Search This Blog

Sunday, January 29, 2012

புற்றுநோய், அறிகுறி, சிகிச்சை , ஆறுதல் -நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை

நேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் புற்றுநோய் விழிப்புணர்வு கட்டுரைப் போட்டிக்காக திருச்சி ஜி. வி. என் கான்சர் இன்ஸ்ட்டிட்யூட் சென்று அங்கு கீமோதெரபி நிபுணர் டாக்டர் அருணை சந்தித்து புற்றுநோய் பற்றின சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றேன் .

டாக்டர் . திரு . அருண் சேஷாசலம் திருச்சி , தஞ்சாவூர் சுற்றுவட்டாரத்தில் சிறப்பாகப் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவ நிபுணர் . புகையிலை உபயோக ஒழிப்பில் ஆர்வமும் அதற்கான தீவிர செயல்பாடுகளும் கொண்டவர் . சமூகநல ஆர்வமும், மனித நேயமும் மிக்கவர் .

மேலும் டாக்டர் அருண் அவர்களின் குழு புகையிலை சிஸேஷன் (டொபேக்கோ சிஸேஷன் ) புகையிலை உபயோக ஒழிப்பு மாநாடுகளுக்காகவும் புற்றுநோய் சிகிச்சைக்காகவும் 2011 ஆண்டுக்கான Dr . K.S .சஞ்சீவி பரிசு (அவார்ட் ) வென்றவர்கள்

டாக்டர் டாக்டர் அருண் சேஷாசலம் (MD . DNB . MNAMS . DM
டைரக்டர் , தஞ்சாவூர் கான்சர் சென்டர்,
புற்றுநோய் மருத்துவநிபுணர் , DR GCN புற்றுநோய் சிகிச்சை மையம்,
டீச்சிங் ஃபாகல்ட்டி (Teaching Faculty ) சென்னை புற்றுநோய் சிகிச்சை மையம் ,
சென்னை) 5 வருடங்கள் அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரிந்திருக்கிறார் .2010 ஆகஸ்ட்டில் இருந்து திருச்சி GVN புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் உதவியுடன் நான் மேற்கொண்ட சிறிய ஆய்வின அடிப்படையில் எழுதிய புற்றுநோய் அறிகுறி மற்றும் சிகிச்சை குறித்த கட்டுரை :

புற்றுநோய் சிறப்புநிபுணப் படிப்பில் நம் நாடு :

நம் நாட்டில் மிகவும் புறக்கணிக்கப்பட்டு வந்த துறை இது . தேவைக்கு மிகவும் குறைவாகவே புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் இருந்திருக்கிறார்கள் . நாகப்பட்டினம் , திருச்சி , தஞ்சாவூர், புதுக்கோட்டை , பட்டுக்கோட்டை இது போன்ற ஊர்களில் இந்த பத்து வருடங்களாக ஒரு மெடிகல் ஆன்காலஜிஸ்ட் ( புற்றுநோய் மருத்துவ நிபுணர் )இல்லை .

ஒரு சர்ஜிகல் ஆன்காலஜிஸ்ட்டே தான் கீமோதெரபி கொடுப்பதில் இருந்து அறுவை சிகிச்சை செய்வது வரை செய்ய வேண்டி இருந்தது . கதிர்வீச்சு சிகிச்சையும் அவரே தான் செய்து வந்தார் . சிறப்பு சிகிச்சை வேண்டும் என்று நினைப்பவர்கள் சென்னையோ பங்களூரோ செல்ல வேண்டியிருந்தது .ஒரு மெடிகல் ஆன்காலஜிஸ்ட்டுக்கான (கீமோதெரபிஸ்ட் )தேவை மிக அதிகமாக இருக்கிறது நம் நாட்டில் .

வெளிநாடுகளோடு ஒப்பிடும் போது நம் நாட்டில் புற்றுநோய் சிகிச்சையின் தரம் :

திருச்சியிலும் சரி ,சென்னை பெங்களூர் என்று எங்கு போனாலும் சரி அல்லது டெக்ஸாசில் என்றாலும் சரி தான் சிகிச்சை முறை , சிகிச்சை எல்லாமே ஒன்றே தான் .

புற்றுநோய் சிகிச்சை உலகம் முழுவதும் ஒரு ப்ரோடோகாலுக்கு ( ஒழுங்குமுறைக்கு) உட்பட்டது . மருந்துகள் , மருத்துவமுறை எல்லாம் ஒன்றே தான் . உலகநாடுகளில் கிடைக்கும் அதே மருந்துகள் இங்கும் கிடைகின்றன . ஒரு வேளை சூழல் அழகானதாக , மனதுக்கு இசைவானதாக இருக்கலாம் . அதைத்தவிர வேறு ஒரு வித்தியாசமும் கிடையாது .

புற்றுநோய் சிகிச்சையில் ஆகப் புதிய முன்னேற்றம் :

புற்றுநோய் சிகிச்சையின் பக்க விளைவுகள் மிகவும் வேதனை தரத்தக்கவை . கீமோதெரபி கொடுக்கும் போது வாய்புண் , வயிற்றுப்போக்கு , முடிகொட்டுதல் , வாந்தி மற்றும் வெள்ளை அணுக்கள் குறைந்து போகும் .இவை போன்றவை பொதுவாக காணப்படும் விளைவுகள். புற்றுநோயை அழிக்கக் கொடுக்கப்படும் மருந்துகள் , ஆரோக்கியமான அணுக்களையும் சேர்த்தே அழித்துவிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் இவை .

இப்போது புது வரவாக மாஜிக் புல்லெட்ஸ் எனப்படும் மருந்துகள் கிடைக்கின்றன . இவை புற்றுநோய் அணுக்களை மட்டும் டார்கெட் செய்து ( குறி வைத்து ) அழிப்பதால் மிகக்குறைவான பக்கவிளைவுகளே ஏற்படும் . இது தான் மிகவும் ஆறுதல் அளிக்ககூடிய செய்தி .

புகைப்பழக்கம் தனிநபர் மற்றும் சமூக எதிரி

புகையிலை உபயோக ஒழிப்பில் காட்டப்பட வேண்டிய தீவிர ஆர்வமும் செயல்பாடுகளும் :

புகை மற்றும் மதுவை அறவே உபயோகம் செய்யக்கூடாது .

வருமுன் தடுக்கக் கூடிய புற்றுநோய்கள் பலவும் புகையிலை மற்றும் மதுவால் விளையக்கூடியவை .

உதாரணமாக தொண்டைப் புற்று , நுரையீரல் புற்று மற்றும் வயிறு ,குடலில் மதுவால் ஏற்படக்கூடிய புற்றுநோய் இவையெல்லாம் புகை மற்றும் மதுப்பழக்கத்தை கைவிடுவதனாலும் அறவே உபயோகம் செய்யாமல் இருப்பதனாலும் தடுக்கலாம் .

இதற்காகத் தான் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பலவும் ஏற்பாடு செய்து நடத்தப்படுகின்றன திருச்சி , தஞ்சார் போன்ற இடங்களில் . மதுரையில் கூட இந்த மாதம் 13 ஆம் தேதி விழிப்புணர்வு மாநாடு ஒன்று நடந்தது .

டொபேக்கோ சிசேஷன் ( TOBACCO CECCASION PROGRAMMES ) நிகழ்ச்சிகள் இவை. இப்படியான நிகழ்ச்சிகள் தமிழக அரசு சார் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் கூட்டு உதவியோடு நடத்தப்படுகின்றன .

இந்த விழிப்புணர்வு மாநாடுகளின் மூலம் நாங்கள் பொதுமக்கள் எப்படி தங்கள் உறவினர்கள் , நண்பர்களின் மது மற்றும் புகைப்பழக்கத்தை கைவிடச்செய்ய உதவியாக இருக்க முடியும் என்பதை நிறுவ முயல்கிறார்கள் .

முன்னமே இந்த பழக்கங்களுக்கு அடிமையாக இருப்பவர்களுக்கு டீ அடிக்ஷன் சிகிச்சை அளிக்கப் பட வேண்டும் . இந்த வியாதியில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் . அதற்கு இந்தத்துறை வல்லுநர்களின்( proffesssional ) உதவி வேண்டும் . இதற்காக நடத்தப்படும் வர்க்ஷாப்ஸ்களில் சமூக நல ஆர்வலர்கள் சமூக சேவையில் பட்டம் பெற்றவர்கள் உதவியாக செய்கிறார்கள் . இப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு எப்படி அவர்கள் குடும்பத்தினர் உதவி செய்ய வேண்டும் , எப்படி பக்கபலமாக இருந்து அவர்களை இதிலிருந்து மீட்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் அவர்கள் கவுன்சிலிங் செய்வார்கள் .


புகைப்பழக்கம் ஒரு வியாதி :

நிச்சயமாக ! இது வியாதியே தான் . இவர்கள் நம் அன்புக்கும் கவனிப்புக்கும் உரியவர்கள் .இந்த பழக்கங்களுக்கு அடிமையான அநேகம் பேர் இதிலிருந்து மீள வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் . சிறு வயதில் எப்படியோ விளையாட்டாக ஆரம்பித்த இந்த பழக்கம் அவர்களை அறியாமல் அடிமையாக்கி இருக்கும் . பிறகு எத்தனை முயன்றாலும் அவர்களால் அதிலிருந்து வெளியில் வர முடியாது . அவர்கள் ரத்தத்தில் ஊறி விட்ட நிக்கோட்டின் , மது அவர்களை அதிலிருந்து மீள விடாது .அதற்கு குடும்பம் மற்றும் சமூக உதவி மிக இன்றியமையாதது . ஏதோ அவர்கள் வேண்டுமேன்றே செய்வதாக நினைப்பதை முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும் . அடிமைப்பட்டு விட்ட பின் உதவியில்லாமல் அவர்களால் மீளவே முடியாது .

புகைப்பழக்கத்திலிருந்து மீட்பு சிகிச்சை முறைப்படுத்தப்படும் விதம் :

1.புகைபழக்கம் உள்ளவர்களில் சிலருக்கு கவுன்சிலிங் மட்டுமே போதுமாக இருக்கலாம்,

2. சிலருக்கு மருந்துகள் கொடுக்க வேண்டி வரலாம்,

3. சிலருக்கு கவுன்சிலிங்க், மருந்துகள் இவற்றோடு ஒரு புற்றுநோய் சிகிச்சை நிபுணரின் ஆலோசனையும் தேவைப்படும் .

இதையெல்லாம் ஒருங்கிணைக்க ஒரு சமூக ஆர்வலரின் உதவி தேவை அதாவது கவுன்சிலர் . பலமுறை முயற்சி செய்ய வேண்டிவரலாம் . அந்த சமூகநல ஆர்வலர் தொடர்ந்து சிகிச்சை எடுத்துகொள்பவரை கண்காணிப்பார் , தொலைபேசி மூலம் தொடர்பில் இருக்க வேண்டி வரலாம் .

ஒரு முழு வருடம் புகை மற்றும் மதுப்பழக்கத்துக்கு அவர் மீண்டும் சென்று விடவில்லையென்றால் அவர் அதிலிருந்து மீண்டு விட்டார் என்று நினைக்கலாம் .

அடையார் புற்றுநோய் மருத்துவமனை இந்த முயற்சியில் மிகுந்த தீவிரம் காட்டுகிறது. அங்கு பணிபுரியும் டாக்டர் விதுபாலா இந்த குழுவின் மிக முக்கியமான ஒரு நபர் .

பொதுமக்கள் அதாவது சமூகத்தின் பங்கு :

பொது மக்கள் இந்த விஷயத்தில் இம்மாதிரியான முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும். பல உயிர்களை , மிகுந்த நிதியை பலிவாங்கும் இந்த புற்றும்நோயை வரவழைக்கும் முக்கிய காரணியான புகையிலை பயன்பாட்டை ஒழிப்பதில் அனைவரும் உதவ வேண்டும்.

வருத்தத்துக்கு உரிய விஷயம் என்னவென்றால் இப்படி புகையிலை எதிர்ப்புக்குழுக்கள் பணியாற்றிகொண்டு இருக்கும் சமயம் தீவிரமாக அதற்கு ஆதரவாகவும் சில செயல்பாடுகள் இருக்கின்றன என்பது தான் .

இப்போழுது வந்த ஒரு திரைப்படத்தில் அநியாயத்துக்கு புகைப்பழக்கத்தை தூண்டுவது போல் காட்சிகள் அமைந்துள்ளன . படம் முழுவதிலும் ஹீரோ புகைபிடித்த வண்ணமாய் இருக்கிறார் . கடைசியில் இந்திய புகையிலை கழகம் ஐ.டி.சி (INDIAN TOBACCO CORPORATION ) க்கு நன்றி சொல்லியிருக்கிறார்கள் . இது வன்மையாக கண்டிக்கத்தக்கது , வருந்தத்தக்கது .

தீவிர எதிர்ப்புக்குழுக்கள் பணியாற்றிகொண்டிருக்கும் போது , இப்படி மீடியா இவர்களுக்கு எதிராக மக்கள் விரோதமாக நடந்து கொண்டால் புற்றுநோய்க்கு எதிரான இந்தப் போரில் நாம் எப்படி வெல்ல முடியும் ?

பெரிய ரசிகர் கூட்டம் உள்ள கதாநாயகர்கள் இம்மாதிரியான குழுக்களுக்கு ஆதரவாக செயற்பட்டால் மக்கள் எவ்வளவோ நன்மை அடைவர் . மாறாக இந்த மாதிரி தீய வழக்கங்கள் ப்ரொமோட் செய்யப்படும் போது இளம் வாலிபர்கள் அவர்களை அறியாமல் சீரழிகின்றனர் . இவர்கள் பணியில் முக்கியமான ஒரு செயல்பாடாக கல்லூரிகளில் புகைபழக்கத்துக்கு எதிரான காம்ப்கள் நடத்துவதை சொல்லலாம் . இளம் தலைமுறை இப்படி ஒரு கொடூரப் பழக்கத்துக்கு அடிமையாகிவிடாமல் இருப்பது நாட்டு நலனுக்கு அத்யாவசியமான ஒன்று.

வலைத்தளங்கள் மற்றும் பத்திரிக்கைகளின் பங்கு :

புற்றுநோய் பற்றின மற்றும் புற்றுநோய் சிகிச்சை பற்றின சரியான தகவல்கள் மக்களுக்கு சென்று சேர இம்மாதிரியான வலைத்தளங்கள் மற்றும் பத்திரிக்கைகளின் உதவி அவசியம் . மேலும் புகையிலை பயன்பாட்டு ஒழிப்பு பிரச்சாரத்துக்கும் இவற்றின் உதவி அவசியம் தேவை .



புற்றுநோய்க்கு சிறப்பாக சிகிச்சை அளிக்க முடியும் . புற்றுநோய் கண்டு விட்டால் ஒன்றுமே செய்ய இயலாது என்ற எண்ணம் மாற்றப்பட வேண்டும் .

சர்க்கரை வியாதி போல் ,உயர் ரத்த அழுத்தம் போன்ற ஒன்று தான் இதுவும் . சிகிச்சையின் மூலம் அதை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் .

வியாதியின் ஆரம்பநிலையில் கண்டு பிடித்து விட்டால் முற்றுமாக குணப்படுத்த முடியும் . சில மிக முக்கியமான லைஃப் ஸ்டைல் அதாவது வாழ்க்கைப்பாணி மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் .

இந்த மாதிரியான செய்திகளை பத்திரிக்கைகள் , வலைத்தளங்களில் பிரபலப்படுத்தும் போது மக்களுக்கு இலகுவாக செய்தி சென்றடைந்து விடுகிறது .

அறிகுறிகள் மற்றும் வருமுன் காத்தல்

புற்றுநோய் எச்சரிக்கை அல்லது விழிப்புணர்வு :

புற்றுநோயைப் பொறுத்த வரையில் வருமுன் காப்பது , கண்டு கொள்வது தான் சாலச்சிறந்தது . மிக விழிப்பாகவும் சரியான ஸ்க்ரீனிங்கும் ,சரியான காலகட்டங்களில் செய்து கொள்ள வேண்டும் . வருமுன் எச்சரிக்கை நடவடிக்கைகளாக சில விதிமுறைகளை அனுசரிக்கலாம் :

1. திருமணம் ஆன அனைத்துப் பெண்களும் வருடா வருடம் அவசியம் பாப் - ஸ்மியர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் . மிக எளிமையான இந்தப் பரிசோதனையின் மூலம் கர்பப்பைவாய் புற்று நோயை மிக எளிதாக முன் கூட்டியே கண்டு பிடித்து விடலாம் .

2. 40 வயதுக்கு மேலான எல்லாப் பெண்களும் வருடம் ஒரு மாமோகிராம் செய்து கொள்ளவேண்டும் . மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டு கொள்ள .

3. 40 வயதுக்கு மேற்பட்ட அத்தனை ஆண்களும் ப்ராஸ்டரெட் புற்றுநோய்க்கான ஸ்க்ரீனிங் செய்து கொள்வது அவசியம் .

4. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை குடல்புற்றுக்காண பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் . மற்றபடி மார்பு , அக்குள், கழுத்து இது போன்ற இடங்களில் நெறி கட்டுதலோ , வீக்கமோ , கட்டியோ காணப்பட்டால் உடன் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் .

5.ஆறாத வாய்ப்புண் , தொடர் இருமல் முக்கியமாக புகைப்பழக்கம் உள்ளவர்களில் 2 வாரங்களுக்கு மேல் இருப்பது , சிறுநீரில் இரத்தம் , மலத்தில் இரத்தம் , மலம் கருப்பு நிறமாக இருப்பது , பெண்களில் நாட்பட்ட வெள்ளைப் படுதல் , மாதவிலக்கு நின்று விட்ட நிலையில் இரத்தப் போக்கு ஏற்படுவது ஆகிய அறிகுறிகள் காணப்பட்டால் மிக விழிப்புடன் பரிசோதனைக்கு தங்களை ஆட்படுத்திக்கொள்ள வேண்டும் .

இறுதிக்கட்ட நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் அவர்களுக்காக அரசின் திட்டம் :

மொபைல் ஹாஸ்பைஸ் கேர் என்று தற்பொழுது இறுதி நிலையில் இருக்கும் புற்றுநோயாளிகளுக்காக ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது .

எந்த ஒரு பொது மருத்துவமனையிலும் இம்மாதிரியான நோயாளிகளை தொடர்பு கொள்ளும் முகவரியை அல்லது தொலைபேசி எண்ணை அதற்கென்று இருக்கும் பெட்டிகளில் இட்டு விட்டால் போதும் .

ஒரு பயிற்சி பெற்ற செவிலியுடன் கூடிய ஆம்புலன்ஸ் அந்த நோயாளியின் உதவிக்கென அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் . அவருக்கு உணவுக்குழாய் செருகி உட்செலுத்தும் முறை பற்றியும் மற்ற கவனிப்புகள் குறித்தும் குடும்பத்தாருக்கு அந்த செவிலி எடுத்துரைப்பார் .மேலும் வேறு உதவிகள் தேவைப்பட்டால் செய்து தருவார் . பெய்ன் மானேஜ்மெண்ட் அதாவது வலிநீக்குவதிலும் உதவி செய்யப்படும் . உதவி தேவைப்படுபவர்கள் இந்த சேவையை உபயோகித்துக்கொள்ளலாம் . இந்த மாதிரியான செய்திகள் மக்களை சென்று அடைய பத்திரிக்கைகள் பெரிதும் உதவும் .

குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை மையம் திருச்சியில் :

புற்றுநோயாளிகளில் 5 விழுக்காடு குழந்தைகள் .

ஆனால் குழந்தைப்பருவ புற்றுநோய் 90 % முழுதுமாக குணமாக்கப்படக்கூடியது .

சிக்கல் என்னவென்றால் சிகிச்சைகான காலம் நீண்டது . 2 1/2 யிலிருந்து 3 வருடம் சிகிச்சை பெற வேண்டியிருக்கும் . சிகிச்சைக்கான செலவுகள் என்னவோ மிகக்குறைவு தான். குழந்தைகளின் எடைக்கேற்ப மருந்துகளும் கொஞ்சமாகவே செலுத்தப்படும் அதனால் சிகிச்சை செலவு மிகக்குறைவு தான் . ஆனால் கண்ணுக்குத்தெரியாத செலவுகள் மிகவும் அதிகம் . இவை தான் பிரச்சினையை உண்டாக்குகின்றன .அதாவது சிகிச்சைக்காக தங்கள் ஊரை விட்டு போக வேண்டியிருக்கிறது . அங்கு தங்கவும் , தொழிலை , வேலையை விட்டு செல்ல வேண்டியிருப்பதால் வரும் நஷ்டம் இவை எல்லாம் சேர்ந்து கொள்ளும் . ஒரு சில மாத சிகிச்சைக்குப் பிறகு குழந்தை கொஞ்சம் தேறினதும் ஊருக்கு திரும்ப சென்று விடுவார்கள் .நான் சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனையில்ஆறு வருடங்கள் பணி புரிந்த போது கவனித்த விஷயம் இது . அரைகுறை வைத்தியத்தில் போய் விடுவதால் மீண்டும் நோய் திரும்பி விடும் .மறுபடியும் வருவார்கள் . இதில் தான் குழந்தையை இழக்க நேரிடும்.

சிகிச்சை பற்றிய முக்கிய விபரம் :

1.சிகிச்சையை முழுமையாக எடுத்து முடிக்க வேண்டும் .

2.முதல் முறையிலேயே முற்றாக குணம் செய்து விடுதல் தான் மிகச்சரியானது .

3.பாதியில் விட்டு மீண்டும் நோய் திரும்பி விட்டால் குணம் செய்வது ரொம்பவும் சிரமம் . இது குழந்தைகள் புற்று என்று அல்ல எல்லா புற்றுக்கும் பொதுவான விதி . முதல் முறையிலேயே முழு சிகிச்சையை எடுத்துவிட வேண்டும் . அரைகுறை சிகிச்சை ஆபத்து .

4.இரண்டாம் முறை சிகிச்சை எடுப்பது அத்தனை வெற்றிகரமாக இருப்பதில்லை .

இதற்கு அவர்கள் ஊருக்கு அருகில் இருக்கும் மையங்களிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்வது தான் சிறந்த முடிவு .

முறையான சிகிச்சை , முழுகால அவகாசமும் எடுத்துக்கொண்டால் பக்கவிளைவுகளின் போது மருத்துவர் அதை சரியாக கவனிக்கவும் , தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கவும் , ஊரை விட்டுச்செல்வதால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மீளவும் அவரவர் ஊரிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்வது தான் சிறந்தது .

குழந்தைகளில் அதிகமாகக் காணப்படும் புற்றுநோய் மற்றும் அதன் அறிகுறிகள் :


குழந்தைகளில் பெரும்பான்மையாக இரத்தப்புற்று நோய் தான் வருகிறது .

உடலில் எந்த பகுதியிலும் நெறிகட்டியோ , வீக்கமோ இரண்டு வாரங்களுக்கு மேலான ஜூரமோ இருந்தாலும் விழிப்பாக உடனே மருத்துவ உதவியை நாட வேண்டும் .

ஒரு சாதாரண ரத்தப் பரிசோதனையில் கண்டு கொள்ள முடியும் இதை .

புற்றுநோய் சிகிச்சை செலவும் ,நிதிவசதியற்ற குழந்தைகளின் நிலையும் :

சிகிச்சைக்கான செலவை செய்ய முடிந்தவர்கள் அவர்களே செய்து கொள்கிறார்கள் . இயலாதவர்களுக்கு அரசுகாப்பீடு திட்டம் இருக்கிறது . இன்னமும் இயலாதவர்களுக்கு அரசு சாரா இயக்கங்கள் , முதலமைச்சர் நிவாரணநிதி , பிரதமர் நிவாரண நிதி இப்படி ஏற்பாடு செய்யலாம் .

நிதி வசூல் முறைப்படுத்தப்படும் விதம் :

ஒரு எம். பி யின் கடிதத்தோடு மருத்துவரின் கடிதமும் தேவைப்படும் இம்மாதிரியான நிவாரண நிதி ஏற்பாடு செய்ய .உள்ளூரிலும் உதவி செய்பவர்கள் உண்டு .( உதாரணமாக திருச்சியில் கஜானா நகைக்கடை , இன்னம் சில அரசு சாரா நிறுவனங்கள் போன்றவை . )சிகிச்சை முடிந்து செல்லும் நபர்களும் மற்ற நோயாளிகளுக்கு உதவுவது உண்டு . இப்படியான நிதி உதவிகளில் இயன்ற வரை குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் போதுமான நிதி இல்லை என்பதே உண்மை .

இப்படியான நிதி உதவிகளை எங்களுக்கு ஏற்பாடு செய்து தரும் நல் உள்ளங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள்

டாக்டர் .சாய்லக்ஷ்மி( EKAM FOUNDATION) என்ற குழந்தைகள் நலசிகிச்சை நிபுணர்

மற்றும்

சங்கர்மஹாதேவன் இவர் உதவும் உள்ளங்கள் என்ற ஒரு இயக்கம் நடத்தி வருகிறார் .

நிதியில்லாமல் அவதியுறும் குழந்தைகளுக்காக இவர்கள் நிதி ஏற்பாடு செய்து தருகிறார்கள்.

திருச்சி , தஞ்சாவூர் மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை இன்றைய நிலை :

டாக்டர் அருண் சேஷாசலத்தின் தலைமையிலான ட்யூமர் போர்ட் குழு புகைப்படம்

கீமோதெரபிஸ்ட் டாக்டர் அருணின் குழு அறிமுகம் செய்த மல்ட்டி மோடல் அப்ரோச் ட்யூமர் போர்ட் கான்செப்ட்டை திருப்திகரமான ஒரு விஷயம். அதாவது முன்பு இங்கு இருந்த நிலையில் ஒரு சர்ஜிகல் ஆன்காலஜிஸ்ட் தானே நோயாளிகளைக் கவனித்து , கீமோதெரபி கொடுத்து அறுவையும் செய்து கதிரியக்கமும் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது .

ஆனால் இப்போழுது மல்ட்டிமொடல் அப்ரோச் அறிமுகம் செய்த பிறகு ஒரு நோயாளியை மூன்று மருத்துவர்கள் கவனிக்கிறார்கள் .

ஒரு புற்றுநோய் அறுவை நிபுணர் ,

ஒரு கதிரியக்க சிகிச்சை நிபுணர்

மற்றும்

மெடிகல் ஆன் காலஜிஸ்ட் அதாவது கீமோதெரபி நிபுணர்

மூவரும் சேர்ந்து நோயாளிக்கான சிகிச்சையை முடிவு செய்கிறார்கள் . அவர் புகைப்பழக்கம் உள்ளவராக இருக்கும் பட்சத்தில் ஒரு சமூகசேவகரும் இந்த குழுவில் இருப்பார் . அவர் கவுன்ஸிலிங் பொறுப்பை ஏற்றுக் கொள்வார் . இங்கு மெடிகல் ஆன் காலஜிஸ்ட்டின் பொறுப்பு கீமோதெரபி கொடுப்பது .

கீமோதெரபி நிபுணர் டாக்டர் அருண் சேஷாசலம் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செந்தில்குமார்

திரு. செந்தில்குமார் அறுவை சிகிச்சை நிபுணர், கதிரியக்க சிகிச்சை நிபுணர் திரு.சுஜித்.

அதாவது தி ரைட் மேன் ஃபார் தி ரைட் ஜாப் -

ஒரு நோயாளிக்கான சிகிச்சை திட்டமிடலில் இவர்கள் அத்தனை பேரின் உழைப்பும் இருக்கும்.

தஞ்சாவூர் திருச்சி வட்டாரத்தில் புற்றுநோயாளிகளின் தேவை :

தஞ்சாவூரில் ஒரு மல்ட்டி ஸ்பெஷாலிட்டி யூனிட் மற்றும் ட்ராஸ்ப்ளாண்ட் யூனிட் ஆரம்பிக்கப்பட வேண்டும் .

டாக்டர் திரு. மருதுதுரை ( பொது அறுவை சிகிச்சை நிபுணர்) மற்றும் டாக்டர். அருண் அவர்களின் குழு தஞ்சாவூர் கான்சர் இன்ஸ்ட்டிடூட் துவங்கினார்கள் .

(இந்த முகவரியில் அந்த மருத்துவமனை பற்றிய தகவல்கள் அறியலாம் . .thanjavurcancercentre.org/)டொனேஷன்களின் உதவியைக்கொண்டே கட்டப்பட்ட அந்த மருத்துவமனை முழுவதும் லாபநோக்கில்லாத ஒன்று .

அங்கு சிகிச்சை பெற்றுச்செல்லும் இரத்தப்புற்று நோயாளிகளில் 50 சதவிகிதத்தினருக்கு மீண்டும் அந்த நோய் திரும்ப வாய்ப்புள்ளது . இரத்தப்புற்றின் இயற்கை அது தான் . அம்மாதிரியானவர்களுக்கு மறு சிகிச்சை ட்ரான்ஸ்ப்ளாண்ட் மட்டும் தான் . அதாவது அவர்கள் உடம்பில் உள்ள இரத்தம் அனைத்தையும் வெளியேற்றி புது இரத்தம் செலுத்துவது . ஆனால் இதை நிறுவுவதற்கான நிதித்தேவை மிக அதிகம் .



மேலும் எந்த ஒரு புற்றுநோயாளியும் பொருளாதார வசதி இன்மை காரணமாக சிகிச்சை அளிக்கப்படாமல் போகக் கூடாது .

எல்லா நோயாளிகளுக்கும் தேவையான முறையான சிகிச்சையும் கவனிப்பும் அளிக்கப்பட வேண்டும் .

அதற்கு ஆவன செய்ய வேண்டும் . இது லேசான விஷயம் அல்ல . இது தனி ஒரு நபரால் இயல்கிற காரியமுமல்ல . தன்னார்வத்தொண்டர்களும் பொதுமக்களும் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களும் ஒன்று சேர்ந்தால் தான் இந்தக் கனவு நனவாகச் செய்ய இயலும் .

திருச்சி ஜீ . வி .என் மருத்துவமனையின் நோயாளிகளுக்கு நிதிஉதவி செய்ய விரும்பும் உள்ளம் படைத்தோர் கீழ்க்காணும் வகைகளில் உதவலாம்:

1. தங்கள் வாழ்வின் விசேஷ தினங்களின் போது திருமண நால் , பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போது ஒரு நோயாளியின் மருத்துவத் தேவைக்கான உதவி செய்யலாம்

2. JEEVACETENARY CANCER TRUST என்ற பெயருக்கு காசோலை அல்லது வரையோலை அனுப்பலாம்

3. ஒரு புற்றுநோயாளியை தத்தெடுத்து அவரின் முழு சிகிச்சைக்கான செலவுகளை ( வசதி உள்ளோர் ) ஏற்றுக்கொள்ளலாம் . புகைபழக்கத்துக்கு எதிரான செயல்பாடுகளிலும் நிதித்தேவைகளை நிறைவு செய்ய உதவவும் தன்னார்வத் தொண்டர்களின் சேவை அவசியத் தேவை !

செர்விகல் கான்சர் எனப்படும் வகையான புற்றுநோய் எல்லா வயதிலும் பெண்களைத் தாக்கக்கூடியது ! இந்த வகை புற்றுநோய் பற்றின தகவல் அறிய ஹெல்ப்லைன் எண். 1800- 102- 1002 , குறுஞ்செய்தியில் தகவல் பெற sms " GYC" to 99 800 11111 அல்லது இந்த வலையில் படிக்கலாம் www.guardyourself.co.in

மேலும் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர் திருமதி . அகிலாவை நான் மூன்றாம்கோணம் வலைப் பத்திரிக்கைக்காக நேர்கண்டதன் பதிவை இங்கே படிக்கலாம் .

புற்றுநோய் சிகிச்சையில் இருப்பவர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்குமான டாக்டர் . அருணின் அறிவுரை படிக்க இங்கேயும் ,

இங்கும் சொடுக்கவும்
.

..ஷஹி..

Friday, January 20, 2012

சொஸ்தக் களிம்பு - சிறுகதை

ஜிகு ஜிகுவென்ற வேலைப்பாட்டுப் புடவைகளும் அள்ளிப்போட்டிருந்த நகைகளோடு பேச்சரவமும் போட்டி போட்டுக்கொண்டிருந்த நூர் ராவுத்தர் வீட்டின் பளிச்சென்ற முற்றம் ,ஐசாம்மாவின் மங்கல் துப்பட்டியைப் பார்த்ததும் கொஞ்சமே கொஞ்சம் மங்கத்தான் செய்தது. முதலில் சுதாரித்தவள் ஜாஸ்மின் தான். என்ன பேசுவது ? யார் இவளை அழைத்தது? எப்படி ஓர் உரையாடலைத் துவங்குவது என்றெல்லாம் வயசாளிகள் கூட யோசித்துக்கொண்டிருக்க ,

" அஸ்ஸலாமு அலைக்கும் பெரீம்மா, வாங்க ---மெஹர் எங்க? "

என்று பேசி தேவை வீட்டை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தாள்.

" வாலைக்கும் அஸ்ஸலாம் ஜாஸூ..நல்லாருக்கியா? எங்க மருமயன வாசல்ல காணலியே ? புள்ளைக எல்லாம் சொகமா? "

மூச்சிரைத்த படி சோபாவில் அமர்ந்தாள் ஐசா. சோபாவில் நடுநாயகமாக அமர்ந்திருந்த ராபியா , பருத்த சரீரமும் அப்பியிருந்த நகையும் பவுடருமாக முகத்தைக் கோணியவாறே நகர்ந்து அமர்ந்தாள். நூர் ராவுத்தரின் மருமகள் சபியாவுக்கு *மடிநிரப்பு. நூராருக்கு மனைவி இல்லாததால் மடிநிரப்பி விடவென ராபியா அழைக்கப்பட்டிருந்தாள்.

அப்படியெல்லாம் எல்லாரையும் அழைத்து விடுவார்களா? சுமங்கலியாகவும் பிள்ளைகள் பெற்றவளாகவும் மட்டுமல்லாமல் நல்ல பவிசாக வாழ்பவளாகவும் இருக்கும் பெண்கள் தான் மடிநிரப்ப , தாலி கட்ட, சமைந்த பெண்களுக்குக் குளியாட்டவென அழைக்கப்படுவார்கள்.இப்படி செல்வாக்காக வாழும் பெண்மணி வந்து மடி நிரப்பினால் தான் சூல் கொண்டிருக்கும் பெண் நல்லபடியாக, அதுவும் ஆண் பிள்ளையாகப் பெற்று பிழைப்பாள் . அல்லாமல் கணவனை இழந்து , ஆண் பிள்ளைகள் மூன்றும் திசைக்கொன்றாய் பிரிந்து போக , ஒரே பெண் பிள்ளை மெஹருக்கு வயது ஏகமாய் ஏறியும் மணமுடிக்காமல், வீட்டைக் கட்டிக்காத்துக் கொண்டு மகளும் தானுமாய் வாழும் ஐசாவை அழைப்பார்களா என்ன?

மணமாகி சில வருடங்களில் புருஷனுக்கும் தன் அண்ணன்களுக்கும் சொத்துப் பிரச்சினை ஒன்றில் ஏகமாய் முட்டிக்கொண்டு விட உடன் பிறந்தோர் என்று ஒரு கூட்டமே இருந்தாலும் தனிமைப்பட்டுப் போனாள் ஐசா. தாய் வீட்டுப் பங்காய் அவளுக்குத் தரப்பட்ட அந்த பிரம்மாண்டமான பங்களா தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம். அவளுடைய தாயும் தந்தையும் கடைசிக் காலத்தில் கேட்க பார்க்க நாதியில்லாமல் படுக்கையோடு கிடந்து ஒருவர் பின் ஒருவராக நாற , அண்ணன்மார் அத்தனை பேரும் சுற்றிலும் வேடிக்கை பார்த்தார்களே ஒழிய உதவ முன் வந்தது ஐசா ஒருத்தி தான் . மாமியார் மாமனாருக்கும் பார்த்து அம்மா வாப்பாவையும் அவளே தான் கவனித்தாள்.

மணமாகிச் சென்றும் மகள் தானே மனைவிக்கும் பார்த்து தனக்கும் செய்தாள் என்ற நினைப்பில் அவளின் அப்பா அந்த வீட்டை அவளுக்கே எழுதி வைக்க வந்தது வினை . நல்லது கெட்டது என்று எதற்கும் அவளை அழையாமல் ஒதுக்கி வைத்தான்கள் அண்ணன்மார்.

பெரிய வசதிக்காரி என்பதால் ஐசாவைத் திருமணம் செய்து கொண்டவன் ரஜாக். நான்கு பிள்ளைகள் ஆன பிறகும் செயல் சரியில்லாமல் நடுவயதிலேயே இறந்தும் போனான். கணவனையும் பறிகொடுத்து விட்டவளுக்கு பிள்ளைகளும் வீடும் தான் உலகம் என்றானது. தினமும் நான்கு பேரையும் சுற்றி அமர வைத்து கதைகளும் ஊர் நடப்பும் பேசிவந்தாள். வெறுமையாகிப் போன வாழ்வில் அவள் கண்ட சுகம் அது ஒன்று தான். மகன்கள் திருமணம் செய்து கொண்ட கையோடு தனியாய்க் கிளம்பி விட மீண்டும் மகளோடு அத்தனை பெரிய வீட்டில் தனித்து விடப்பட்டாள்.

நல்ல நாள் பெரிய நாளில் கூட ஏதோ விதியே என்று வந்து கடனுக்கு சலாம் சொல்லி மகன்கள் கிளம்பிப் போக ஒடிந்து போகத் துவங்கினாள் ஐசா. மனதின் பாரமெல்லாம் வியாதியும் வெக்கையுமாக வேறு பிடுங்கித் தின்னத் துவங்கியது அவளை.

கொழுந்தன் கூட்டாளி வீட்டுப்பெண்கள், மருமகள்கள் என அனைவரிடமும் தானாய் வலியச்சென்று பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தாள் ஐசா .

"ஏன் ஜாஸூ இந்த காசு மால எத்தினி பவன்? பதினஞ்சு தானா? எங்க மெஹருது இருவத்தியோரு பவன். வளவி தேன் தோதா பண்ணல..ஒன்னூட்டு குடுவேன் மாடலுக்கு . நம்ம சண்முகத்துட்ட காட்டிட்டு தாரேன்."

"அதனால என்னாங்க பெரீம்மா..இந்தா மடி ரொப்பினதும் வீட்டுக்குப் போயி வளவியக் கொண்டாரேன், மெதுவாக் குடுங்க"

ஜாஸ்மீன் ஜாடை காட்டவும் மற்ற சகோதரிகள் வந்து அருகில் அமர்ந்து கொள்ள வீடு சகஜ நிலைக்குத் திரும்பியது.ராபியாவின் கோணிய முகம் மட்டும் ஒரு பக்கம் இழுவலாய் கோணியபடியே தானிருந்தது. ஐசாளின் கொழுந்தன் பெண்டாட்டி பாரிசா வந்து அமரவும் அவளைப் பிடித்துகொண்டாள்.

"இந்தாவுளே பாரிசா ஒன் கொளுந்தன் பொண்டாட்டிக்குத் தான் அல்லா அறிவையே வச்சுப் படைக்கல.வயசுக் *கொமர குதுராட்டம் வீட்டோட வச்சு அளகு பாக்கா..நீங்கள்லாம் என்னன்டு டீ பாத்துக்கிட்டு கெடக்கீக?என்னத்துல இப்ப கொறையா இருக்கு? சனக் கட்டுலையா? பணக்கட்டுலையா? நெட்டையோ குட்டையோ பொட்டப்புள்ளய கட்டிக்குடுக்காம பூதம் காத்துக்கிட்டு இருக்கா வீட்ட..பத்தாம இப்புடி ஏவ தேவ வீட்டுகளுக்கும் வந்துடுறா வெக்கமில்லாம. என்னடி பண்றாய்ங்க உங்க புருசன்மாரெல்லாம்? பொண்டுசெட்டி பயலுக?".

"அல்லாவே ஏன்க்கா நீங்களும் புரியாம பேசுறீங்க? எம்புட்டோ நாமளும் சொல்லிப் பாக்கத்தான செஞ்சோம்? மெஹருக்கும் எத்தினி மாப்புள்ள பேசுனோம் ஒண்ணும் சரியாவே வரல்லியே.ஐசாக்காவும் இப்புடி தேவ வீடுகளுக்கு வந்து போனாலாவது ஒரு நல்ல மாப்புள்ள அமையாதான்னு தான் பாக்குது !எங்க மச்சான் மவுத்தாப்போனதுல இருந்து தான் வீடு வெளங்கலையே"

எழுந்து போனாள் வயிற்றுப்பிள்ளைக்காரி அமரும் நாற்காலியை அலங்கரிக்க.ஒரு சின்னத்தேர் அசைவது மாதிரி மெள்ள வந்து அமர்ந்தாள் சபியா . தங்களுக்குள்ளாகவே பேசிக்கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தின் மொத்த கவனமும் அவள் புறம் திரும்பியது. ஏழு கட்டுக்கழுத்தியர் சுற்றிலும் நிற்க, மூத்தவள் என்ற ஹோதாவில் ராபியா முதலில் வெற்றிலை, பாக்கு ,மருந்துச்சங்கு, வாழைப்பழம், இனிப்பு, தேங்காய் , பூ என்று அவள் முந்தானாயை நிரப்பினாள்.வரிசையாய் மற்ற ஆறு பேரும் நிரப்ப..முடிந்தது சடங்கு. முண்டியடித்து வளையல் போட வந்த ஐசாவுக்கு வெற்றிலை கொடுக்கக் கூட ஆளைக்காணும்.

பந்தியிலும் ஐசா குடும்பத்துப் புறணி தான்.

"எப்புடித்தேன் அந்த பூத்பங்களாவுல அம்மா மக இருக்குதுக? இந்த மெஹரும் இப்பவெல்லம் வெளியில வாரதே இல்ல என்ன?"

"ஆமாடீ என்னன்டு வருவா? அவ வயசுல நாம கையில இடுப்புல வயித்துலன்னு சொமந்துக்கிட்டு அலையிதோம்.அவளுக்கு வெக்கமா வராதா ?"

"இக்பால் அண்ணன் தேன் இப்புடி வீட்ட விட்டுப் போச்சு, ரபீக்கும் ராஜாவும் கூடவா பெறயே போகுங்க? தங்கச்சிக்காரி இந்த கிறுக்கு அம்மாள்ட்ட மாட்டி தனியா தவிக்கிதா பாவம்..இதுல இந்த பெரியம்மா பாரு கூச்சமில்லாம கல்யாணம், மடிநெரப்புன்னு கெளம்பிக்கிட்டு வந்துடுது. லச்சணத்துல மெஹருக்கு நக பண்ணுதாம்ல நக?"

விருந்து முடிந்ததும் கிளம்பின ஐசாவைத் தேடி வந்தாள் ஜாஸ்மீன்.

"பெரியம்மா..இந்தாங்க என் வளவி..நானே வந்து வாங்கிக்கிடுறேன். ஏங்க பெரியம்மா இந்த வெள்ளிக்கிழமை சாயங்காலம் என் கொளுந்தன் பொண்டாட்டியவும் அது அம்மாவையும் கூட்டியாறேன் நம்ம வீட்டுக்கு. நம்ம மெஹர அவுக வீட்டு பையனுக்குக் கேக்குறாக"

"மகராசியா கூட்டியா ஜாஸூ..வரேன்..அஸ்ஸலாமலைக்கும்".

விடிந்ததில் இருந்தே வீட்டை ஒதுங்க வைத்துக்கொண்டு பதட்டத்தோடு திரியும் அம்மாவைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள் மெஹர்.

"இப்ப என்னத்துக்குமா இப்புடி டென்ஷன் பண்ணிக்கிடுறீங்க? ஒங்களுக்கு முடியாம வரதுக்கா ? வீடெல்லாம் நல்லா சுத்தமாத்தானே இருக்கு? இந்தா காலையில தான் நாகு தொடச்சும் விட்டா அப்பறம் ஏன் நீங்க கெடந்து செரமப்படுதீங்க? சும்மா அல்லான்னு இருங்கம்மா..".

பார்த்துபார்த்து பக்குவமாக கடல் பாசி காய்ச்சி, ஃப்ரிஜ்ஜில் உறைய வைத்தாள் ஐசா, வடைக்கு ஊறப்போட்டு விட்டு கொஞ்சம் சாய வந்தாள் அறைக்கு.

நல்ல கருநீல வண்ணத்தில், நட்சத்திரப்பூக்கள் இட்ட ஷிஃபான் புடவைக்கு ஃபால்ஸ் தைத்துக்கொண்டிருந்தாள் மெஹர்.அவள் வாப்பாவைப்போல நல்ல மஞ்சள் நிறம். பெரிய கண்களும், மெல்லிய வாகான உடலும் அழகி தான்.

பள்ளிக்கு புர்காவில் சென்று வந்து கொண்டிருந்த போதே வெறும் உயரத்தையும் கைகளின் அழகையும் நிறத்தையும் பார்த்து விட்டு பெண் கேட்டு வந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் தோழியர் திருமணங்களுக்கு செல்வதற்கே மருதாணி இட்டுக்கொண்டு மணிக்கணக்கில் அலங்காரம் செய்தவள் தான். இப்போது அதைப் பற்றியெல்லாம் பெரிதாக அவள் லட்சியம் செய்து கொள்வதில்லை. அம்மா வெகுவாக வற்புறுத்துகிறாளே என்று அந்தப் புதுச் சீலையை தயார் செய்து கொண்டிருந்தாள் மாலையில் உடுத்திக்கொள்ள.

"அம்மா தைராய்ட் மாத்திரையும் போடல..டிஜாக்சினும் போட்டுக்காம இருக்கீங்க போல காலைல இருந்தே? அப்புடி என்னம்மா மெய் மறந்துடுறீங்க? "

கண்ணயர்ந்து விட்ட அம்மாவை எழுப்பி மாத்திரையை போட வைத்தாள்.

"நீயும் செத்த தூங்கு மெஹரு..அவங்க மஹரிப்புக்கு பெறகு தான் வருவாங்க. சொன்னதெல்லாம் நெனப்பிருக்கா ?காலைல இருந்தே படிச்சு படிச்சு சொல்றேன்..அம்மா சொன்னாப்பல கேக்கணும்மா..என் சீதேவி "

நான்கு மணியளவிலே தயாராகி விட்டது வீடு. அழகாக உறைந்திருந்த கடல்பாசியை நீள் சதுரத்துண்டங்களாக நேர்த்தியாக வெட்டி அடுக்கினாள் ஐசா, ரோஸ் மில்க் கலந்து தயாராக இருந்தது ..ஒரு வேளை குளிர்பானம் வேண்டாம் என்றால் என்று தேனீருக்கு பால் காய்ச்சி தயார். தேங்காய் சட்னியும், சாம்பாருமாக மணத்தது அடுக்களை. வடை மட்டும் சூடா இருக்கட்டும் என்று அவர்கள் வந்த பிறகு பொரிக்கவென நாகு இருத்தி வைக்கப்பட்டாள்.

முகம் கழுவி தயாராகத் துவங்கினாள் மெஹர். கருநீல ரவிக்கை, சேலை..செட்டாக வெள்ளைக்கல் பதித்த நட்ச்சத்திர வடிவ நகைகள், கூந்தலைத் தளரப்பின்னி நீள நீளக்காம்புகள் தெரியுமாறு தானே தொடுத்த ஜாதிச்சரம் வைத்துக்கொண்டு நிமிர்ந்தாள் . மகளையே பார்த்துக்கொண்டிருந்த ஐசா "மாஷா அல்லாஹ்" என்று திருஷ்டிக்கழித்தாள். கண்கள் கனிய அம்மாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டாள் மெஹர் .

*மஹரிப்புக்கு பாங்கு சொல்லி சரியாய் அரை மணியில் வந்தனர் ஜாஸூம் மாப்பிள்ளை வீட்டாரும். அறிமுகங்கள் ஆன பிறகு

"மெஹரகூப்டுங்க பெரியம்மா "

என்றாள் ஜாஸ்மீன்.

அல்லாவே என்ன செய்யக் காத்திருக்காளோ -உள்ளூர நடுங்கிய வண்ணம் உள்ளே சென்றாள் ஐசா. ஒரே நிமிடத்தில் மெஹருடன் வந்தாள் திரும்ப.

பளீரென்ற நிறமும் நெடுநெடுவென்ற உடல்வாகும் கண்ணில் பட ஆர்வமானாள் மாப்பிள்ளையின் தாய்.

"எங்கேம்மா ஒரேடியாக் குனியாம செத்த நிமிரு பாப்பம் ஒன் மொகத்த" .

முகம் இறுக இன்னம் குனிந்தாள் மெஹர்.

"என்னாடிம்மா இந்தக் காலத்துல இப்புடி நாணுற? நல்லா மொகத்த நிமுத்தி சலாஜ் சொல்லும்மா"

மறுபடியும் முக்காட்டை விலக்கி அவள் வற்புறுத்த விருட்டென்று எழுந்து அறைக்குள் சென்று மறைந்தாள் மெஹர்.

விதிர்த்துப் போனார்கள் வந்தவர்கள். சட்டென சுதாரித்துக்கொண்டாள் ஜாஸ்மீன்.

"விடுங்க பெரியம்மா மெஹர் வெக்கம் தெரிஞ்சது தானே..பெறயே போகாதீக. கல்யாணம் ஆச்சுன்னா தெளிஞ்சிடுது ..நாகு கொண்டாடி பலகாரமெல்லாம். "

நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தாள். அரைகுறையாக உண்டு விட்டு கடுப்பேறிய முகத்துடன் கிளம்பியது கூட்டம்.

பிலுபிலுவெனக் கத்திவிட்டுக் கிளம்பினாள் ஜாஸ்மீன் .

"ஆனாலும் இப்புடி ஆகாத்தியம் பண்ணலாமா மெஹரு நீ ..நல்லாத்தேன் வெக்கப்படுற போ. ஒங்க மச்சான் அப்பவும் சொன்னாக நான் தான் கேக்கல..போன வெசயும் இதே மாதிரி தான் உங்க மச்சான் கூட்டாளி ஒருத்தரு வீட்டு ஆட்கள கூட்டியாந்தேன். அந்தம்மா கேக்க கேக்க பேரே சொல்ல மாட்டேன்னுட்ட! சரியான ராங்கி புடிச்ச பொண்ணுன்டு அவங்க வெறுத்துப் போனாக .

அதுக்கு முன்ன சின்னம்மா சொன்ன ஒரு மாப்புள்ள ,கிட்டத்தட்ட பேசி முடிச்சு சக்கர போடுற அளவுல வந்து என்னமோ போன் கால் அப்புடி இப்புடிங்கிறாங்க அல்லா ஒருவன் தான் அறிவான் அதுவும் நின்னு போச்சு .இப்ப இம்புட்டு நாச்செண்டு ,தானா வந்த சம்பந்தத்த ஒதச்சு வெரட்டுறியே மெஹரு ..ஒனக்கே நல்லா இருக்கா? இன்னும் எம்புட்டு காலம் தான் கொமராவே பெரியம்மாவுக்கு பாரமா இருப்ப ?

இப்பமே நம்ம சாதி சனமெல்லாம் என்னமோ பெரியம்மாவுக்கு தான் ஒன்னய கட்டிக்குடுக்கவே இஷ்டம் இல்லங்கிற மாதிரி பேசுறாக...நல்லாத்தான் போ இப்புடி மானத்த வாங்குற . போதும்மா !பெரியத்தா மக, நம்ம தங்கச்சின்னு நான் மல்லுக்கட்டுறதுக்கு நீ குடுத்த மரியாத".

இறுகிப்போய் சலனமற்று டைனிங் டேபிள் அருகில் அமர்ந்திருந்த அம்மாவைக் கட்டாயப்படுத்தி இட்லியைப் பரிமாறி உண்ண வைத்தாள் மெஹர். தானும் உண்டு விட்டு படுக்கச் சென்றாள்.

அம்மா வழக்கமாகப் போடும் தூக்க மாத்திரையை எடுத்துக்கொண்டு போனவள் கண்ணயர்ந்து விட்ட ஐசாவை ஒரு நிமிடம் போல கண்வாங்காமல் பார்த்தாள். நகைகளைக் களைய ட்ரெஸ்ஸிங் டேபிளில் சென்று அமர்ந்தவள்... எழுந்து கொண்டாள். அம்மா உறங்கி விட்டாள் தான் என்று உறுதி செய்துகொண்டு திரும்பியும் நேராகவும் பார்த்துக்கொண்டாள் தன் உருவத்தைக் கண்ணாடியில்.

சிரித்து, சடையை முன்னால் விட்டு என்று புகைப்படக்கோணங்களில் பலவாறு பார்த்தான பின் புடவை நகையைக்களையாமல் அப்படியே உறங்கப்போனாள்.

..ஷஹி..

மடிநிரப்பு - வளைகாப்பு , கொமர் - கன்னிபெண் , மஹரிப் - மாலைத் தொழுகை

Thursday, November 17, 2011

இட்டுத்தொலையாத முத்தம்

இதுவா அதுவா ஈரமிக்கது எந்த சொல்?

இப்படியா அப்படியா எப்படிச் சிறப்பாகச் சொல்வது இதை?

கதகதப்பாய் உணரப்படும் இது என்ன ?

அதிகம் உணர்வது நீயா நானா?

பெய்வதென்ன மழை தானா?

அதிகம் நனைந்தது இருவரில் யார்?

வெகுவாய் சுடுவது உன்னதா- என் கண்ணீரா?

பிரிவென்று வந்தால் எப்படி எதிர்கொள்வது?

அப்படியெல்லாம் வருமா என்ன?

என்றெல்லாம் யோசிப்பதற்கு அவகாசமில்லாது இருந்திருக்கலாம்

ஒரு முத்தமாவது இட்டுத் தொலைத்திருக்கலாம் தானே?

இப்போது இப்படியல்லாமல்..

உறக்கத்தில் கேவி நடுங்கும் உதடுகளை

கனவில் மினுங்கும் அதன் நினைவுகளையாவது

தடவி ஆற்றியிருக்கலாம்!

..ஷஹி..

Sunday, October 30, 2011

ஒரு மன்னிப்புக் கோரலை எளிதாக்க

உலர்ந்திருக்கும் இந்த விடியலை

நான் யாசிக்கப் போகும் மன்னிப்பின் ஈரத்தால்

நனைத்துக் கொள்ள எண்ணமிட்டிருக்கிறாய்..

எப்படியெல்லாமோ,

எதற்காகவோ, என்னவென்றெல்லாமோ

புரிந்து கொள்ளப்படக்கூடிய

ஒரு மன்னிப்புக்கோரலை விட

எனக்கு

மிகக் கடினமானது வேறொன்றுமில்லை..

காதலைத் தெரிவிப்பது கூட.

ஒரு முத்தத்தில் குளிராமல்

ஒரு பார்வையில் உருகாமல்

ஒரு தலையசைப்பில் கசியாமல்

நிலம் வெறிக்கும் விழிகள் பார்த்து

மன்னிப்புக் கோருவது எப்படி என்று

இன்று வரையில் எனக்குத் தெரிவதேயில்லை.

அவசரமாக மறைக்கப்படும்

ஒரு துளி கண்ணீரையாவது

நிகழ்த்திக் காட்டி

அதை எளிதாக்கலாம் எனக்கு நீ..

..ஷஹி..

Thursday, October 20, 2011

என் கண்ணீர் பிடிக்கும் கோப்பை

நீ சஞ்சரிக்கும் வெளிகளின் தூரம் அறியாமல்

என் ஒரு கரம் இறங்கிக் காற்றில் அசைகின்றது,

எதிர் கொள்ள ஏதுமற்று.

நிசப்தத்தின் அலறலில் மருண்டு,

திரும்பும் என் முதுகை இலக்காக்கி..

பறக்க விடுகிறாய் உன் ஈரமற்ற முத்தங்களை.

பசையற்று விழும் அவற்றைப் பொறுக்கி சேகரிக்கின்றேன்

கண்ணீர் பிடிக்கவென வைத்திருக்கும் ஓர் கோப்பையில்...

இரண்டும் கலந்து எனக்கான பானம் செய்கிறேன்

புளித்து நொதிக்கும் அதன் சுவையில்

கிறங்கி மயங்குகின்றன கண்கள்..

சில்லிட்டு விறைக்கும் தேகத்தின் வழியாக

பூமிக்குள் வேர் இறங்குகின்றது.

..ஷஹி..

Tuesday, October 18, 2011

கூட்டாண்மை அரசியல் நவீன சுரண்டல் - மணற்கேணி 2010 க்காக எழுதிய கட்டுரை

(குறிப்புகள் எடுத்துக் கொடுத்து தட்டச்சவும் வாசித்து உதவிய அப்பாவுக்கு நன்றி..)

முன்னுரை;

நாம் வாழும் இவ்வுலகு தோன்றி சுமார் 600 கோடி ஆண்டுகள் .ஆகின்றன.மனித இனம் தோன்றி சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளாகின்றன. மனிதன் ஆரம்பத்தில் மிருகங்களைப் போன்றே இயற்கையில் கிடைத்த உணவை அப்படியே உண்டு வாழ்ந்தான்.பின்னர் ஓரிடத்தில் நிலையாகத் தங்கி விவசாயம், கால்நடைவளர்ப்பு,கைத்தொழில் என்று படிப்படியாக வளர்ந்தான். அவனுடன் சேர்ந்து உற்பத்தி சக்திகளும், உறவுகளும் வளர்ந்தன.

தனிச்சொத்து, குடும்பம், அரசு என்ற அமைப்புகளும் வளர்ந்து மொழி, பண்பாடு கலாச்சாரம் என பெரிய மாற்றங்களும் , சமூக தேசிய உணர்வுகளும் வளர்ந்தன. போக்குவரத்து வசதிகளும் பண்டங்களின் பயன்பாடுகளும் அவை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்லப்படுவதும் வளர்ந்ததும் ..விற்பனைக்கென்றே பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. தனக்கென உற்பத்தி செய்தவன், இன்னொருவரிடம் வேலைக்குச் சென்றான். இந்தத் தொழிலாளியின் கூலி கொடுபடாத உபரி உழைப்பு முதலாளியின் மூலதனமாகியது. இந்த மூலதனக் குவியல் புது கண்டுபிடிப்புகளுக்கும் புதிய உற்பத்தி கருவிகளுக்கும் தோற்றுவாயாய் அமைந்து, அறிவியல் வளர்ச்சி மனிதனின் அதீத வளர்ச்சியை நோக்கித் தள்ளியது.


இந்திய அரசியல்

நம் நாடு சுதந்திரம் அடைந்த பின், மைய அரசு பொதுத் துறையில் தொழிற்சாலைகளைக் கட்டமைத்தது. இறக்குமதிப் பொருட்களுக்கு, மாற்றுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டன. இவை அரசியல் சாசனத்தில் மட்டும் இறையாண்மை மிக்க, சமதர்ம, சமய சார்பற்ற மக்களாட்சி குடியரசை அமைத்திட இந்தியர்களாகிய நாம் உறுதி பூண்டிருப்பதாக சொல்கிறது.

ஆனால் உண்மையில் நம்நாடு சோஷலிஸத்தை நோக்கி ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை. இது முழுக்க முழுக்க முதலாளித்துவ நாடகமும் இல்லை. ஏனெனில் இது நிலச் சுவாந்தார்களிடம் சமரசம் செய்து கொண்டு நிலச்சீர் திருத்த நடவடிக்கைகளைக் கூட செய்யவில்லை. ஏன்.... இந்த அரசியல் சாசனமே போலியாகத் தயாரிக்கப்பட்டது. எவ்வாறெனில் அரசியல் நிர்ணய அவையில் இருந்த 385 பேர்களில் 93 சுதேசி சமஸ்தான மன்னர்களின் பிரதிநிதிகள் , மீதமுள்ள நபர்கள் பண்ணையார்கள், சொத்து வைத்திருந்தவர்கள், பட்டம் படித்தவர்கள் ஆகியோரால் (அதாவது மொத்த மக்கள் தொகையில் பத்து சதவிகிதம்) தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஆனால் இந்திய அரசு தனியார் வசம் பெரும் தொழில்கள் வளர ஆக்கமும் ஊக்கமும் அளித்தது.

இதன் விளைவாக உற்பத்தி சக்திகள் ஒரு சிலரிடமே குவியவும், ...கிராமப்புரங்களில் வறுமையும் , நிலவியது. அரசு ,தொழிற்சாலை அதிபர்களிடமோ நிலச் சுவாந்தார்களிடமோ பெரும் வரி விதிப்பை மேற்கொள்ளவில்லை அதனால் சாதாரண ஏழை எளியவர்களுக்கு எந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.எனவே, 1950-80 களில் 3.5 ஆக இருந்த வளர்ச்சி ,1980 களிலிருந்து அதிலும் குறிப்பாக 6% முதல் 9% வரை ஆனது. 1991 முதல் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் வந்த பின் நாட்டின் வளர்ச்சி அதிகரிப்பதாக அரசு சொல்லிக் கொண்டாலும் , உண்மையில் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு தான் அதிகரித்துள்ளது. இதற்கு முன் மக்களுக்கு வழங்கிய கல்வி, மருத்துவம், சிறுதொழில் வளர்ச்சி, சிறுவிவசாயிகளின் வளர்ச்சிக் கொள்கைகளையெல்லாம் அரசு கைவிட்டுவிட்டது. வெளிநாட்டு மூலதனத்திற்கு கதவை அகலத்திறந்து வைத்துவிட்டு, எண்ணை வளத்திற்குக் கூட தன்னிறைவு அடைய வெளிநாடுகளுடன் ஒப்பந்தம் போட பயந்து அமெரிக்காவின் சார்புக் கொள்கையை வெளிநாட்டுக் கொள்கையாக மாற்றிவிட்டது. ஒரு நிலைக் கொள்கையின் நாயகனாக இருந்த இந்தியா, இன்று மேற்கத்திய, வீழ்ந்து கொண்டிருக்கும், அரசுகளுக்குத் துணை போய் கொண்டிருக்கிறது.

சர்வதேச அரசியல்---அமெரிக்கா...

18 வது நூற்றாண்டின் இறுதியில் முதலாளித்துவத்தின் இன்னொரு வடிவான ஏகாதிபத்தியமாக உருவெடுத்தது. இவைகள் நடத்திய முதல் உலகப்போர் இவர்களையே பலவீனமாக்கி, பல லட்சம் பேர் மடிந்தனர். 2 ஆம் உலகப் போர் உலகச்சந்தையை மறுபங்கீடு செய்வதற்காக திரும்பவும் நடத்தப்பட்டது. ரஷ்யா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனாவில் பாட்டாளிவர்க்கம் வெற்றியை நோக்கிச் சென்றது. ஆனால் சில காலம் கழித்து கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவுடன் சேர்ந்து மூழ்கின. இது ஏகாதிபத்திய சதி. பின்னர் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவமும் ரஷ்யாவிலும் சீனாவிலும் அதிகார வர்க்க முதலாளித்துவத்தின் மூலம் ஆட்சியதிகாரம் கைப்பற்றப்பட்டது.

இவ்வாறாக அமெரிக்கா உலகத்தின் தனிப்பெரும் சக்தியாக தன்னை நினைத்து ஆட்டம் போடுகிறது. புதிய சந்தைகளை தனக்குத் தேடி அலைந்த அமெரிக்கா, உலகம் முழுவதும் தன் குடையின் கீழ் கொண்டு வரவும், உள்ள சந்தைகளை காப்பாற்றிக் கொள்ளவும் உலகம் முழுவதும் தன் ராணுவங்களை நிறுத்தி வைத்துள்ளது. இல்லாத பேரழிவு ஆயுதங்களை ஈராக்கில் தேடி ஈராக்கிய மக்கள் 1 லட்சத்தி 17 ஆயிரம் பேரை கொன்றொழித்து, நாகரிகத்தின் தொட்டிலான பாக்தாத் நகரை சுடுகாடாக்கி விட்டது.

பொருளாதார பின்னடைவு காலமான 2009 இல் கூட உலக ஆயுத விற்பனையில் 70% தான் மட்டுமே விற்று 37.8 பில்லியன் டாலர்களைப் பெற்றுள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக ஆஃப்கன் தீவிரவாதிகளை தானே வளர்த்து விட்டு, கடந்த 11 ஆண்டுகளாக அவர்களை அழிப்பதாக சொல்லிக் கொண்டு ஆஃப்கன் மக்களைக் கொன்று குவித்து வருகிறது. ஜப்பானில் உள்ள தனது படை முகாமை இது மாற்றாததன் காரணமாக ஜப்பானிய பிரதமர் தன் பதவியை இழந்தார். தான் மட்டும் 2200 அணுஆயுதங்களை வைத்துக் கொண்டு..... மின்சாரம் தயாரிக்கவும், புற்றுநோய்க்கு ஐசோடோப் தயாரிக்கவும் , அணு ஆற்றலை வளர்த்துக் கொள்ள நினைக்கும் ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்து அதனை அச்சுறுத்தி வருகிறது.

கடந்த 50 ஆண்டுகளாக கியூபாவை முடக்கிப் போட்டுள்ளது. அணு ஆயுதம் வைத்திருக்கும் இஸ்ரேலை தன் அடியாளாக அரேபிய தீப கர்ப்பத்தில் வளர்த்துவிட்டு, பாலஸ்தீன, காஃஜா, சிரியா மற்றும் லெபனான் பகுதி மக்களைத் தொடர்ந்து கொன்று குவித்து வருகிறது. வட கொரியா மற்றும் தென்னமெரிக்க நாடான வெனிசுலாவையும் அச்சுறுத்துகிறது. உலக மக்களால் பெரிதும் வெறுக்கப்படும் நாடான அமெரிக்காவின் நண்பர்கள் இஸ்ரேல், தைவான், சவூதி அரேபியா மற்றும் ஐரிஸ் ரிபப்லிக் ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே. இந்த நான்கு நாடுகளும் உலகின் மூன்று மூலைகளில் உள்ளன. இவற்றின் மக்கள் தொகை நம் தமிழ் நாட்டு மக்கள் தொகையை விடக் குறைவு. உலகில் அமெரிக்கா தான் அதிகமாகக் கடன் வைத்துள்ள நாடு. இந்த நாட்டால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் மீது அதிகமாக வரி விதிக்க முடிவதில்லை. ஏனெனில் அவர்கள் தான் இந்த நாட்டை ஆண்டு வருகின்றனர். எனவே ஏழைகளுக்கு சமூகப் பாதுகாப்புக்குக் கூட செலவழிக்க கார்ப்பரேட்டுகள் இசைவதில்லை. ஹால் பர்ட்டன் மற்றும் பிளாக் வாட்டர் ஆகிய நிறுவனங்கள் ஈராக்கிலும் ஆஃப்கானிலும் அமெரிக்காவுக்காக சண்டையிடும் அளவுக்கு ஆட்களை வைத்துள்ளனர். இவர்களின் 71 ஆயிரம் பேர் இப்போது ஆஃப்கனில் சண்டையிட்டு வருகின்றனர். இவர்கள் விளையாட்டுக்காகக் கூட மக்களைக் கொல்கின்றனர்.

கார்ப்பரேட்டுகளின் தலைவனான அமெரிக்கா உலக மக்களை தான் கொல்கிறது. தன் மக்களை வாழ வைக்கிறதா? அது தான் இல்லை!!!! 1976 இல் இந்நாட்டின் ஒரு சதவிகித மக்கள் இந்நாட்டின் வருமானத்தில் 8.6% பெற்றனர். 2007 இல் இது 23.5 % ஆக உயர்ந்து விட்டது. 2008 இல் பத்தில் ஏழு அமெரிக்கர்களின் வருமானம் உயராமல் அப்படியே நின்று விட்டது. 1983 இல் இங்கிலாந்துப் பிரதமர் தாட்சர் தன் நாட்டு வங்கிகள் தங்கள் மொத்த மூலதனத்தில் 5 % ஐ பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்ய அனுமதித்தார். 1996 இல் இது 25% ஆகி பின்னர் 1999 இல் இந்த வரையரையும் கை விடப்பட்டது. இந்த முறையை அப்படியே பின்பற்றிய அமெரிக்க வங்கிகள் ஊக வணிகத்தில் ஈடுபட, அமெரிக்க பொருளாதார பலூன் வெடித்து விட்டது. பேராசை பெரு அழிவை உண்டாக்கி சாதாரண அமெரிக்க மக்களின் சேமிப்பை எல்லாம் அழித்துத் தெருவில் நிறுத்தி விட்டது. இவர்களை மீட்க இவர்களுக்கு அரசு 70 ஆயிரம் கோடி டாலர்களை கடன் அளித்தது. இந்தப் பணக்கார வங்கியாளர்கள் தற்போது சீரழிவிலிருந்து மீண்டு மக்கள் பணத்தின் மூலம் போனசும் பெறுகின்றனர். பெரும்பாலான தொழிற்சாலைகள் பொருளாதார சீரழிவால் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கி விட்டது. புதிய வேலை வாய்ப்புகளும் இல்லை. வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை இப்போது 10 % ஆகும்.

ஐரோப்பிய யூனியன் மற்றும் இதர பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள்...

இவர்கள் ஒன்றும் அமெரிக்காவுக்கு சளைத்தவர்கள் அல்ல..இவர்களும் பேராசையும், சுயநலமும் ,திமிரும் உள்ளவர்களே! தங்கள் நாட்டு மக்களின் செல்வத்தையெல்லாம் ஊக வணிகத்தில் அழித்து விட்ட இவர்கள் அரசை நடத்தக் கூட பணம் இல்லாமல் உலக வங்கியிடம் கடன் வாங்கி ,அது சொல்லும் கட்டுப்பாடுகளுக்கெல்லாம் கீழ்ப்படிந்து, செலவினத்தைக் குறைக்க மக்களின் சமூக நலத் திட்டங்களில் கை வைத்து விட்டன. இதனால் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் உள்ள அரசு ஊழியர்கள், போக்குவரத்துத் தொழிளாளர்கள் மற்றும் தனியார் நிறுவனத் தொழிலாளர்கள் , முனிசிபல் தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவரும் தங்களை ஆள்பவர்களுக்கு எதிராகக் கலகம் செய்து வருகின்றனர். இங்கிலாந்து நாட்டு போக்குவரத்துத் தொழிலாளர் தலைவர் ஒத்துழையாமை இயக்கம் நடத்தித் தான் இந்த அரசைப் பணிய வைக்க முடியும் என்கிறார்.

தற்போது பிரிட்டன் அரசு 1லட்சத்து 50 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கியதுடன் 155 பில்லியன் ஸ்டெர்லிங்க் பட்ஜட் குறைவை ஈடுகட்ட ஒவ்வொரு துறையும் 25 % முதல் 40% வரை சிக்கனதைக் கடைபிடிக்க ஆணையிட்டு வருகிறது. ஸ்டூவட் ஃப்ரேஸர் என்ற பங்கு வர்த்தகர் இங்கிலாந்து வங்கி 7 பில்லியன் போனஸ் வழங்கியது சரி தான் என்றும், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நிலவத்தான் செய்யும் என்றும் ஏனெனில் இறைவன் மனிதர்களுக்கு மூளையை ஒரே அளவாக வைப்பதில்லை என்றும் திமிராகப் பேசியுள்ளார்.

ஃப்ரான்ஸ் நாடு கூட்டாண்மையில் கைப்பாவையாக செயல்பட்டு, தொழிலாளர்களின் ஓய்வு பெரும் வயதை உயர்த்தி, பென்ஷனைக் குறைத்துள்ளது. ஹங்கேரியில் பயங்கரப் பொருளாதார வீழ்ச்சி. ஸ்பெயின் தன் வரலாற்றிலேயே கண்டிராத வேலையின்மையைக் கண்டுள்ளது. ஐஸ்லாந்தில் வலது சாரி அரசாங்கம் மக்களின் எதிர்ப்பில் நொறுங்கிப்போனது. இத்தாலியில் புலம் பெயர்ந்து வந்த தொழிலாளகளுக்கு எதிராக உள்ளூர் தொழிலாளர்கள் கிளம்பியுள்ளனர். ரோமில் அரசுக்கெதிரான போராட்டங்கள் நடக்கின்றன. கிரீஸ் அரசின் நிலையும் இதுவே. சுவிட்ஸர்லாந்தின் யூபிஎஸ் வங்கி 17 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்து, 2000 தொழிலாலர்களை வேலையை விட்டு விலக்கியது. கனடாவில் ஓன்டிரியோ என்ற புகழ் மிக்க தொழில் பகுதி கடும் நெருக்கடியில் தவிக்கிறது. ஜப்பானின் சோனி நிறுவனம் 16 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பி, தென்னமெரிக்க நாடுகளில் இருந்து பிழைப்புத்தேடி ஜப்பான் வந்தவர்களுக்கு விமானக் கட்டணம் கொடுத்து அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்புகிறது. மிஸ்ஸான் 20 அயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பி விட்டது.

இவ்வளவு நடந்தும் அமெரிக்காவோ ஐரோப்பிய யூனியன் நாடுகளோ அல்லது ஜப்பான் போன்ற முதல்லாளித்துவ கார்பரேட்டுகளின் பிடியில் உள்ள அரசுகளுக்கு புத்தியோ வந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் இவை அனைத்துமே கூட்டாண்மையால் நிறுவப்பட்ட அரசுகள். இவர்கள் தொடர்ந்து வலது சாரி தத்துவங்களையே கடை பிடிக்கப் போவதாகவும், உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியம் சொன்ன படி மக்கள் நலத்திட்டங்களைக் குறைத்து விடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். பொருளாதார மற்றும் தொழிற்நுட்பத்தில் பின் தங்கியுள்ள ஏழை நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் தெற்கு நாடுகளில் தங்கள் பொருட்களுக்கு சந்தைகளைப் பிடிக்க இவர்கள் அலைகின்றனர். இந்தியாவும் ஐரோபிய யூனியன் வலையில் சிக்கி பெரும் நெருக்கடியை சந்திக்க உள்ளது.

கூட்டாண்மையின் தோற்றம்...

நிலப்பிரபுத்துவத்தை அழித்து முதலாளித்துவமும் ,முதலாளித்துவம் ஏகாதிபத்தியங்களாகவும்-ஏகாதிபத்தியங்கள் விளைவித்த கூட்டாண்மை (கார்பரேட்) அதிபர்கள் தான் நம் உலகை இன்று ஆள்பவர்கள். இவர்கள் நிறுவனங்கள் உலகம் முழுவதும் 17,800 இருப்பதாக ஒரு புள்ளி விபரம் சொல்கிறது. இவர்களுக்கு வேண்டியது எல்லாம் கொழுத்த லாபம். இவர்களின் எண்ணம் முழுவதும் கொள்ளை லாபம் அடிப்பதில் தான்.

பால் க்ருக்மேன் தனது கட்டுரையில், ரிபப்ளிகன் கட்சியினர் தங்களுக்காக ஃபாக்ஸ் நியூஸ் ஏஜென்ஸியினர் வேலை செய்வதாக எண்ணியிருந்தனர். ஆனால் பின்னர் தான் அவர்களுக்குத் தெரிந்தது தங்கள் கட்சியில் கொள்கைகளை வகுப்பவர்கள் ஃபாக்ஸ் நிறுவனத்தில் சம்பளம் பெற்று வேலை செய்கிறார்கள் என்று. எனவே ரிபப்ளிகன் கட்சியினர் தான் ஃபாக்ஸ் நியூசின் வேலையாட்கள். இதே போல் எல்லா விளம்பர நிறுவனங்களும் கூட்டாண்மைக்கு விலை போகிறவை அல்லது முழுவதும் விலைக்கே வாங்கப்பட்டவை.

ஏன்.... தமிழ் நாட்டில் கூட ஒரு கட்சி தொடங்க முக்கிய நிபந்தனை கொள்கைகள் அல்ல. பணமும் தொலைக்காட்சி உரிமமும், பத்திரிக்கைகளும் தான். ஹிந்து நாளிதழின் நிருபர் திரு. பி. சாய்நாத் 5/8/2010 அன்று வெளியிட்ட செய்தியில் பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு தனி நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் சாதகமான விஷயங்களை செய்திகளைப் போல் வெளியிடுகின்றன என்கிறார். இந்திய பத்திரிக்கையாளர் சங்கம் இது உண்மை தான் என்று ஆதாரங்களுடன் தெரிந்தும் குற்றவாளிகள் மீது வழக்குத் தொடுக்காதது மட்டுமன்றி அவர்கள் பெயரைக் கூட வெளியிடவில்லை. இந்தக் கூட்டாண்மை நிறுவன அதிபர்கள் ஒன்று சேர்ந்து உலக சந்தையை பங்கு போட்டுக் கொண்டனர்.

மார்க்ஸ் சொன்னதைப் போல் உலகத் தொழிளாலர்கள் ஒன்று சேரவில்லை. உலக முதலாளிகள் ஒன்று சேர்ந்து கூட்டாண்மை நிறுவனங்களை அமைத்து அந்தந்த நாட்டு அரசுகளை தம் ஆளுகையின் கீழ் வைத்துள்ளனர். உலக வங்கியின் முன்னாள் ஆலோசகரான ஹாஜுங்கேங்க் தனது முதலாளித்துவம் என்ற புத்தகத்தில் நோபல் பரிசு பெற்ற ஹெர்பர்ட் சைமன் என்பவர் தெரிவித்த கருத்து ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அந்தக் கருத்து வேற்று கிரகத்திலிருந்து எந்த மனிதன் இப்பூவுலகிற்கு வந்தாலும் இங்கு சந்தைப் பொருளாதாரம் இல்லை, மாறாக முதலாளிகள் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்ட அமைப்புப் பொருளாதாரம் உள்ளது என்பதாகும்.

இவர்களுக்கு வேண்டிய எல்லா நிதி வசதிகளையும் வங்கிகளே அளிக்கின்றன, அரசே இதற்கான நிதி அமைப்புகளையும் தங்கு தடையின்றி மின்சாரத்தையும் தண்ணீரையும் குறைந்த விலைக்கு வழங்குவதுடன் இவர்கள் ஆலைகளுக்கு தொழிலாளர் நல சட்டங்கள் அமல் படுத்துவதில் இருந்து விலக்கும் அளிக்கிறது. இவர்களுக்கு நிலம் கையகம் செய்யும் பணியை அரசே செய்கிறது. இவர்களுக்கு வரி விடுமுறையும் உண்டு. இந்த வரியை 10% லிருந்து 71/2 % ஆகக் குறைத்து நமது அரசு 25 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை இழந்துள்ளது.

ஒரு முறை ஜார்ஜ் புஷ் பேசும் போது நான் கோல்கேட் பேஸ்ட் தான் உபயோகிக்கிறேன் என்று ஒரு பொதுக் கூட்டத்தில் இவர்களுக்கு விளம்பரம் செய்கிறார்.ஒரிசாவில் வேதாந்தா நிறுவனம் தொழிற்சாலை அமைக்க சுற்றுச்சூழல் அமைச்சரிடம் நமது பிரதமர் சிபாரிசு செய்கிறார். ஏர்டெல் நிறுவனம் தென்னாப்பிரிக்காவில் செயல்பட நமது பிரதமர் தென்னாப்பிரிக்க அரசிடம் சிபாரிசு செய்கிறார். வெளிநாடுகளுக்கு நமது இந்திய நாட்டு வர்த்தக, அயல்உறவு, பிரதமர் போகும் போதெல்லாம் இந்நிறுவனங்களின் பிரதிநிதிகளும் செல்வது வாடிக்கையான ஒன்று. அரசு வரவு செலவுத் திட்டங்கள் தயாரிக்கும் போது இவர்களைக் கலந்து ஆலோசித்தே தயாரிக்கிறது. தேர்தல்கள் வந்து விட்டால் கட்சிகளுக்கு தேர்தல் செலவுக்கு அள்ளி அள்ளி கொடுப்பவர்களும் இவர்களே. இவர்களின் செல்வச்செழிப்பும், ஊதாரித்தனங்களும், வாழ்முறைகளும், வருமானங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

உலகிலேயே அதிக செலவில் கட்டப்படும் 27 மாடிகள் கொண்ட குடியிருப்பு அம்பானியுடையது. இதற்கான செலவு 8000 கோடி ரூபாய் ஆகும்.இந்த நிறுவனங்கள் பணம் பாதாளம் வரை பாயும் என்ற தத்துவத்தை நன்கு அறிந்தவர்கள். இவ்வுலகில் தான் எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டே! எனவே கர்நாடகாவில் இவர்கள் நினைத்தால் பணத்தைக் கொட்டி ஆட்சி அமைக்க முடியும்! இவர்கள் மறுத்தால் ஆட்சி கவிழும். இவர்கள் வெறும் சுரங்கங்களை மட்டும் அங்கு நடத்தவில்லை. இவர்கள் மதுபான உற்பத்தியாளர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், மருத்துவக் கல்வி நிறுவனர்கள் மற்றும் ஒப்பந்தப் பணிபுரிபவர்கள் என்று பல வடிவில் இருப்பார்கள்.

கூட்டாண்மை சுரண்டல்..

இந்தக் கூட்டாண்மை அதிபர்கள் ஆஃபிரிக்க நாடுகளில் 2006 ஆம் ஆண்டிலிருந்து 15.20 மில்லியன் ஹெக்டேர் நிலங்களை விலைக்கோ அல்லது 99 ஆண்டு குத்தகைக்கோ வாங்கியுள்ளனர். இந்த நிலங்கள் ஆஃபிரிக்க கண்டத்தில் எத்தியோபியா, கானா, மாலி, மடகாஸ்கர், மொசாம்பிக், சூடான், டிஆர் சி காங்கோ மற்றும் தான்சானியா நாடுகளில் இருந்து வாங்கப்பட்டதாகும். வாங்கியவர்கள் வலைகுடா நாடுகளிலும், தென் கொரியாவிலும், சைனாவிலும், இந்தியாவிலும் உள்ளவர்கள் ஆவர். இந்த நிலங்களை வாங்க அரசுகளும் குறைந்த வட்டிக்கு இவர்களுக்கு கடன் தருகிறது. இதில் உணவுப் பயிர்களும், எத்தனால் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர்.

கூட்டாண்மை நிறுவனங்களால் அமைக்கப்பட்ட நம் அரசு மக்கள் நலனையும் கிராமப்புர விவசாய நலனையும் பின்னுக்குத் தள்ளியதால், படு மோசமாக பாதிக்கப்பட்டு சுரண்டலுக்கு ஆட்பட்டு கடனில் தத்தளித்த இந்திய விவசாயிகள் சுமார் 2 லட்சம் பேர், தற்கொலை செய்துள்ளனர் . 2009 இல் விவசாயத்துக்கு செய்த ஒதுக்கீடு 3.34 %. 2010 இல் இது 2.59 ஆகி விட்டது. 11 ஆவது திட்டத்தில் கிராமப்புர கட்டமைப்புக்கு மொத்த நிதியில் 30.5% ஆன வெறும் 14.40 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. 12/8/2010 நாளிட்ட ஹிந்து பத்திரிக்கையின் நிருபர் திரு. சாய்நாத் அவர்கள் தேசீய ஊரக வேலை வாய்ப்புத் திட்டங்களுக்கு அரசின் நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்படுகின்றன. பொது வினியோகத் திட்டத்தின் கீழ் தானியங்கள் வழங்கப்படும் தகுதியை மக்கள் பெற பல வித வரையறைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் சுரண்டல் மட்டும் தங்கு தடையின்றி உலக மயமாக்கப்படுகின்றது என்று தெரிவிக்கின்றார். ஒட்டு மொத்த இந்திய உற்பத்தி அதிகரிப்பால் ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகின்றனர் என்பதே உண்மை.

ஒட்டு மொத்த உற்பத்தி உயர உயர பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகவும், ஏழைகள் மேலும் பரம ஏழைகள் ஆகவும் இந்த சுரண்டல் போக்கு தான் காரணம். இவ்வாறு முகேஷ் அம்பானியின் சொத்து ஒரு நிமிடத்திற்கு ரூபாய் 40 லட்சம் அதிகரிக்கிறது. இந்தியாவில் ரூ.4.60 கோடிக்கு மேல் சொத்து உள்ளவர்கள் 126700 பேர். இவர்கள் நம் நாட்டு மக்கள் தொகையில் 0.01% இவர்களிடம் உள்ள பணம் ரூ.20 லட்சம் கோடி. இந்தியாவின் ஒட்டு மொத்த உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு சராசரி இந்தியனின் ஆண்டு வருமானம் ரூபாய். 40,141 . இந்திய மக்களில் 70% மக்கள் பெரும் சராசரி தினசரி ஊதியம் ரூ.20 மட்டுமே என்று செங்குப்தா கமிட்டி கூறுகிறது. 116 கோடி மக்கள் தொகையில் ஆண்டு வருமானம் பெரும் மொத்த மக்களில் 70% மக்கள் 7300 மட்டும் பெறுகின்றனர். மீதமுள்ள 30% மக்களின் ஆண்டு வருமானம் ரூ.1,16,770. 70% சாதாரண மனிதனை விட இந்த 30% அசாதாரண மனிதன் 16 மடங்கு பெறுகிறான்.

இந்த கூட்டாண்மை நிறுவனங்கள் நம் நாட்டு மூலப் பொருட்களையெல்லாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து நம் நாட்டை காலி செய்து விட்டன. 1990-91 இல் ஈயம் உற்பத்தி செய்ய தேவையான தாதுப் பொருட்கள் ஏற்றுமதி 1,39,419 டன்களில் இருந்து 2006-07 இல் 612641 டன்களாகின. இதே போல் சுண்ணாம்புக்கல் ஏற்றுமதி 1995-96 இல் 2 லட்சம் டன்களில் இருந்து 2007-08 இல் 8,79,000 டன்களாயின. கர்நாடகாவிலிருந்து இரும்புத்தாது சென்னை, க்ரிஷ்னப்பட்டினம், காகிநாடா மற்றும் மர்மகோவா துறைமுகங்கள் மூலம் 2003-2004 இல் 20,49,961 டன்களாக இருந்து 2009-2010 இல் 71,27,937 டன்களாயின. கடல் சார் உயிரின ஏற்றுமதி 1990-1991 இல் 1,39,419 டங்களில் இருந்து 2006-2007 இல் 6,12,641 டன்களாயின. திரு. மதுகோடா 2006 இல் ஜார்கண்டில் முதல்வர் ஆனவுடன் அதுவரை போடப்பட்டிருந்த 44 சுரங்கப் பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்யப் போவதாக மிரட்டினார். ஆனால் இவரே புதிதாக 23 சுரங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டு 100 அனுமதிகளை வழங்கியுள்ளார். இவர் பெற்ற லஞ்சம் மட்டும் ரூ.4300 கோடி என்றால் ......இந்த சுரங்க தாதுப் பொருட்களின் மதிப்பு என்னவென்று நாம் யூகிக்கலாம். ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மாப்பிள்ளை அனில் குமாருக்கு 37 லட்சம் ஏக்கர் இரும்புத்தாது சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து ஆந்திர சட்ட சபையில் எதிர் கட்சிகள் கூச்சல் போட்டனர். இதில் 13 லட்சம் கோடி டன்கள் தாது உள்ளதாகத் தெரிகிறது.

நம் பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என். எல் இல் வேலை பார்க்கும் உயர் மட்ட அலுவலர்கள் தனியார் தொலைபேசி சேவை நிலையங்களுக்கு சாதகமாகவே எல்லா வேலைகளையும் செய்து ஓய்வு பெற்ற பின் அவர்களிடம் அதிக சம்பளத்துக்கு வேலைக்கு சென்று கூட்டாண்மைக்கு ஆதரவாகவும் பி.எஸ். என். எல் லுக்கு விரோதமாகவும் செயல் படுகின்றனர். இந்த கூட்டாண்மை நிறுவனங்கள் சென்ற பார்லிமென்ட் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்குக் கொடுத்த தேர்தல் செலவுக்கான பணம் மட்டும் ரூ.80 ஆயிரம் கோடி என்று ஒரு தகவல் தெரிவிக்கின்றது.

உலக மற்றும் இந்திய நாடுகளில் கூட்டாண்மை ஏற்படுத்திய தாக்கங்கள்....

இந்த கூட்டாண்மை அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு பரவலான உலக அதிகாரங்கள் ஒரு தலைபட்சமாக அதிகம் வழங்கப்படுகின்றன. பிரேஸில்,ரஷ்யா, இந்தியா மற்றும் சைனா சேர்ந்த பிரிக் நாடுகள் உலக ஜனத்தொகையில் 40% கொண்டுள்ளன. இவர்களின் பொதுதொழில் பொருள்வளர்ச்சி உலகில் 20% .ஆனால் இவர்கள் அனைவருக்கும் சேர்த்து சர்வதேச நிதியக் குழுமத்தில் (ஐ.எம்.எஃப்) 10% தான் ஓட்டளிக்கும் அதிகாரம் உள்ளது. இந்த நிதியத்தின் கட்டளைக்கிணங்க எல்லாவற்றையும் தனியார் மயமாக்கியதன் விளைவை அனைத்து நாடுகளும் இன்று தினந்தோறும் சந்தித்து வருகின்றன.

இவைகள் அனைத்தும்...அதாவது ஆளும் வர்க்கங்களும் அரசும் மக்களை விட்டும் தனிமைப்பட்டுள்ளன. இந்த எல்லா அரசுகளையும் அந்தந்த நாட்டு மக்கள் வெறுக்கிறார்கள். நமது நாட்டின் மனித வள மேம்பாட்டு எண் 128. உலகில் உள்ள 177 இல் நம் வரிசை 128!.இந்த உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு, சர்வதேச நிதியம் அனைத்துமே கூட்டாண்மைக்கான அமைப்புகள். இவை அந்தந்த நாட்டு அரசுகள் மக்களுக்கு சேவை செய்வதையோ அல்லது கல்வி, சுகாதாரம்,வீட்டு வசதி ,குறைந்த வட்டியில் அல்லது வட்டியில்லா கடன் வசதி ஆகியவை வழங்குவதையோ எதிர்க்கின்றன. ஏனெறால்...அது கூட்டாண்மைக்கு எதிரானது. இருப்பினும் வளர்ந்த நாடுகள் வளர்ச்சி அடையாத நாடுகளைச் சுரண்டி, தன் நாட்டு மக்களுக்கு சமூகப் பாதுகாப்பை அளித்து வந்தன. இந்த கூட்டாண்மை நிறுவனங்களின் பேராசையால், வேலை இழந்து, வீடிழந்து பணக்கார நாடுகளின் மக்களே , தற்போது டெண்டுகளில் தங்கும் நிலமைக்கு வந்து விட்டனர். இந்தியா இன்னும் மோசம். நம் நாட்டின் மொத்த வருமானத்தில் சமூகப் பாதுகாப்புக்கு செலவழிப்பது வெறும் 6.7%. ஜெர்மனியில் இது 25% ,ஃபிரான்ஸில் 23%.அமெரிக்காவில் சராசரி வருமானம்( பெர் காபிடா இன்கம்) 47014 டாலர்.

இந்த கூட்டாண்மை நிறுவன கொள்ளையால் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு... விவசாயம், கிராமப்புர அடிப்படை கட்டமைப்புகள், சிறு தொழில் கடன் வசதி எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டன. இந்தக் கூட்டாண்மை நிறுவனங்கள் வருவதற்கு முன் இந்திய மக்களுக்கு சராசரியாக 440 கிராம் உணவுப் பொருள் கிடைத்து வந்தது. 2005-2008 இல் இது 436 ஆகக் குறைந்து விட்டது. இதே காலகட்டத்தில் பருப்பு வகைகள் 70 கிராமில் இருந்து 35 கிராமாக குறைந்து விட்டது.

கிராமப்புறங்களுக்கு மஹாராஷ்டிர அரசு வேளாண் பணிகளுக்காக 82.4 % கடன் உதவியை 1990 களில் அளித்து வந்தது. நகர்ப்புறங்களுக்கு 17.4% ஆக இது இருந்தது.இதே அரசு 2008 ஆம் ஆண்டில் கிராமப்புறங்களுக்கு வழங்கிய கடன் 42.4 % ஆக குறைந்து நகர்ப்பகுதிகளுக்கு 57.6 % ஆக உயர்ந்து விட்டது. சரியான உணவு, வீடு ,கல்வி மற்றும் சுகாதாரம் இல்லாத ஒரு சமூகம் நோய் பிடித்தவர்களாக எந்த ஒரு கடின வேலையையும் செய்ய இயலாதவர்களாகத்தானே இருப்பார்கள்? அது தான் நடந்தது. 2005-2006 ஆம் ஆண்டுகளில் 3 வயதுக்கு கீழ் உள்ள 46% குழந்தைகள் எடை குறைவாய் உள்ளனர். 33% மகளிர் மற்றும் 28% ஆண்கள் பாடி மாஸ் குறைவாய் உள்ளனர். பிறந்து 36 மாதங்கள் மற்றும் ஆறு வருடங்களுக்குள் இருக்கும் குழந்தைகளில் 79% பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 வயது முதல் 49 வயதுக்குள் உள்ள பெண்களும் ஆண்களும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களின் சதவிகிதம் 56 ஆகும். கர்ப்பிணிகள் 58% பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே தண்டகாரன்யா பகுதிகளில் பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர். இந்த இடங்களில் சுரங்கப்பணிக்கும் தொழிற்சாலை கட்டுவதற்கும் அந்தப் பகுதி மக்களை இடம் பெயரச்சொல்கிறார்கள். ஆனால் அந்த மக்களுக்கு அந்தப் பகுதியில் தான் வாழ்விடமும், உணவும், தண்ணீரும், தேனும், சிறு சிறு வேட்டைப் பிராணிகளும் உள்ளன. கூட்டாண்மை நிறுவனங்களுக்கு உதவி செய்யும் உயர் மட்ட மாநில அரசு தலைமைப் பதவிகளில் உள்ள காவல் மற்றும் அதிகாரிகள் இந்த இடங்களை அவர்களுக்கு ஒதுக்கலாம்... அவர்களும் பெறலாம். ஆனால் அந்த இடங்களுக்குச் சொந்தமான பழங்குடியினர் எங்கு செல்வார்கள்? எனவே தான் அந்தப் பகுதிகளில் இப்போது பெரிய போராட்டம் நடந்து வருகிறது.

அருந்ததி ராய் சொல்வது போல பழங்குடியினர் தங்கள் பூமியைக் காக்கவே ஆயுதம் ஏந்துகிறார்கள்..எல்லா மாவோயிஸ்டுகளும் ஆதிவாசிகள் ஆனால் எல்லா ஆதிவாசிகளும் மாவோயிஸ்டுகள் அல்ல. இந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கி ஏந்திய காந்திகள்.

நமது நாட்டிற்கு அத்தியாவசிய தேவையான தாதுப் பொருட்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து நமது சுற்றுச்சூழலையும் மீட்டு எடுக்க முடியாத அளவுக்கு மாசு படுத்துவதால் நாமும் நமது சந்ததியினரும் பெரும் இன்னலுக்கு ஆளாவோம். லஞ்சத்திலேயே ஊறித்திளைக்கும் அதிகாரி வர்க்கத்தை வளர்த்து எடுத்ததே இந்த முதலாளி வர்க்கம் தான். தற்போது மொத்த சமூகமே லஞ்ச லாவண்யத்தில் திளைக்கிறது.

தற்போது ஐ.டி அமைச்சர் திரு. ஏ. ராஜா 1.40 லட்சம் கோடி ஊழலினால் பதவி விலகியதற்கு இந்த கூட்டாண்மையினரே காரணம். காமன் வெல்த் கேம்ஸ் லஞ்சம், ஐ.பி.எல் கிரிக்கெட் லஞ்சம், மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடு லஞ்சம் எல்லாம் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிகள். முன்னாள் சட்ட அமைச்சர் ஷாந்தி பூஷன் ஓய்வு பெற்ற 16 உச்ச நீதி மன்ற நீதிபதிகளில் 8 பேர் ஊழல்வாதிகள் என்று உச்சநீதி மன்றத்திலேயே தெரிவிக்கின்றார். கர்நாடகாவில் லஞ்சப் புகாரில் அகப்பட்ட அரசு அலுவலர்களில் 10% கூட தண்டனை பெறவில்லை. போபால் விஷ வாயு வழக்கு, பாபர் மஸூதி இடிப்பு வழக்கு, பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு, சத்தியம் கூட்டாண்மை நிறுவன வழக்கு , குஜராத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட வழக்கு, சோரப்புதீன் என்கவுன்டர் வழக்கு,கோத்ரா ரயில் வண்டி எரிப்பு வழக்கு, டெல்லியில் சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கு, ஜெயலலிதா சொத்து சேர்த்த வழக்கு இவையெல்லாம் எத்தனை ஆண்டு வழக்குகள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இதில் , சத்தியம் அதிபர் ஜெயிலிலேயே இல்லை என்பதும் தற்போது தான் உச்ச நீதி மன்றம் தலையிட்டு ஜெயிலில் அடைத்துள்ளது என்பதும் அறிந்ததே.

கிரிகெட் சூதாட்டம், ஐ.பி.எல் சூதாட்டம், வெளிநாடுகளில் கால்பந்தாட்ட வீரர்களை வைத்து நடத்தும் சூதாட்டம் என்று கலை மற்றும் பண்பாட்டுத் தடங்களை இவர்கள் போகும் வீச்சு மிகவும் அதிகமாகும். 150 கோடி ரூபாய் செலவில் எந்திரன் படம் தயாரித்து முதல் ஷோ பார்ப்பவர்களிடம் 5000 ரூபாய் கட்டணம் வாங்கப்பட்டிருக்கிறது. கூட்டாண்மையின் தாக்கத்தால் தமிழ் மொழி அழிந்து வருகிறது என்று கவிஞர் வைரமுத்து வருந்துகிறார். ஜங்க் உணவுகளை உண்டு பாப் கலாச்சாரத்தில் ஊறித்திளைக்கிறது மேல் தட்டு வர்க்கம். அல்லலுறும் கீழ் தட்டு மக்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உண்ணக் கூட வழியின்றி வாழ்வாதாரமான உணவு, தண்ணீர், கல்வி சுகாதாரம், வீடு ,வேலைவாய்ப்பு, கழிப்பிட வசதி, விளையாட்டு,கலை மட்டுமல்ல பண்பாட்டு வாசல்களும் மூடப்பட்டு விட்டன.இவர்களை மேலும் ஓட்டாண்டியாக்க தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் மதுபானக்கடைகள் திறந்து சென்ற ஆண்டு 12500 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. சென்ற தீபாவளியில் மட்டும் இவர்கள் 90 கோடிக்கு மது அருந்தியுள்ளனர். காமன் வெல்த் போட்டிக்காக டெல்லியிலிருந்து 60 ஆயிரம் பிச்சைக்காரர்கள் துரத்தப்பட்டுள்ளனர். .

.சுற்றுச்சூழல் மாசு...

உலகில் எந்தப் பொருளையும் வாங்கிவிடலாம் அல்லது அதிகரித்துக் கொள்ளலாம் நிலத்தைத் தவிர. கூட்டாண்மை வாதிகள் உலகம் முழுவதிலும் உள்ள நிலம், நீர், காற்று ஆகியவைகளை மாசுபடுத்தி தங்கள் லாபவேட்டையை தொடர்கின்றனர். பங்களாதேஷ் ,லட்சத்தீவு மற்றும் கடல் மட்டத்தில் உள்ள அனேக நாடுகள் கடல் நீர் மட்ட உயர்வால் விரைவில் அழியப் போகின்றன. இந்த கூட்டாண்மைவாதிகள் இதைப்பற்றியெல்லாம் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. இவர்களின் தலைவர் திரு. ஒபாமா அவர்கள் கோபன்ஹேகனில் நடந்த சர்வதேச சுற்றுச்சூழல் மாநாட்டில் தக்க முடிவை எடுக்கத்திணறி , தன் தோல் உரிபட்டு நிற்கிரார். தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்னால் உலகில் இருந்த கரியமில வாயுவின் அளவு ஒரு மில்லியனில் 280 பகுதி. 2 டிகிரி புவியின் வெப்பம் உயர்ந்தால் 50 % கரியமில வாயு உயர்ந்து 450 பகுதியாக மாறும். இது தான் அதிகபட்சமாக இருக்க முடியும். உலக மக்கள் தொகையில் 5% உள்ள அமெரிக்கா, 27% கரியமில வாயுவை வெளியிடுகிறது. 7.5% மகக்ள் தொகை மட்டுமே கொண்ட ஐரோப்பிய யூனியன் நாடுகள் 25% கரியமில வாயுக்களை வெளியேற்றுகிறது. அதாவது உலக மக்கள் தொகையில் வெறும் 12.5% அதாவது அரைக்கால் வாசி மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் 51% நச்சு வாயுக்களை வெளியிடுகின்றன. உலக மக்கள் தொகையில் 17.5% உள்ள இந்தியா 3% ம் 20% கொண்ட சீனா 10% ம் ,கரியமில வாயுக்களை வெளியிடுகின்றன. வளர்ந்த நாடுகளில் சராசரியாக ஒரு மனிதன் 5 ஹெக்டேர் நிலங்களை பயன்படுத்துகிறான். ஏழை நாடுகளில் சராசரியாக ஒரு மனிதன் பயன்படுத்தும் நிலத்தின் அளவு 0.20 ஹெக்டேர் இந்த முன்னேறிய நாடுகள் தங்கள் கழிவுப்பொருட்களை ஏழை நாடுகளுக்கு கப்பல்கள் மூலம் அனுப்பி விடுகின்றன.இந்த பூமியின் ஒரு ஆண்டு இயற்கை வள உபயோகம் மறுசுழற்சியில் நிலை பெற 11/2 ஆண்டுகள் ஆகின்றன.

பிரிட்டிஷ் பெட்ரோலியம் மெக்ஸிகோ வலைகுடாவில் எண்னை எடுத்துக் கொண்டிருந்த போது அந்த இயந்திரம் உடைந்து கச்சா எண்ணை 50 ஆயிரம் பேரல்கள் கடல் நீரில் கலந்து 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூர அளவுக்கு பரவி கடல் வாழ் உயிரினங்களை அழித்துள்ளன. 11 தொழிளாலர்களும் மாண்டுபோயுள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமா பிரிட்டிஷ் பெற்றோலியத்தை திட்டித் தீர்க்கிறார். இந்தக் கசிவு நிற்க 5 மாதம் ஆகியுள்ளது.

அமெரிக்க ஆண்டர்சனின் ஆலை போபாலில் விஷவாயுவை கசிய விட்டதால் 20 ஆயிரம் பேர்கள் மடிந்தனர். பல லட்சம் பேர்கள் நிரந்தர ஊனமாயினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்த நஷ்ட ஈடு சராசரியாக ரூ.10 ஆயிரம். இக்கொடுமைக்கு நம் நாட்டு அரசு அதிகாரிகள் , நீதிபதிகள் எல்லோரும் உடந்தை. அதனால் தான் அமெரிக்க ஆண்டர்சன் அவர் நாட்டில் பத்திரமாக இருக்கிறார். இதைப் பெரிது படுத்தினால் கூட்டாண்மை நிறுவனங்கள் இந்தியாவில் தமது ஆலைகளை அமைக்க வர மாட்டார்களாம்.

தூத்துக்குடி ஸ்டெரிலைட் ஆலை பல்லாயிரம் கோடி வரியேய்ப்பு செய்து, தூத்துக்குடியையே மாசு படுத்தி இந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் உள்ளது. எல்லாம் அறிந்த நம் அரசு அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்க அமெரிக்க, ரஷ்ய மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இது பல்லாயிரம் கோடி வருமானத்தை அந்த நாடுகளுக்கு அளிக்கும்.இவற்றில் தயாரிக்கப்படும் மின்சாரம் 2 மடங்கு செலவு பிடிக்கக் கூடியவை. மேலும் இந்த அணு உலை கழிவுகளான யூரேனியம் அழிய 710 மில்லியன் ஆண்டுகளாகும்! புளூடோனியம் அழிய 24400 ஆண்டுகளாகும். இந்த அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் குறைந்த அளவு இழப்பீடு வழங்க சட்டம் இப்போதே தயார். இதற்கு பி.ஜே. பி யும் உடந்தை.

அமெரிக்க நாடு ஈராக்கில் பயன்படுத்திய சக்தி வாய்ந்த ஆயுதங்களால் எரிந்து போன எண்ணை வயல்கள் மாபெரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தின. முதல்முதலாக ஜப்பானில் ஹிரோஷிமா மற்றும் நாகாசாகி நகரங்களில் அணுகுண்டு போட்டு புல் பூண்டு முதற்கொண்டு அந்தப் பகுதியையே அழித்தவர்கள் இவர்கள் தான். புவிவெப்பமும் சுற்றுச்சூழலும் இதே போல் சீர்கேடு அடைந்து வருமானால், இன்னும் 150 ஆண்டுகளில் இந்தியாவில் தென்மேற்கு பருவ மழையே இருக்காது. 60 லட்சம் ஹெக்டேர் பயிர் நிலங்கள் கடந்த 20 ஆண்டுகளில் தரிசு நிலங்களாக மாறிவிட்டன. இதே போல் கடல்வாழ் உயிரினங்களும் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 69,300 கோடி கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் மிதந்து வந்ததால் கடல் நீர் மாசடைந்து உயிரினங்களை அழித்து விட்டது. நம் தமிழ் நாட்டில் நிலத்தடி நீர் மாசடைந்து 19,000 கிராமங்களில் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத அளவிற்கு சீர் கெட்டு உள்ளது. கொகோகோலா என்ற கூட்டாண்மை கொள்ளைக் காரன் இந்தியா முழுவதிலும் நல்ல நீர் உள்ள பகுதிகளில் எல்லாம் எல்லா நீரையும் உறிஞ்சி நம்மை வஞ்சிக்கிறான்.

வன நிலங்களின் பரப்பளவு இந்தியாவில் குறைந்து கொண்டே வருகிறது. சுரங்கப்பணிகளுக்கு இவை தாரை வார்க்கப் படுவதால் இந்த நிலை. இது போல் தாரைவார்க்கப்பட்ட நிலங்கள் நிக்கோபாரில் 100%, ஆந்திராவில் 14%, ஒரிசாவில் 16.2%, சதீஸ்கரில் 15.2%, குஜராத்தில் 10.2%, ஜார்க்கண்டில் 9.5% ,மத்தியப்பிரதேசத்தில் 10.6%, கர்நாடகாவில் 8% ஆக இந்த வன நிலங்கள் மொத்தம் 1.64 லட்சம் ஹெக்டேர் வனநிலங்களில் அடங்கும். 2005-2006 இல் 77 மில்லியன் டன் தண்ணீர் இரும்புத்தாது வெட்டியெடுக்க மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது . கூட்டாண்மை நிறுவனங்களின் வருகைகுப்பிறகு தான் வன நிலங்கள் வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டன. அதாவது 2001 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தான் 600 லட்சம் ஆதிவாசிகள் காட்டை விட்டும் துரத்தப்பட்டனர், 1,30,000 தாவர இனங்களும் அழிந்தன. சுரங்கப்பணிகளால் 90 தேசியப் பூங்காக்களும், வன விலங்குகளின் புகலிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

சிலி நாட்டின் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தண்ணீர் வியாபாரம் தங்குதடையின்றி நடைபெறுகிறது. இந்தியாவில் சர்தார் சரோவர் அணைத் திட்டம் சாதாரண மக்களின் குடிநீர் தேவையை விட கூட்டாண்மை நிறுவனங்களின் ஆலைகளின் தேவையையே பெரிதும் நிறைவேற்றுகின்றன. இந்த அணைக்கட்டு திட்டத்தால் பயன்பட உள்ள விளைநிலங்கள் கூட கூட்டாண்மை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன.


கூட்டாண்மையின் தாக்கத்தால் இந்தியாவிலும் உலக அளவிலும் உள்ள மக்களின் நிலை..

இந்தியாவில் 70 விழுக்காடு மக்களை வறுமை கோட்டிற்குக் கீழ் இந்தக் கூட்டாண்மை நிறுவனங்கள் கொண்டு வந்து விட்டன. மேலும் பழங்குடியினர் மற்றும் ஆதிவாசிகளை அச்சுறுத்தி ஆயுதங்களை ஏந்த வைத்து விட்டது. இதனால் இந்தியாவில் சட்டீஷ்கர், மஹாராஷ்டிரா, ஒரிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் ஆந்திர மாநிலங்களில் 229 மாவட்ட்டங்களில் மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு வளர்ந்து 70 விழுக்காடு பகுதிகள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. இந்திய மக்களின் 66 விழுக்காடு விவசாயத்தையே நம்பியுள்ளன. விவசாய உற்பத்தியை நமது அரசு ஊக்கப்படுத்தாமல் கடனுதவி வழங்காமல் நகர்ப்புரங்களுக்கு கிராமப்புர மக்களை துரத்தி விடுகிறது.

நகர்ப்புர மக்கள் தொகை 20..இல் இருந்ததைக் காட்டிலும் 2001..ஆம் ஆண்டுகளில் 11 சதவிகிதம் கூடியுள்ளது. இவர்களில் 20% த்தினருக்கு பாதுகாப்பான குடிநீர் வசதி இல்லை. 58% த்தினருக்கு கழிப்பிட வசதி இல்லை. இந்நகர்களில் உருவாகும் குப்பைகளில் 40% அப்புறப்படுத்தப் படுவதேயில்லை. உதாரணத்திற்கு பீகார் மாநிலத்தில் பத்து விழுக்காடு மக்கள் தான் நகர்ப்புரங்களில் வசிக்கின்றனர். பீகாரில் கல்வி அறிவு 47% . பீகாரில் வறுமை கோட்டிற்குக் கீழ் இருப்பவர்கள் 42%. இம்மாநிலத்தில் சுகாதாரப் பணிகளுக்காக செலவிடும் தொகை மொத்த வருமானத்தில் 1 விழுக்காடு தான். மஹாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மாநகரில் தற்போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, அந்நகர பரப்பளவு 438 சதுர கிலோ மீட்டர். இதில் 375 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள நிலத்தில் அந்நகரின் 40% மக்கள்.. அதாவது , பெரும் பணக்காரர்கள் நடுத்தர மக்கள் வாழ்கின்றனர். மீதமுள்ள 60% மக்கள் வெறும் 63 சதுர கிலோ மீட்டரில் வசிக்கின்றனர்.

அலகாபாத் மாவட்டத்தில் , "கன்னே" என்ற கிராமத்தில் பசிக்கொடுமை காரணமாக சிறுவர்கள் கற்களையும் மண்ணையும் தின்பதாக 4/4/2010 இல் செய்தி வந்து, உச்ச நீதி மன்றம் ஆய்வு செய்து , இது உண்மை தான் என்று அதன் பிரதிநிதிகள் உறுதி படுத்தியுள்ளனர். இக்கிராமத்தில் 80% மக்களுக்கு உணவுக்கு உத்திரவாதம் இல்லை என்றும் 90% சிறுவர்களுக்கு சத்துக் குறைவு உள்ளதாகவும் இவர்கள் கொத்தடிமைகளாக வாழ்ந்து வருவதாகவும் அதிகாரிகளோ அரசியல் தலைவர்களோ இவர்களை கண்டுகொள்ளவில்லை என்று அறிக்கை கூறுகிறது.

மில்லினியம் டெவலப்மெண்ட் பிளாண்ட் என்ற திட்டத்தின் கீழ் ஐ.நா சபை தற்போது 2006ஆம்ஆண்டில் 1.4 பில்லியன் மக்கள் கடும் பட்டினியில் தவிப்பதாகவும் இவர்களுக்கு உதவ பணக்கார நாடுகளிடம் நிதி உதவி கோரியது. தாங்களே கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்த நாடுகள் இம்மக்களுக்கு நிதி உதவி எதுவும் அளிக்கவில்லை. தென்னாபிரிக்க நாடுகளில் வெனிசுலாவின் அதிபர் சாவேஷ் அமெரிக்கா தன் நாட்டைத் தாக்கினால் ...அமெரிக்காவுக்கு எண்ணை அனுப்ப மாட்டேன் என்றும், தன் நாட்டு மக்கள் இதனால் கற்களை சாப்பிட்டாலும் சரியே என்று சொல்லியுள்ளார். பொலீவியாவின் மொரேல்ஸ் அரசு கூட்டாண்மை அதிபர்களின் பிடியில் இருந்து விடுபட்டதால் 6% அளவிற்கு வறுமையை ஒழித்தும் , 4.4 பில்லியன் டாலர் வெளிநாட்டுக்கடனை 2.4 பில்லியன் டாலராகக் குறைத்தும் உள்ளது. கூட்டாண்மை நிறுவனங்களால் தன் நாட்டு என்ணை அபகரிக்கப் பட்டதை நாட்டுடைமை ஆக்கியதால் தனது ஒரு மில்லியன் தெர்மல் யூனிட்டிற்கு 0.6 டாலர் கிடைத்தது ..தற்போது 5 டாலராக ஆக்கியுள்ளது.

தற்போது 5 கோடி டன் உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளன. ஆனால் மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இந்த உணவு தானியங்களை சரியாகப் பாதுகாக்காததால் 60 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. தற்போது ஏற்பட்ட மழை வெள்ளத்தால் உணவு தானியங்கள் வீணாகி விட்டதை கண்டித்த உச்ச நீதி மன்றம்...இவைகளை வறுமையில் வாடும் மக்களுக்கு இலவசமாக வழங்க சொன்னது. ஆனால் நமது நாட்டுப் பிரதமர் உணவு தானியங்களை பட்டினியில் இடப்பட்டவர்களுக்கு இலவசமாக வழங்க மறுத்ததுடன் அரசின் கொள்கை விஷயங்களில் நீதி மன்றம் தலையிடுவதாகவும் கூறியுள்ளார்.

தற்போது உள்ள உலக நிலைமைகளில், வளர்ந்த நாடுகள் இப்போது மாபெரும் பொருளாதார நெருக்கடிகளை கூட்டாண்மை நிருவனங்களுக்கு சேவையாற்றி ஊகவணிகம் உடைந்ததால் பொருளாதார பின்னடைவை சந்தித்து மக்களை ஓட்டாண்டிகளாக ஆக்கி..மக்களுக்கு, உழவர்களுக்கு , உழைப்பாளிகளுக்கு வழங்கி வந்த சமூக பாதுகாப்பு மற்றும் வேலை வாய்ப்பு உத்திரவாதத்தை கைவிட்டதால் மக்களிடம் இருந்து தனிமைப் பட்டு பதவி இழக்கும் அல்லது புரட்ச்சி வெடிக்கும் நிலையில் உள்ளன. இந்நிலையில் சைனாவும் இந்தியாவும், பிரேசிலும் ,ரஷ்யாவும், ஒரு சில தென் கிழக்கு ஆசிய நாடுகளும், ஆஃப்ரிக்காவில் ஒரு சில நாடுகளும் பொருளாதார சீர் குலைவால் தலை குப்புறக் கவிழாமல்..ஓரளவிற்கு நின்று கொண்டிருக்கின்றன. இதிலும் சைனாவின் 3 டிரில்லியன் டாலர் வெளிநாட்டு செலாவணி கையிருப்பையும் 580 பில்லியன் டாலர் சீன நாட்டின் ஊக்கத்திற்காக செலவிட்டதையும் கண்ட வளர்ந்த நாடுகள் தங்களை சைனாவே மீட்க முடியும் என நம்பி, அதன் செலாவணி நாணயத்தின் மதிப்பைக் கூட்டச்சொல்லி வற்புறுத்துகின்றன.

உலகம் இனிமேலும் அமெரிக்காவின் பிடியின் இல்லை. எல்லா நாடுகளும் கூட்டாண்மை முதலாளித்துவ தத்துவங்களுக்கு சாவுமணி அடித்து , மக்களின் தேவைகளுக்காக உற்பத்தி செய்து, மக்கள் அனைவருக்கும் உணவு, கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு ,இருப்பிடம் ஆகிய வாழ்வாதாரங்களை வழங்கும் கொள்கைகளைக் கடைபிடித்தால் தான் உலகம் வருங்காலங்களில் உய்ய முடியும். இல்லையேல் பெரும் பேரழிவையும், சீர்குலைவையும், உள்நாட்டுக் கலவரங்களையும், வெளிநாடுகளுடன் போர் புரிய வேண்டிய ஆபத்திற்கும் தள்ளப்படும்.

முடிவுரை...

உற்பத்தி சக்திகளைப் பெருக்கி ஒரு சிலரிடம் அவை குவிந்தால்...உற்பத்தி உறவுகளில் மட்டும் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றால்...உலகச்சக்கரம் முன்னேற்றத்தை நோக்கி எப்படி நகர முடியும்? பிரபுல் பத்வாய் சொல்கிறார் "டெமாஸ்" என்ற வார்த்தைக்கு" மாஸ்" என்று அர்த்தம். அதாவது மக்கள் திரள். அந்த மக்கள் திரள் என்பது சாதாரண மக்கள் என்று பொருள் படும். அந்த சாதாரண மக்களால் நடத்தப்படும் ஆட்சியே டெமாக்ரஸி ஆகும். இந்த கூட்டாண்மை ஆட்சிகள் தங்களை (முதலாளித்துவ) டெமாக்ரடிக் நாடுகள் என்று சொல்லிக் கொள்வது சாத்தான் தன்னைக் கடவுள் என்று சொல்லிக் கொள்வதற்கு ஒப்பாகும்.

மைக்கேல்மூர்----நாடக -சினிமா தயாரிப்பாளர், முதலாளித்துவம் ஒரு தீமை( ஈவில்) என்கிறார். இந்தத் தீமையை ஒழுங்குபடுத்துவது அல்லது கட்டுப்படுத்துவது என்பதெல்லாம் நடக்காத காரியம். எனவே அதனை ஒழித்தழித்துவிட்டு , சாதாரண ( உழைக்கும்) மக்கள் ஜனநாயகத்தை நிறுவ வேண்டும் என்கிறார்.

மாபெரும் சிந்தனையாளர் சோம்ங்கி அவர்கள் தான் எதற்காகவாவது நினைவுகூறப்பட வேண்டும் என்று நினைப்பீர்களானால், தன்னுள் புதிய சிந்தனையைத் தோற்றுவித்த ஹோவர்ட் ஜின் அவர்கள் எழுதிய (1922---2010) அமெரிக்க (சாதாரண) மக்களின் வரலாறு (1980)" எ பீப்பில்ஸ் ஹிஸ்டரி ஆஃப் யு.எஸ் " என்ற புத்தகத்தை படிக்க தனக்கு சிபாரிசு செய்தவரைத்தான் என்கிறார். அந்தப் புத்தகத்தில் அவர் ஆட்சி அதிகாரம் இதுவரை பணபலமும், துப்பாக்கியின் பலமும் உள்ளவர்களிடம் இருந்து வந்துள்ளது..இது எப்படியும் பொது மக்களிடம் தான் வந்தாக வேண்டும்..ஏனென்றால் அவர்களிடம் இருந்து தான் இவர்கள் அதைப் பெற்றுள்ளனர்.

பொது மக்கள் ஆட்சி அதிகாரத்தைப் பெற்று அதைப் பயன் படுத்த வேண்டும். வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் பொது மக்கள் இந்த ஆட்சி அதிகாரத்தை முற்காலங்களில் சரியாகப் பயன்படுத்தி இருப்பதை அறியலாம் என்று தெரிவித்துள்ளார்.

புஷ்பா எம். பார்கவா என்பவர், தனது 5/6/2010 " தி ஹிந்து" என்ற நாளிதழில் இன்னபிறவற்றுடன் "நமது பிரபஞ்சம் 120 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியது..ஆனால் பெருவெடிப்பிற்குப் பிறகு இயற்பியல் விதிகள் தோற்றத்திற்கு வருவதற்கும் தனிமங்கள் உருவாகவும் சில விநாடிகள் தான் தேவைப்பட்டன. எனவே , ஒடுக்குவோரின் இறுதி அழிவு விதி தோன்றுவதற்கு மிக நீண்டகாலம் பிடித்தது. ஆனால் இன்று கல்வி, தகவல் தொடற்புத்துறை, அறிவியல் வளர்ச்சி ஆகியன மக்களை முன்னேற்றி இருக்கிறது. எனவே 80% மக்களை சுரண்டுபவர்கள், ஒடுக்குபவர்கள் தங்கள் செயலுக்கு இனிமேலும் நியாயங்கள் கற்பித்துக் கொண்டிருக்க முடியாது. உண்மையில் ஒரு புரட்சியில் அதன் லட்சியம் நியாயப் படுத்தப்பட்டாலும் கூட , நடக்கப் போகும் விளைவுகள் எப்போதும் நியாயப் படுத்தக்கூடியதாக இருப்பதில்லை. எனவே நம் நாடு இந்த பேரழிவைத் தடுக்க தக்க ஏற்பாடுகளை இப்பொழுதே எடுக்கத்தவறினால் நம் நாட்டு மக்களான நாம் மற்றும் நம் சந்ததிகள் பெரும் அழிவிற்கு ஆளாக வேண்டியிருக்கும்" என்று எச்சரிக்கிறார்.

இந்த கேடுகெட்ட கூட்டாண்மையின் நலன்களைப் பேணும் அரசியல்அதிகார வர்கத்தின் எல்லாத் துறையினருக்கும், படித்த மேல் தட்டு வர்க்கத்தினருக்கும் இந்த நியாயமற்ற சமூக அமைப்பு, நன்கு தெரியும். ஆனால் இதில் தங்களுக்கு ஆதாயம் உள்ளது என்று நினைக்கும் அவர்கள் தங்களின் பிற்கால சந்ததிகளையும் புவியின் அழிவையும் பார்க்க மறுக்கிறார்கள். சுரண்டப்படுபவர்களும் ஒடுக்கப்படுபவர்களும்... என்றைக்கும் , திரு.எம். பார்கவா கூறியுள்ளதைப் போல் எப்போதும் அடிபணிந்து கொண்டே இருக்க மாட்டார்கள். மத்திய மாநில அரசுகள் எவ்வளவு சீக்கிரம் விழித்துக் கொள்கிறதோ, அவ்வளவிற்கு அவ்வளவு நாம் பேரழிவுகளைத் தடுக்கலாம்.

...ஷஹி...

Friday, September 23, 2011

இறை(அ)ஞ்சுகிறேன்

(ஆகஸ்ட் 10இல் மூன்றாம்கோணத்தில் பதிந்தது)

தந்தைக்கு அஞ்சி

தாயை நாடும்

பிள்ளையைப் போல்

உலகைப் பயந்து

உன்னிடம் தேடுகிறேன்

புகல்.

உன்

பாதம் பற்றிடத் தாகிக்கும்

என் விரல்களை

மறுதலிப்பெனும்

தீ தீண்டிடும்

முன்

பாதுகாப்பின் தண்ணிழல்

கொடுத்து ஆற்று.

ஆயிரமாயிரம்

திரைகளுக்கு அப்பால்

இருக்கிறேன் என்கிறாய்..

திரை நீக்கும் வெளிச்சம்

எம் இறையச்சம்

அறிவேன்!

அருவமாயிருக்கிறாய்,

ஆறுதலளிக்கிறாய்..

கோடையில் வாடுபவனுக்கு

குளிர் தென்றலாய்.

எப்போதும்

யாசிக்கும் என் கரங்களில்,

இதோ

உனக்கு ஓர் பரிசு

பரிபூரண அர்ப்பணிப்பு...

மண்ணிலும் விண்ணிலும்,

உன்

கிருபை உண்டெனும்;

நற்செய்தி கிடைக்குமா

இந்தஅற்பப் பிறவிக்கு?

..ஷஹி..

Related Posts with Thumbnails