்தில் எத்தனை சகஜமான ஒன்றாக இருந்தால்- இது ஒரு விசித்திரமான கேள்வி என்று ஜெயமோகன் சொல்வது நமக்கு ஏக விசித்திரமாக இருக்கும்? தவிரவும் "இப்படி நாளெல்லாம் நோன்பிருந்து தான் உங்கள் இறைவனுக்கு நீங்கள் வழிப்பட வேண்டுமா? அப்படித் துன்புறுத்துவதில் என்ன இன்பமாம் இறைவனுக்கு" என்று மாற்று மதத்தினர் பலரின் கேள்வியும் ,பசி குறித்த பல்வேறு கோணங்களை யோசிக்க வைக்கிறது.

நோன்பு என்பது

நோன்பைப் பொறுத்த மட்டில் நாம் நோன்பாய் இருந்தாலும், வணங்கினாலும், அவனைத் துதித்தாலும் இவற்றுக்கு மாற்றமாக நடந்து கொண்டாலும் இறைவனுக்கு எந்த உயர்வும் தாழ்வும் இல்லை..புகழ் அனைத்தும் அவனுடையது. "பின்னே ஏன் தான் பசியாக் கெடக்கணும்" என்றால்..ஈமானின் (இறையச்சம்) மிக உயரிய நிலை அது...இறைவனின் பண்புகளில் ஒன்றான உண்ணாமை, பருகாமை, துணை நாட்டம் இல்லாமை ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறோம் நோன்பு நேரத்தில். அதற்குரிய பரிசு அவனிடத்தில் உள்ளது.

சகோதரர்களின் கதை

இப்படியாகப் பசியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில், இளமையில் வறுமை கொண்டு ,தந்தையை இழந்த காரணத்தால்- பசியும், துயரமுமாக வளர்ந்த மூன்று சகோதரர்களின் கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மூத்தவர் இலக்கியத்தின் மீதும், ஓவியம் வரைவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்,பசியை அலட்சியம் செய்து மணிக்கணக்கில் இலக்கியம், சமூகம் பற்றிப் பேசக்கூடியவர். தந்தை இறந்த போது பதின் வயதை எட்டியிருந்தவர்...வாழ்வு குறித்த பல வண்ணக் கனவுகளில் மனம் அலையத்துவங்கும் வயது. உணவின் மீதும், அதன் நுட்பமான (nuances) ருசிகளிலும், உடலைப் பண்படுத்துவது உணவுதான் என்று தெரிந்து விடுவதால் அதன் அளவுகளிலும் கூட விருப்பம் ஏற்படும் வயது.

உடன் பிறந்தோரையும் உலகம் அறியாத் தாயையும் கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இளம் தோளில் விழுந்து விட, பசி எனும் முள்ளும் ஆழமாகத் தைத்து, அதன் ஒரு பாதியை மட்டும் பிடுங்கி வெளியேற்றி , மறு பாதியோடு வாழ்நாளெல்லாம் போராடியவர். வாழ்வு குறித்த ஆசைகளும் கனவுகளும் ஒரு புறம் இழுக்க, குடும்ப பாரம் மற்றொரு புறம் சாய்க்க, தன் பசியைப் பொறுத்துக் கொண்டு கனவுகளோடே வாழ்ந்து மறைந்தார். வெகு ருசியான உணவு வகைகள் பறிமாறப்படும் சமயங்களில் மட்டும்- நரைத்து விட்ட அவர் கண்ணிமைகளின் படபடப்பினுள் உணவின் மீது வெகு விருப்பம் கொண்டு, அது மறுக்கப்பட்ட ஒரு இளைஞனின் ஆசை ததும்பும் முகம் வெளிப்படும்.

இரண்டாம் சகோதரர் உயர்நிலைப்பள்ளிப் படிப்பிலிருந்தார்...உண்டு வந்த கொஞ்சம் உணவுக்கும் பஞ்சம் என்றானதை ஒரு போராளிக்குரிய அலட்சியத்தோடு கையாண்டார்..கிடைத்தால் சரி கிடைக்காவிட்டால் எப்போது கிடைக்குமோ அப்போது. ஆனால் பசியின் மீது கொண்டு விட்ட வன்மத்தை அவர் படிப்பில் காட்டினார். குடும்பத்தின் முதல் கிராஜுவேட், ஊரிலேயே முதன்முதலில் அரசாங்க வேலை என்ற ,பல எட்ட இயலா லட்சியங்களை அவரை அடைய வைத்தது இளமையில் அவரும், அவர் உடன்பிறந்தோரும் அனுபவித்த பசி தான்.

வாழ்வின் சிறப்பான இளமையில், நல்ல ஓர் நிலைமைக்கு அவர் வந்து விட்ட பிறகும் கூட, மிகப் பிடித்தமான உணவுகளைக் கூட ஒரு சிறுவனின் அளவே தான் உண்ண முடியும் என்ற நிலைப்பாட்டுக்கு அவர் உடலும் சரி மனமும் சரி வந்து விட்டது. உணவைப் பொறுத்த மட்டில் அதன் அளவு, அவர் மட்டிலும் பசியின் கொடூரத்தை அவர் ருசிக்க நேர்ந்து விட்ட இளம் பிராயத்தோடே நின்று போனது. தான் அனுபவித்த கொடுமையை யாரும் சந்திக்கலாகாது என்ற எண்ணம் வேரூன்றி விட, சோஷலிசத்தின் பால் ஈடுபாடு கொண்டவராகவும், மிகுந்த இரக்க சுபாவியாகவும் ஆனார்.

இளையவர் உணவு தான் வாழ்வின் சுவை என்றெண்ணும்,அது தவிர வேறெந்தச் சுவை பற்றியும் அறியாத வயது. பசிக் கொடுமையைத் தாள இயலாத துயரம் சமூகத்தின் பால் கோபமாக மாற, முன்னேற வேண்டும், உணவுக்கு வழியில்லாமல் கிடந்த நிலையை மறக்க, மறைக்க வேண்டும் என்று வெறி கொண்டு உழைத்தார். தன் பிள்ளைகளின் மீது தன் இளமையின் நிழல் கூடப் பட்டு விடலாகாது என்ற தீவிர எண்ணம் கொண்டார். தினமும் செய்யும் சமையலே விசேஷமானதாகத் தான் இருக்க வேண்டும் அவருக்கு, வருவோர் போவோர் அனைவரையும் உண்ண வைத்தே அனுப்புவார்." சாப்பிடத்தானே இத்தன கஷ்டப்படுறேன்..அதுல என்ன அளவு? என்ன சிக்கனம்?" என்று எப்போதும் பேசி வந்தார். குடும்பத்தில் யார் யாரின் கைப்பக்குவம் எத்தகையது, எங்கு என்ன உணவு சிறப்பானது? என்று எல்லாம் அத்துப்படி. உண்ணும் போது ஒரு பருக்கையை யார் சிந்தி விட்டாலும் துடித்து , அதை எடுத்து தன் தட்டில் இட்டுக்கொள்வார். ஆனால்---வழிவகையிலேயே யாரும் உண்ணாத சிறப்பான உணவு வகைகள், உடுத்தாத உடுப்புகள் என்று பிள்ளைகளைப் பேணினார்.

தன் இலட்சியத்தில் வெற்றி அடையும் சமயம், சிறு வயது முதற் கொண்டு, பசியைத் தணித்துக் கொள்ளவெனப் பழகியிருந்த புகைப்பழக்கத்தினால் புற்றுநோய்க்கு ஆளாகி துடித்து இறந்தார். பிள்ளைகள் இரண்டும் இலட்சக்கணக்கில் ஈட்டி, பல ஆயிரம் பேரின் பசியாற்றும் வல்லமை பெற்று விட்டார்கள்..ஆனால் தொண்டைப் புற்றின் காரணமாக வாய்வழியாக திரவம் கூட உட்கொள்ள இயலாமல் அவர் உயிர் பிரிந்தது.

இப்படியாக ஒரே தாய் வயிற்றில் பிறந்து, வளர்ந்த மூன்று பேரின் வாழ்வில் நுழைந்த பசியெனும் முள் மூத்தவரின் இதயத்தில் வாழ்நாளெல்லாம் தைத்துக் கிடந்தது, இரண்டாமவரைத் தைத்த முள் அவரின் வயிற்றைச் சுருக்கி, வாழ்வை விரித்தது. இளையவரைத் தைத்த புண் புரையோடிப்போனது..

பசியெனும்சக்தி எல்லா தேடல்களுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும், போர்களுக்கும், உலக இயக்கத்துக்கும் ஆதாரமான சக்தி! பசி கொடுக்கும் பாடங்கள் தான் எத்தனை, எத்தனை? அது கொண்டு வரும் நினைவுகள் ஆயிரம்..பசி நேரத்தில் உணவிட்டவரை உள்ளளவும் மறந்து விட இயலுமா? பூமியில் விழுந்த முதல் கணம் தோன்றும் உணர்வு பசி தானே? அதைத் தீர்க்கும் தாயை விடப் பெரும் உறவு எது உலகில்? தன் பசியை உணர்பவன் அன்றோ மற்றையோரின் பசியை உணர்ந்து ஆற்றத்துணிவான்?

இப்படியான பசியின் அருமையை, கொடுமையைப் பேசும் சமயம்--- உணவை வீணாக்காமலும், பசியோடு இருப்பவர்கள் முகம் பார்த்து அதைப் போக்கும் எண்ணம் கொண்டவர்களாகவும் ,' உலக மாந்தர் யாவருக்கும் பசிபிணியைப் போக்கு' என்று இறைவனை இறைஞ்சுபவர்களாகவும் நாமெல்லாரும் இருப்போம்.

பசியெனும் போதே நம் மனக்கண்களில் எத்தியோப்பியப் குழந்தைகளின் எலும்பும் தோலுமான துயர் தோய்ந்த சித்திரம் முள்ளாய்த்தைக்கிறது அல்லவா? தமிழச்சியின் "கலவி" எனும் தலைப்பிலான நினைவில் நிற்கும் கவிதை ஒன்று------

ஒரு கர்ப்பிணியின் வாந்தியினை

எடுத்து உண்ட எத்தியோப்பியக்

குழந்தைகளின் பட்டினியைத்

தொலைக்காட்ச்சியில் பார்த்த பின்பும்,

கலவி இன்பம் துய்த்த

அந்த இரவிற்குப் பின்தான்

முற்றிலும் கடைந்தெடுத்த

நகரவாசியானேன் நான்.

(தமிழச்சி)

முடிவாக சொல்லி வந்த கதையை நான் முடிக்கவில்லையே? சகோதரர்களில் மூத்தவர் என் பெரியப்பா, இரண்டாமவர் அப்பா...இளையவர் சித்தப்பா.

..ஷஹி..

4 comments:

  1. அப்பப்பா...

    நோன்பை இஸ்லாம் கடமையாக்கிய காரணத்தை அறிய.. சிந்தனையை தூண்டும் ஒரு பதிவு.. கட்டாயம் படிக்க வேண்டியது...

    http://pirapanjakkudil.blogspot.com/2011/08/blog-post.html

    ReplyDelete
  2. ஒருத்தரை பார்த்தா “சவுரியமா?” - (அதாவது சவுக்கியமா? - எங்க ஊரில் சில வாண்டுகள் “சாவுரியமா?” - என்று கூட தான் கேள்வி கேட்கிறோம். அதுக்காக நல்லா இல்லாத காலம் ஒண்ணு இருந்தாச்சா என்றெல்லாமா கேள்வி எழுப்புவார்கள்?

    ReplyDelete
  3. எத்தியோப்பிய மக்களின் நிலை பற்றிய கவிதை கடினம்

    ReplyDelete
  4. நன்றி இஸ்மாயில்..

    ReplyDelete

Related Posts with Thumbnails