Search This Blog

Sunday, July 31, 2011

எஸ்.ரா வின் சிறுகதை "மிருகத்தனம்"

எஸ்.ராவின் "அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது" சிறுகதைத் தொகுப்பிலிருந்து "மிருகத்தனம்". அன்பின்மையையும், கொடூரமான மனப்பான்மையையும் மிக எளிதாக மனிதன் மிருகத்தனம் என்ற பெயரில் அடக்கிவிடுகிறான் ஆனால் ஒரு விலங்கினுள் மனிதனின் பால் இருக்கும் அன்பையும், பரிவையும் மிகத் துள்ளியமாக எஸ்.ராவின் இந்தக் கதை பதிவு செய்திருக்கிறது. எஸ் ராவின் ஆகச்சிறந்த சிறுகதை இது என்று எப்போதுமே நான் நினைப்பதுண்டு..

காதல் மணம் புரிந்து கொண்ட தம்பதியர் சியாமளாவும் ராஜனும். சியாமளாவின் தங்கை அவளுக்கும் முன்பாகத் திருமணம் செய்து கொண்டது குறித்து எரிச்சலுற்றிருந்த சியாமளா ,பிடித்திருந்தது என்ற ஒரே காரணத்துக்காக ரொம்பவும் கூடப் பழகாமல் ராஜனை மணம் புரிந்து கொள்கிறாள்.


அதிகாரம், உணவு, பணம் ஆகியவை தவிர மற்ற விஷயங்களில் அதிக ஆர்வமற்றவன் ராஜன். ஆனாலும் கூட ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய் ஒன்றை மிகப் பிரியமாக வளர்க்கிறான். மணமான புதிதில் நோவா என்ற அந்த நாயை வெகுவாக வெறுத்து வந்த சியாமளா, பின்னாட்களில் அதை விரும்பத் துவங்குகிறாள். தனக்கும் அந்த நாய்க்கும் ஏதோ ஒரு ஒற்றுமை இருப்பதாக அவள் உணர்ந்திருக்கலாம். வேட்டையில் மிகச்சிறந்து விளங்கி வந்த ஜெர்மன் ஷெபர்ட் வகை நாய்கள், கால மாற்றத்தோடு தங்கள் பூர்வீகம் மறந்து, சாதுவாக மாறி ,வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்றார் போல, இயல்பு திரிந்து விளங்கியது காரணமாக இருக்கலாம்.

ஒரு காலத்தில், குடும்பத்துக்கு, குழுவுக்குத் தலைவியாக கோலோச்சி வந்த பெண், கால மாற்றத்தில் இயல்பு திரிந்து அடிமைப்படவில்லையா? எது நடந்தாலும் மௌனியாக , பார்த்துக்கொண்டு மட்டும் இருக்க அவள் பழகிக் கொள்ளவில்லையா? வீட்டைக் காக்கவும், எஜமானனுக்கு மகிழ்ச்சி அளிக்கவும் நன்றியாக இருக்கவும் பழகிகொண்டது நாய் மட்டும் தானா?

அதற்குத் தேவையானவற்றை கவனித்துக் கொண்ட ராஜனிடம் அதீத பிரியத்துடன் இருந்தது நோவா. அவன் மகிழ்ந்தால் மகிழவும், பிரிந்தால் துயரப்படவும் ,உணர்வு பூர்வமான நட்பு கொண்டிருந்தது நோவா. ஒரு விலங்கிடம் அத்தனை பரிவும் அன்பும் கொண்டிருந்த ராஜன், தன்னை விரும்பி மணந்து கொண்ட சியாமளாவிடம் ஒத்துப் போகவியலாமல் மணவிலக்குப் பெற்றுக் கொள்கிறான். மனித மனங்களின் விசித்திரப் போக்கையும், ஒரு கூரையின் கீழ் வாழ்ந்து விட்டால் மட்டும் இரு மனங்கள் ஒன்றிவிடுவதில்லை என்பதையும் மிக அழுத்தமாக, துயரார்ந்த வகையில் பதிகிறது இந்த சிறுகதை. அதோடு அன்பாய் வளர்த்துவந்த ஒரு விலங்கை ஒரு மணவிலக்கு இத்தனை பாதிக்கும் என்றால் , அத்தம்பதியருக்கு குழந்தை ஒன்று இருந்தால் அதன் நிலை என்ன என்ற முகத்திலறையும் கேள்வியையும் நம் மனதில் எழுப்பத்தவறுவதில்லை இச்சிறுகதை.


விவாகரத்து அளிப்பதற்கு ராஜன் இடும் நிபந்தனை தன்னுடைய பணம் எதையும் அவள் எதிர்பார்கக் கூடாது என்பதே. ஒப்புக்கொண்டு, திருமணம் ஆன இரு வருடங்களுக்கு உள்ளாகவே மணவிலக்கு பெற்றுக்கொள்கிறாள் சியாமளா. நோவாவை தானே வைத்துக் கொள்வதாகவும் கூறிவிடுகிறாள். அகத்தனிமை எத்தனை கொடுமையானது என்பதை மனதைப் பிழியும் வகையில் பின்வரும் பத்திகள் விவரிக்கின்றன.

வேலைக்குச்செல்வதும் உணவகங்களில் உண்பதும், இரவில் நோவாவைக் கட்டியபடி உறங்குவதுமாக இருக்கும் சியாமளா, சில நாட்களில் நோவாவின் போக்கில் மிக விசித்திரமான ஒரு மாறுதலைக் கவனிக்கிறாள். நாய் என்று ஒரு சின்னஞ்சிறு குழந்தையிடம் சொன்னால் கூட அது நாய் குரைக்கும் சப்தத்தை எழுப்பித்தான் அந்த விலங்கின் பெயரோடு தொடர்புகொள்ள முயலும். அப்படி குரைப்பதையே தொழிலாகக் கொண்ட நோவா குரைக்க மறந்து விடுகிறது. மிகத்துக்ககரமான சம்பவங்களின் காரணமாக பேச்சிழந்து போகும் மனிதர்களை நாம் திரைப்படங்களில் கண்டிருக்கிறோம். ஏன் நிஜவாழ்விலும் கூடத்தான். ஆனால் தன்னுடைய எஜமானன், எஜமானியின் வாழ்வில் நிகழ்ந்து விட்ட ஒரு துயர சம்பவத்துக்குத் துக்கித்து நாய் ஒன்று குரைக்க மறுப்பதை இத்தனை புதிர்மையோடும், படிப்பவர் உள்ளங்களில் குற்றஉணர்வு தோன்றும் விதமாகவும் வேறெவரும் எழுதிவிட முடியுமா?

மருத்துவரிடம் அழைத்துச்செல்கிறாள் சியாமளா நோவாவை. ஒரு வேளை ஒரு துணையைத் தேடி வருந்தி அது தன்னியல்பு மறந்திருக்கலாம் என்கிறார் மருத்துவர். அதற்கான பெண் துணை ஒன்றிடம் நட்பு கொள்ளச்செய்ய முயன்று தோற்கிறாள் சியாமளா. அந்தப் பெண் நாயை நோவா ஏற்க மறுத்துவிடுகிறது. ஒரு விலங்கு கூட ஏதோ தன் பால்கிளர்ச்சியைத் தீர்த்துக்கொள்ளஒரு இணை கிடைத்தால் போதும் என்று எண்ணிவிடவில்லை. மனிதன் ஏன் எல்லா நேரமும் அப்படி நினைப்பதில்லை? உக்கிரமான அதன் மௌனத்தைத் தாங்கிக் கொள்ள இயலாத சியாமளா, ராஜனைப் பிரிந்த துயரத்தைத்தான் நோவா அப்படி வெளிப்படுத்துகிறதோ என்ற எண்ணத்தில் அவனிடம் சில நாட்கள் அதை விட்டு வைக்க, அந்த முயற்சியிலும் தோல்வி. நோவாவின் மௌனத்தின் புதிர்த்தன்மையைத் தாங்கிக்கொள்ளவோ புரிந்துகோள்ளவோ இயலாத ராஜன், அதை விற்றுவிடும் படியாக அவளுக்கு அறிவுறுத்துகிறான்.

நோவாவின் மூலம் ஆசிரியர் சொல்ல விழையும் கருத்து, இணைந்திருந்த உள்ளங்கள் பிளவு படுவது இயற்கையாலும் தாங்கவியலாத துயரம் என்ற செய்தியைத் தானா? வீட்டுக்கு அதனை மீண்டும் அழைத்து வந்து விடும் சியாமளா, அதற்கு ,தான் ராஜனைக் காதலித்த கதையைக் கூறுகிறாள். கதையின் மிகுந்த இறுக்கம் மிகுந்த கணம் இது. யாரோ யாரையோ காதலித்த கதை என்று அவளுக்கே தோன்றி விடும் வகையில் மிகவும் அன்னியப்பட்டு உணர்கிறாள்.

இம்மாதிரியான ஒரு விலகல் தன்மை தோன்றிவிடுவது ஏன்? எல்லாக் காதல்களுமே இம்மாதிரியான ஒரு கணத்தைக் கடந்து தான் ஆக வேண்டுமா? அல்லது ஒரு ஈர்ப்பை, பால் கவர்ச்சியை காதல் என்று தவறாகப் புரிந்து கொண்டுவிடுவதால் ஏற்பட்ட துயரமா இது?

தங்களுடைய முதல் இரவின் அனுபவத்தை எண்ணிப் பார்க்கிறாள் சியாமளா. தன்னை ராஜன் ஒரே முறை தான் முத்தமிட்டான் என்பதை கவனத்தில் கொள்கிறாள். முத்தம் என்பது தான் எத்தனை ஆத்மார்த்தமான ஒரு அன்புப் பரிமாற்றம். பேரன்பும் காதலும் இல்லாமல் முத்தங்கள் இட்டுக்கொள்ள இயலுமா? என்பது பெண்களின் உள்ளத்தில் எப்போதுமே எழும் ஒரு கேள்வி. பெண் மனதின் அபோத மனத்தைக் கூட மிகக் கச்சிதமாகப் புரிந்து கொண்டிருக்கிறார் எஸ்.ரா. மட்டுமல்லாமல் அதனை வார்த்தைகளிலும் வடித்து விடுவது மிகுந்த ஆச்சர்யம் தான்.

ஒரு தாம்பத்தியத்தில் உடற்கிளர்ச்சிகளைத் தீர்த்துக்கொள்ள சந்தர்ப்பம் அமைவது பெரிய விஷயம் அல்ல. ஆனால் முத்தங்கள் குறையத் துவங்குவது மிகுந்த அச்சமேற்படுத்தும் ஒன்று தான். காதல் இன்மையைத் தான் நின்று போன முத்த சப்தங்கள் தம்பதியருக்கு முரசறைந்து தெரிவிக்கின்றன.

நோவாவின் அமைதியை இனிமேலும் தாங்கிக் கொள்ளவியலாது என்று நினைக்கும் சியாமளா ஒரு வயது முதிர்ந்த மனிதருக்கு அதனை விற்றுவிட தீர்மானிக்கிறாள். அன்று இரவு மட்டும் அதைத் தன்னோடு வைத்துக் கொள்வது என்று முடிவு செய்பவள் தன்னைப் போலவே தனிமையைத் தாங்கவியலாமல் அது தவிப்பதை அறிந்து கண்ணீர் விடுவதாகக் கதை முடிகிறது. ராஜனைப் பிரிந்து துயரத்தில் ஆழ்ந்து போனது நோவா மட்டுமல்ல ...அவளுடைய மனதைப் போலவே தவிக்கும் நோவாவின் மனதையும் ராஜன் புரிந்து கொள்ளவில்லை.

தன்னை விரும்பி ஏற்றுக்கொண்டவர்களின் துயரத்தை, தன்னுடைய துயரமாக எண்ணும் நோவாவின் "மிருகத்தனம்" மனிதர்களிடம் இல்லாமல் போனது எத்தனை வேதனைக்குரியது?

..ஷஹி..

(மீள் பதிவு மூன்றாம்கோணத்திலிருந்து)

Tuesday, July 26, 2011



Friday, June 24, 2011

உயிர் வாதை..



தனிமையும் வாழ்வின் துயரமும் தோள்களில் நுகத்தடியாய்க் கனக்க, உயிர் இருந்ததால் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயமும், குடிமயக்கத்தின் ஆசையும் இரு பெரும் சவுக்குகளாய் அவன் இருத்தலை இயக்க, தொலைந்த எதையோ தேடுபவனாய் குனிந்தவாறே தான் நடப்பான் செபாஸ்டியன். காவலாளியாய் அவன் வேலை பார்த்து வந்த எங்கள் எதிர்வீட்டின் வாசலிலிருந்து ,உணவுக்காக அவன் நம்பியிருந்த தெருவோர கடைகள் வரை ,அவனைத் தொடர்ந்து நடக்க விடாது எங்கள் தெரு.


வாச்மேன், தாத்தா ,அங்கிள் என்று அவரவர் குணத்துக்கும் ,வசதிக்கும் படிப்புக்கும், ஏற்றவாறு அழைக்கப்பட்டான் செபாஸ்டியன். தோட்ட வேலையும், கழிவு நீர்க்கால்வாய்கள் அடைபட்டும், வீட்டின் எட்டாத உயரத்தில் பிடிவாதமாய்த் தொங்கும் ஒட்டடையும் அவனுக்காக எப்போதும் காத்திருந்தன. வீட்டுக்காரர்கள் பணத்தின் மீது வைத்திருந்த மதிப்பு, அல்லது அதன் இன்மை யைப் பொறுத்து வேலைகளுக்கான கூலி கிடைக்கும் அவனுக்கு. நாளை வரை தாங்காது -என்பது போன்ற உணவுப் பதார்த்தங்கள் கெட்டுப் போகாத நிலையிலும் , குளிர்பெட்டியில் ஓரிரு நாள் தாங்கும் போல- என்று படும் உணவுகள் இனி முடியாது என்ற நிலையிலும் அவனுக்குக் கிடைத்து வந்தன.

எதற்கும் , எவரிடத்தும் எதிர்ப்போ, கோபமோ அவன் தெரிவித்து யாரும் பார்த்ததில்லை. குடிபோதையின் உச்சத்தில் மட்டும் தன்னிலை மறந்து உளறிக்கிடப்பான். அப்போதும் கூட தாளாத தன் தனிமையை, வாழ்வின் அவலத்தை, துரோகத்தைத் தாளவியலாத தன் இதயத்தின் குமுறலை காற்றிடமும் , புளித்து நாறின நிலையிலும் பாதுகாத்து வைத்து அவற்றுக்கென அவன் வைக்கும் சோற்றுக்காக அவன் புறமே அலையும் நாய்களிடமுமே பேசித்தீர்ப்பான். ஒரு கயிற்றுக் கட்டிலும், ஓர் பயணப்பையில் அவன் வைத்திருந்தஓரிரு உடுப்புகளுமே அவனுடையன என்று பின்பொரு நாளில் அடையாளம் காட்டப்பட்டவை.


கடுமையான குடிபோதையில் கூட அவன் வாந்தி எடுத்ததோ, அருவருப்பான வார்த்தைகள் பேசியதோ இல்லை.ஒரு முறை எங்கள் குடிநீர்க் குழாயில் தாங்கவியலாத துர்வாடை வீச, அழைத்து வரப்பட்டான் செபாஸ்டியன். பெரிய அணில் ஒன்று இறந்து மிதந்தது தொட்டியில் ..கொஞ்சமும் யோசிக்காமல் தொட்டியில் இறங்கி நிமிடத்தில் அணிலை எடுத்து வெளியில் வீசினான், துப்புரவாகத் தொட்டியச் சுத்தம் செய்து அவன் போன பிறகும் இரண்டு நாட்களுக்கு தொட்டியின் குழாயைத் திறக்க மனம் வரவில்லை..அன்றிரவு செபாஸ்டியன் ஓங்காரித்து வாயில் எடுத்துக்கொண்டிருந்ததை பதைக்கும் குற்ற உணர்வோடு பார்த்துக்கொண்டிருந்தேன்.

புதிதாக வளர்ந்து கொண்டிருந்த குடியிருப்புப் பகுதி என்பதால் புதராக மண்டிக்கிடக்கும் பகுதிகளில் இருந்து கிளம்பும் பாம்புகளுக்குப் பஞ்சமில்லை. மிகப் பெரிய சாரைப்பாம்பு ஒன்றை அதன் வாடையில் இருந்தே கண்டு பிடித்து செபாஸ்டியன் அடித்துக் கொன்ற சில நாட்கள் வரை தெருக்குழந்தைகளுக்கு எல்லாம் அவன் தான் ஹீரோ. சலிக்காமல் பாம்பை அடித்த கதையை பல முறை குழந்தைகளுக்கு அவன் சொல்லிவந்தான்.

கையில் இருந்த காசையெல்லாம் குடிக்க செலவு செய்துவிட்ட நிலையில் சில இரவுகளில்,

"ஏதாவது மிச்சம் மீதாரி இருக்கா பாப்ப்ப்பா"...

என்று குரல் கொடுப்பான்... கொடுக்கும் எதையுமே மிகுந்த ஆர்வத்துடனும், மரியாதையுடன் பெற்றுக் கொள்வான்..

"ஐயோ இது தங்கம்ல..போதும் போதும்ம்ம்"

என்று அவன் பதறும் குரல் இதையே சமைத்த உடன் கொடுக்காமல் விட்டோமே என்ற வாதையை சில நிமிடங்களுக்கு உண்டு பண்ணும். பின்னிரவுகளில் மின் தடை ஏற்படும் சில வேளைகளில், காற்றுக்காக வெளிகேட்டைத் திறக்கும் சமயங்களில் தன் கயிற்றுக் கட்டிலில் பிதற்றியவாறு அவன் கிடப்பதைப் பார்த்திருக்கிறேன்...இவனையும் ஒருத்தி மணந்திருக்கிறாள் அவனோடு உறவு கொண்டு ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாகப் பிள்ளைகள் பெற்றுக்கொண்டிருகின்றாள் என்ற எண்ணத்தில் தலை தானாக உலுக்கிக் கொள்ளும்.

"அடுப்பில் வாணலியை ஏத்திட்டுக் கூட வாச்மேனை கடைக்கு அனுப்பி பலசரக்கு வாங்கி வரச்சொல்லலாம்..ஒரு நிமிசம் வாங்கிட்டு வந்துடுவாரு" என்று ஓயாமல் அவனை வேலை வாங்கி வந்த ரமா பிரஸ்தாபிப்பாள். துபாயில் வேலை பார்த்து வந்தான் அவள் கணவன். பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச்செல்லவும் கூட்டி வரவும், கடைக்குப் போகவுமாக செபாஸ்டியன் அவள் இட்ட வேலைகளை எல்லாம் தட்டாமல் செய்து வந்தான். ரமாவின் குடியிருப்பில் அரசல்புரசலாக செபாஸ்டியனையும் அவளையும் சம்பந்தப்படுத்தி பேச்சு கிளம்ப முழுவதுமாய்க் குடித்திருந்த நிலையில் பேசியவர்களைக் கிழித்துக் கூறு போட்டு விட்டான் செபாஸ்டியன். இரவெல்லாம்...

"யார..யார"

என்றவாறே கத்திக் கொண்டிருந்த அவன் அலறல் நாராசமாக இருந்தது. ரமாவின் குடியிருப்பில் வேலை பார்த்து வந்த கலா சொல்லித்தெரிய வந்தது, செபாஸ்டியனின் மனைவி அவனை நீங்கியிருந்தது அவனுடனான வெறுப்பினால் மட்டும் அல்ல, இன்னொருவன் பால் கொண்டுவிட்ட அன்பால் என்பது. குழந்தைகளை வெகுவாக நேசித்து வந்த செபாஸ்டியன் , வீட்டை விட்டு வெளியேறி தன் பிழைப்பை அடுத்த ஊரில் அமைத்துக் கொண்டான். ஒரு படிக்காத கிராமத்தான் தன் மனைவியின் போக்கைத் தடுக்க நினைக்காமல் நாசுக்காக அவளை நீங்கி வந்திருக்கிறானே என்று தெருவே அதிசயித்துப் போனது.

இரவின் தனிமையிலும் வெக்கையிலும் புழுங்கி அவன் பிதற்றுவது எந்த மொழியில் என்று யோசிக்கும் வண்ணம் தான் இருக்கும். என்ன தான் சொல்லி பிலாக்கணம் பாடுகிறான் என்று உறுத்துக் கேட்டாலும் ஒன்றும் புரிந்ததில்லை . தாளாத துயரத்தின் , மாளாத உயிர் வாதையின் வலி பேசும் மொழி அது .

மாமன் மகள் திருமணத்துக்காக ஊருக்குக் கிளம்பிய நிலையிலும் குளிர்பெட்டியில் மதியம் வைத்த சோற்றின் நினைவு எனக்கு,

"இதை மறந்துடாம செபாஸ்டியன் கிட்ட குடுத்துடுங்க"

என்று அவரிடம் சொல்லி விட்டுக் கிளம்பினேன். வழியில் செபாஸ்டியனின் மகன் சூசை வந்து கொண்டிருந்தான். லேசான மனப் பிறழ்வில் இருப்பவன் சூசை, பல முறை அப்பனைப் பார்க்க வந்து அவனிடம் இருக்கும் பணத்தையெல்லாம் சண்டையிட்டுப் பிடுங்கிக்கொள்வதுடன், அடித்துக் காயப்படுத்தி விட்டும் போவான். மகன் பிஏ படித்தவன் என்பதில் மிகுந்த கர்வம் செபாஸ்டியனுக்கு. சூசையைப் பார்த்ததுமே எரிச்சல் கிளம்பிவிட்டது என் மகள் ஆஃபியாவுக்கு,

" பாரும்மா வந்துட்டான் செபாஸ்டியன் அன்கிள அடிக்க"

என்று பொரிந்தாள். இப்படியே அடித்துப் போட்டுக் கொண்டிருந்தால் எத்தனை நாள் தான் அவனும் தாங்குவான் என்ற எண்ணத்தோடு தான் ரயில் ஏறினேன்.

திருமணம் முடிந்து வீடு வந்து சேர்ந்த அடுத்த நிமிடம், பிரின்ஸிபல் மனைவி மாலா அடித்துப் புரண்டு ஓடி வந்தாள் ..

"அக்கா தெரியுமா? நம்ம வாச்மேன் எறந்து போயிட்டாரே? "

அடிவயிற்றில் இருந்து என்னையறியாமல் புறப்பட்டது ஒரு கேவல்..

"ஐயோ நான் ஊருக்குப் போகும் போது நல்லாத்தானே இருந்தாரு? சூசை ஏதும் அடிச்சுப்போட்டானா?"

"இல்லக்கா..அந்த சூச பய இந்தா தெருக்கோடியில தான் அளுது அளுது மொகம் வீங்கிப்போயி கெடக்கான்...அப்பன் சாவுக்குக் கூடப் போகலையாம்! கூப்புட வந்தவங்க கிட்ட நான் வந்தா நானும் எங்கப்பனோட போவேன்னு அளுதிருக்கான்...மக கல்யாணம்னு ஊருக்குப் போன எடத்துல அந்த ஆளு கிணத்துல விளுந்துடாராம் கா"...



அதிர்ச்சியில் இருந்து மீளாமலே படுக்கையிலேயே கிடந்தேன்.

"போடி போ அந்தாளுக்கும் நமக்கும் என்னடி..ஒரேயடியாத்தான் கெடக்கே ..நம்ம வீட்டுலயா வேல பாத்தான்?"

என்ற இவரின் எரிச்சல் பேச்சு எழுப்பியது என்னை. நான் அறிந்த செபாஸ்டியனின் வாழ்நாளெல்லாம் அவனைச் சுற்றி இருந்த மர்மப் புகையே அவன் மரணத்திலும் சூழ்ந்து விட்டதே ...இப்படியும் சாவு வருமா? மனித வாழ்வு இத்தனை அற்பமா? இத்தனை வருடம் எல்லாருக்காகவும் உழைத்து வந்த ஓர் உயிர் போனதைப் பற்றி பெரிதாய் ஏன் யாரும் பதறவில்லை? கேள்விகள் ..

மாலையில் வீடு திரும்பியவர் ,

"கடைத்தெருவில் செபாஸ்டியன் சாவு தான் பேச்சே..கிராமத்துல பொறந்து அங்கயே வளந்த ஆளு..கெணத்துல தெரியாம விழ வாய்ப்பே இல்ல! குடிபோதையில விழுந்தாலும் தண்ணியில விழுந்ததும் தெளிஞ்சிருக்கும்..ஒண்ணு அந்த ஆளு வேணும்டு விளுந்திருக்கணும் இல்ல அந்த ஆளுக்கு ஏதோ சொத்து பத்து இருக்காம் அதுக்காக அவன் அங்காளி பங்காளி யாரும் கொன்னிருக்கணும். மக கல்யாணம் முடிஞ்ச ஒரு மணி நேரத்துல பொணமா மெதந்திருக்காரு" .

ஊருக்குப் போவதற்கு முதல் நாள் அடித்த மழையில் சாய்ந்து கிடந்த ரங்கூன் மல்லிக் கொடியைத் தூணோடு சேர்த்துக்கட்டிக் கொண்டிருந்த செபாஸ்டியன்,
"நம்ம பாப்பாளுக்குக் கல்யாணம் பாப்பா..நானும் ஊருக்குப் போறேன் ரெண்டு நாள்ல்ல வந்துவேன்"..

என்றது நினைவில் சுற்றியவாறே இருந்தது. அதில் பாப்பா என்பது நானா என் மகளா என்று ஏனோ நினைப்புத்தட்டியது..மகளையும் அவள் வயதினள் யாரையும் பாப்பா என்று வாஞ்சையுடன் அழைத்து வந்த உயிர். இப்படி எப்படி மரணம் வந்தது என்றே தெரியாமல் போய் விட்டது. பயமும் வேதனையுமாகவே அரைகுறைத் தூக்கம் சில நாட்களாக..ஒரு அதிகாலையில் கனவா இல்லை உறக்க மயக்கம் தானா என்றே புரியாத ஒரு நிலை. பெரும் பாரத்தை முதுகில் சுமந்தவாறு தள்ளாடி வந்த மாடு ஒன்று என் வீட்டின் வாசலில் கால் மடங்கி விழுகிறது..

"ஏய் செத்துப் போன மாட்டுக்கு ஏன்டி தண்ணி கொண்டு போற"

எனும் இவர் குரலை சட்டை செய்யாமல் தண்ணீரோடு விரைகிறேன். விழுந்து கிடந்த மாட்டின் வாயில் நுரை தள்ள, தண்ணீரைத் தெளித்ததும் திறந்தன அதன் கண்கள்...ஏனோ அதன் வாய் அசைந்தது "யார யார" என்னும் விதமாகத்தான் கேட்டது எனக்கு.....

..ஷஹி..

Saturday, May 28, 2011

பேய்கள் உடுத்தும் பச்சை!




ஓவியப் பட்டறை ஒன்றில்

ரங்கோலியில் வல்லவள் எனவும்,

அவள் வைக்கும் கொலுவுக்கு

இணையேதும் இல்லையென்றும்

அறிமுகம் செய்விக்கப்பட்டபோது...

சுதா அணிந்திருந்தது

அந்த

கரும்பச்சையில் மஞ்சள் பூக்கள்

இட்ட புடவையைத்தான்..

அசத்தும் அழகிலும், ரசிக்கும் கவிதையிலும்,

நட்பான பிறகு,

உப்புமா செய்ய

ரவையில்லாத தரித்திரத்திலும்,

முதல் சம்பளத்தில்

தம்பி

வாங்கித் தந்த முதல் சேலை

அது என்ற

பச்சைப் புடவை-சரித்திரம்

சொல்லிச் சொல்லி முகம் சிவந்தாள்.

சோழி மூக்கன்- என்று

விஜி..எப்போதும் கேலி செய்யும்,

சுதாவின் கணவன் அருகில்

அன்றொரு நாள்

பால் மேனி பளபளக்க

அதே புடைவையில் அவள் ஜொலித்த போது-

சோழிமூக்கனின் முகத்தில் ஜொலித்தது-

நிச்சயமாய்

அசூயை தான் ..

மணமாகிப் பல வருடம்

கழித்து

பெற்றது ஒன்று

அதுவும் பெட்டை

என்று

மாமியார் ஏசுவதைச் சொல்லி அழுத போதும் ,

மீண்டும்

சூல் கொண்டு இருப்பதைப் பகிர்ந்து

இனிப்புக் கொடுத்த போதும்

கூட

அதே புடவையில் தான்

அவளைப் பார்த்ததாய் ஞாபகம்..

இன்னம்,

பிள்ளை பெறச்சென்ற போதும்

அதையே அணிந்து..

தீட்டுக்கறை நீங்கவென ,

ஆலா இட்டு அலசினாளாம்.

ஊர் மாற்றிச்சென்ற போதும்

மறக்காமல் அலைபேசினாள்...

நாத்தி பிரசவம்,

மாமனார் புறக்கணிப்பு,

கணவனின் கோபம்,

மாமியாரின் சிடுசிடுப்பு...

எல்லாம் மறக்க வைக்கும்

ஆசிரியை வேலை கூட.

ஏண்டி முதல் நாள் பள்ளிக்கும்

அதே பழம் புடவை தானே என்றதற்கு,

கிளுகிளுத்து அவள் சிரித்தது

இன்றும் கேட்கிறது

கனவுகளில்..

திடீரென ஓர் நாள்..

சோழி மூக்கன் ராமாவதாரம் எடுக்க,

ரோஷம் தாங்காமல்-

தூக்கிட்டுத் தொங்கிவிட்டாள்..

பாப்பாத்தி பிணத்துக்கு

துளுக்கச்சி மாலையா?

கேட்டாளும் கேட்பாளே மாமியார்காரி

என்று வெறுங்கையோடு தான்

அவள் வீடு ஏகினேன்..

பிணமென்று அஞ்சியிருக்கப்

பெரும் பயம் தேவையில்லை..

எப்போதும் போலத்தான்

இதழ்விரித்துப் படுத்திருந்தாள்...

இடையிலும் அதே

பச்சையைத் தான் உடுத்திருந்தாள்..

பூக்கள் இட்ட பச்சை

பிணத்துக்கு எதற்கென்று

சேலையில் பூப் பறித்து

அவள் புறமே உதிர்த்து விட்டேன்.

எல்லாப் பேய்களும்

வெள்ளை உடுத்தாதாம்!

இன்று..

என் கனவில் வந்தபோதும்

அதே..

வெற்றுப் பச்சையில் தான்

வந்து வெகு நேரம் பேசிச் சென்றாள்..

..ஷஹி..

Saturday, March 26, 2011

ஆனந்த விகடன், தாமிராவின் சிறுகதை "மியாவ் மனுஷி"

23/2/11 தேதியிட்ட ஆனந்த விகடனில், நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பில், தாமிரா எழுதியுள்ள மியாவ் மனுஷி இக்காலகட்டத்தின் நடப்பை, மனித மனங்களின் பலவீனத்தை, அப்படியே உள்ளபடி பதிவு செய்துள்ள சிறுகதை.

"என் பலவீனங்களின் காட்டில் சுள்ளி பொறுக்காதே"

என்ற ,கதைக்கு மிகப் பொருத்தமான, அறிவுமதியின் கவிதையோடு துவங்குகிறது மியாவ் மனுஷி.

முக நூலில் ஏற்படும் ஒரு அறிமுகம் எப்படி மதியை மயக்கி , காதலோ இது என்ற எண்ணத்தை, திருமணமான ஒரு ஆண் பெண் இருவருக்குள்ளும் ஏற்படுத்துகிறது என்று விவரிக்கிறது கதை. புகைப்படத்தை மட்டுமே பார்த்து, குறுஞ்செய்திகளில் தெரியும் மொழியறிவிலும் புலமையிலுமே மட்டுமே ஒருவர் மீது மற்றவர் மோகங்கொண்டு விடுகின்றனர் பார்வதியும் கதைசொல்லி ஜேம்ஸும். தினந்தோறும் பறிமாறிக்கொள்ளும் குறுஞ்செய்திகளிலும் பகிர்ந்து கொள்ளும் லைக்குகளிலும் தெரிக்கும் விருப்பத்துளிகளில் அச்சம் நீங்கி " நாம் எங்கு இருக்கிறோம். நட்பின் எல்லையில் மஞ்சள் கோட்டு விளிம்பில் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. உன் புன்னகை விரல் பிடித்து எனை அழைத்துச் செல்லும் இடத்தில் நட்பு இல்லை." என்பதாக ஜேம்ஸ் இட்டு விடும் வாசகத்தில் கலக்கமுற்று விடுகிறது பார்வதியின் பெண் மனம்.


வழமையே போல் ஆண் பயம் இல்லாமல் மனதில் உள்ளதைப் போட்டு உடைத்து விடுவதும், பெண் அச்சமுறுவதுமாக வரிகள் நகர்கின்றன. சில நாட்களின் வலையமதிக்குப் பிறகு, மீண்டும் குறுஞ்செய்திப் புள்ளிகளிட்டு காதல் கோலம் போட்டாகிறது. "சரி ,இந்தப் பட்டாம்பூச்சிகளை என்ன செய்யலாம். எனக்குள்ளும் பறந்து திரிகின்றன"...இந்த வரிகள் இருவருள்ளும் ஒரு முக்கிய மாற்றம் துவங்கிவிட்டத்தை உணர்த்த, "ஒரு வேளை பட்டாம்பூச்சியற்ற வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ என்னவோ" என்று, ஜேம்ஸ்- யோசிப்பது இக்காலகட்டத்திற்கு மிக முக்கியமான ஒரு சிந்தனை. மிகப் பிரமாதமான, விரசமற்ற , யதார்த்தமான ஒரு சொல்லாடல். ரொமான்ஸ், அதாவது காதலற்ற மணவாழ்வு, எத்துணை துன்பமான ஒன்று, அது எத்தகைய விளைவுகளை ஒரு மணவாழ்வில் ஏற்படுத்தும் என்பதை மிக அழுத்தமாக இந்தச் சிறுகதை பதிவு செய்திருக்கிறது.

"திருமணம் முடிந்ததுமே காதல் ஜன்னல் வழியாகப் பறந்து விடும்" என்கிறது ஒரு ஆங்கிலப் பழமொழி. மணமாகும் வரையில் ஒருவருக்காக மற்றவர் உருகுவதும், காத்திருப்பதும், அடுத்தவரை எப்படியாவது நெகிழச்செய்து விட வேண்டும் என்று தவிப்பதும், தவறுகளை எல்லாம் பொறுத்து மன்னிப்பதும், கவர்வதற்காக ஏகப் பிரயத்தனம் செய்வதும்... மணம் புரிந்து கொண்டவுடனே எப்படியெல்லாம் மாற்றம் கொண்டு விடுகிறது?

நண்பர்களிடமும் தொழிற்ரீதியில் பழக வேண்டியிருக்கும் வாடிக்கையாளர்களிடமும் காட்டும் மரியாதையையும் கண்ணியத்தையும் நம் துணையிடம் ஏன் காட்ட முடிவதில்லை?

என்ன தான் இருவரும் ஒன்று என்றெல்லாம் பேசிகொண்டாலும் புறக்கணிப்பின் வலி மற்றவரை வாதை செய்யத்தானே செய்கிறது, மட்டுமல்லாமல் குடும்ப வாழ்வுக்கே ஒரு மிகப் பெரிய அச்சுறுத்தலை உண்டு பண்ணி விடுகிறதே?

தன் துணையிடம் இல்லாத, தான் பெரிதும் எதிர்பார்த்து கிடைக்காத ஒன்று இம்மாதிரியான நட்பில் கிடைப்பதாகத் தோன்றும் போது மனித மனம் தடுமாறத்தானே செய்யும்?

உனக்கு என்ன குறை வைத்தேன்? என்று துரோகம் இழைத்துவிட்ட துணையிடம் பாதிக்கப்பட்டவர் முறையிடுவதை அன்றாட வாழ்க்கையில் இப்போதெல்லாம் அதிகம் பார்க்க முடிகிறது. ஆனால் இந்தக் கேள்விக்கு அர்த்தமேயில்லை! ஏதோ குறைகிறது என்பது தானே இப்படியான அதி தீவிர மனநிலைக்குக் கொண்டுசென்று விடுகிறது?. எல்லை தாண்டிவிடுவது என்பது நம் சமூகத்தில் மிகக் கேவலமாகப் பார்க்கப் படும் ஒரு செயல் என்பதை எல்லோரும் உணர்ந்து தான் இருக்கின்றனர்..ஆனாலும் துணிவது என்பது, மிகுந்த மன அழுத்தம் மற்றும் தேவைகளின் காரணமாகத்தான் இருக்கவியலும். ஏதோ கலாச்சார சீரழிவுக்கு அடித்தளமிடத் துணியவில்லை நானும்...சீரழிவை ஓரளவுக்காவது சீரமைக்கவியலுமா என்று தான் எண்ணமிடுகிறேன். பிரச்சினையைப் புரிந்து கொள்ளாமல் எப்படி சரி செய்வது?

எல்லா மனித மனங்களும் எதிர்பார்த்து ஏங்கும் அடிப்படைத்தேவைகளை திருமணம் பூர்த்தி செய்ய வேண்டும். தன் துணையின் எல்லாத் தேவைகளையும் திருப்தி செய்கிறோமா என்ற கேள்வியை மணமான அனைவரும் நேர்மையாகத் தன்னைத்தானே கேட்டுக்கொள்ளவேண்டிய கால கட்டமும், வாழ்சூழலும் வந்து விட்டது...பதில்" இல்லை "எனும் பட்சத்தில் எப்பாடு பட்டாவது அதை சரி செய்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் ஏற்படப்போவது ஒரு மிகப் பெரிய சீரழிவுதான்.

கதையின் ஊடாக "மியாவ்" என்று ஜேம்ஸும் பார்வதியும் ஒருவரையொருவர் அழைத்துக்கொள்வதும்," நான் என் லைஃப் டைம்ல இவ்ளோ சிரிச்சது இல்லை "என்பதும் , "நாப்பது வயசுல காதல் வந்தா அது நல்லதா ஜெம்" என்பதாகவும் வசனங்கள் வருகின்றன. உணர்த்துவது எதை என்று யோசிக்கும் போது இவையெல்லாம் இயல்பான மனித எதிர்பார்ப்புகளும் தேவைகளும் தான் என்பது பட்டென்று புலனாகின்றது, கொஞ்சப்படவேண்டும், கவனிக்கப்படவேண்டும், ஆராதிக்கப்படவேண்டும் என்பதெல்லாம் எல்லோருள்ளும் இருக்கும் ஆதங்கங்கள் தானே? பூர்த்தி செய்யப்படாத சித்திரங்கள் தமக்கான ஓவியனைத் தேடிக்கொள்ளும் காலம் இது.

"சமூகம் இதைக் கள்ளக் காதல்னு சொல்லும். என் குழந்தைகளுக்கு நான் ரோல் மாடலா இருக்க விரும்பறேன். தாய்மைக்குள்ள காதல் அசிங்கம் ஜெம்" என்று பார்வதி பேசும் வசனம் மிக அழுத்தமான ஒன்று. இம்மாதிரி, திருமணத்துக்கு அப்பால் ஏற்பட்டு விடும் பல காதல்கள் ,சொல்லப்படாமலும் , கட்டுக்குள் இருப்பதும் குழந்தைகளின் நலன் கருதித்தான். ஏனென்றால் மண வாழ்வு ஆட்டம் கண்டுவிட்டால் அடித்தலமின்றி இடிந்து போவது குழந்தைகளின் வாழ்க்கை தானே? "பலவீனங்களில் சுள்ளி பொறுக்கும் மனநிலை எல்லோருக்குள்ளும் இருக்கிறது. பார்வதி சற்று யோசித்துப் பார்த்தாளானால் அவள் கணவனுக்கும் எனக்கும் அதிக வேறுபாடு இல்லை என்பது புரிந்திருக்கும்". இவை தான் கதைக்கே முத்தாய்ப்பான வரிகள் முகத்திலறையும் உண்மையும் கூட. ஆனால் மனம் தடுமாறிவிட்ட நிலையில் இப்படியெல்லாம் தர்க்கரீதியில் யோசித்து தீர்வு காணுவது மிகக் கடினம். தடுமாறாமல் தன்னையும் தன் துணையையும் காத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.

"நான் உனக்கு அம்மாவா இருக்கலாம்னு நெனைக்கிறேன். காதலோட தாய்மையில் உன்னைக் குழந்தையா ஏத்துக்கலாம்னு பாக்கறேன். காமம் இல்லாத ஒரு காதல் ஓ.கே வா" என்று ஜேம்ஸ் கேட்பதாக கதை முடிந்தாலும் தர்க்கம் முடிவதாக இல்லை. சிறுகதை இது என்பதால் இங்கு முடிக்க வேண்டிய ஓர் கட்டாயம் அவ்வளவே..நாவலாக எழுதப்பட்டிருக்கக் கூடிய கதை தானே இது? காமம் இல்லாத காதல் பேச்சளவில் அல்லாமல் வேறெப்படியாம் சாத்தியம்? தன் மனைவியை ஜேம்ஸும், கணவனைப் பார்வதியும் குழந்தையாக வரித்துக்கொண்டிருந்தால் இப்படியோர் கதையே எழுதப்படிருக்காதே? இணையத்தலங்களிலும், முக நூல் போன்ற ஊடகங்களிலும் இப்படி மனங்கள் தடுமாறுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. திருமணம் ஆகிவிட்டால் மட்டும் மனம் என்ன தாவும் தன் இயல்பை மறந்து விடுமா? வெறும் புகைபடங்களையும் வார்த்தை ஜாலங்களையும் நம்பி எல்லைக்கோட்டைத் தாண்டி விட்டால் திருமணத்திலும், குழந்தைகளிடத்திலும், சமூகத்திலும் மிகப் பெரிய சீர்கேடு உண்டாகும் என்பது திண்ணம் . காத்துக் கொள்வது அவரவர் கடமை.

..ஷஹி..

Monday, March 21, 2011

முத்தப் பூக்களால் ததும்பும் வனம்..


உன் அண்மையில் சிலிர்த்து வீங்கும்

காற்றின் அணுக்களை எல்லாம்

மூச்சில் கரைத்து

என்

திசுக்களில் சேமிக்கின்றேன்..

தனிமையின் உக்கிரத்தில்

தகிக்கும் பின்னிரவுகளில்,

திசுக்களை வெடிக்கச் செய்து,

பிரசவித்துக் கொள்வேன் உனை..

முத்தப் பூக்களால் நிரம்பித் தளும்பும்

நம் பால் நிலாகாய் வனத்தில்

அலைந்து திரிவோம் நாம்..

வா.,

பூக்களைச் சேகரித்தும்

பூக்களைச்சிதற விட்டும்..

முதல் கிரணத்தின் வெம்மை பட்டு

கோர்த்த கரங்கள் வியர்க்கும் கணத்தில்

என் உயிர் கிழிந்தழ

விட்டெனை விலகாதே நீ..

அரையிருட்டின் குளுமைக்குள்ளேயே

புன்னகைத்து விடை கொடுக்கின்றேன்,

உன்னிதழ்களின் ஈரத்தையும்

மார்பின் கதகதப்பையும்

மீண்டுமோர் நிலா இரவில் திருப்பித்தரும் வாக்குறுதியோடு..

..ஷஹி..

Wednesday, March 16, 2011

பூந்துடைப்பக்குச்சியும் ஒரு சிகப்புக்கல் மூக்குத்தியும்

"ஆ...அம்மா..ஐயோ என்ன விட்டுடுங்க மா..ஆ"ன்னு..அலறித்துடிச்சேன். அப்பா மடியில உக்காந்தபடி. அம்மாவுக்கும் அழுகை தான்..ஆனாலும் கெட்டியா என்னைப் பிடிச்ச பிடியை விடவேயில்லை அவ. "கொஞ்சம் பொறுடி , செத்த நேரம் தான், ம்ம்ம்ம்..இதோ ஆச்சு பார்" ன்ன படியே ஆசாரி என் காதை சரியாத்தான் குத்தியிருக்குறாரான்னு கவனமாப் பாத்துட்டு தான் என் கையவிட்டா.


அழுகையோட ஏகப்பட்ட எரிச்சலும் சேர்ந்துக்கிச்சு எனக்கு. வீட்டுக்குப் போற வழியில நாடார் கடையில் அடம்பிடிக்காமலேயே பன்னீர் சோடா கிடைச்ச திருப்தியில கொஞ்சம் போல அலட்டிக்கிட்டே வந்தேன்.

வீட்டு வாசலில் யாரோ ஒரு ஜோடி. "அடடா..டேய் சதா எப்புடிடா இருக்கே " ன்னு ஏக அமக்களமாய் வரவேற்கிராரு அப்பா. ":ஏய் மாலா ஆருன்னு தெரியலையாடி எங்க ராணி அக்கா மகன் சதா" ன்னதும் சுதாரிச்சிக்கிட்டாஅம்மா. "வாங்க வாங்க" ன்னு ஒரே உபச்சாரம் . எனக்குக் கெடச்சிருந்த திடீர் மரியாத இடம் மாறினதிலும், சதா என்று அழைக்கப்பட்ட அந்த மாமாவின் மனைவி ராஜியின் அழகில் அசந்தும் நின்ன இடத்திலேயே நின்னுட்டிருந்தேன். "உள்ளவாடா" ன்னு அப்பா கூப்பிட்டதில கூடத்தில இருந்து உள்ளறைக்கு இடம் பெயர்ந்தோம் மொத்த பேரும்.

"இப்பதான் டா உன் மொறப்பொண்ணுக்கு காது குத்தினோம். சொல்லாம கொள்ளாம வந்திருக்க...கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா..ஒன் மடியிலேயே வச்சு காது குத்தியிருக்கலாம்" ன்னு அங்கலாச்சார் அப்பா.

"இல்ல மாமா திடீருன்னு தான் கெளம்பினோம்..இவ அம்மாவுக்கு ஓடம்பு முடியாம இருந்து போன வாரம் தான் தவறிப் போனாங்க, அதுல இருந்து எங்கயாவது போகலாம்ன்னு ஒரே தொணப்பு. எனக்கு உன்ன விட்ட வேற யாரு மாமா இருக்கா? அதான் இங்க கூடிட்டு வந்தேன்" .

பேசுவது புரிந்தும் புரியாமலும் முழிச்சுகிட்டே இருந்தா ராஜி மாமி. சதா மாமா எங்க தாத்தாவோட மூத்த சம்சாரம் ஜானகிப் பாட்டியின் மகள் ராணியின் மகன். பாட்டி இறந்தும் தாத்தா எங்க பாட்டி ஜானகியின் தங்கை சுசீலாவை கட்டியிருக்கிறார். ஆனாலும் மகள் ராணியின் மேல கொள்ள பிரியமாம் எங்க தாத்தாவுக்கு. அக்கா மக, தாயில்லாப் பொண்ணுன்னு எங்க பாட்டியும் ராணி அத்தைய தன் பொண்ணாத்தான் வளத்திருக்காங்க. எங்க அப்பாவையும் ரகு சித்தப்பாவையும் ரொம்ப அன்பா பாத்துப்பாங்களாம் ராணி அத்த.

"எனக்கு மொத மொத முழுக்கால் சட்டையும் ஃபுல் சர்ட்டும் தச்சு போட்டு அழகு பாத்ததே எங்க ராணி அக்கா தான்"னு அப்பா அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கேன்.

கல்யாணமாகி சில வருஷத்திலேயே ஒரே மகன் சதானந்தன தவிக்க விட்டுட்டு ராணி அத்த இறந்துடாங்களாம். அம்மாவும் இல்லாமப் போகவும் ,சின்ன வயசுலயே வீட்டை விட்டு ஓடிப்போய் மைசூரில் செட்டில் ஆகிட்டாரு சதா மாமா. செட்டில்ன்னா காரும் பங்களாவுமா இல்ல..ஒரு பீடி கம்பெனியில் வேலைக்கு சேந்தவர், அங்க வேலை பாத்து வந்த ராஜி மாமியோட அப்பாவப் பழக்கம் பிடிச்சுக்கிட்டாராம் ..அப்புடியே பெண்ணையும் கட்டிக்கிட்டாரு.


மைசூர் பிராமணக் குடும்பத்துப் பொண்ணு ராஜி..மூக்கும் முழியுமா கிளியாட்டம் பெண்ணும்பாங்களே .. ராஜி மாமியைப் பாத்துத் தான் அப்படி சொல்றதே ஆரம்பிச்சிருக்கணும். அப்படி ஒரு தந்த நிறமும், செப்புச்சிலைமாதிரி உடலமைப்பும், ஒய்யாரமும் என்னாலயே வச்ச கண் வாங்க முடியல.நிகு நிகுன்னு பளபளக்குற அந்த மூக்குல ஒரு செவப்புக்கல்லு மூக்குத்தி தான் என்ன அழகு?

யாரோ சொந்தக்காரங்க வந்திருக்காங்கன்னு தெரிஞ்சு பாக்க வந்த வீட்டுக்காரப் பாட்டி கூட "அட ஈரோ மாதிரி பையன், ஈரோயினி மாதிரி பொண்டாட்டி" ன்னு அம்மாகிட்ட கிசுகிசுத்தா.

மொழி புரியாட்டாலும் ஆதரவாப் பேசுன அம்மா கிட்ட கெட்டியா ஒட்டிக்கிட்டா ராஜி மாமி. தினமும் என் காதுப் புண்ணுக்கு எண்ணை வச்சு , அம்மா அளவா ஒடச்சுக் கொடுக்குற பூந்துடைப்பக் குச்சியை ஏதோ அரைபவுன் தோடு அணிவிக்கும் பாவனையோட பயபக்தியா போட்டுவிடுவா .

தன் அம்மா பேர எனக்கு வச்சிருக்குறதுல சதா மாமாவுக்கு ரொம்ப சந்தோஷம், என் மேல தனி பிரியம்..எனக்கும் தான்."இது என்னக்கா, கொழந்தைக்கு நல்ல பவுன் தோடு போடாம ஏதோ குடியானவங்க வீட்டுப் புள்ள மாதிரி பூந்தொடப்பக் குச்சியப் போட்டா வக்கிறது?" ன்னு சதா மாமா கேட்க,

"இல்ல சதா ஒரே புண்ணா இருக்கு பாரு காது, செத்த ஆறிணதும் தங்கத்தோடு தான் போடணும். எங்க அம்மா வீட்டுல நல்ல பெரிய தோடாத்தான் குடுத்திருக்காங்க".

ஒரே பொண்ணுக்கு காது குத்த தாய் வீட்டுலருந்து யாரையும் அழைக்க அப்பா விடல்லங்கிற ஆத்திரத்துல அம்மா சொன்னா .

காய்கறி நறுக்க, வீட்டை சுத்தம் செய்யன்னு ரொம்ப உதவியாஇருந்தா மாமி அம்மாவுக்கு. மாமாவும் மாமியும் கூடத்தில் படுப்பாங்க, நாங்க உள்ளறையில். ஒரு ராத்திரி மாமாவுக்கும் மாமிக்கும் சரியான சண்ட கன்னடத்துல காச்சு மூச்சுனு. என்னமோ ரொம்ப பெரிய பிரச்சினன்னு மட்டும் தான் புரிஞ்சிது எனக்கு.அம்மாவும் அப்பாவும் போய் என்னான்னு கேக்கவேயில்ல..அடுத்த நாளே ரகு சித்தப்பாவை வரவழச்சு அவரோட செங்கல்பட்டு அனுப்பிட்டார் அப்பா, மாமாவையும் மாமியையும். அவங்க போய் ஒரு வாரம் வரைக்கும் யாரும் யாரோடயும் முகம் கொடுத்துப் பேசிக்கல. அப்பாவும் சரி அம்மாவும் சரி ஏதோ ரொம்ப இறுக்கமா இருந்த மாதிரி தோணுச்சு எனக்கு.

மறுபடியும் மைசூர் போக விருப்பம் இல்லன்னு சதா மாமா சொல்லியிருக்காரு..ரகு சித்தப்பாவும் ஒரு பெட்டிக்கட வச்சுக் குடுத்துட்டாராம் அவருக்கு,

"ஆமா ஆமா ஏன் மாட்டான் உங்க தம்பி? பின்ன கொஞ்சமான அழகா அதுன்னு "ஆத்திரமா அம்மா ஒரு நா அப்பாவோட மல்லுக்கட்டிக்கிட்டு இருந்தா.

"சும்மா வாய்க்கு வந்தபடி பேசாதடி, எங்க அக்கா எங்களுக்கு செஞ்சதுக்கு நாங்க எவ்வளவோ கடன் பட்டிருக்கோம்"ன்னு அப்பாவும் பதில் சொன்னாரு.

ரொம்ப நாள் வரைக்கும் சதா மாமாவப் பத்தி பேசறதேயில்ல யாரும். தீபாவளி, பொங்கல்ன்னு பண்டிகைகளின் போது மட்டும் பாத்துக்கிட்டோம் எல்லாரும்..அம்மாவும் சித்தியும் கண்ணாலயே பேசிக்கிறதும், கடுகடுன்னும் இருப்பாங்க அவங்க வந்தாலே. கட வியாபாரம் நல்லா சூடு பிடிச்சு மாமா குடும்பம் செழிப்பமா வந்துக்கிட்டு இருந்த நேரம்.....அங்கயும் என்னவோ பிரச்சின.

"ஊரோட போறோம் மாமா"ன்னு, கொழந்தைகள கையில பிடிச்சிக்கிட்டே கண்ணீரோட சொல்லிட்டு போனாங்க மாமா, மாமி. அவங்க பின்னாடியே அழுதுக்கிட்டே ஒண்ணும் புரியாம கொஞ்ச தூரம் நானும் போனது மறக்கவே முடியாது.

சதா மாமான்னு ஒருத்தர் இருந்ததே மறந்து போச்சு.

என் சொந்த அத்த, அப்பாவுக்கு நேர் மூத்தவங்க பேபி அத்த, அவங்க புள்ளக்கே என்னையும் கட்டிக் குடுத்துட்டாங்க. திடீர்ன்னு சதா மாமா இறந்துட்டார்ன்னும், நாலஞ்சு கொழந்தைகளோட மாமி ரொம்ப கஷ்டப்படுறதாவும் எல்லாம் கேள்விப்பட்டேன். பீடி சுத்தி பொழக்கிறாங்கன்னு சொன்னாங்க.

ராஜி மாமிய நெனச்சாலே அந்த பளபளங்குற மொகமும், செதுக்கி வச்ச மாதிரியான மூக்குல மின்னுர செவப்புக் கல்லு மூக்குத்தியும் தான் நெனப்பு வரும். மூக்கு நுனி செவக்க மாமி அழுற மாதிரி ஒரு கனவு வந்து வந்து போச்சு பல நா.

"ரொம்ப நாளா ஆசப்பட்டுக்கிட்டே இருக்கியே ராணி. இன்னக்கு கடயில கல்லாவுக்கு ஆள் வச்சிட்டு வரேன். ரெடியா இரு சினிமாவுக்குப் போவோம்" ன்னு அன்னக்கி இவர் சொன்னதும் தல கால் புரியல எனக்கு. ஆச ஆசயா ஆரஞ்சு கலர் மைசூர் சில்க், மாட்ச்சா தலையில கனகாம்பரம், செவப்புக்கல் தோடு, மூக்குத்தின்னு கெளம்பிட்டேன். வண்டியில பாதி தூரம் போயிருப்போம், இவர் ஃப்ரெண்ட் ஒருத்தரு வழிய மறிச்சாரு.

"டேய் யாரோ உங்க சொந்தக்காரங்களாம் வீட்டு அட்ரெஸ் தெரியாம கட வாசல்ல வந்து நிக்கிறாங்க, ஒன் பேரும் ராணி பேரும் சொல்றாங்க , சரியா தமிழ் தெரியல மைசூராம்" ன்னதுமே சட்டுனு நானும் இவரும் புரிஞ்சிக்கிட்டோம்.

"வா, வா சதா அண்ணன் குடும்பம் தான் போல"ன்னு பறக்குறாரு இவரும்..

கட வாசல்ல ரெண்டு மூணு பொம்பளங்க, நாலஞ்சு வயசு பிள்ளங்க. தெரிஞ்ச மொகமாவே யாரும் இல்ல!

வத்த, தொத்தலா பல்லெல்லாம் நீண்டு ,தலையில முக்காடு போட்டிருந்த ஒரு வயசான மனுஷிய கேட்டேன்

" சதா மாமா பொண்டாட்டி வரலீங்களா" ன்னு

கண்ணு ரெண்டும் மின்ன சட்டுன்னு நிமுந்து பாத்தவங்களோட செவந்த மூக்குல ,தேவைக்கு அதிகமாவே நீண்டிருந்துது அந்த பூந்தொடப்பக்குச்சி.

...ஷஹி...

Related Posts with Thumbnails